Nov 30, 2015

கை கொடுக்கும் காப்பீடுகள்

மக்களின் இயல்பு வாழ்க்கையை மொத்தமும் பாதித்துவிட்டது சமீபத்தில் பெய்த பெருமழை. இதனால் தங்களது சொத்துகளையும், உடமைகளையும் இழந்தவர்கள் ஏராள மானவர்கள்.

வெள்ளப் பெருக்கு வீடுகளுக்குள் புகுந்ததால் விலை உயர்ந்த பல வீட்டு உபயோகப் பொருட்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இந்த சொத்துகளை மக்கள் இழந்து நிற்பது பொருளாதார ரீதியாக அவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பாக உருமாறி உள்ளது.

இந்த நிலையில் மழைக்கு பிறகு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வாழ அரசு பல திட்டங்கள் தீட்டி னாலும், மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீண்டு வர பல நாட்களாகும் என்பது தான் உண்மை. இந்த நேரத்தில் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து மீள என்ன வழி என்பதையும் யோசிக்க வேண்டும்.

ஆபத்தில் காக்கும் காப்பீடு

ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போல இயற்கை பேரிடர் களால் உடமைகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டவும் காப்பீடுகள் உள்ளன. இதற்கு ஹவுஸ் ஹோல்டர்ஸ் பாலிசி என்று பெயர். இந்த பாலிசி குறித்து பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது. இயற்கை பேரிடர்களான மழை வெள்ளம், தீ விபத்து, பூகம்பம் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளை இதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள லாம். விலை உயர்ந்த பொருட்கள் திருடு போவதன் மூலம் ஏற்படும் இழப்புக்கும் காப்பீடு கிடைக்கிறது.

எவற்றுக்கு கிடைக்கும்

புயல், மழை வெள்ள பாதிப்பு, பூகம்பம் போன்றவற்றால் முழுமையா கவோ, பகுதி அளவிலோ சேதம் அடையும் வீடுகள், மழை மற்றும் வெள்ளம் காரணமாக வீட்டுச் சுவரின் பெயின்ட் பாதிப்பு, சுவர் விரிசலுக்குகூட இழப்பீடு பெறலாம். இந்த பாலிசியின் கீழ் 10 வகையான பிரிவுகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒருவகையான கவரேஜ் இருக்கிறது. தீ விபத்து, வீடு பாதிப்படைவது, அனைத்து வகையான இழப்புக்கும் கவரேஜ், மின்னணு சாதனங்கள் போன்றவற்றுக்கான கவரேஜ், லேப்டாப், கம்ப்யூட்டர், தங்க நகைகள் மற்றும் ரொக்க கையிருப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பிரிவுகள் உள்ளன. இதில் அடிப் படையாக உள்ள தீ பாதுகாப்பு பிரிவு, வீட்டில் உள்ள பொருட்கள் திருடு போவது அல்லது சேதமடைவது போன்ற திட்டங்களை தேர்ந்தெடுப்பது கட்டாயமானது.

யாருக்கு எந்த பாலிசி

சொந்த வீடு மற்றும் வாடகை வீட்டில் வசிப்பவர்களும் இந்த பாலிசி எடுத்துக் கொள்ளலாம். சொந்த வீட்டில் இருப்பவர்கள் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களுக்கும் சேர்த்து காப்பீடு செய்யலாம். அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தால் தங்களது பொதுப் பயன்பாட்டுக்கான இடத்தைக் குறிப்பிட வேண்டும். குறிப்பாக கார் பார்க்கிங் தனியாக இருந்தால், அதைக் குறிப்பிட வேண்டும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பொருட்களுக்கு மட்டும் காப்பீடு எடுக்கலாம். பொதுவாக வீட்டின் தன்மைக்கு ஏற்ப பாலிசி பிரீமியம் இருக்கும். அதாவது ஓட்டு வீடு, கூரை வீடுகளுக்கும் இந்த காப்பீடு எடுக்கலாம்.

பிரீமியம் எவ்வளவு

இந்த பாலிசிக்கான பிரீமியம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. ஆனால் பொருட்களின் மதிப்பு அல்லது வீட்டின் மதிப்பின் அடிப்படையில் 2 அல்லது 3 சதவீதம் வரை இருக்கும். பொருட்களின் உண்மையான மதிப்பை விட குறைவான தொகைக்கும் பாலிசி கவரேஜ் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. பாலிசி கிளைம் செய்யும் சூழ்நிலையில் இந்த மதிப்புக்கும் மட்டுமே இழப்பீடு தொகை கிடைக்கும். மதிப்பை குறைத்து கவரேஜ் எடுத்தாலும் அந்த மதிப்பில் 2 அல்லது 3 சதவீத மதிப்புக்கு பிரீமிய தொகை மதிப்பிடப்படும்.

இழப்பீடு பெறுவது

பொருட்களுக்கோ உடமை களுக்கோ நிகழ்ந்துள்ள சேதாரம் தனிமனிதர்களால் ஏற்பட்டிருக்கக் கூடாது. இயற்கையாக ஏற்பட்டிருக்க வேண்டும். அல்லது பொருள் களவு போயிருக்க வேண்டும். உதார ணமாக வீட்டுக்குள் குழந்தைகள் விளையாடுகிறபோது டிவி உடைந்து சேதமானால் அதற்கு இழப்பீடு கோர முடியாது. பாதிப்பு இயற்கையாகவோ அல்லது திருடப்பட்டதால் ஏற்பட்ட தாகவோ இருந்தால்தான் இழப்பீடு கோர கிடைக்கும்.

இந்த பாலிசி எடுத்துள்ளவர்கள் மழை, வெள்ளத்தால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை உடனடியாக காப்பீடு நிறுவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். இயற்கை பேரிடரால்தான் பாதிப்பு நிகழ்ந்தது என்பதை உறுதிப் படுத்த ஆதாரங்களை காப்பீடு நிறுவ னத்துக்கு தர வேண்டும்.

குறிப்பாக சம்பந்தபட்ட புகைப் படங்கள், பத்திரிகை செய்திகளை ஆதாரமாகக் காட்ட வேண்டும்.

திருடு போன பொருட்களுக்கு கிளைம் செய்வது என்றால், அதற்கு காவல் நிலையத்தில் வாங்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையை இணைக்க வேண்டும். இயற்கை சீற்றங்கள் ஏதேனும் நடக்கும்பட்சத்தில் இது தேவையிருக்காது. ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், அதற்குக் காவல் துறையிடம் புகார் அளித்திருக்க வேண்டும். இந்த ஆதாரங்களை இழப்பீடு விண்ணப்பத் தில் இணைக்க வேண்டும். இது தவிர மின் கோளாறுகளால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சரி செய்யவும் இந்த காப்பீடு வழி வகை செய்யும்.

அதே சமயத்தில் காப்பீடு நிறுவனத் தினர், நீங்கள் கொடுத்த தகவல்கள் உண்மை தானா என்பதை ஆராய்ந்து, சோதனை செய்த பிறகே இழப்பீடு வழங்க முடிவு செய்வார்கள்.

எவ்வளவு கிடைக்கும்

வீட்டில் என்னென்ன பொருட்கள் வைத்திருக்கிறோம். அதன் மதிப்பு என்ன, தங்க நகை எவ்வளவு உள்ளது, ரொக்க கையிருப்பு எவ்வளவு என்பது போன்ற வற்றை காப்பீடு எடுக்கும்போதே குறிப்பிட வேண்டும். வெள்ளத் தினால் பழுதடைந்த, அல்லது வீணான பொருட்களுக்கு அன்றைய சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு தீர்மானிக்கப்படும். காப்பீடு எடுக்கும்போது பொருட்களின் மதிப்பின் அடிப்படையில் கவரேஜ் தொகை இருக்கும். தவிர காப்பீடு எடுத்த பிறகு மீண்டும் புதிதாக சாதனங்கள் வாங்குகிறோம் என்றாலும் அதையும் ஏற்கெனவே எடுத்துள்ள காப்பீடோடு இணைத்துக் கொள்ளலாம்.

பொதுவாக நமது பொருளாதார இழப்புகளின்போது அதிலிருந்து நம்மை மீட்க எங்கிருந்தாவது உதவி வராதா என்பதுதான் நமது எதிர்பார்ப்பாக இருக்கும்.

இது போன்ற சந்தர்ப்பங்களின் எவரையும் சார்ந்து நிற்காமல் நமக்கு பக்கபலமாக இருப்பவை இது போன்ற காப்பீடுகள்தான். வர்த்தக நிறுவனங்களுக்கு பாதுகாப்பளிக்கும் பாலிசிகள் போல இது தனிநபர் உடமை களுக்கு பாதுகாப்பளிப்பவை.

ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, மோட்டார் வாகனக் காப்பீடு போல ஹவுஸ் ஹோல்டர்ஸ் பாலிசியும் அத்தியாவசியம் என்பதை உணர வேண்டிய கால கட்டத்தில் இருக் கிறோம். ஏனென்றால் சூழலியல் மாற்றங்கள் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதை அனுபவ பூர்வமாக கண்டுகொண்டிருக்கிறோம்.

maheswaran.p@thehindutamil.co.in

தண்ணீரில் தத்தளிக்கும் தலைநகரம்

மனிதவளம், வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதி, பெருகும் குடியிருப்புகள், விரியும் விஸ்தீரணம் என மாநிலத் தலைநகரத்துக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்தது நமது சென்னை மாநகரம். வெளியூர்கள், வெளிமாநிலங்கள் என எங்கிருந்து எத்தனை பேர் வந்தாலும் வந்தாரை வாழவைக்கும் தலைநகரமாக தனிச்சிறப்புடன், தனித்துவத்துடன் இன்றளவும் திகழ்கிறது சென்னை.
கோயம்பேடு பகுதியில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்த வெள்ளம்.
கோயம்பேடு பகுதியில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்த வெள்ளம்.
இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சென்னை மாநகரம் சமீபத்திய கன மழையைத் தாக்குப்பிடிக்க முடியா மல் மாநரகமாகிப்போனது. சாலை கள், சுரங்கப்பாதைகள், தெருக்கள் மட்டுமல்லாது வீடுகளிலும் புகுந்தது மழைநீர். திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளம். வாகனங்கள் சென்ற சாலைகளில் படகுகள் மிதந்த காட்சி. வெள்ளத்தின் நடுவே சிக்கிய மக்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கவேண்டிய சூழல்.

சமூகத்தின் கீழ்தட்டு மக்கள் மட்டு மின்றி, நடுத்தர மக்கள், பணக்கார வர்க்கம் என அனைத்து தரப்பினரை யும் தயவுதாட்சண்யமின்றி வெளியே துரத்தியது வீடுகளில் அடாவடியாகப் புகுந்த வெள்ளம். கட்டமைப்பு வசதி கள் மிகுந்த, மாநிலத் தலைநகரில் ஏன் இந்த நிலை? 375 ஆண்டுகள் பழமையான சென்னையின் இந்த நிலைக்கு காரணம் என்ன? இதை எப்படி மாற்றுவது?

பூகோள அமைப்பின்படி பார்த்தால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், கடல் மட்டத்தைவிட அதிக உயரத்தில் உள்ளன. கடலை ஒட்டிய சென்னை, நாகை, கடலூர் மாவட்டங்கள் கடல் மட்டத்தில் இருந்து குறைந்த உயரத்தில் உள்ளன. சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் சராசரியாக 2 முதல் 10 மீட்டர் உயரத்தில் உள்ளன. வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கு இதுவும் காரணம் என்று கூறப்படுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 1,450 ஏரிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் தி.நகர், வள்ளுவர் கோட்டம், நந்தனம் உள்ளிட்ட இடங்களில் 36 ஏரிகள் இருந்துள்ளன. நகரமயமாக்கல் அதிகரிப்பால், இவை அழிந்துவிட்டன. புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
தீவு போல மாறிய சென்னை தாம்பரம் வரதராஜபுரம் பகுதியில் ஹெலிகாப்டர் உதவியுடன் நடந்த மீட்புப் பணி.
தீவு போல மாறிய சென்னை தாம்பரம் வரதராஜபுரம் பகுதியில் ஹெலிகாப்டர் உதவியுடன் நடந்த மீட்புப் பணி.
இதில் சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய 4 ஏரிகள்தான் சென்னையின் குடிநீர் ஆதாரங்கள். இவை தவிர, கொரட்டூர், போரூர், வளசர வாக்கம், விருகம்பாக்கம், வேளச் சேரி, அயனம்பாக்கம், ஆதம்பாக்கம், பல்லாவரம், உள்ளகரம், கீழ் கட்டளை, ஜமீன் பல்லாவரம், செம் பாக்கம் ஏரிகள் அந்தந்த இடங் களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளன. இவைதான் நீலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளன.

ஆனாலும், தொடர்ந்து நடக்கும் ஏரி ஆக்கிரமிப்புகளும், மழைநீர் வடிகால்கள் அழிக்கப்பட்டதும்தான் சென்னையின் வெள்ள பாதிப்புக்கு காரணம் என்கின்றனர் பொதுப்பணித் துறையினர்.

தாழ்வான பகுதிகளில் சேரும் மழைநீர், கால்வாய்கள் வழியாக குளத்தை அடையும். உபரிநீர் அங்கிருந்து கால்வாய் வழியாக கடலைச் சென்றடையும். பொது வாக நீர்நிலைகளில் பாசனத் துக்காக நீரை வெளியேற்றும் அமைப்புகளும், ஏரி நிரம்பினால் தானாக உபரிநீர் வெளியே றும் ‘கலங்கல்’ என்ற அமைப்பும் இருக்கும். தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட் டங்களில் பெரும்பாலான ஏரிகளில் இந்த கலங்கல் இல்லை. மேலும், மழைநீர் வெளியேறும் கால்வாய்கள், கடலுக் குள் செல்லும் முகத்துவாரங்கள் குறுகிவிட்டதாலும் வெள்ளநீர் வடிய தாமதமாகிறது என்கின்றனர் பொதுப்பணித் துறையினர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை பாசனப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஏரிகளில் நீர் நிரம்பினால், அதன் அருகே உள்ள நஞ்சை, புஞ்சை நிலங்கள் வழியாக உபரிநீர் வெளியேறும். அந்த நிலங்கள் தற்போது குடியிருப்புகள் ஆகிவிட்டன. சென்னையில் சிஐடி நகர், அண்ணா நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், முகப்பேர் போன்ற பகுதிகளில் உள்ள நிலங்களின் மூல ஆவணங்களை ஆய்வு செய்தால் அந்த நிலம் எத்தகையது என்று தெரியவரும்.
சைதாப்பேட்டையில் கரையோர குடியிருப்புகளில் அடையாறு ஆற்றுநீர் புகுந்துள்ளது. | படங்கள்: ம.பிரபு, க.ஸ்ரீபரத், ஜி.கிருஷ்ணசுவாமி
சைதாப்பேட்டையில் கரையோர குடியிருப்புகளில் அடையாறு ஆற்றுநீர் புகுந்துள்ளது
விவசாய நிலங்கள் அனைத்தும் படிப்படியாக கான்கிரீட் கட்டிடங்களாகவும், சிமென்ட், தார்ச் சாலைகளாகவும் மாறிவிட்டன. தொடர்ந்து நீர்நிலைகளும் அழிக்கப்படுவதால், மழைநீர் வெளியேற வழியில்லை. இதனால்தான், மழை வந்தால் சென்னை தத்தளிக்கிறது.

இதற்கு முன்பு 1943, 1976, 2005-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தை கணக்கிட்டு, பெருநகர முழுமைத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அந்த திட்டத்தில், மழைநீர் வடிகால் குறித்தும் திட்டமிடப்பட்டது. அதில், வட சென்னைக்கு அளிக்கப்பட்ட திட்டம் கிடப்பில் உள்ளது. அம் பத்தூர், கொரட்டூர், மாதவரம், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள், நீதிமன்ற வழக்குகளால் நிற்கின்றன.

தாம்பரம் உள்ளிட்ட பகுதிக ளில் மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிக் கப்பட்டதால், சாலைகளில் மழைநீர் தேங்குகிறது. மேலும், சென்னையில் அமைக்கப்படும் பல்வேறு மழை நீர் கால்வாய்கள் முறையாக இணைக் கப்படாமல் உள்ளன.

இப்போதுள்ள ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் அடிப்படையில், 11 டிஎம்சி நீரை மட்டுமே சேமிக்க முடியும். உபரிநீர்கூட கால்வாய்கள் மூலமாக மட்டுமே கடலில் கலக்க வேண்டும். தற்போது கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கால்வாய்கள் மூலம் கடலுக்குள் தண்ணீரை கொண்டு செல்லும் அடையாறு, கூவம், கொசஸ்தலை போன்ற ஆறுகளும் சுருங்கிவிட்டன. இவற்றை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர, அதிக அளவில் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும். அப்படி செய்தால் மட்டுமே குடியிருப்புகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க முடியும்!

கால்வாய்கள் பராமரிப்பு அவசியம்

- வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்

செயற்கைக்கோள் தகவல்களைக் கொண்டு சென்னையில் பாதாள சாக்கடைகள், சாலைகள், கட்டிடங்கள், மழைநீர் தேங்கும் பகுதிகள் குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசிடம் அளித்தது. கோடையில் தண்ணீர் பற்றாக்குறையும், மழைக்காலத்தில் வெள்ளமும் சென்னையில் வழக்கமாகிவிட்டது.

இதை தவிர்க்க மழைநீர், கழிவுநீர் கால்வாய்களை ஆண்டுதோறும் தூர்வாரி பராமரிக்க வேண்டும். அரசின் மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வரைபடம் தயாரிப்பது, எதிர்கால தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும்.

வேளச்சேரி பாதிக்கப்பட்டது ஏன்?

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு மைய இயக்குநர் பேராசிரியர் எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

சென்னை ஏற்றத்தாழ்வு இல்லாத சமதளப் பகுதி. எனவே, மழைநீர் மண்ணில் ஊறுவதற்கும், பூமிக்குள் இறங்கவும் போதிய நேரம் இருக்காது. மேலும், மழைநீர் சென்றடைய நகருக்குள் ஏரிகள் எதுவும் இல்லை. புறநகர் பகுதிகளிலும் நீர்நிலைப் பகுதிகள் அதிகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

வேளச்சேரி, தரமணி பகுதியில் பாதாள மழைநீர் வடிகால் வசதி அமைக்கும் வகையில் விஜயநகர் தொடங்கி பக்கிங்ஹாம் கால்வாய் வரை மேற்கொள்ளப் பட்ட பணிகள் முடிக்கப்படவில்லை. அதனால்தான் வேளச்சேரி பகுதியில் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன்பாகவே மழைநீர் வடிகால் வசதிகள் சிறப்பாக ஏற்படுத்தப்பட வேண்டும். மழைநீர் செல்லும் பகுதிகளை சுத்தப்படுத்தி, சரிசெய்ய வேண்டும். ஏரிகள், நீர்ப்பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மும்பையில் இதுபோன்ற பணிகளை ஜூன் மாதமே தொடங்கிவிடுகின்றனர். மழைநீர் வடிகால்களை சரிசெய்தாலே சென்னையில் மழைவெள்ள பிரச்சினை சரியாகிவிடும்.

மக்கள் செய்யவேண்டியது என்ன?

- அண்ணா பல்கலைக்கழகத்தின் பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை மைய இயக்குநர் பேராசிரியர் டி.திருமலைவாசன்

சென்னையில் 500 சதுர கி.மீ. சுற்றளவில் எந்தெந்த பகுதி எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்று ஆகாய மார்க்கத்தில் லேசர் ஸ்கேனர் உதவியுடன் 2009-ல் தமிழக பொதுப்பணித் துறை, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறைகளின் நிதி உதவியுடன் கணக்கு எடுத்தோம். மழைநீர் வடிகால் வசதி பணிக்காக அந்த கணக்கெடுப்பு தகவல் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மழைநீர் வடிகால் வசதி திட்டத்துக்காக இந்த விவரங்களை மாநகராட்சியும் பயன்படுத்திக்கொண்டது.

சென்னையின் மழை வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். மழைநீர் வடிகால்களில் குப்பைகளை போடக்கூடாது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளைச் சுற்றி சிறிதுகூட இடம் விடாமல் சிமென்ட் தளம் போடுவதை தவிர்க்க வேண்டும். பூமிக்குள் மழைநீர் இறங்க கொஞ்சமாவது மண் பரப்பை விட்டுவைக்க வேண்டும்.

காலி இடங்களில் நீர்த்தேக்கம்

- பொதுப்பணித் துறை முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளர் அ.வீரப்பன்

மழைநீர் தேங்காமல் ஓடும் வகையில் வாட்டத்துடன் வடிகால்கள் கட்டப்படாததும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்த 36 ஏரிகள், 100 குளங்களை ஆக்கிரமித்து தூர்த்ததும்தான் இப்போதைய பிரச்சினைக்கு முக்கிய காரணம்.

மழைநீர் வடிகால்களை குழாய்கள் மூலம் இணைத்து, அருகே உள்ள கால்வாய்கள் வழியாக கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா ஆகியவற்றில் இணைத்து முறையாக பராமரிக்கலாம். திருவொற்றியூர், வில்லிவாக்கம், கொளத்தூர், திருநின்றவூர், தாம்பரம், முடிச்சூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் காலியாக உள்ள நிலங்களில் 100 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சுரங்க நீர்த்தேக்கம் அமைக்கலாம்.

இதற்கு செலவு அதிகம் ஆகும் என்றாலும்கூட, மழை வெள்ளம், தண்ணீர் தட்டுப்பாடு என்ற இரண்டு பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

சென்னையில் கழிவுநீர் வெளியேறும் பாதாள சாக்கடையும், மழைநீர் வெளியேறும் வடிகால்களும் தனித்தனியே அமைக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான இடங்களில் பாதாள சாக்கடைகளே மழைநீர் வடிகாலாக உள்ளன. இதனால் மழைநீருடன் பிளாஸ்டிக் பை, குப்பைகள் போன்ற திடக்கழிவுகளும் பாதாளச் சாக்கடையில் அடைத்துக் கொள்கின்றன.

கழிவுநீர் வெளியேற வழியின்றி, பொங்கி வெளியே ஆறாக பெருக்கெடுத்து, மழைநீருடன் கலந்து ஓடுகிறது. பல இடங்களில் 2 வாரங்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

திட்டமிடல் இல்லாமல் உருவான புறநகர் பகுதிகள்

சென்னையின் புறநகர் பகுதிகளாக உருவெடுத்துள்ள பல பகுதிகள் நீர்நிலைகளாக இருந்தவை. அவற்றை அழித்தே பல நகர்கள் உரு வாக்கப்பட்டிருக்கின்றன. இதில் வெகுவாக விதிமுறைகள் மீறப் பட்டுள்ளன. 1,189 சதுர கி.மீ. பரப்புள்ள சென்னை பெருநகரில் புதிய குடியிருப்பு பகுதிகளை உருவாக்க சிஎம்டிஏ (சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்) அங்கீகாரம் அவசியம்.

வீட்டுமனைகள் உரு வாக்கும்போதே விரிவாக ஆய்வு செய்து கழிவுநீர், மழைநீர் வெளியேறும் வசதி, குடிநீர், சாலைகள், இணைப்பு சாலைகளை ஏற்படுத்த வேண்டும். பூங்கா, விளை யாட்டு மைதானம், பள்ளி, பொது பயன்பாட்டுக்கான இடங்கள் ஒதுக் கப்பட வேண்டும். ஆனால், இவை எதையும் செய்யாமல் மனைகளை விற்கின்றனர். எப்படியாவது இடம் வாங்கினால் போதும் என்ற எண் ணத்தில், மக்களும் அங்கு இடம் வாங்கி வீடுகளை கட்டிக்கொள்கின்றனர்.

கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடத்தில் உருவாகும் குடி யிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துவிடுகிறது என்கிறார் ஓய்வு பெற்ற சிஎம்டிஏ அதிகாரி ஒருவர்.

மிகவும் திட்டமிட்டு 40 ஆண்டு களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சென்னை அண்ணா நகர், அகலமான சாலைகளுடன் அமைக்கப்பட்டுள் ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுக ளில் உருவாக்கப்பட்ட புறநகர் பகுதிக ளில் எந்த திட்டமிடலும் இல்லை. இதனால், பல தெருக்கள் முட்டு சந்தாக முடிகின்றன. இதனால் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்கள் அமைப்பது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.

வட சென்னையில் தற்போது வெள்ளத்தில் மிதக்கும் கொளத்தூர், விநாயகபுரம் போன்ற பகுதிகளில் எந்த திட்டமிடலும் இல்லாமல் குறுகிய சாலைகளுடன் பிரம்மாண்டமான புதிய குடியிருப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. உள்ளகரம், புழுதிவாக் கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி, மேற்கு தாம்பரம் என தற்போது வெள்ளநீர் சூழ்ந்துள்ள பல பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது.

சிஎம்டிஏ பரிந்துரை

சிஎம்டிஏ வெளியிட்ட சென்னை பெருநகர பகுதிக்கான 2-ம் முழுமைத் திட்டம் 2026-ல் வெள்ள அபாயத்தை தடுப்பதற்கான பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில..
# நிவாரணப் பணிகளில் மட்டுமின்றி, பாதிப்புகளை தடுப்பது, குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
# பேரிடர் காலங்களில் அரசோடு மக்களும் இணைந்து செயல்படும் கலாச்சாரத்தை உருவாக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்.
# ஊர்க்காவல் படை போல பேரிடர் மேலாண்மைக்காக பயிற்சி பெற்ற தன்னார்வ தொண்டர் படையை உருவாக்க வேண்டும்.
# உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுக்கு பேரிடர் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

நிலத்தடி நீரை பாதுகாக்கும் முறைகள்

- சென்னையில் உள்ள மத்திய நிலத்தடி நீர் வாரியத் தலைவர் ஏ.சுப்புராஜ், விஞ்ஞானிகள் டாக்டர் பி.உமாபதி, கே.சிவசண்முகநாதன்
நகர்ப்புறங்களில் வீடு, அலுவலகம், சாலை ஓரம், பொது இடங்கள், மழைநீர் தேங்கும் இடங்களில் செறிவூட்டுக் குழி, செறிவூட்டும் வாய்க்கால், குழாய் கிணறுகள், நீரூட்டும் கிணறுகள் போன்றவற்றை அமைக்கலாம். இதன்மூலம், நிலத்தடி நீரை செயற்கை முறையில் செறிவூட்டலாம். கிராமப்புறங்களில் சிற்றோடை தடுப்பு, கரைகள் மற்றும் வரப்புகள், கூழாங்கற்கள் தடுப்பணை மற்றும் கல்லணைகள், கசிவுநீர் குட்டைகள், தடுப்பணைகள், நீரூட்டும் சுரங்கங்கள், நீரூட்டும் கிணறு, நிலத்தடி தடுப்புச் சுவர் ஆகியவை மூலம் மழைநீரை சேமிக்கலாம். ஆண்டுதோறும் இவற்றை முறையாக பராமரிப்பது மிகவும் முக்கியம்.

மண்ணைக் கட்டுப்படுத்தி, நாடுகளைக் கைப்பற்றும் மான்சான்டோ! - சிவா அய்யாதுரை


‘மான்சான்டோவுக்கு விஞ்ஞானி சவால்!' என்று மேற்கத்திய ஊடக செய்திகளில் சமீபத்தில் இடம்பிடித்தார் சிவா அய்யாதுரை. ‘இ மெயில் தமிழன்' என்பதுதான் இவருடைய அடையாளம். ஆனால், இப்போது மரபணு மாற்றப் பயிர்கள் பிரச்சினையைக் கையில் எடுத்து, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளராகவும் மாறியுள்ளார் சிவா.

மான்சான்டோவின் மரபணு மாற்ற சோயாவில் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்ற தனது ஆய்வைப் பொய் என நிரூபித்தால், 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 60 கோடி) மதிப்புள்ள தன்னுடைய கட்டிடம் ஒன்றை மான்சான்டோவுக்குப் பரிசாக அளிப்பதாகச் சவால் விட்டிருக்கிறார்.
இந்தப் பின்னணியில் அவருடன் தொலைபேசி மூலம் பேசியதிலிருந்து...

மான்சான்டோவின் மரபணு மாற்ற சோயா குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றியது?
உலகின் முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பத்திரிகைகளில் அமெரிக்காவின் ‘எம்.ஐ.டி. ரிவ்யூ' (மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) இதழ் புகழ்பெற்றது. அந்தக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவன் நான்.
அந்த இதழில் ‘மரபணு மாற்றப் பயிர்கள் மிகவும் பாதுகாப்பானவை' என்கிற ரீதியில் ஒரு கட்டுரை கடந்த ஆண்டு வெளியானது. அந்தக் கட்டுரை ஒரு விளம்பரதாரரின் கட்டுரையைப் போலிருந்தது. உலகின் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ஒன்று, இதுபோன்ற செயலில் ஏன் ஈடுபட வேண்டும்? அதற்கு என்ன அவசியம் என்ற கேள்விகள் எனக்கு எழுந்தன. அப்படியானால், அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் தவறானவை என்று நிரூபிக்க வேண்டியிருந்தது. ஆய்வில் இறங்கினேன், என்னோடு 15 பேர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

அடிப்படையில் நீங்கள் ஒரு கணினி நிபுணர். ஆனால், உயிரியல் தொடர்பான ஆய்வை எதன் அடிப்படையில் மேற்கொண்டீர்கள்?
என்னுடைய பட்டப் படிப்பு கணினி தொடர்பானதுதான். ஆனால், என்னுடைய முனைவர் பட்ட ஆய்வை ‘சிஸ்டம்ஸ் பயாலஜி' துறையில் மேற்கொண்டேன்.
உடலில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது என்றால், அந்தப் பிரச்சினையை மட்டும் தனியாக அணுகாமல், ஒட்டுமொத்த உடல்நலனையும் அணுகுவதுதான் சிஸ்டம்ஸ் பயாலஜி. உதாரணத்துக்கு, நமது தோலில் சின்னச் சின்னதாகப் புள்ளிகள் தோன்றுகின்றன என்று வைத்துக்கொள்வோம். அதைத் தோல் சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், அந்தப் பிரச்சினைக்கான மூலம் எது என்று ஆராய்ந்து, அதற்குத் தீர்வு தருவதுதான் இந்தத் துறையின் சிறப்பம்சம். அந்த அடிப்படையில்தான் இந்த ஆய்வை மேற்கொண்டேன்.

எம்.ஐ.டி.யில் நீங்கள் மாணவராக இருந்தபோது உருவாக்கிய ‘சைட்டோ சால்வ்' எனும் கருவியைக் கொண்டுதான் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறீர்கள். அது குறித்து...
‘சைட்டோ சால்வ்' என்பது ஒரு மென்பொருள் போன்றது. இந்தக் கருவியின் செயல்பாட்டை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம். வெள்ளைப்பூண்டை ஒருவர் எவ்வளவு உட்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கு ஒரு மாடல் தயாரித்திருப்போம். அதேபோல இஞ்சியை ஒருவர் எவ்வளவு உட்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு ஏற்ப உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிய இன்னொரு மாடல் தயாரித்திருப்போம்.
‘சைட்டோ சால்வ்' என்பது ஒரு மென்பொருள் போன்றது. இந்தக் கருவியின் செயல்பாட்டை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம். வெள்ளைப்பூண்டை ஒருவர் எவ்வளவு உட்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கு ஒரு மாடல் தயாரித்திருப்போம். அதேபோல இஞ்சியை ஒருவர் எவ்வளவு உட்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு ஏற்ப உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிய இன்னொரு மாடல் தயாரித்திருப்போம்.
ஆனால், இவை இரண்டையும் ஒருவர் ஒரே நேரத்தில் எவ்வளவு உட்கொள்கிறார், அந்த அளவுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதற்குத் தனியாக ஒரு மாடல் இல்லாமல் இருக்கும். எனவே, இந்த இரண்டையும் கலந்து ஒரு புதிய மாடல் உருவாக்க முயற்சிப்போம், இல்லையா?
அது தேவையில்லை. ஏற்கெனவே பூண்டுக்கும் இஞ்சிக்கும் தனித்தனியாக உருவாக்கப்பட்டிருக்கும் மாடல்களை ஒன்றிணைத்தாலே, நமக்குத் தேவையான தகவல் கிடைத்துவிடும். இப்படித்தான் ‘சைட்டோ சால்வ்' செயல்படுகிறது.
மரபணு மாற்றப் பயிர்கள் குறித்து, ஏற்கெனவே நம்மிடம் உள்ள தகவல்களை ஒன்றாக இணைத்து, அதன்மூலம் கிடைக்கும் புதிய தகவலை 'சைட்டோ சால்வ்' ஆய்வு முடிவாகத் தரும். சிக்கலான மூலக்கூறு விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு, இந்தக் கருவி பெரிதும் பயன்படும்!

மரபணு மாற்றப் பயிர்களைப் புழக்கத்தில் அனுமதிக்கும்போது, ‘substantially equivalent to a non-GMO' என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதன் உள்ளர்த்தம் என்ன?
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மருத்துவக் கருவிகளுக்கு முறையான அனுமதி பெற வேண்டும் என்று 1976-ம் ஆண்டில் அமெரிக்க அரசு ஒரு சட்டத்தை இயற்றியது.
உதாரணத்துக்கு ஸ்டெதஸ்கோப் ஒன்றை 7 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு புழக்கத்தில்விட விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதைப் புழக்கத்தில் விடுவதற்கு மேற்கண்ட சட்டத்தின்படி அனுமதி பெற வேண்டும்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஸ்டெதஸ்கோப்பில் சின்னதாக மாற்றம் செய்து நீல நிறத்தில் கொண்டு வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது நிறத்தை மாற்றியதால், மேற்கண்ட சட்ட நடைமுறைகளின்படி மீண்டும் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியமில்லை. அப்போது ‘substantially equivalent to the earlier product' (ஏற்கெனவே இருக்கும் பொருளுக்கு, இணையான பொருள்) என்று கூறி அதை அனுமதிப்பார்கள்.
மரபணு மாற்றப் பயிர்களை அனுமதிக்கும்போது, இதே ‘கான்செப்ட்'டை பயன்படுத்தக் கூடாது என்பதுதான் எங்கள் வாதம்.
அமெரிக்காவில் இத்தகைய பயிர்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் ‘ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன்' எனும் அமைப்புக்கு உண்டு. இந்த அமைப்பின் ‘டெபுடி கமிஷனர் ஆஃப் புட்ஸ்' பதவியில் மைக்கேல் டெய்லர் என்பவரை அதிபர் ஒபாமா நியமித்திருக்கிறார். இந்த மைக்கேல் டெய்லர் மான்சான்டோவின் முன்னாள் துணைத் தலைவர் என்பது நகைமுரண்!
மரபணு மாற்ற சோயாவில் உள்ள ‘ஃபார்மல்டிஹைட்' என்ன வகையான பாதிப்புகளைச் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படுத்தும்? ‘க்ளூட்டதியானி'ன் பங்கு என்ன?
‘ஃபார்மல்டிஹைட்' வேதிப்பொருள் இயற்கையாக விளையக்கூடிய பயிர்களிலும் குறைந்த அளவு இருக்கும். மரபணு மாற்ற நடவடிக்கையில், ஒரு பயிரில் இருக்கக்கூடிய அந்த வேதிப்பொருளின் சதவீதம் அதிகரிக்கும். இது புற்றுநோயைத் தூண்டக்கூடிய வேதிப்பொருள்.
அதேநேரம், இயற்கையாக விளையும் பயிர்களில் ‘க்ளூட்டதியான்' எனும் பொருள் உண்டு. இது ஒரு ஆன்டி ஆக்சிடன்ட். மனிதர்களுக்கு நன்மை பயக்கக் கூடியது. மரபணு மாற்ற நடவடிக்கையின்போது, இந்த வேதிப்பொருளின் சதவீதம் குறைந்துவிடும்.

உங்களது ஆய்வுக் கட்டுரை வெளியான ‘அக்ரிகல்சுரல் சயின்சஸ்' ஆய்விதழ், பணம் பெற்றுக்கொண்டு கட்டுரைகளை வெளியிடும் இதழ் என்று விமர்சிக்கப்படுகிறதே? இந்தப் பிரச்சினை எழுந்தபோது ‘ஓப்பன் ஆக்சஸ்' இதழ்கள் பற்றி நீங்கள் பேசினீர்களே...
இன்றைக்கு அறிவியல் உலகில் நேச்சர், சயின்ஸ் மற்றும் செல் ஆகிய மூன்று இதழ்கள்தான் மிகவும் பிரபலம். இந்த இதழ்களில் தங்களுடைய கட்டுரை வெளியாக வேண்டும் என்பது ஒவ்வொரு விஞ்ஞானியின் கனவு. ஆனால், இவற்றில் வெளியாகும் கட்டுரைகளை ஒரு சாமானிய மனிதர் படிக்க வேண்டும் என்றால், ரூ. 5 ஆயிரமோ அல்லது ரூ.15 ஆயிரமோ செலவழிக்க வேண்டும்.
ஆனால், ‘அக்ரிகல்சுரல் சயின்சஸ்' போன்ற ‘ஓப்பன் ஆக்சஸ்' இதழ்களில் ஒருவர் தனது கட்டுரையை வெளியிட வேண்டுமென்றால், ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். அது பதிவுக் கட்டணம் போன்று, ஒரே ஒரு முறை செலுத்தப்பட வேண்டியது! ஆனால், அதைக் கட்டுரையை வெளியிடுவதற்கு லஞ்சம் கொடுப்பதுபோலச் சிலர் சித்திரிக்கிறார்கள்.

மரபணு மாற்றப் பயிர்கள் தொடர்பாக இந்தியாவில் எழுந்து வரும் எதிர்ப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அந்த அமைப்புகளுடன் உங்களுக்குத் தொடர்பு இருக்கிறதா? அந்தப் பயிர்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் திட்டம் இருக்கிறதா?
நிச்சயமாக! அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறேன். அப்போது மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் இந்திய அமைப்புகளுடன் இணைந்து, இத்தகைய பயிர்கள் ஏற்படுத்தும் விளைவுகளை ஆய்வு செய்வதற்கான ‘தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை' உருவாக்குவது குறித்து விவாதிக்க இருக்கிறேன்.

மனித வாழ்வின் அடிப்படையே உணவையும் விவசாயத்தையும் மையமாகக் கொண்டதுதான். பன்னாட்டு நிறுவனங்கள், அதில் கை வைக்கின்றன. இதை எப்படி எடுத்துக்கொள்வது?
மான்சான்டோ போன்ற நிறுவனங்கள் ஒரு நாட்டுக்குச் செல்வதற்கு முன்பு, அந்த நாட்டின் மண்ணைக் கட்டுப்படுத்துகின்றன. பிறகு அந்த நாட்டைக் கைப்பற்றுகின்றன. இதுபோன்ற நிறுவனங்களை எதிர்த்து நாம் தொடர்ந்து போராட வேண்டும். சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். வேலை நிறுத்தம் செய்ய வேண்டும். காந்தியின் ‘வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தைப் போன்று ஓர் இயக்கம், மீண்டும் தோன்ற வேண்டும். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சில விஞ்ஞானிகளும் ஊழல் கறைபடிந்தவர்களாக உள்ளனர். நாம் அனைவரும் இயற்கையின் ஓர் அங்கம் என்ற எண்ணம் ஒவ்வொருவரிடமும் இருந்தால், மரபணு மாற்றப் பயிர்களுக்கு அவசியமே இல்லை!

வான் கொடையான பருவ மழை!

கே.என். ராமசந்திரன்
பருவக் காற்றுகள் வீசுவதற்குப் பூமியின் சுழற்சி அச்சு சாய்வாக இருப்பதும் முக்கியக் காரணம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அக்டோபர் - நவம்பர் மாதங்கள் மழைக் காலமாகும். உலகின் மற்றெல்லா நாடுகளைக் காட்டிலும் இந்தியத் துணைக் கண்டம் மழை விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது.

மழைக் காலம் என்பது ஓரளவு வரையறுக்கப்பட் டிருப்பதால், விவசாயிகளும் மற்றவர்களும் தத்தமது செயல்பாடுகளை அதற்கேற்றபடி தகவமைத்துக்கொள்ள முடிகிறது. பருவ மழை பொய்ப்பது அரிதாக நடைபெறுகிறது. தென்மேற்கிலிருந்து வீசும் காற்று கொண்டுவரும் மழைக்குத் தென்மேற்குப் பருவ மழை என்றும் வடகிழக்கிலிருந்து வீசும் காற்றின் மூலம் வரும் மழை வடகிழக்குப் பருவ மழை என்றும் குறிப்பிடப்படுகிறது. தென்மேற்குப் பருவ மழை இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்குக் கரையோரங்களிலும் வட கிழக்குப் பருவ மழை கிழக்குக் கரைப் பகுதிகளிலும் பொழிகிறது. தென்மேற்குப் பருவம் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும்.

பருவ மழையின் பலன்கள்

ஏறத்தாழ ஆறு முதல் எட்டு மில்லியன் ஆண்டுகளாகத்தான் இந்தியத் துணைக் கண்டத்தில் பருவ மழைகள் பெய்கின்றன. இமய மலைத் தொடர்களும் திபெத்தியப் பீடபூமியும் உருவான பிறகுதான் பருவ மழைகள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால அட்டவணையில் பெய்யத் தொடங்கின. இந்தியத் துணைக் கண்டம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து, யூரேசியக் கண்டத்துடன் மோதியபோது அவற்றின் விளிம்புகள் மேல்நோக்கி மடிந்து இமய மலைகளும் திபெத்தியப் பீடபூமியும் எழுந்தன. திபெத்தியப் பீடபூமி கோடையில் சூடாகி வறண்ட வளிமண்டலமுள்ளதாக மாறும். அதற்குத் தெற்கேயுள்ள இந்துமாக்கடல் அதைவிடக் குறைந்த வெப்ப நிலையில் இருக்கும். சூடான நிலப் பரப்புகளிலிருக்கும் காற்று சூடாகி வானை நோக்கி மேலே எழும்பும். அந்த இடத்தை இட்டு நிரப்புவதற்காக இந்துமாக் கடலிலிருந்து குளிர்ந்த காற்று நீராவியைச் சுமந்தபடி தென்மேற்குப் பருவக் காற்றாக வீசுகிறது.

குளிர் காலத்தில் வடகிழக்கிலுள்ள நிலப் பரப்புகளிலிருந்து குளிர்ச்சியுற்ற காற்று, ஒப்பீட்டளவில் உயர் வெப்ப நிலையில் உள்ள கடலை நோக்கி வீசத் தொடங்குகிறது. அக்டோபர் - நவம்பர் மாதங்களில் வங்கக் கடலைக் கடந்து வரும் இக்காற்று, இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பிரதேசங்களில் மழையைப் பெய்விக்கிறது.

தெற்காசியாவின் சிறப்பு

இமய மலைத் தொடர் இன்றிலிருந்து சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வளரத் தொடங்கியதாக நிலவியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அவை ஆறு முதல் எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இன்றிருக்கும் உயரங்களை எட்டின. இன்றளவும் அவை மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டேயிருக்கின்றன. அவை வளர்ந்த பிறகு, தென்மேற்கிலிருந்தும் வட கிழக்கிலிருந்தும் வீசிய ஈரமான காற்றை அவை இந்தியத் துணைக் கண்டத்துக்குள் திருப்பிவிடத் தொடங்கின. அந்தக் காற்று பருவ மழைகளைச் சுமந்து வந்து பொழிவித்தன. இத்தகைய தீவிரமான பருவ மழைக் காற்று உலகில் வேறு எங்கும் தென்படாதவை. இந்தியத் துணைக் கண்டம், இலங்கை மற்றும் தெற்காசியா ஆகிய இடங்களில் மட்டுமே வீசுகின்றன.

தென்மேற்குத் திசையிலும் வடகிழக்குத் திசையிலும் குறிப்பிட்ட காலகட்டங்களில் பருவக் காற்றுகள் வீசுவதற்குப் பூமியின் சுழற்சி அச்சு சாய்வாக இருப்பதும் ஒரு முக்கியக் காரணம். பூமி சூரியனைச் சுற்றி வரும்போது கடக ரேகைப் பகுதியும் மகர ரேகைப் பகுதியும் மாறி மாறி சூரியனுக்கு நேராக வருகின்றன. கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் நடுவிலுள்ள பகுதியில் கோடையில் நிலப் பரப்பு கடலைவிட அதிக வெப்பத்தைப் பெற்றுச் சூடாகிறது. குளிர் காலத்தில் நிலப் பரப்பு கடலைவிட அதிகக் குளிர்ச்சியடைகிறது. வளிமண்டலத்தின் வெப்பச் சலனம் காரணமாக கோடையில் கடலிலிருந்து நிலத்துக்கும் குளிர் காலத்தில் நிலத்திலிருந்து கடலுக்கும் முறையே தென் மேற்குத் திசையிலிருந்தும் வட கிழக்குத் திசையிலிருந்தும் காற்று வீசுகிறது.

மெளசிம், மெளசம் - மான்சூன்!

தீவிரமான மழைப் பருவக் காற்றுகள் தெற்காசியப் பகுதியில் உள்ள நாடுகளுக்கிடையில் வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்துக்குப் பெரிதும் உதவின. பருவ மழைக் காலத்தைக் குறிக்க அரபியர்களும் இந்தியர்களும் பயன்படுத்திய மௌசிம், மௌசம் என்ற சொற்கள் ஆங்கிலத்தில் ‘மான்சூன்’ என உருமாறின. அரபிய வணிகர்கள் மிளகு, லவங்கம் வாங்க இந்தியாவுக்கு வரவும், தாயகம் திரும்பவும், தென்னகத்தின் வணிகர்கள் கீழ்த்திசை நாடுகளில் தமது வியாபாரத்தையும் கலாச்சாரத்தையும் பரப்பவும் பருவக் காற்றுகள் பாய்மரக் கப்பல்களை உந்தித்தள்ளி உதவியிருக்கின்றன. அதன் காரணமாக அவற்றை வணிகக் காற்றுகள் எனக் குறிப்பிடுவார்கள்.

பொய்த்தால் என்னாகும்?

பருவ மழை பொய்த்தால் எல்லாமே குலைந்துபோகும். 1970-ல் அவ்வாறு நிகழ்ந்து பெரும் வறட்சி ஏற்பட்டது. அடிக்கடி கனமழை கொட்டும் வடகிழக்கு மாநிலங்களில்கூட வறட்சி ஏற்பட்டது உண்டு. சில ஆண்டுகளில் ராஜஸ்தான் பாலைவனத்தில் பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மழைக் கால அட்டவணையை உறுதியாக நிர்ணயிக்க முடியாததால், பழங்காலத்திலிருந்தே மக்கள் ஏரிகளையும் குளங்களையும் தடுப்பணைகளையும் அமைத்து மழை நீரைச் சேமித்து வைத்தார்கள்.

தவறாத பருவம்

ஜூன் மாதம் ஆரம்பித்தவுடன் இந்திய விவசாயிகள் ஆவலுடன் வானத்தைப் பார்க்கத் தொடங்கிவி டுகிறார்கள். எது தவறினாலும் ஜூன் மாதம் 20-ம் தேதி மும்பை பகுதியில் மழை பொழிவது தவறாது என்று அங்கிருந்து வந்த நண்பர் ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டுகிறார். அசாம், வங்காளம், ஒடிஷா, பிஹார் ஆகிய இடங்களில் ஏப்ரல், மே மாதங்களில் இடி மின்னல்கள் முழங்கப் பலத்த புயல்கள் வீசும். அதற்குக் ‘காலா பைசாகி’என்று பெயர். சில ஆண்டுகளில் அத்துடன் பெரும் மழையும் சேர்ந்துகொள்ளும். பருவ மழை தொடங்கிவிட்டதா இல்லையா என்று வானிலை ஆய்வர்கள் குழம்பிப்போவார்கள்.

பொதுவாக, அரபிக் கடல் வகை, வங்கக் கடல் வகை எனப் பருவ மழை பிரித்துப் பார்க்கப்படுகிறது. அரபிக் கடல் வகை சாதாரணமாக ஜூன் முதல் வாரத்தில் கேரளக் கரையை அடைந்து, இரண்டாவது வாரத்தில் மராட்டியக் கரையை எட்டும். வங்கக் கடல் வகை வடமேற்காக நகர்ந்து அசாம், வங்காளம் ஆகியவற்றை ஜூன் முதல் வாரத்தில் எட்டிய பிறகு, இமய மலை மதில்களால் மேற்கே திருப்பிவிடப்படும். ஜூன் மாத நடுவில் அரபிக் கடல் வகையும் வங்கக் கடல் வகையும் மத்திய நிலப் பகுதியில் சந்தித்து உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் மழையைப் பொழிவிக்கும். ஜூலை நடுவில் மழை காஷ்மீருக்கும் இமாசலப் பிரதேசத்துக்கும் பரவும். தென்னிந்தியாவில் ஒன்று முதல் இரண்டு கி.மீ. உயரமுள்ள முகடுக ளைக் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகள் அரபிக் கடல் வகை மழையைப் பெருமளவில் கறந்துகொண்டு விடுகின்றன. நல்வினைப் பயனாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் மூலம் அம்மழை நீர் ஓரளவாவது தமிழகத்துக்கும் தக்காணத்துக்கும் கிடைக்கிறது!

- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்

தாக்குப்பிடிக்குமா சென்னை?

எஸ்.கோபிகிருஷ்ண வாரியார்
சென்னையில் சமீபத்தில் பெய்த பெருமழை, பருவநிலை மாற்றத்தால் (climate change) ஏற்படும் விளைவுகளின்போது சென்னை மாநகரம் எப்படியிருக்கும் என்பதற்கு அச்சாரம் இட்டுக் காட்டியுள்ளது. அது மட்டுமில்லாமல் ஒழுங்கற்ற வளர்ச்சியின் காரணமாக நகரின் சுற்றுச்சூழல் சமநிலை எவ்வளவு எளிதாகப் பாதிக்கப்படக்கூடும் என்பதையும், வெள்ளத்தில் சிக்குவதற்கான சாத்தியங்களை உருவாக்கும் என்பதையும் உணர்த்தியுள்ளது.

சென்னையில் இந்த மாத மத்தியில், கடந்த பத்தாண்டுகளிலேயே அதிகமாகப் பெய்த பெருமழை இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டது. வெள்ளநீர் வடிகால்களையும் பாரம்பரியச் சதுப்பு நிலப்பகுதிகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டுப்பாடற்ற வளர்ச்சியுடன், அதிவேகமாக மாறிவரும் இந்தப் பெருநகரம் பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படவுள்ள கடுமையான இயற்கை நிகழ்வுகளால் (extreme weather event) எளிதில் பாதிக்கப்படுவதற்கு உள்ள சாத்தியங்கள் தெரிகின்றன.

பெருமழையா?

நவம்பர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவு 236 மி.மீ. என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவிக்கிறது. அதற்கு முந்தைய 24 மணி நேரத்திலும் விடாமல் மழை பெய்தது. இதற்கு முந்தைய பத்தாண்டுகளில் நவம்பர் மாதத்தில் ஒரே நாளில் அதிகமாகப் பெய்த மழையின் அளவு 150 மி.மீ. மட்டுமே. அது நடந்தது 2009 நவம்பர் மாதம்.

சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 1,468 மி.மீ. நவம்பர் மாதத்தில் சராசரியாக 374 மி.மீ. இந்த ஆண்டு நவம்பர் 15, 16-ம் தேதிகளில் பெய்த மழைப்பொழிவு மாதச் சராசரியில் 63 சதவீதமும், ஆண்டு சராசரியில் 16 சதவீதமும், இந்தப் பருவமழைக்கான சராசரியில் 80 சதவீதமும் ஆகும்.

சென்னையின் நிலஅமைப்பு

சென்னை மாநகரம் தட்டையான கடற்கரை சமவெளிப் பகுதியின் மீது எழுந்துள்ளது. இந்தச் சமவெளிப் பகுதிகள் கடற்கரையில் உள்ள மணல் திட்டுகளில் முடிவடைகின்றன. சென்னையில் ஓடும் கூவம், அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு ஆகியவற்றில் தண்ணீர் ஓடுவதில்லை. அதற்குக் காரணம் இவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் தடை ஏற்படுத்தப்பட்டு, நகரின் மேற்குப் பகுதியில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் நீர் சேகரிக்கப்படுகிறது. ஆறுகளின் பக்கவாட்டில் இருக்கும் வெள்ள வடிநீர் பகுதிகள் முழுவதும் கட்டிடங்கள் ஆக்கிரமித்துவிட்டன. அது மட்டுமில்லாமல் ஆறுகளின் முகத்துவாரங்களை மணல்மேடு தொடர்ச்சியாக அடைத்து வருகிறது. இந்தப் பின்னணியில், மழை பெய்யும்போது வெள்ளம் வரத்தானே செய்யும்.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளபடி, 1976 நவம்பர் மாதம்தான் அதிகபட்சமாக 452.4 மி.மீ. மழை பெய்துள்ளது. அன்றைக்கு அந்தப் பெருமழையைச் சென்னை தாங்கியிருந்தாலும், அடுத்தடுத்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகப் பெருமழைப் பொழிவுக்குத் தாக்குப்பிடிக்கும் தன்மையைச் சென்னை பெருநகரம் படிப்படியாக இழந்து வந்திருக்கிறது.


தாக்கமும் விளைவும்

கடந்த சில பத்தாண்டுகளில் சென்னை, அதைச் சுற்றியுள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துப் பகுதிகள் இணைந்து ஒரு பெருநகராக உருவெடுத்துள்ளது. மக்கள்தொகை பெருமளவு அதிகரித்த இந்திய நகரங்களில் சென்னை முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பில் சுற்றுவட்டாரப் பகுதிகளுடன் சேர்த்துச் சென்னையின் மக்கள்தொகை 86.5 லட்சம். 2001-ல் இருந்த 65.6 லட்சத்தைவிட, இது 31 சதவீதம் அதிகம். இந்த மக்கள்தொகை வளர்ச்சியில் பெரும்பங்கு, தகவல் தொழில்நுட்பப் பணிக்காகப் பெருமளவு சென்னை வந்தவர்களாலேயே ஏற்பட்டது.

அதையொட்டிச் சென்னையையும் மாமல்லபுரத்தையும் இணைக்கும் பழைய மகாபலிபுரம் சாலை, அதையொட்டியுள்ள சதுப்புநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஆறுவழி, நான்குவழி அதிவிரைவு சாலைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தகவல் தொழில்நுட்ப வழிப்பாதையை ஒட்டி அலுவலகங்கள், உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீட்டுக் குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் எழுந்தன. இந்தப் பகுதியை நகரத்தின் மற்ற பகுதியுடன் இணைக்கும் சாலைகள் கடந்த சில ஆண்டுகளில் போடப்பட்டன. அவற்றையொட்டியும் கட்டுமானங்கள் வளர்ந்தன. தெற்குப் பகுதி பெருத்து வீங்கிக்கொண்டே போனது.

கட்டிடக் கழிவும் குப்பையும்

தகவல் தொழில்நுட்ப வழிப்பாதையின் பெரும்பாலான கட்டுமானங்கள் பள்ளிக்கரணை சதுப்புநிலம், அத்துடன் இணைந்த நீர்நிலைகளின் மீது கட்டப்பட்டன. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் இருந்த பெருங்குடியில் பிரச்சினைகளை மோசமாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி குப்பைகளைக் கொட்ட ஆரம்பித்தது. மாநகராட்சி தரும் புள்ளிவிவரத்தின்படி சென்னை மாநகரில் ஒரு நாளைக்கு 45,00,000 கிலோ குப்பையும், 70,000 கிலோ கட்டிடக் கழிவும் உற்பத்தியாகிறது. இதில் பாதிக்கு மேல் பெருங்குடியில் கொட்டப்படுகின்றன.

சுற்றுச்சூழல் அமைப்புகளின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 2007-ம் ஆண்டில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் 317 ஹெக்டேர் பரப்பைப் பாதுகாக்கப்பட்ட காடாகத் தமிழக அரசு அறிவித்ததால், அந்தப் பகுதி மட்டும் கட்டுமானங்களிலிருந்து தப்பித்து இருக்கிறது.

சென்னை மாநகரில் சதுப்புநிலங்கள், நீர்நிலைகளைத் திட்டமிட்டு ஆக்கிரமிப்பது, கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றின் கடைசிக் கண்ணியாகப் பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்தது. முந்தைய பத்தாண்டுகளில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த குளங்களும் நீர்நிலைகளும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டன அல்லது குப்பை, கட்டிடக் கழிவு கொட்டப்பட்டுக் கொல்லப்பட்டன.

வெள்ளம் சூழ்ந்து நிற்கும் சென்னை புறநகரின் பறவைப் பார்வை

சமநிலை சீர்குலைவு

சென்னைநிலஅமைப்பியல் ரீதியில் தட்டையான ஒரு நகரம். கடல் மட்டத்திலிருந்து இந்த நகரத்தின் உயரம் 2 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை மட்டுமே. இந்தப் பின்னணியில் நீர்நிலைகள் மட்டுமே, சென்னையின் நீர் சமநிலையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தன. அதிகப்படியான கனமழையைத் தாங்கிக்கொண்ட அவை, அந்த நீரைத் தக்கவைத்துக்கொண்டு கோடைக் கால நீர்த்தேவையையும் பூர்த்தி செய்தன. எவ்வளவு காலத்துக்கு என்று கேட்டால், சில நேரம் 10 மாதங்கள்வரைக்கும்.

இப்படியாக நீர் சமநிலையைப் பாதுகாக்கும் சதுப்புநிலங்களும் நீர்நிலைகளும் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பெருமழை பெய்யும்போது ஒன்று வெள்ளம் வரும் அல்லது மழைநீர் கடலைச் சென்றடையும். நகரில் ஓடும் ஆறுகளின் கரைகளும், வெள்ள வடிநிலப் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்படாமல் இருந்திருந்தால், நகரில் இருக்கும் ஆறுகள் வெள்ளத்தைச் சுமந்து சென்றிருக்கும். ஆனால் அடையாறு, கூவம் கரைப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், ஆற்றின் வழியாக வெள்ளநீர் செல்வதைத் தடுக்கின்றன. அதன் காரணமாகக் கரைப்பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புப் பகுதிகள் வழியாக வெள்ளம் ஊருக்குள் நுழைந்து வெள்ளக் காடாக்குகிறது.

கூடுதல் பிரச்சினை

சென்னை துறைமுகப் பகுதியில் 1960-களில் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள், வெள்ளம் ஏற்படுவதற்குக் கூடுதல் சாத்தியத்தை உருவாக்குகின்றன. இதன் காரணமாக நகரின் வடக்குப் பகுதியில் உள்ள மணல் அடித்துவரப்பட்டு, துறைமுகத்துக்குத் தெற்கில் உள்ள கரைப் பகுதியில் மணல் சேர்கிறது. இதன் காரணமாகவே நாட்டிலேயே மிகவும் அகலமான மெரினா கடற்கரை உருவானது.

ஒரு பக்கம் அகலமான கடற்கரை அழகாக இருப்பதாகத் தோன்றினாலும், மற்றொரு பக்கம் கூவம், அடையாறு ஆற்று முகத்துவாரங்களை மணல்மேடுகள் தடுப்பதால் வெள்ளநீர் கடலுக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. ஆற்று முகத்துவாரத்தை மணல்மேடு அடைக்காமல் பார்த்துக்கொள்வதும், மழைநீர் வடிகால் அமைப்பைப் பராமரிப்பதும் பெருமளவு நேரம், மனித உழைப்பு, பணத்தைக் கோரும் செயல்பாடுகள் என்பதை மறந்துவிடக் கூடாது.

கடும் வானிலை நிகழ்வு

மேற்கண்ட அனைத்து அம்சங்களும் இணைந்து சென்னை நகரை எளிதில் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியதாக மாற்றுகின்றன. பருவநிலை மாற்றத்தால் சென்னை எளிதில் பாதிக்கப்படுவதற்கு உள்ள சாத்தியத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது. பருவநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டு அரசுக் குழுவின் ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி, நவம்பர் மாதப் பெருமழையைப் போலக் கடும் வானிலை நிகழ்வுகள் எதிர்காலத்தில் அதிகரிக்கும்.

அத்துடன் வங்கக் கடல் பகுதியில் ஓராண்டில் உருவாகக்கூடிய காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல் காற்று, கடுமையான புயல் காற்று போன்றவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதையும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 1950 முதல் 2014 வரையிலான தரவுகளின்படி, 1966-ல் அதிகபட்சமாக 16 இயற்கைச் சீற்றங்களும், அதற்கு அடுத்த ஆண்டு 14 இயற்கைச் சீற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், சமீபத்திய பத்தாண்டுகளில் 2006-ல்தான் அதிகபட்சமாக 10 இயற்கைச் சீற்றங்கள் வந்துள்ளன. எனவே, இயற்கைச் சீற்றங்கள் அதிகரிக்கவில்லை.

சமாளிப்பது கடினம்

தமிழக அரசின் பருவநிலை மாற்றச் செயல்திட்ட அமைப்பின் கூற்றுப்படி, எதிர்காலத்தில் புயல்களின் எண்ணிக்கை குறையும் என்றாலும், அவற்றின் தீவிரமும் காற்று திசைவேகமும் அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் சென்னை போன்ற கடற்கரையோர நகரங்களில் கடல்மட்ட உயர்வால், வெள்ளம் ஏற்படுவது மேலும் அதிகரிக்கும். 2100-ம் ஆண்டுக்குள் தமிழகக் கடற்கரையோரம் 0.19 முதல் 0.73 மீட்டர்வரை கடல்மட்டம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

நமது நகரங்களும், சமூகங்களும் இதுபோன்ற வானிலை நிலையில்லாமல் போகும் பெருமழை நிகழ்வுகளுக்குத் தகவமைத்துக்கொள்வதே, எதிர்காலப் பருவநிலை மாற்றத்துக்குத் தகவமைத்துக் கொள்வதற்கு அடையாளமாக அமையும். சமீபத்தில் வெள்ளத்தைக் கையாள்வதில் சென்னை மாநகரம் பெரிதளவு திணறியது. இனிமேலாவது பெருமழை நேரங்களில் நகரம் வெள்ளத்தில் சிக்காமல் இருப்பதை, சென்னை மாநகர நிர்வாகமும் மக்களும் இணைந்து செயல்பட்டு உறுதிசெய்யப் பணிபுரிய வேண்டும். அந்தச் செயல்பாடு மட்டுமே எதிர்காலத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் கடும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள நமக்கு உதவும்.

- கட்டுரையாளர், பானோஸ் தெற்கு ஆசியா அமைப்பின் மண்டலச் சுற்றுச்சூழல் மேலாளர் தொடர்புக்கு:gopiwarrier@gmail.com 
நன்றி: India Climate Dialogue 
தமிழில்: ஆதி வள்ளியப்பன்

நம் பாட்டன், பூட்டன்களை பராமரிப்போம்!

ஏராளமான சீமைக் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் பராக்கிரம பாண்டியன் குளம்.

ஏராளமான சீமைக் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் பராக்கிரம பாண்டியன் குளம்.

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*
தினமும் நாம் காலையில் எழுந்ததும் என்ன செய்கிறோம்? பல் விளக்குகிறோம். காலைக் கடன்களை முடிக்கிறோம். அழுக்குப்போக குளிக்கிறோம். சிக்கெடுத்து தலை வாருகிறோம். மேற்பூச்சிகள் தனி. அப்புறம் உணவு உட்கொள்கிறோம். அவரவர் வசதி கேற்ப நடை பயிற்சி, யோகா, தியானம் என உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறோம். கொஞ்சம் உடல் நலம் கெட்டாலும் மருத்துவரிடம் ஓடுகிறோம். இப்படி எல்லாம் செய்யாவிட்டால் சீக்கிரமே சீக்காளியாகி இறந்துப்போவோம். சரி, நமக்கு உணவைக் கொடுப்பது யார்? உடலை வளர்ப்பது யார்? நீர்நிலைகள்தானே. அவை இல்லாவிட்டால் சூனியமாகிபோவோம். இன்றும் உயிரோடு இருக்கும் நமது பாட்டன், பூட்டன்கள்போலத்தான் இந்த நீர் நிலைகள் எல்லாம்.

ஆம், ஏரிகள், குளங்களுக்கும் உயிர் உண்டு. இது அறிவியல்பூர்வமான உண்மை. மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஏரி, குளங்களை அப்படிதான் வரையறுத்துள்ளது. ஏரிகள், குளங்கள் உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சியோடு ஒப்பிடப்படுகின்றன. அவை ஓர் உயிரினத்தைப் போல புவி யியல்ரீதியாக நிலப் பரப்புகளில் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் அல்லது மனிதனால் பிறக்கின்றன. காலப் போக்கில் உயிரினங்களைப் போலவே பல்வேறு வடிவங்களில் பரிணாம மாற் றங்களுடனும் பல்லுயிர் பெருக்கத் துடனும் வளர்கின்றன. அவை தங்க ளுக்கான உணவாக ஆறுகளில் அடித்து வரப்படும் வண்டலில் இருந்து வளத்தைப் பெறுகின்றன. அந்த வளத்தில் பாசிகள், நீர்த் தாவரங்கள், நீர் வாழ் உயிரினங்கள், நுண்ணுயிரிகளை வாழ வைக்கின்றன. எனவே, ஏரிகளும் குளங்களும் உயிரினங்களே என்கிறது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை. 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச ஏரிகள் சுற்றுச்சூழல் கமிட்டி ஜெய்ப்பூரில் நடத்திய 12-வது உலக ஏரிகள் மாநாட்டிலும் இது வலியுறுத்தப்பட்டது. இது ‘ஜெய்ப்பூர் பிரகடனம்’ என்றழைக்கப்படுகிறது.

ஆனால், நம் உடலை பராமரிப் பதைப் போல ஏரி, குளங்களைப் பரா மரிக்கிறோமா? நமக்கு தலைவாருவது போல ஏரியை தூர் வார வேண்டாமா? நம் உடலில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வதைப்போல குளத்தில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டாமா? ஆகாயத் தாமரைகள் ஒன்றிரண்டாக வளரும்போது முளையி லேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டாமா? எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர் பார்க்கலாமா? அரசாங்கத்தை நடத்து வது அரசியல்வாதிகள்தானே. அவர் களா வந்து நீர் நிலைகளை சரிசெய்யப் போகிறார்கள். நீர் நிலைகளைப் பராமரிக்க ‘நமக்கு நாமே’ திட்டம் உட்பட எவ்வளவோ திட்டங்கள் இருக் கின்றன. மக்களாகிய நாமே... குறிப்பாக, விவசாயிகளே களம் இறங்கலாமே.

தமிழகத்தில் ஒவ்வொரு ஏரியின் எல்லைகளையும் குறைந்தது நான் கைந்து கிராமங்களாவது பங்குபோடு கின்றன. அந்தந்த கிராமங்களில் வேலையை ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் ஒதுக்கி ஒவ் வொன்றாக செய்யலாம். மெதுவாய் குப்பைகளைப் பொறுக்குவோம். அப்புறம் ஆகாயத் தாமரைகளை அகற்று வோம். பெரியதாக எல்லாம் வேண்டாம். சின்ன சின்னதாய் செய்வோம். சிறுக சிறுக சேமிப்போம். சிறு துளி பெருவெள்ளம். சிறியதே அழகு. ஊர் கூடி தேர் இழுப்போம். காந்தியும் ஜே.சி.குமரப்பாவும் வலியுறுத்திய கிராமப் பொருளாதாரத் தத்துவம் இதுதானே.

இப்படி எல்லாம் செய்யாமல்தான் எத்தனையோ ஏரிகளை, குளங்களை, நதிகளை இருக்குமிடம் தெரியாமல் அழித்துவிட்டோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகே உள்ளது உப்பலோடை. இந்த ஓடை இருந்த இடம் தெரியாமல் காடு மாதிரி மண்டிக் கிடக்கிறது கருவேல மரங்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் இரண்டு நதிகளே எங்கே என்று தெரியவில்லை. திருநெல்வேலியில் இரண்டு முக்கூடல்கள் உண்டு. ஒன்று திருப்புடைமருதூர், இன் னொன்று சிவலப்பேரி முக்கூடல். ஒரு காலத்தில் திருப்புடைமருதூர் முக்கூட லில் கடனா நதி, வராக நதி, தாமிரபரணி மூன்றும் கலந்தன. அதனால்தான், அது முக்கூடல் என்று பெயர் பெற்றது. ஆனால், இப்போது மூன்று நதியில் வராக நதி எங்கே போனது? அது எங்கே இங்கே கலக்கிறது? ஒரு சிலர் கல்லிடைக்குறிச்சி சாலையில் இருக்கும் கடம்பை வழியாக ஓடிவந்து வெள்ளாளங்குடியின் கருணை கால் வாயில் (மஞ்சலாறு அல்லது எலுமிச்சையாறு) கலப்பது வராக நதியாக இருக்கலாம் என்கிறார்கள். இன்னொரு சாரார், ஆழ்வார்குறிச்சியில் கடனா நதியுடன் ராமா நதி கலக்கிறது. அது வராக நதியாக இருக்கலாம் என்கிறார்கள். இதுவரை தெளிவான விடை கிடைக்கவில்லை.

இன்னொரு முக்கூடல் 16-ம் நூற் றாண்டில் எம்நயினார் புலவர் முக்கூடற் பள்ளு பாடிய சீவலப்பேரி முக்கூடல். அந்தக் காலத்தில் ஏரி, குளங்களைப் பராமரித்த பள்ளர்களை சமூகம் ஒதுக்கி வைத்தது. ஆனால், வேளாண்மைக்கு ஆதாரமாகத் திகழ்ந்த பள்ளர்களைப் போற்றவே அழகர் பெருமாள் முக்கூடலுக்கு வந்தார் என்று சொல்லும் அருமையான படைப்பு முக்கூடற் பள்ளு. இங்கே மேற்குத் தொடர்ச்சி மலையின் பஞ்சந்தாங்கி பகுதியில் உற்பத்தியாகி குற்றாலம் அருவியாகக் கொட்டி, 14 அணைக்கட்டுகளை நிரப்பி தென்காசி, கங்கைகொண்டான் வழியாக சிவலப்பேரியில் தாமிரபரணியுடன் கலக்கிறது சிற்றாறு. இன்னொரு பக்கம் கழுகுமலை பகுதியில் இருந்து ராஜாபுதுகுடி, தலையால் நடந்தான் குளம், கங்கைக்கொண்டான் வழியாக கயத்தாறு இங்கே வந்துச் சேர்ந்தது. இவ்வாறாக தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு மூன்றும் சங்கமம் ஆனதால் மூக்கூடல் என்றழைக்கப்படுகிறது. ஆனால், இன்று அந்த கயத்தாறு எங்கே போனது?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை அருகே உப்பலோடையில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்கள். 

கங்கைக்கொண்டானில் இருந்து புளியம்பட்டி செல்லும் பாதையில் வடகரை கிராமத்தின் வடக்குப் பக்க மாக இருக்கிறது பராக்கிரம பாண்டி யன் குளம். இதன் மூலம் வடகரை, கிழக்கோட்டை, கைலாசபுரம், வேப்பங் குளம், கொடியங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் பாசனம் பெறுகின்றன. கழுகுமலையில் இருந்து ஓடிவரும் கயத்தாறு பராக்கிரம பாண்டியன் குளத்தில் இணைகிறது.

ஆனால், இந்தக் குளம் தூர் வாரப்படாமல் சீமை கருவேல மரங்களில் ஆக்கிரமிப்பில் தனது முழுக் கொள்ளளவை இழந்துவிட்டது. தண்ணீர் அடுத்தடுத்தக் குளங்களுக்குச் செல்லும் வாய்க்கால்களும் அழிக்கப் பட்டுவிட்டன. கயத்தாற்றின் ஓட்டமே குளத்துடன் நின்றுப்போனது. இதனால் அந்த ஆறு சிவலப்பேரி முக்கூடலில் சங்கமிக்காமல் பராக்கிரம பாண்டியன் குளத்திலேயே மூழ்கிவிட்டது.

இதனால், பெருமழைக் காலங்களில் கயத்தாற்றில் தண்ணீர் பெருகும்போது அது வேறு வழியில்லாமல் பராக்கிரம பாண்டியன் குளத்தில் இருந்து பின் வாங்கி வடகரை, புளியம்பட்டி, கங்கை கொண்டான் கிராமங்களை மூழ் கடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு பெய்த மழையின்னபோதும் இப்படி தான் கங்கைக்கொண்டான் - புளியம் பட்டி இடையே இருக்கும் தரைப் பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தது. இருபக்கமும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவித்த மக்களை தீயணைப்புத் துறையினர் வந்து மீட்டனர். என்ன செய்வது? ஆற்றின் பாதையை அழித்த வினைக்கு அனு பவிக்கிறோம்.

தண்ணீரைச் சொல்லி தவறில்லை... எனில் தூத்துக்குடி துயரத்துக்கு காரணம் என்ன?

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு


துயரத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது தூத்துக்குடி. வெள்ளத்தின் பாதிப்பு களில் இருந்து இன்னும் மீளவில்லை நகரம். பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. சேறும் சகதியும் அடைத்துக் கொண்டிருக்கின்றன. சாக்கடைக் கழிவுகள், இறந்த விலங்குகள், கால்நடைகள் உடல் அழுகி துர்நாற்றம் மூச்சடைக்க வைக்கிறது. வெள்ளத்தோடு கழிவு நீரும் வீடுகளுக்குள் புகுந்துவிட்டன.

சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகம், ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எல்லாம் தண்ணீரில் மூழ்கிவிட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்றால் சூழ்ந்துகொள்கிறார்கள் மக்கள். ‘மத்திய குழுவினருக்கு நாங்கள் எல்லாம் மக்களாகத் தெரியவில்லையா’ என்று ஆத்திரம் பொங்க கதறி அழுகிறார்கள் அவர்கள்.

கடந்த 1992-ம் ஆண்டின் பெரும் வெள்ளத்தில்கூட தூத்துகுடி நகரம் இவ்வளவு பாதிக்கப்படவில்லை. சரி, இப்போது ஏன் இவ்வளவு பாதிப்பு? வெள்ளத்துக்கு என்ன காரணம்? நாம் செய்த தவறுகள் என்ன?

விரிவாகப் பார்ப்போம்.
தூத்துகுடி வெள்ளத்துக்கு காரணமான புதுக்கோட்டை பெரிய பாலம் உப்பலோடையை இப்போது தூர்வாருகிறார்கள்.

தூத்துகுடி வெள்ளத்துக்கு காரணமான புதுக்கோட்டை பெரிய பாலம் உப்பலோடையை இப்போது தூர்வாருகிறார்கள்.
சீரழிவில் சிக்கிய குளங்கள்

தூத்துகுடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியின் நேரடி பாசனப் பரப்பு குறைவு. வெறும் 13,506 ஏக்கர் மட்டுமே. குளத்துப் பாசனம்தான் அதிகம். மொத்தம் 32,601 ஏக்கர். ஸ்ரீவைகுண்டம், மருதூர் அணைகள்தான் இந்தக் குளங்க ளுக்கான நீர் ஆதாரங்கள். மொத்தம் 53 குளங்கள். இந்தக் குளங்களின் மொத்த கொள்ளளவு 2,274.27 மில்லியன் கனஅடி. ஆனால், இன்று அனைத்திலும் ஆக்கிரமிப்பு.

குளங்களில் ஆகாயத் தாமரை, நெய்வேலி காட்டாமணக்கு, சீமைக் கருவேல மரங்கள் மண்டி யிருக்கின்றன. பெருங்குளம், தென் கரை குளங்கள் மட்டுமே ஓரளவுக்குப் பரவாயில்லை. கடம்பா குளம், சிவகளை குளம் இவற்றைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. 49 குளங்கள் 70 சதவீதத்துக்கு மேல் தங்களது கொள் ளவை இழந்துவிட்டன. இதனால் இந்தக் குளங்களில் சுமார் 1,000 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே தேக்க முடியும்.

மீதமுள்ள 1,274 மில்லியன் கனஅடி தண்ணீரும் கூடுதலாக பெய்த மழை நீரும் எங்கே போகும்? தண் ணீரைச் சொல்லித் தவறில்லை, அது வேறு வழியில்லாமல்தான் தூத்துக்குடி நகருக்குள் புகுந்துவிட்டது.

மண்ணில் புதைந்த ஓடைகள்!

தூத்துக்குடியில் தங்கள் நிலங் களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். பெரும் நிறுவனங்கள் நிலங்களைக் கிட்டத்தட்ட அபகரிக்கின்றன. இதில் ஒரு நிறுவனம் ஆந்திரத்தின் முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவ ருடையது. இன்னொரு நிறுவனம் துபாயைத் தலைமையிடமாகக் கொண் டது. இவர்களிடம் இல்லை என்று சொல்ல முடியாது.

இந்த விவசாய நிலங்களில் ஏராளமான ஓடைகள் ஓடுகின்றன. வேலாயுதபுரம், சாமிநத்தம், எட்டயபுரம், அனந்தமாடன் பச்சேரி, தருவைக்குளம், மேல அரசடி, கீழ அரசடி, கல்மடை இங்கெல்லாம் ஏராள மான ஓடைகள் இருந்தன. இப்போது அங்கெல்லாம் நிலக்கரியைக் கொட்டிப் புதைத்து தெர்மல் மூலம் மின்சாரம் தயாரிக்கிறார்கள். இரு மாதங்களுக்கு முன்பு மலர்குளத்தின் ஓடை அழிக்கப் பட்டது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது.மீண்டும் அந்த ஓடையை உயிர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது நீதிமன்றம். அதுவும் நடக்கவில்லை. இப்போது பெய்த மழையில் ஓடைகளில் ஓட வேண்டிய தண்ணீர் எல்லாம் எங்கே செல்லும்? தண்ணீரைத் சொல்லித் தவறில்லை, அது வேறுவழியில்லாமல்தான் தூத்துக்குடி நகருக்குள் புகுந்துவிட்டது.

கயத்தாறு, கழுகுமலை, ராஜபுதுகுடி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் புதுக்கோட்டை பெரிய பாலத்துக்கு அடியில் இருக் கும் உப்பலோடையில் வந்துச் சேரும். ஓடையில் இருந்து தண்ணீர் கோரம்பள்ளம் குளம் வழியாகக் கடலை சென்று அடைந்துவிடும்.

சமீபத்தில் புதுக்கோட்டை பெரிய பாலத்தின் அடியில் உப்பலோடையை ஒட்டி ஸ்டெர் லைட் நிறுவனத்தின் ரசாயனக் கழிவு மண் மலைபோல கொட்டப்பட்டது. இது பாலத்துக்கு அடியே சென்று ஓடையை அடைத்துவிட்டது. தண்ணீரைச் சொல்லித் தவறில்லை, அது வேறு வழியில்லாமல்தான் தூத்துக்குடி நகருக்குள் புகுந்துவிட்டது.
சிவகளைக் குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் பெருங்குளத்துக்குச் செல்கிறது.

சிவகளைக் குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் பெருங்குளத்துக்குச் செல்கிறது.
தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை போடும்போதும் இந்தப் பகுதியில் சரியாக திட்டமிடவில்லை. புதுக்கோட்டை தொடங்கி கோரம்பள்ளம் ஆட்சியர் அலுவலகம் வரை சாய்வு கோணத்தில் சாலையை அமைத்துவிட் டார்கள். இதனால், நான்கு வழிச் சாலையை மூழ்கடித்து ஓடி, ஊருக்குள் புகுந்தது தண்ணீர். இப்போது நான்கு வழிச் சாலையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற சாலைத் தடுப்புகளை நிறைய இடங்களில் உடைத்திருக்கிறார்கள்.

சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பு தூத்துகுடி நகரில் இருக்கும் பங்கிள் கால்வாயைத் தூர்வாரி, கான்கிரீட் தளம் எழுப்பி கட்டினார்கள். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை, கால்வாய் பாதியாக சுருங்கிவிட்டது. தண்ணீரைச் சொல்லித் தவறில்லை, அது வேறு வழியில்லாமல்தான் தூத்துக்குடி நகருக்குள் புகுந்துவிட்டது.
ஆகாயத் தாமரையின் ஆக்கிரமிப்பில் செவத்தியாபுரம் அருகேயுள்ள பேய்க் குளம்.

ஆகாயத் தாமரையின் ஆக்கிரமிப்பில் செவத்தியாபுரம் அருகேயுள்ள பேய்க் குளம்.
தண்ணீரில் கரைந்துபோனதா நிதி?

இந்தக் குளங்களை சீரமைக்க உலக வங்கியிடம் ரூ.145 கோடி கேட்டு பரிந்துரை செய்யப்பட்டது. இன்னொரு பக்கம் 29 குளங்களைத் தூர்வார ரூ. 25 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தின் உதவியோடு ஆகாயத் தாமரை உள்ளிட்ட தாவரங்களை அப்புறப்படுத்த மதுரை பொதுப்பணித்துறை கோட்டம் ரூ.10 லட்சம் ஒதுக்கியது.

இவைத் தவிர, 2012-13 ஆண்டில் குளங்களை சீரமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் நிதியாக ரூ. 2.60 கோடி ஒதுக்கப்பட்டது. அதிலும் வேலை நடக்கவில்லை. மாறாக ஊழல் புகார் எழுந்து, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. மேற்கண்ட திட்டங்கள் என்ன ஆனது? ஒதுக்கப்பட்ட நிதி எல்லாம் குளத்துத் தண்ணீரில் கரைந்து போனதா?

உண்மையிலேயே தண்ணீரின் மீது தவறு இல்லை. அது வேறு வழியில்லாமல்தான் தூத்துக்குடி நகருக்குள் புகுந்துவிட்டது. இப்போதும் முழுதாக ஒன்றும் மூழ்கிவிடவில்லை, வாருங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்வோம்.