Jul 19, 2016

தொன்மையான பொருட்களின் வயதை அறிவது எப்படி?

மதுரையைப் பழமையான நகரம் என்பார்கள். அதைக்காட்டிலும் பலமடங்கு பழமையான நகரம் ஒன்றை மதுரைக்கு அருகே, சிவகங்கை மாவட்டத் துக்கு உட்பட்ட ‘கீழடி’யில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்திருக் கிறார்கள். இங்கு ஹரப்பா நாகரிகத்தையொத்த 2,300 ஆண்டுகள் தொன்மையான நாகரிகத்தின் சுவடுகள் கிடைத்திருப்பது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

1920-களில் நடந்த ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சிகள், இந்திய நாகரிகமானது சீன, எகிப்திய நாகரிகங்களுக்கு இணையான தொன்மை வாய்ந்தது என்று உணர்த்தின. தற்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கீழடி அகழ்வாராய்ச்சியும் சிந்துச் சமவெளி நாகரிகத்துக்கு ஒப்பானதாக இருக்குமோ என்று வியப்போடு பார்க்கிறார்கள் தொல்லியலாளர்கள்.

ஒரு அகழ்வாய்வில் கிடைத்த தடயங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்ற முடிவுக்கு எப்படி வருகிறார்கள்? தொல் பொருட்களின் வயதைக் கணக்கிட, உயிரிபாறை அடுக்கியல் (Biostratigraphy), தொல்காந்தவியல், எரிமலைச் சாம்பல் கொண்டு காலக்கணக்கிடுதல் (Tephrochronology), ரேடியோகார்பன் கால அளவை எனப் பல அளவை முறைகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் நவீன முறைகளில் ஒன்றுதான் வெப்பவொளிவிடல் (Thermoluminescence).

குவார்ட்ஸ் என்னும் பளிங்குக் கல் அல்லது சவக்காரம் போன்ற சிலிகேட் வகைப் பாறைகள் சூரியன் மற்றும் காஸ்மிக் கதிர்களிலிருந்து வரும் எலெக்ட்ரான்களை உறிஞ்சித் தன்னுள் சிறைப்படுத்தி வைத்துக்கொள்ளும் தன்மைகொண்டவை. இந்தக் கற்களைத் தீயிலிட்டால், அதிலுள்ள எலெக்ட்ரான்கள் வெளியேறிவிடும். பழங்காலத்தில் கற்களால் கருவிகளைச் செய்து முடித்த பின், அவற்றைத் தீயில் இட்டு வாட்டுவது வழக்கமாக இருந்திருக்கிறது. ஆக, அதில் ஏற்கெனவே சிறைபட்டிருந்த எலெக்ட்ரான்கள் வெளியேறி, கருவி படைக்கப்பட்ட பின் புதிதாக சூரியன் மற்றும் காஸ்மிக் கதிர்களிலிருந்து வரும் எலெக்ட்ரான்களை உறிஞ்சத்தொடங்கும். இவ்வாறு அகழ்வாராய்ச்சியில் நாம் அந்தப் பொருளைக் கண்டெடுக்கும் வரையில் தொடர்ந்து எலெக்ட்ரான்களை உறிஞ்சி, சிறைப்படுத்தியிருக்கும்.

இவ்வாறு தொன்மையான கல்லில் மிகமிக அதிகமான எலெக்ட்ரான்கள் சிறைப்பட்டிருக்கும் என்பதால், அந்தக் கல் கருவியில் சிறைபட்ட எலெக்ட்ரான் களின் அளவு அதன் தொன்மையைச் சுட்டிக்காட்டுவதாகத் திகழும்.

வீட்டின் மேற்கூரையில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியில் குறிப்பிட்ட வேகத்தில் தண்ணீர் விழுந்துகொண்டிருப்பதாக எடுத்துக்கொள்வோமே. தொட்டியில் எவ்வளவு தண்ணீர் நிரம்பியுள்ளது என்பதை வைத்து எவ்வளவு நேரம் மின்மோட்டார் ஓடியுள்ளது என்பதை அனுமானிக்க முடியுமல்லவா? அதுபோலவே அந்தக் கல், கருவியானது தொடங்கி இன்று வரையில் சிறைபட்ட எலெக்ட்ரான்களின் அளவை வைத்து, சூரியன் மற்றும் காஸ்மிக் கதிர்களில் வெளிப்படும் எலெக்ட்ரான் செறிவுடன் ஒப்பிட்டு, எவ்வளவு காலத்துக்கு முன்பு அந்த கல் கருவி உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். கல் கருவி மட்டுமல்ல, தீயில் சுட்ட செங்கல், மட்கலம், பீங்கான் ஆகியவற்றின் வயதையும் இதே தொழில்நுட்பத்தைக்கொண்டு அறிந்துகொள்ள முடியும்.

சில வகை குவார்ட்ஸ் கற்கள் வேறுபட்டவை. சூரியஒளி பட்டதும், அதில் அதுவரை சிறைபட்ட எலெக்ட்ரான்கள் வெளியேறிவிடும். எனவே, ஒரு நாகரிகம் மண்ணுக்கடியில் புதைந்த பின், அதற்குச் சாட்சியமான தொல்பொருள் சூரியஒளிபடாமல் தடுக்கப்பட்டுவிடும் என்பதால், அதிலிருந்து எலெக்ட்ரான்கள் வெளியேற முடியாது. அதேநேரத்தில், மண்ணில் இயற்கையாகவே இருக்கின்ற யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்கப் பொருட்கள் எலெக்ட்ரான்களை உமிழ்ந்துகொண்டிருக்கும். அதே மண்ணுக்கடியில் புதைந்திருக்கும் தொல்பொருளானது, இந்த எலெக்ட்ரான்களை உறிஞ்சி சிறைப்படுத்திக் கொள்ளும்.

அகழ்வாராய்ச்சியில் அகப்படுகிற இந்தத் தொல்பொருளைச் சூரிய ஒளிபடாமல் சோதனைச் சாலைக்கு எடுத்துவந்து, குறிப்பிட்ட அலைநீள ஒளியைப் பாய்ச்சினால், அந்தப் பொருள் இடைப்பட்ட காலத்தில் உறிஞ்சி சிறைப்படுத்தியுள்ள எலெக்ட்ரான்களின் அளவு தெரியவரும். அவை புதைபட்டிருந்த மண்ணில் எவ்வளவு கதிரியக்க யுரேனியம், தோரியம் போன்றவை புதையுண்டிருந்தது என்பதைக் கணித்து, எலெக்ட்ரான் உமிழ்வு விகிதத்தைக் கணக்கிட்டால், எவ்வளவு காலம் இவை சூரிய ஒளியைப் பார்க்காமல் மண்ணுக்குள் புதைந்து கிடந்தன என்று அறியலாம். இது ‘ஒளிக் கிளர்ச்சி வெப்பவொளி முறை’ (Optically stimulated luminescence) எனப்படுகிறது. உயிரற்ற கல் மட்டுமல்ல, பல், பவளப் பாறை போன்ற சில உயிரிப் பொருட்களின் தொன்மையையும் இதே முறையைப் பயன்படுத்திக் கணிக்க முடியும்.

த.வி. வெங்கடேஸ்வரன், அறிவியல் எழுத்தாளர் மற்றும் மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி. - தொடர்புக்கு: tvv123@gmail.com

பட்ஜெட்டும் சட்டமும்!

மாநில அரசுக்கு வரி வருவாய்தான் பிரதான வருவாய் இனம்
பட்ஜெட் என்பது அரசின் ‘ஆண்டு நிதி அறிக்கை’ என்பதையும், பட்ஜெட் அறிக்கையை விவாதித்து அதுகுறித்த சட்டங்களை சட்டப்பேரவை ஏற்படுத்தி, ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பிறகே அது நடைமுறைக்கு வரும் என்றும் பார்த்தோம்.

பட்ஜெட் என்பது ஒருவித சட்ட ஆவணம்தான். அரசுக்கென்று ‘தொகு நிதி’ ஒன்று உள்ளது. மத்திய அரசுக்கு உரியதை இந்தியாவின் தொகு நிதி (Consolidated Fund of India) என்றும், ஒவ்வொரு மாநில அரசுக்கும் உரியதை ‘மாநில தொகு நிதி’ (Consolidated Fund of State) என்றும் அழைக்கிறோம். இந்தத் தொகு நிதியின் உரிமையாளர், இந்திய குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநர். ஒரு மாநில அரசு பெறும் அனைத்து வருவாய்களும் ‘மாநிலத் தொகு நிதி’யில் வரவு வைக்கப்படும். மாநில அரசு செய்ய வேண்டிய செலவுக்கான பணமும் ‘மாநிலத் தொகு நிதி’யில் இருந்தே எடுக்கப்படும். வருவாயை ‘மாநிலத் தொகு நிதி’யில் வரவுவைக்கவும், செலவுகளுக்குப் பணம் எடுக்கவும், மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும் அல்லவா? அதற்குச் சட்டமன்றம் பல சட்டங்களை இயற்றி, ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பும். அச்சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியவுடன், மாநில அரசு அச்சட்டங்கள் கூறியபடி வருவாய் சேகரித்தும், செலவுகள் செய்தும் தங்கள் நடவடிக்கைகளைச் செய்யலாம். இதுதான் பட்ஜெட்டை உருவாக்கி நடைமுறைப்படுத்துகிற விதம்.

எதிர்பாரா செலவு நிதி

‘தொகு நிதி’ மட்டுமல்லாமல், ‘எதிர்பாரா செலவு நிதி’ (Contingency Fund) என்ற ஒன்றும் உள்ளது. ஆளுநரின் ஒப்புதலோடு ‘எதிர்பாரா செலவு நிதி’யில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் வரவாக வைக்கப்படும் (ரூ. 500 கோடி என்று வைத்துக்கொள்வோம்). மாநிலத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளுக்கு (உதாரணமாக இயற்கைச் சீற்றங்களில் பாதிப்படைந்த மக்களைக் காப்பாற்ற ) சட்டமன்ற ஒப்புதல் இல்லாமல் ‘எதிர்பாரா செலவு நிதி’யிலிருந்து மாநில அரசு செலவு செய்யலாம். ஆனால், அடுத்து கூடும் சட்டமன்றத்தில், அந்தச் செலவுகளுக்குச் சட்டமன்றத்தின் ஒப்புதல் பெற்று, ‘எதிர்பாரா செலவு நிதி’யில் அத்தொகையை மீண்டும் வரவு வைக்க வேண்டும்.
மூன்றாவதாக ‘பொதுக் கணக்கு’( Public Account ) என்று ஒன்று உள்ளது. சிறுசேமிப்புப் பத்திரங்கள், பொது வைப்பு நிதி (Public Provident Fund ) போன்ற திட்டங்க ளுக்காக மக்கள் தாமாகவே தங்கள் பணத்தை அரசிடம் கொடுத்துவைக்கிற தொகையை இந்தப் ‘பொதுக் கணக்’ கில் வரவு வைத்து, அவர்கள் கேட்கும்போது வட்டியுடன் திரும்பக் கொடுக்க வேண்டும். இதில், பொது மக்களின் பணத்தை வரவு வைக்கவும், திரும்பக் கொடுக்கவும் ஆளுநரின் அனுமதி தேவை இல்லை.

கடனுக்கென ஒரு சட்டம்

மாநில அரசு வரி, வரி அல்லாத வருவாய், கடன் என்ற மூன்று வழிகளில் வருவாய் பெற்று மாநிலத் தொகு நிதியில் வரவு வைக்கும். இதில் வரி வருவாய்தான் பிரதான வருவாய் இனமாகும். இந்திய அரசியல் சட்டம், பிரிவு 256ன்படி, உரிய அதிகாரம் பெறாமல் மாநில அரசு மக்கள் மீது வரி விதிக்கவோ, வசூலிக்கவோ முடியாது. ஒவ்வொரு ஆண்டும் வரி வருவாயைப் பெறுவதற்கென சட்டமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றி, அதற்கு ஆளுநரின் அனுமதியைப் பெற வேண்டும். இவ்வாறு வரி வருவாய் ஈட்ட ‘நிதிச் சட்டவரைவு’ (finance bill ) ஒன்று நிதி அமைச்சரால் ஆளுநர் அனுமதியுடன் சட்டமன்றத் தில் சமர்ப்பிக்கப்படும். இதனைச் சட்டமாக நிறைவேற்றி, மீண்டும் ஆளுநரின் ஒப்புதல் பெற்றே வரி வருவாய் ஈட்டும் அதிகாரத்தை அரசு பெற முடியும். சட்டமன்றத்தில் உரிய சட்டம் இயற்றாமலும், இயற்றிய சட்டங்களுக்கு ஆளுநரின் இசைவு பெறாமலும் மாநில அரசால் வரி வருவாய் ஈட்ட முடியாது. இவ்வாறு பெறப்பட்ட வரி வருவாய் ‘மாநில தொகு நிதி’யில் வரவு வைக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் பிரிவு 266 கூறுகிறது.

வரி அல்லாத வருவாய் இனங்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு அரசுத் துறையும் தாங்கள் செய்கின்ற சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கலாம் (கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தேர்வுத் துறை, வேலைவாய்ப்புத் துறை என்று எல்லா அரசுத் துறைகளிலும் பல வகைகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன). சட்டத்தை மீறுவோர் மீது அபராதம் விதிக்கலாம். அரசுத் துறை வியாபார நிறுவனங்கள் லாபத்தை ஈட்டி அதனை ஈவுத் தொகையாக அரசுக்குக் கொடுக்கலாம். இவை அனைத்தும் வரி அல்லாத வருவாய்களாக ‘மாநிலத் தொகு நிதி’யில் வரவு வைக்கப்படும். வரி அல்லாத வருவாய் இனங்கள் மூலம் பெறப்படுவது மிகச் சொற்பத் தொகையாகவே இருக்கிறது. இதற்கு ‘நிதிச் சட்டம்’ இயற்ற வேண்டியதில்லை.

மாநில அரசு எவ்வளவு கடன் வாங்கலாம் என்றும் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ‘நிதி பொறுப்புச் சட்டம்’ என்று ஒன்று உள்ளது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் 3% மிகாமல் கடன் வாங்கலாம். இதற்காக மாநில அரசு கடன் பத்திரங்களை அளிக்க வேண்டும்.

பணம் ஒதுக்குச் சட்டம்

அரசு செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ‘மாநிலத் தொகு நிதி’யிலிருந்து பணம் எடுக்கும் அதிகாரம் வேண்டும் அல்லவா? அதற்காக ஒவ்வொரு அரசுத் துறையும் தங்களுக்கு ‘மாநிலத் தொகு நிதி’யிலிருந்து பணம் ஒதுக்க வேண்டும் என்பதைப் ‘பணம் ஒதுக்குச் சட்ட’மாக (Appropriation Act) சட்டமன்றத்தில் இயற்றி, அதற்கு ஆளுநரிடம் இசைவு பெற வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் பிரிவு 114 கூறுகிறது. இதற்காகத்தான் ஒவ்வொரு துறையும் ‘மானிய கோரிக்கை’கள் என்ற ஆவணத்தைச் சட்டமன்றத்தில் வைக்கின்றன. இதில் அத்துறையின் எல்லா திட்டங்களுக்கும் தெளிவான, மிக நுணுக்கமான வகையில் செலவுகளைப் பட்டியலிடுவர். இதனைத் தொடர்ந்து ‘பணம் ஒதுக்கு சட்ட’ மசோதா தாக்கல் செய்யப்படும்.

நிதிச் சட்டம், பணம் ஒதுக்குச் சட்டமன்றம் ஆகியவற்றுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு, பட்ஜெட் செயல்பாட்டுக்கு வரும். அதே நேரத்தில், இந்தச் சட்டங்களின் ஒரு பிரதி, இந்தியக் கணக்குத் தணிக்கை அதிகாரிக்கு (Comptroller and Auditor General of India) அனுப்பப்படும். அவர் மாநில அரசு, ‘நிதிச் சட்டத்’தில் உள்ளது போல வரி வசூலிக்கிறதா, ‘பணம் ஒதுக்குச் சட்டத்’தின்படி செலவு செய்யப்படுகிறதா என்பதை ஆய்வுசெய்வார். மாநில அரசின் வரவு - செலவுக் கணக்குகளைத் தணிக்கைசெய்து அதன் மீது ஓர் அறிக்கையை ஆளுநரிடம் வழங்குவார். அதனை ஆளுநர் சட்டமன்ற விவாதத்துக்கு வைப்பார். இந்த அறிக்கையை ஆய்வுசெய்ய சட்டமன்றத்தில் ‘பொதுக் கணக்குக் குழு’ ஒன்று உருவாக்கப்படும். ஒவ்வொரு கட்சிக்கும் சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இந்தக் குழுவில் இடம் அளிக்கப்படும். ஆகவே, எதிர்க் கட்சியினரும் இக்குழுவில் இடம்பெறுவர். துறை சார்ந்த உயர் அதிகாரி இக்குழுவின் முன் அறிக்கை மீதான விளக்கங்களைத் தருவார்.

இவ்வாறு, பட்ஜெட் தாக்கல் முதல், கணக்கு முடித்து தணிக்கை செய்து அதன் மீது ஆய்வுசெய்யும் வரை ஒவ்வொரு நிலையிலும், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் படி சட்டங்கள் இயற்றப்பட்டுச் செயல்படுத்தப்படுகின்றன. இப்பணி கட்டுக்கோப்பாக நடைபெறுவதற்கான வழிமுறைகளை நம் அரசியல் சட்டம் தெளிவாகச் செய்து வைத்திருக்கிறது.

- இராம.சீனுவாசன், பேராசிரியர்.
தொடர்புக்கு: seenu242@gmail.com

பிரிட்டனும் இங்கிலாந்தும் ஒன்றா?

கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியது தெரியும்தானே? ஆனால், பலர் இங்கிலாந்து வெளியேறியதாகவே புரிந்துகொள்கிறார்கள்.

உண்மையில், பிரிட்டன் என்பது இங்கிலாந்து கிடையாது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகள் இணைந்த கூட்டமைப்புதான் பிரிட்டன். யுனைடெட் கிங்டம் என்பதை யு.கே. என்று சுருக்கிச் சொல்வார்கள். அதுவும் பிரிட்டனைத்தான் குறிக்கும்; இங்கிலாந்தை அல்ல. இதன் விரிவாக்கம், ‘யுனைடெட் கிங்டம் ஆஃப் கிரேட் பிரிட்டன் அண்டு நார்தர்ன் அயர்லாந்து’ என்பது.

நான்கு நாடுகளின் கூட்டமைப்புதான் பிரிட்டன். அதில் அங்கம் வகிக்கிற ஒவ்வொரு நாட்டுக்கும் தனியான தன்னாளுகை, தனியான தலைநகர், தனியான அரசாங்கம் இருக்கிறது.

ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பரோ. இந்த நாடே ஒரு தீவுதான் என்றாலும், சுமார் 790 சிறு தீவுகளையும் உள்ளடக்கியிருக்கிறது ஸ்காட்லாந்து. 1707-ல் இது பிரிட்டனின் அங்கமானது.

வேல்ஸ் நாட்டின் தலைநகர் கர்டிப். 13-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசர் முதலாம் எட்வர்டு இந்த நாட்டைப் போரில் வென்று இங்கிலாந்துடன் இணைத்தார். பின்பு, சுதந்திரம் பெற்று தனி நாடாகிவிட்டது என்றாலும், 1536- ல் பிரிட்டன் எனும் கூட்டமைப்புக்குள் வந்துவிட்டது வேல்ஸ்.

சிலர் அயர்லாந்தும் பிரிட்டனின் ஓர் அங்கம் என்று கருதுகிறார்கள். அப்படியில்லை. அது தனி நாடாகவே உள்ளது. இப்போதும்கூட அது ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கிறது. 1801-ல் ஒட்டுமொத்த அயர்லாந்தும் யு.கே.வின் அங்கமாக இருந்தது. 1922-ல் அது தனியே பிரிந்து சென்றுவிட்டது. இருப்பினும் அயர்லாந்து தீவின் வடக்கு முனை மட்டும், அதாவது, ஒட்டுமொத்தத் தீவின் ஆறில் ஒரு பங்காக உள்ள வடக்கு அயர்லாந்து மட்டும், தனி நாடு அந்தஸ்துடன் பிரிட்டனுடன் சேர்ந்துகொண்டது. இதன் தலைநகர் பெல்ஃபாஸ்ட்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய விஷயத்தில் இங்கிலாந்து மக்கள் அளவுக்கு ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதிருப்தியில் உள்ள அவர்கள், பிரிட்டனில் இருந்து விலகுவது குறித்துப் பேசுகிறார்கள். ஆனால், இப்போதைக்கு அவ்வாறு நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு என்கிறார்கள்.

பட்ஜெட் ஏன்? எதற்கு? எப்படி?

இந்திய அரசியல் சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லே கிடையாது

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதெல்லாம் திடீரென எல்லோருக்கும் பொருளாதாரம் பற்றிய ஆவல் அதிகரித்துவிடுகிறது. வருமானவரி செலுத்துவோர் தனிநபர் வருமானவரி விகிதத்தைக் குறைத்திருக்கிறார்களா என்றும், ஏனையோர் எந்தெந்தப் பொருட்களுக்கு வரி குறைந்திருக்கிறது என்றும் கூர்ந்து கவனிப்பது வழக்கமாகிவிட்டது. அதையொட்டியே ஊடகங்களின் தலைப்புச் செய்திகளும் அமைகின்றன. ஆனால், பட்ஜெட் என்பது வெறுமனே இவை மட்டுமே அல்ல; வேறு பல பொருளாதாரக் கூறுகளையும் கொண்டுள்ளது.

நமது அரசியல் சாசனத்தில் உள்ள பொருளாதாரச் சட்டங்களில் அதிக முக்கியத்துவம் கொண்டவை பட்ஜெட் தொடர்பான சட்டங்கள்தான். அரசின் வருவாய் எப்படி ஈட்டப்பட வேண்டும்? அவற்றை எப்படிச் செலவுசெய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் எவ்வாறு விவாதித்துச் செயல்பட வேண்டும் என்பதை இந்தச் சட்டப் பிரிவுகள்தான் விவரிக்கின்றன. ஆக, பட்ஜெட் என்பதே ஒரு நீண்ட ஜனநாயக விவாதத்துக்குப் பிறகு வெளிவர வேண்டிய பொருளாதார அறிக்கை. இந்த விவாதத்தில் நம் சமூகமும் ஊடகங்கள் மூலமாகப் பங்குபெறுவதே அடிப்படை ஜனநாயகமாகும்.

பட்ஜெட் என்றால் என்ன?

ஒரு ஆச்சரியமான தகவல், இந்திய அரசியல் சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லே கிடையாது. அரசின் ஆண்டு நிதி அறிக்கை என்ற பதமே உள்ளது. இதற்கு அரசின் ஆண்டு வரவு - செலவுக் கணக்கு என்று அர்த்தம். அதனால்தான் பொதுவாக, இதனை பட்ஜெட் என்று அழைக்கிறோம். அரசியல் சட்டப் பிரிவு 112ன்படி, அரசு ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு நிதி அறிக்கையை நாடாளுமன்றம் (அ) சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய குடியரசுத்தலைவர்/ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இங்கே அட்டவணையில் கொடுக்கப்பட்டிருப்பது கடந்த ஆண்டு (2015 -16) தமிழக அரசு தாக்கல் செய்த வரவு - செலவுக்குக் கணக்கின் சுருக்கம். இதனை சட்டமன்றத்தில் தாக்கல்செய்து, அதன்மீது நிதியமைச்சர் ஓர் உரை நிகழ்த்துவார். இந்த உரையில் அரசின் முக்கிய வருவாய் சேர்க்கும் வழிகள், செலவுகள் போன்ற அம்சங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைப்பார். அதேநேரத்தில், வருவாய் பெறும் வழிகள், செலவுக்கான விரிவான கணக்குகள் எல்லாம் தனித் தனி அறிக்கைகளாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்.

இந்த அறிக்கைகளை எல்லாம் விவாதத்துக்கு ஏற்றுக்கொண்டதாக சட்டமன்றம் குரல் வாக்குமூலம் அறிவிக்கும். இப்படிச் செய்வதாலேயே பட்ஜெட் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அர்த்தமாகாது. வரி வருவாய் வழிகளையும், செலவு செய்யும் வகைகளையும் தனித்தனியாக விவாதித்து, அதற்கான சட்டங்களைச் சட்டமன்றம் ஏற்படுத்தும். அச்சட்டங்களை நடைமுறைப்படுத்த ஆளுநர் இசைவு வழங்கிய பின்னரே, பட்ஜெட் நடைமுறைக்கு வரும்.

வரவு - செலவுத் திட்ட மதிப்பீடு

ஆண்டு நிதி அறிக்கையில் நடப்பாண்டு, கடந்தாண்டு கணக்குகள் உட்பட நான்கு கணக்குகளைத் தாக்கல் செய்வது வழக்கம். அவை...

வரவு - செலவுத் திட்ட மதிப்பீடு:

எந்த ஆண்டுக்காக நிதி அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறதோ, அந்த ஆண்டுக்கான வருவாய் - செலவுகளின் மதிப்பீடு.

நடப்பு நிதி ஆண்டின் திட்ட மதிப்பீடு:

இதில் நடப்பு நிதி ஆண்டின் திட்ட மதிப்பீடு விவரங்கள் கொடுக்கப் பட்டிருக்கும்.

நடப்பு நிதி ஆண்டின் திருத்திய மதிப்பீடு:

ஓர் ஆண் டின் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அந்த ஆண் டின் இறுதிக்குள் வரவு - செலவுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எதிர்பார்க்கப்பட்ட வரி வருவாய் வராமல் போயிருக்கலாம், அதற்குத் தக்கவாறு செலவுகளைக் குறைக்க வேண்டி இருந்திருக்கலாம். அல்லது சில புதிய செலவுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம். இதனை எல்லாம் அடுத்து வருகின்றன சட்டமன்றக் கூட்டங்களில் திருத்திய மதிப்பீடுகளாக ஒப்புதல் பெறுவதற்காகத் தாக்கல் செய்யப்படும் கணக்கு.

கடந்த ஆண்டு வரவு - செலவுக் கணக்கு:

கடந்த ஆண்டின் நிதிநிலைக் கணக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்து, முழுமையாக இறுதி செய்யப்பட்ட வருவாய்களையும் செலவுகளையும் பட்டியலிடுவது.

இப்படி நான்கு கணக்குகளையும் ஒன்றாக இணைத்து வெளியிடுவதற்குக் காரணம், இவற்றை ஒப்பிட்டு ஆராய்வதற்கு எளிதாக இருக்கும் என்பதே. நடப்பு ஆண்டின் திட்ட மதிப்புக்கும் திருத்திய மதிப்புக்கும் உள்ள வேறுபாடுகளுக்கான காரணங்களை ஆராய்வது, கடந்த ஆண்டின் உறுதிசெய்யப்பட்ட கணக்குக்கும் தற்போதுள்ள திட்ட மதிப்புக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்வது என்று பல விதங்களில் நிதிநிலை கணக்கு ஆராயப்படும்.

பொதுத்துறை நிறுவனங்கள் தனி

ஒரு நிதி ஆண்டு என்பது ஏப்ரல் 1 துவங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31-ல் முடியும். எனவேதான், நிதிநிலை அறிக்கையில் 2016 -17 என்று இரண்டு ஆண்டுகளைத் தொடர்ச்சியாகக் குறிப்பிடுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஏப்ரல் மாதத்துக்குள் அரசின் விரிவான வருவாய் - செலவுகள் விவாதிக்கப்பட்டு சட்டங்களாக நிறைவேற்றப்படும். அதன் பிறகு, அந்த நிதி ஆண்டின் புதிய திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும். சட்டமன்றத் தேர்தல் நடந்த ஆண்டுகளில் மட்டும் கொஞ்சம் தாமதமாக அதாவது, ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

விவரமான நிதிநிலை அறிக்கையில் அரசின் எல்லாத் துறைகளின் வரவு - செலவுகளும் தனித்தனியே கொடுக்கப்படும். ஆனால், இவற்றில் அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் நிதிநிலை மட்டும் இருக்காது. ஒரு நிறுவனத்தில் அரசு முதலீடு செய்தாலோ, அல்லது அதன் செலவுக்கு மானியம் அளித்தாலோ அவை அத்துறையின் செலவுகளாக இருக்கும். அதேபோல் ஓர் அரசு நிறுவனம் லாபம் ஈட்டினால், அதன் ஈவுத் தொகை (லாபத்தில் பங்கு) அரசின் வருவாயாகக் காட்டப்படும்.

இது மட்டுமல்லாமல், பொதுத் துறை நிறுவனங்களின் வரவு - செலவுக் கணக்குகள் தனியாகத் தாக்கல் செய்யப்படும். அதன் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கலாம். ஒரேயொரு வித்தியாசம், பொதுத் துறை நிறுவனங்களின் வரவு - செலவுக் கணக்குக்குச் சட்டமன்ற ஒப்புதல் தேவை இல்லை.

நிதி அமைச்சரின் உரையுடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசின் நிதிநிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்த ஓர் உத்தேசக் கணக்கும் இருக்கும். இது அரசின் கடன், வரி வருவாய், தவிர்க்க முடியாத செலவுகள் போன்றவை அடுத்த மூன்று ஆண்டுகளில் எவ்வாறு அதிகரிக்கும் என்பதைக் குறிப்பிடும் ஓர் உத்தேசக் கணக்கு.

நிதி அமைச்சரின் உரையில் இருக்கும் விவரங்களை யும், இங்குள்ள அட்டவணை விவரங்களையும் வைத்துக் கொண்டு, அரசின் நிதிநிலை பற்றி நுட்பமான கருத்து களைக் கூற முடியாது. அரசின் நிதிநிலையின் பொதுவான போக்கு எப்படி உள்ளது என்பதையே அறிய முடியும்.

- இராம.சீனுவாசன், பேராசிரியர்
தொடர்புக்கு: seenu242@gmail.co

எம்.பி.ஏ. முடித்துவிட்டு ஆடு வளர்ப்பில் களம் இறங்கி சாதித்த இளைஞர்

எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு ஆடு வளர்ப்பில் களம் இறங்கி திட்டமிட்டு செயலாற்றி ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் சாதித்துக் காட்டியுள்ளார்.

கோவை கொடிசியாவில் ‘அக்ரி இன்டெக்ஸ் 2016’ கண்காட்சி நேற்று தொடங்கியது. வேளாண் தொழில், ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண் தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில், ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில் தோப்புக்காடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் எஸ்.அருண்குமார் அமைத்துள்ள ஆடு வளர்ப்பு குறித்த அரங்கு கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதே இடத்தில் திடகாத்திரமாக நிற்கும் ஆட்டில் இருந்து பாலை கறந்து தேநீர் தயாரித்து ரூ.20-க்கு ஒரு கோப்பையில் வழங்குகிறார். அரங்கில் அவர் நிறுத்தி வைத்துள்ள தலச்சேரி இனத்தைச் சேர்ந்த ஆடுகளும், குட்டிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. கண்காட்சி நடைபெறும் இடத்தை சுற்றி வருபவர்கள், அவரது தொழில்முறை குறித்து விசாரித்து செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

கூடவே, சூடாக தேநீர் அருந்திச் செல்கின்றனர்.

வளர்ப்பதற்கு ஆட்டுக்குட்டிகளை விற்பனை செய்கிறார். ஒரு கிலோ ரூ.350 என விலை நிர்ணயித்து ஆடுகள் விற்கப்படுகின்றன.

அருண்குமார் வசம் தற்போது 200 தலச்சேரி ஆடுகள் இருக்கின்றன. தனது சொந்த ஊரிலேயே ஆட்டுப் பால் விற்பனையிலும், ஆடு விற்பனையிலும் நல்ல வருமானம் ஈட்டி வருவதாக தெரிவிக்கும் அவர், எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு களத்தில் இறங்கியது என்பது கூடுதல் தகவல்.

தொழில்முறை குறித்து அவர் கூறியதாவது: எனது தந்தை கே.சுப்ரமணியம், கூலித்தொழிலாளி. தாயார் சிவகாமி. கடந்த 2009-ம் ஆண்டு எம்.பி.ஏ. படிப்பு முடித்தேன். படிப்பை முடித்ததும் அடுத்தவரிடம் சென்று வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. வேளாண்துறையில் தொழில் நடத்த வேண்டும் என்பது லட்சியம். தொடர்ந்து, பல்வேறுகட்ட யோசனைக்கு பின்னர் ஆடு வளர்ப்பில் இறங்கினேன். தொடக்கத்தில் கடன் வாங்கி ரூ.3 லட்சத்தில் கேரளம் சென்று 40 ஆடுகளை வாங்கி வந்தேன்.

ஆடு வளர்ப்பு குறித்து கேட்டும், படித்தும் தெரிந்து வைத்திருந்தாலும் ஆடுகள் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தன. அவற்றை நேர்த்தியாக பராமரித்து வருமானம் ஈட்டுவது என்பது, தொழில் தொடங்கி 3 ஆண்டுகள் முடிவடைந்தும் முடியவில்லை. 2012-ம் ஆண்டு வரை இடர்பாடுகளை சந்தித்து வந்தேன்.

தற்போது, நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஆட்டு பால் வயிற்றுப்புண், தைராய்டு நோய், உடல்சோர்வு, மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகளைப் போக்கும் என்பதால் பால் விற்பனை நன்றாக உள்ளது. ஒரு லிட்டர் பால் ரூ.150-க்கு விற்பனை செய்கிறோம்.

தலச்சேரி ஆடுகள் மாமிச வகைக்கு உகந்தது. இரண்டு ஆண்டு கடந்த ஆட்டின் எடை மட்டும் 80 கிலோவை தாண்டி இருக்கும். இதில், நேர்த்தியுடன் இயங்குவதால் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. தற்போது, 5 பணியாட்களை வைத்து தொழில் நடத்தி வருகிறேன்.

எனது தாயாரும் உறுதுணையாக இருக்கிறார். இதைத்தவிர காங்கேயம் வகை நாட்டு மாடுகள் பராமரிப்பும் செய்து வருகிறேன். அதிலும் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது என்றார்.

ஆடு வளர்ப்பில் சாதித்துள்ள அருண்குமார், ஆடு வளர்ப்பு ஓர் அனுபவக் கையேடு என்ற புத்தகத்தை ரூ.30-க்கு விற்பனை செய்து வருகிறார். அரங்குக்கு வரும் பெரும்பாலான பார்வையாளர்கள் அந்த புத்தகத்தை தவறாமல் வாங்கிச் செல்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

Jul 14, 2016

காற்றினிலே வரும் கீதம்

அடுத்த வீட்டின் பின்புறம் ஒரு மாமரம் இருந்தது. அதில் ஒரு குயில் தம்பதி குடியிருந்தது. கிழக்கு வெளுக்கத் தொடங்கியவுடன் அவை பாடத் தொடங்கும். நன்னம்பிக்கையின் குறியீடாக அது புலப்படும். இருளின் அடர்த்தி குறைவதையும் ஒளி வளர்வதையும் கண்டு உற்சாகமும் ஊக்கமும் அவற்றின் தொண்டையிலிருந்து பீறிட்டுக் கிளம்பும். ஒன்றன் பின் ஒன்றாக வேறு பல பறவைகளும் அவற்றுடன் சேர்ந்துகொள்ளும்.

பறவைகளின் வைகறை இசையைப் போல மனதுக்குச் சுறுசுறுப்பூட்டுவது வேறெதுவுமில்லை. அதில் எண்ணற்ற சொற்கட்டுகளும், சங்கதிகளும், ராகங்களும், சுரங்களும் வெள்ளமாகப் பெருக்கெடுத்தோடும். அது ஒரு மொழி. அதில் சொற்கள் இல்லாதிருந்தாலும் பொருள் செறிந் திருக்கும். அந்தப் பொருள் நமக்கு விளங்காமல் போனாலும் அந்த இசை வசந்த காலத்தின் வருகைக்குக் கட்டியம் கூறுவதால், நமது மனதிலும் மகிழ்ச்சியுண்டாகும். உயிர் தரித்திருப்பதைக் கொண்டாடும் மனமிருந்தால் அது சாத்தியம்.

ஏன் பாடுகின்றன?

பறவைகள் ஏன் பாடுகின்றன என்று கேட்டால், அதற்குக் காரணம் அவை அதற்காகவே படைக்கப்பட்டவை என்றுதான் சொல்ல முடியும். மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குரல்வளை அமைப்பிலிருந்து பறவைகளின் குரல்வளை வேறுபட்டது. அது மென்மையான தசை நார்களால் ஆனது. குருவி போன்ற சிறிய உடலுள்ள பறவைகளுக்கு அது சிறியதாக இருப்பதால், உயர் அதிர்வெண் சுருதிகளுள்ள ஒலிகளை மட்டுமே அதனால் வெளிப்படுத்த முடியும். பெரிய பறவைகளின் குரல் கர்ண கடூரமாயிருப்பதற்கு அவற்றின் குரல்வளை பெரியதாயிருப்பதே காரணம். தான் கூடு கட்டியிருக்கிற இடம், தனக்குரிய சமஸ்தானம் என்று மற்ற பறவைகளுக்கு அறிவிக்கவே ஒரு பறவை பாடுகிறது எனச் சில ஆய்வர்கள் கூறுகிறார்கள். உண்மையில், மனிதனின் குரல்வளை இசையொலிகளை எழுப்பும் உறுப்பாகப் பரிணமிக்கவில்லை என்றே சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பறவைகளைப் போல இசையொலி மூலம் தமது இணைகளைக் கவர்ந்திழுக்க வேண்டிய தேவை மனிதர்களுக்கும் (விலங்குகளுக்கும்) இல்லை என்பதே அதற்குக் காரணம்.

குளிர் மிகுந்த பகுதிகளிலிருந்து புறப்பட்டு, மிதவெப்பப் பகுதிகளுக்கு இனப் பெருக்கத்துக்காக வரும் பறவைகளில் ஆண்களே தமது கூடுகளைக் கட்டத் தொடங்குகின்றன. கூடுகளைக் கட்டி முடித்ததும் அவை உரத்த குரலில் பாடி, ‘வீடு தயார்’ என்று இணைகளுக்கு அறிவிக்கின்றன. வேறு ஆண் பறவை ஏதாவது அக்கம்பக்கத்தில் இருந்தால், அவற்றை எச்சரித்து வேறு இடத்துக்குப் போகும்படி கோபமாக மிரட்டவும் ஆண் பறவை குரலை உயர்த்திப் பாடும்.

ஓர் இணை கிடைத்து, அது கூட்டில் முட்டையிட்டு அடைகாக்கும்போதும் ஆண் பறவை பாடுகிறது. அது பெண் பறவையை மகிழ்விப்பதற்காக இருக்கலாம். அதை விடவும், அந்த நேரத்தில் அதன் உடலும் மனமும் உச்சகட்ட ஆற்றலுடன் இருப்பதே அதன் தொண்டையிலிருந்து இசை பீறிட்டெழுவதற்குக் காரணம். கூடுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படும் பறவைகள், அருகே இணை ஏதும் இல்லாத நிலையிலும் வசந்தத்தின் இனப் பெருக்கக் காலத்தில் உரத்த குரலில் பாடுகின்றன. அது ஏதோ ஓர் உள்ளுணர்வின் தூண்டலாகவே தோன்றுகிறது.

முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிப்பட்டதும் பாட்டுப் பாடுவது குறைகிறது. ஆணுக்கு, வெளியே சுற்றித் திரிந்து இரை தேடி எடுத்து வர வேண்டிய பணிச்சுமை அதிகரிக்கிறது. சில பறவை இனங்களில் ஒரு ஈடு முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிப்பட்ட சில நாட்களுக்குள்ளாகவே பெண் பறவை இன்னொரு ஈடு முட்டைகளை இட்டுவிடுவது உண்டு. அப்போது வசந்த காலமாக இல்லாவிட்டாலும் ஆண் பறவை அலகை மூடியவாறே வாய்க்குள்ளாகப் பாட்டுப் பாடும்.

காலையில்தான் பாட்டு

பாட்டுப் பாடுவதற்கு நேரம், காலம், பருவம் எல்லாம் பொருந்திவர வேண்டும். பெரும்பாலான பறவைகள் கிழக்கு வெளுக்கத் தொடங்கும்போது பாடத் தொடங்குகின்றன. அப்போதும் ஒவ்வொரு பறவையினமும் ஒவ்வொரு குறிப்பிட்ட கணத்தில்தான் பாட்டை ஆரம்பிக்கின்றன. மாலையில் அவை கூடுகளுக்குத் திரும்பும் நேரத்தில், மீண்டும் கச்சேரி உச்ச ஸ்தாயியில் தொடங்கும். ஆனால், காலை வேளையில் நடப்பதைவிடச் சற்று மென்மையான சுரங்களுடன் இருக்கும். அதில் இசையொலியைவிட, சளசளப்புக் கூச்சலே அதிகம். ஆற்றங்கரை அரச மரங்களில் மாலை நேரங்களில் பலவிதமான பறவைகள் தத்தம் கூடுகளில் அமர்ந்துகொண்டு சத்தம் போடும். அதை இசையென்று வகைப்படுத்த மிகவும் தாராளமான மனநிலை தேவை.

சில பறவைகள் விடியற்காலையில் மட்டும் பாடும். ஆந்தைகளும் கோட்டான்களும் இரவின் இருட்டில் மட்டுமே குரல் கொடுக்கும். அதை இசையாக யாரும் குறிப்பிடுவதில்லை. அலறல் என்றுதான் சொல்லுவார்கள். ஆனால், பெண் ஆந்தைகளுக்கு அது கந்தர்வ கானமாயிருக்கும்.

இருள் பிரிவதற்கு முன்பே கண் விழித்துவிடும் ஸ்விஃப்ட் (உழவாரன்) பறவைகள், வானத்தில் பெரும் உயரத்துக்கு எழும்பிச் சூரியனின் முதல் செங்கதிர்கள் பூமியின் தரையில் படுவதற்கு முன்பாகவே எதிர்கொண்டு வரவேற்றுப் பாடத் தொடங்கும். வானம்பாடிகள் காலையிலும் பாடும், மாலையிலும் பாடும். நைட்டிங்கேல் பறவையும் இரு வேளையும் பாடும் பழக்கமுள்ளது.

எல்லாப் பறவைகளுமே தமக்குரிய குரல் வளத்துடன் பாடுகின்றன. மனிதர்கள்தான் அவற்றை இசை, சளசளப்பு, கூச்சல் என்றெல்லாம் வகைப்படுத்துகின்றனர். பறவைகள் அடைகாக்கும்போது மென்மையான குரலில் முணுமுணுக்கின்றன. முட்டைக்குள் வளரும் குஞ்சுகள் அதிலிருந்து வெளிப்படுகிறபோது தம் பெற்றோரை அடையாளம் காண அது உதவுகிறது. அவை முதலில் அதே போன்ற ஒலிகளை எழுப்பினாலும், வளர வளரத் தத்தம் இனத்தாரிடமிருந்து பல்வேறு இசையொலிகளை எழுப்பக் கற்றுக்கொள்வதாகப் பறவையியலாளர்கள் கருதுகின்றனர்.

பயிற்சி மூலமே பாட்டு

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வர் குழு ஒரு ஃபிஞ்ச் குருவிக் குஞ்சை, முட்டையிலிருந்து வெளிப்பட்டவுடன் தனிமைப்படுத்திப் பராமரித்தது. அது ஓரளவுக்குச் சுமாரான சில இசையொலிகளை எழுப்பினாலும் சுயேச்சையாக வாழும் குருவிகளின் அளவுக்குப் பல்வேறு இசையொலிகளை எழுப்பவில்லை. இதன் மூலம் ஃபிஞ்ச் குருவிகள் பிற குருவிகளிடமிருந்தே முழுமையான இசைப் பயிற்சியைப் பெறுகின்றன என்பது கண்டறியப்பட்டது. மற்றெல்லா இனப் பறவைகளுக்கும் இது பொருந்தும்.

அடுத்து, அந்தக் குருவிக் குஞ்சுக்குத் துணையாக இன்னொரு குருவியைக் கூண்டில் வைத்தபோது, பெரிய குருவி எழுப்பிய இசையொலிகளைக் கேட்டுக் கேட்டுக் குருவிக் குஞ்சும் அவற்றைக் காப்பியடித்துப் பாடத் தொடங்கிவிட்டது. பறவையிசை என்பது பிறவிக் குணமல்ல என்பதும் பயிற்றுவிக்கப்படுவதே என்பதும் இதன் மூலம் அறியப்பட்டது.

இன்னொரு சோதனையில், பல ஃபிஞ்ச் குருவிக் குஞ்சுகளை ஒரே அறையில் வசிக்க வைத்தபோது எல்லாக் குஞ்சுகளும் ஒரே மாதிரியான குரலில், ஒரே சுரத்தைப் பாடின. சுயேச்சையாகத் திரியும் ஃபிஞ்ச் குருவிக் கூட்டத்தில் ஒலிக்கிற பல்வேறு சுருதிகளை இந்தப் பரிசோதனைக் கூட்டத்தில் கேட்க முடியவில்லை. அந்தக் கூட்டத்தின் இசையே சுயேச்சையான கூட்டத்தின் இசையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது.

தாய்ப் பறவை அடைகாக்கும்போதும், குஞ்சுகளுக்கு இரையூட்டுகிறபோதும், இளம் பருவத்திலும் கற்றுத்தருகிற பாட்டைத்தான் குஞ்சுகள் தம் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் பிறந்து வளர்ந்த ஃபிஞ்ச் பறவைகள் எல்லாம் ஒரே சுரத்தை ஒரே மாதிரியாகப் பாடின. ஆனால், வேறு மாகாணத்தில் வேறு ஒரு வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவை வேறு சுரத்தில் பாடின. லயம்கூட வேறுபட்டிருந்தது. கேம்பிரிட்ஜில் ஆய்வர்கள் தமது வட்டாரத்தில் வசித்த குருவிகளின் இசைக்கு ஏற்பச் சொற்களைப் போட்டுப் பாடலை இயற்றினார்கள். ஆனால், வேறு மாகாணங்களில் வசித்த ஃபிஞ்ச் குருவிகளின் இசைக்கு அந்தச் சொற்கள் பொருந்தவில்லை.

ஜே, மாக்கிங்பர்ட் போன்ற பறவைகள் தம்முடன் கூடி வாழும் வேறு இனப் பறவைகளின் பாட்டுகளைக் காப்பியடிப்பதும் காணப்பட்டிருக்கிறது. வீடுகளில் கூண்டுப் பறவைகளாக வளர்க்கப்படும் நீல ஜே பறவைகள் தமது காதில் விழும் சலவை இயந்திர ஒலி, நாய்களின் குரைப்பு போன்றவற்றைப் போலவே ஒலியெழுப்பும். ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட மாக்கிங் பர்ட் தன் எஜமானரின் இருமல் ஒலியைத் தத்ரூபமாக எழுப்பியது. அதைக் கேட்டுச் சிரித்த எஜமானியின் சிரிப்பையும் அப்படியே எதிரொலித்தது.

பறவைகளின் இசையில் ஓர் அடிப்படையான மர்மம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அவை இசை மூலம் தமக்குள் பரிமாறிக்கொள்ளும் ரகசியங்களை விண்டுணர மனிதர்களால் இயலவில்லை. ஆனாலும் கத்தும் குயிலோசை காதில் விழ வேண்டும் என்ற ஆசை மனிதர்களுக்குத் தணியாமலிருக்கிறது. குக்கூ என்று அது எழுப்பும் ஒலியே அதன் ஆங்கிலப் பெயராகிவிட்டது.

- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

விண்வெளியை ஆராயலாமா?

விண்வெளி ஆராய்ச்சி என்றாலே ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய விண்வெளி வீரர்கள்தான் நமக்கு ஞாபகத்துக்கு வருவார்கள். ஆனால், வானியல் துறை எனப்படும் விண்வெளி தொடர்பான துறை பல பிரிவுகளையும் பணிகளையும் கொண்டது. ஒரு விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவில் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என்று பல வேலைப் பிரிவுகளும் வாய்ப்புகளும் உள்ளன.

நமது பூமியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விண்வெளி ஆராய்ச்சித் தொழில்நுட்பங்கள் உதவி செய்கின்றன. அப்போலோ மூன் ப்ரோக்ராம் திட்டத்தின் அடிப்படையில் மனிதர்கள் முதலில் நிலவில் இறங்கியபோதுதான், பூமியின் முதல் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. பூமி மட்டுமின்றி, நமது பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை ஆராய விண்வெளி ஆராய்ச்சிகள் அவசியம்.

மேலிருந்து பூமியை நிர்வகிக்கிறோம்

பூமியிலிருந்து நாம் அனுப்பும் செயற்கைக் கோள்கள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் தொலைபேசி சமிக்ஞைகளைக் கடத்துவதற்கு உதவுகின்றன. புவிநிலையறி அமைப்பு (Global Positioning System) பூமியில் செல்லும் கார்களுக்கும் வானில் பறக்கும் விமானங்களுக்கும் வழிகாட்டுகின்றன. பூமியை ஒட்டுமொத்தமாக நெருக்கமாக பார்த்து செயற்கைக் கோள்கள் அனுப்பும் ஒளிப்படங்கள் மூலம் பூமியை நிர்வகிப்பது எளிமையாக உள்ளது. பூமியிலுள்ள சமுத்திரங்கள், மழைக்காடுகள், பாலைவனங்கள், பனித்திட்டுகள், பருவநிலை மற்றும் நகரங்களைப் பார்வையிட முடிகிறது. கார்களிலிருந்தும், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளிலிருந்து வெளிப்படும் புகையால் சுற்றுச்சூழலும் ஓசோன் அடுக்கும் மாசுபடுவதைச் செயற்கைக் கோள் படங்களின் உதவியுடன் தெரிந்துகொண்டு மாசுபாட்டைக் குறைக்கும் வழிகளைத் திட்டமிடவும் சாத்தியமாகிறது.

புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் முன்னோடி

விண்வெளித் துறைதான் புதுப்பித்தக்க மின்னாற்றலை முன்னோடியாகப் பயன்படுத்திய துறை. விண்வெளி ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த பொறியாளர்கள்தான் செயற்கைக் கோள்களைச் செயல்படுத்துவதற்கு சூரிய மின்கலங்களை முதன்முதலில் பயன்படுத்தினார்கள். ஒரு செயற்கைக் கோள் பயன்படுத்தும் ஒவ்வொரு வாட் மின்சாரத்தையும் தயாரிப்பது சூரிய மின்கலங்கள்தான்.

பருவநிலை மாறுதல்கள் மற்றும் பேரிடர்களைக் கண்காணித்தல்

பருவநிலைகள் மாறுவதையும் இயற்கைப் பேரிடர்களையும் கணிப்பதற்கு செயற்கைக் கோள்களே உறுதுணையாக உள்ளன. சமுத்திரங்களின் வெப்பநிலையைக் கணித்து, புயல், சூறாவளி, வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு முன்னரே அரசுகளும் மக்களும் தயாராவதற்கும் செயற்கைக் கோள்கள் நமக்கு உதவுகின்றன. புவிவெப்பமடைவதால் பனிப்படிவுகள் உருகுவது, மழைக்காடுகளின் பரப்பு குறைவது போன்றவற்றையும் பற்றித் தெரிந்துகொள்ள செயற்கைக் கோள் தொழில்நுட்பங்களே ஆதாரமாக உள்ளன. விண்வெளி ஆராய்ச்சியில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.

விண்வெளி வீரர்

உலகம் முழுக்கவே விண்வெளி வீரர் ஆவதற்கான வாய்ப்புகள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. ஒரு விண்வெளி வீரராக ராக்கெட்டில் பயணிப்பதற்கு அதிகபட்ச ஆரோக்கியத் தகுதியும், கடும் பயிற்சிகளும் அவசியம். அறிவியல் அல்லது கணிதத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் நல்ல அனுபவம் கொண்ட விமான ஓட்டியாகவும் இருத்தல் அவசியம். விண்வெளி வீரர்களில் பெரும்பாலானவர்கள் முதுகலை அல்லது ஆய்வுப்பட்டம் முடித்தவர்களாக இருந்துள்ளனர். உயரம், எடை, கண்பார்வைத் துல்லியம் அவசியம். நாசா போன்ற புகழ்பெற்ற விண்வெளி நிலையங்கள் தங்களுக்கென்று பிரத்யேகமான தகுதி, திறன்களை விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வைத்துள்ளன.

விண்வெளிப் பொறியாளர்கள்

விண்வெளி ஆராய்ச்சியை பூமியிலிருந்தே சாத்தியப்படுத்துபவர்கள் விண்வெளிப் பொறியாளர்கள்தான். விண்வெளி செயற்கைக் கோள்கள் மற்றும் விண்வெளி நிலையங்களை வடிவமைப்பதோடு மட்டுமின்றி அவற்றின் பணிகளை ஒழுங்குபடுத்துவதும் இவர்கள்தான். ஏரோஸ்பேஸ் அல்லது ஏரோநாட்டிகல் இன்ஜீனியரிங், ஏவியானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜீனியரிங், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் இன்ஜீனியரிங், மெட்டிரீயல்ஸ் இன்ஜீனியரிங், மெக்கானிக்கல் இன்ஜீனியரிங், ரோபாட்டிக்ஸ் இன்ஜீனியரிங், ஸ்பேஸ்க்ராப்ட் இன்ஜீனியரிங், டெலிகம்யூனிகேஷன் இன்ஜீனியரிங் படித்தவர்கள் விண்வெளிப் பொறியாளர்களாகலாம்.

வானியலாளர்கள்

வானியலில் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்ற வாய்ப்புகள் உள்ளன. வேற்றுக் கிரகங்களி லிருந்து கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி மருந்துத் துறை ஆராய்ச்சி யாளர் புதிய மருந்துகளை உருவாக்கலாம்.

வான் இயற்பியலாளர்கள்

விண்மீன்கள், விண்பொருட்கள் மற்றும் விண்வெளியில் இயற்பியல் விதிகளின் செயல்பாடுகளை ஆராய்பவர்கள் வான் இயற்பியலாளர்கள் (Astrophysicists).

வான் உயிரியலாளர்கள்:

வேற்று கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்பதை ஆராய்பவர்கள்.

வான் வேதியலாளர்கள்

விண்வெளியில் காணப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் விண்கற்களின் வேதிக்கலவைகளை ஆராய்பவர்கள்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ விஞ்ஞானிகள்

விண்வெளி வீரரோ, ஒரு பிராணியோ விண்வெளியில் பயணிக்கும்போது அவருக்கு ஏற்படும் உடல் விளைவுகள், அங்கு கொண்டுசெல்லப்படும் தாவரங்களுக்கு ஏற்படும் விளைவுகளை ஆராய்ச்சி செய்பவர்கள்.

நிலவியலாளர்கள்

பூமி, மற்றும் கிரகங்களின் நிலவியல் பண்புகளை ஆராய்பவர்கள்.
வானிலையியல் வல்லுநர்கள்
விண்வெளியாலும் மற்ற கிரகங்களா லும் பூமியின் தாக்கத்தை ஆராய்பவர்கள்.

தொடர்பியல் தொழில்நுட்பம்

தொடர்பியல் தொழில்நுட்ப வியலாளர்கள், கணிப்பொறி வரை வடிவமைப்பாளர்கள் (கம்ப்யூட்டர் எய்டட் டிசைன்), எலக்ட்ரிஷியன்கள், லேசர் டெக்னிஷியன்கள், தர உத்தரவாத நிபுணர்கள், ரேடார் நிபுணர்கள், ரோபாட்டிக் நிபுணர்கள், செயற்கைக் கோள் நிபுணர்கள் விண்வெளித் தொடர்பு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் முதுகெலும்பாகச் செயல்படுகின்றனர்.

இந்தியாவில் வேலைவாய்ப்பு

இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன்
டிஃபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன்
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
நேஷனல் ஏரோநாட்டிக்கல் லபாரட்டரீஸ் லிமிடெட்
ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரி

இஸ்ரோவில் வேலை

1969-ல் விஞ்ஞானி விக்ரம் சாராபாயால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உருவாக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஆறில் ஒன்றாக இது உள்ளது. 35 வயதுக்குக் கீழ் உள்ள இந்தியக் குடிமக்கள் இஸ்ரோ நடத்தும் எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் சயன்ஸ் அல்லது மெக்கானிக்கல் இன்ஜீனியரிங்கில் பி.இ. அல்லது பி.டெக். முடித்தவர்கள், 65 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் இஸ்ரோ சார்பாக எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. இணையம் வழியாகவே இத்தேர்வு நடக்கும்.

விண்வெளி அறிவியலைக் கற்றுத்தருபவர்கள்

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்பேஸ் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி, திருவனந்தபுரம்
பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, மெஸ்ரா, ராஞ்சி
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயன்ஸ், பெங்களூரு
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, மும்பை, சென்னை, காரக்பூர் மற்றும் கான்பூர்

விண்வெளி விஞ்ஞானியாக

இயற்பியல், வேதியியல், கணிதம் இவற்றைப் பாடங்களாக பிளஸ் டூ-வில் எடுத்தவர்கள், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்பேஸ் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியில் சேர்ந்து பி.டெக். படிக்கலாம். அங்கே ஏரோஸ்பேஸ் இன்ஜீனியரிங், ஏவியானிக்ஸ், பிசிக்கல் சயன்ஸ் ஆகிய பிரிவுகள் உள்ளன. ஐஐடி ஜேஇஇ (IIT JEE) தேர்வு மூலம் ஐஐஎஸ்டியில் சேரலாம்.

உலகமயமாக்கலுக்குப் பிறகே இந்தியா வேகமாக வளர்ந்தது!

மான்டேக் சிங் அலுவாலியா பேட்டி

மன்மோகன் சிங் அணியின் முக்கியமான தளகர்த்தர் மான்டேக் சிங் அலுவாலியா. பிரதமர் பதவியில் மன்மோகன் அமர்ந்திருந்த 10 ஆண்டுகள் அவருக்கு உறுதுணையாகவும் ஆலோசகராகவும் மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தவர். உலகமயமாக்கல் பாதையை இந்தியா தேர்ந்தெடுத்து 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

1991 பொருளாதார நெருக்கடி மீட்புக் குழுவில் நீங்கள் முக்கிய உறுப்பினர்; அதற்குப் பிறகு நம்பிக்கை பல மடங்கு பெருகியது. அதே போன்ற நெருக்கடி பிறகு ஏற்படவில்லை; பொருளாதாரக் கொள்கை வகுப்பில் அதே போன்ற துணிச்சலும் நெஞ்சுரமும் அதற்குப் பிறகும் இருந்ததாகக் கூற முடியுமா?

1991 நெருக்கடி மிகவும் தீவிரமானது. உடனடியான, துணிச்சலான பதில் நடவடிக்கை தேவைப்பட்டது. நிதியமைச்சர் மன்மோகன் சிங், பிரதமர் நரசிம்ம ராவின் முழு ஆதரவோடு விரைவாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டார். நெருக்கடியைச் சமாளிக்க மட்டும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த நெருக்கடியையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, அமைப்பு முறையையே மாற்றியமைக்கும் அளவுக்குக் கட்டமைப்புகளில் மாறுதல்களைக் கொண்டுவந்தார். 1950-களிலும் 1960-களிலும் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார நிர்வாக முறைமை அதற்குப் பிந்தைய காலத்துக்குப் பொருந்தாமல் போய்விட்டது. அதைப் பற்றிப் பலமுறை பேசிவிட்டனர். தொழில், வர்த்தகக் கொள்கையைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை அனைவருமே ஒப்புக்கொண்டனர். தனியார் துறைக்கும் சந்தைகளுக்கும் முழு வாய்ப்பைத் தர வேண்டும் என்றனர். அரசியல் நிலையில் அவற்றுக்கு ஆதரவில்லை. அதிலும் குறிப்பாக இடதுசாரிகள் ஏற்கவேயில்லை. அதற்குப் பிறகு அத்தகைய துணிச்சலை நான் பார்க்கவேயில்லை. அதே சமயம், அதே போன்ற நெருக்கடியும் ஏற்படவில்லை. மகிழ்ச்சி தரும் அம்சம் என்னவென்றால், நரசிம்ம ராவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்துப் பிரதமர்களுமே சீர்திருத்தங்களைத் தொடர்ந்து மேற்கொள்வதுதான். திட்டங்களுக்கு இப்போது புதிய பெயர் சூட்டப்பட்டாலும் அவை பழைய திட்டங்களே. 1955 முதல் 1990 வரையில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 4% தான் இருந்தது. இதேபோல், தனிநபர் உற்பத்தி வளர்ச்சி ஆண்டுக்கு 2% என்ற அளவில்தான் வளர்ந்தது. சீர்திருத்தங்களை மேற்கொண்ட பின்னர், சராசரியாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7% ஆக அதிகரித்தது. மக்கள்தொகை பெருகும் வேகம் மட்டுப்பட்டது. நபர்வாரி உற்பத்தி வளர்ச்சி 5.5% ஆனது. அதுதான் வித்தியாசம். வருவாய் வேகமாக உயர்ந்தது, யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், தொழில் தொடங்கலாம் என்ற அளவுக்குப் பொருளாதாரம் திறந்துவிடப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டுகளைவிட வறுமை வேகமாகக் குறைந்தது. மக்களுடைய எதிர்பார்ப்புகள் மாறிவிட்டன. வறுமைக்கோட்டுக்கு மேலே தள்ளப்படுவது மட்டும் போதாது என்று ஏழைகள் கருதுகின்றனர். தரமுள்ள வேலை, கல்வி, சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற சேவைகளைப் பெறுவதில் சம உரிமை வேண்டும் என்கின்றனர். நாம் இத்துறையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்.

சீர்திருத்தங்களுக்கு முன்னால், இந்தியாவின் வளர்ச்சி பிற வளரும் நாடுகளை விடக் குறைவாக இருந்தது. சீர்திருத்தங்களுக்குப் பிறகு வளர்ந்த நாடுகளைவிட அதிகமாகிவிட்டது. சீனம் மட்டுமே விதிவிலக்கு.

மாற்றங்களின் வேகம் தொடர்பான தன்னுடைய கருத்துகள் மாறிவிட்டன என்று மன்மோகன் கூறியிருக்கிறார்; “மெதுவாக மாற வேண்டும் என்றே விரும்பினேன். ஆனால், நாட்டின் சூழலைப் பார்த்தபோது, மெதுவாகச் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்ற எண்ணம் ஏற்பட்டது. அடிப்படையான மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்றால், அதற்கான நேரம் இது என்றே முடிவு செய்தேன்” என்கிறார் மன்மோகன். அவரே பிரதமராகப் பதவி வகித்தபோது ‘கொள்கை அமலில் தேக்கநிலை’ வந்துவிட்டதாகப் பின்னர் கூறப்பட்டது. அதைப் பற்றிக் கூறுங்களேன்?

சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்காததால் தொழில் திட்டங்களின் காத்திருப்பு எண்ணிக்கை உயர்ந்தது, அரசு - தனியார் பங்கேற்பில் (பி.பி.பி.) தீர்க்கப்படாத பூசல்கள், அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு செய்தவர்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் போன்றவற்றைத்தான் ‘கொள்கை அமலில் தேக்கநிலை’ என்று நீங்கள் கூறுவதாகப் புரிந்துகொள்கிறேன். 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இது நிச்சயம் பிரச்சினையாக இருந்தது. 2012 இறுதியில் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தது. 8% வளர்ச்சி என்பது ஆதரவான அரசின் கொள்கைகளைப் பொறுத்தது என்று கூறியிருந்தோம். கொள்கை வகுப்பதில் தேக்கநிலை ஏற்பட்டால், வளர்ச்சி வேகம் 5% முதல் 5.5% ஆகக் குறைந்து விடும் என்று எச்சரித்தோம். தேக்கநிலைக்கு முக்கியக் காரணம், தீர்வு காண ஒத்துழைக்காமல் அமைச்சகங்கள் செயல்பட்டதுதான். அதற்கும் தீர்வு காண வழிகள் ஆராயப்பட்டன. அதற்குள் பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டது.

வெகு உறுதியுடன் நாங்கள் செயல்பட்டது பல முறை. அவற்றிலிருந்து சிலவற்றைக் கூறுகிறேன். 2013-ல் ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்பாக அழுத்தம் தரப்பட்டது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (இறக்குமதி மதிப்பு அதிகம் - ஏற்றுமதி மதிப்பு குறைவு) அதிகமாகி மொத்த உற்பத்தி மதிப்பில் 4% ஆனது. அந்நிய மூலதனமும் நாட்டிலிருந்து வெளியேறத் தொடங்கியது. அதனால், ரூபாயின் மாற்று மதிப்பு வேகமாகச் சரிந்தது. செலாவணி மாற்று மதிப்பை நெகிழ்ச்சியாக வைத்திருந்ததால் பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் உதவியைப் பெறாமலேயே நிலை மையைச் சமாளித்தோம். நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தே தீருவது என்ற உறுதியான முடிவை நிதியமைச்சர் அப்போது எடுத்ததும், கைவசம் அதிகளவில் இருந்த அந்நியச் செலாவணி மதிப்பும் கைகொடுத்தன. அப்போது நாங்கள் தயங்கியிருந்தால் விளைவுகள் வேதனை தந்திருக்கும்.

2007-08 உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்த நிதித் தூண்டல் நடவடிக்கைகளால் பொருளாதாரத் துயர் அதிகமானது என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார். அந்த முடிவுகளை எடுத்தவர்களில் நீங்களும் ஒருவர்…

அந்த நிதித் தூண்டல் முடிவுகளின் பின்னால் நான் இருந்தேன் என்று அவர் கூறியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். நிதி நிர்வாகம் தொடர்பான முடிவுகளை எடுப்பது நிதியமைச்சகம்தான். நெருக்கடிக்கு எதிராக தொடக்கமாகச் சில ஊக்குவிப்புகளை வழங்கலாம் என்பதை ஆதரித்தேன். அப்போதைக்கு அதுதான் சரியான நடவடிக்கை. ஜி-20 அமைப்பும் அதைத்தான் பரிந்துரைத்தது. 2009-10-ல் வளர்ச்சி வீதத்தைப் பாதுகாத்ததற்குப் பிறகு 2010-ல் அவற்றைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாம் நல்ல பொருளாதார நிலையில் இருந்திருப்போம் என்று கருதுகிறேன்.

திட்டக் குழு தன்னைப் புதிதாக மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்று அதன் கடைசிக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். திட்டக் குழு தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

எல்லா நிறுவனங்களுமே தாங்கள் தோற்றுவிக்கப் பட்டதற்கான லட்சியத்தை நிறைவேற்றுகிறோமா என்று அவ்வப்போது பரிசீலித்து வர வேண்டும். புதிய பொருளாதாரச் சூழலில் அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாகத் திட்டக் குழு போன்ற நிறுவனம் எப்படிச் செயல்பட முடியும் என்று சிந்திக்குமாறு மன்மோகன் எங்களைக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பாக விரிவான அறிக்கை அளித்த நான், அடுத்து வரும் அரசு அதன் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றேன். துறைவாரியான கொள்கைகள், தனியான திட்டங்கள் தொடர்பாக திட்டக் குழு சுதந்திரமாக அதே சமயம் உள்ளுக்குள் மட்டும் பரிமாறிக்கொள்ளும் வகையில் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்ற யோசனையையும் தெரிவித்திருந்தேன். திட்டமிடல் என்பது எந்தத் திட்டத்துக்கு, எந்த மாநிலத்துக்கு, எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதில்தான் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தியதே தவிர, துறைவாரியான திட்டங்கள் மீது கவனம் செலுத்தவில்லை. அதேபோல, திட்டங்களை அறிவியல்பூர்வமாக மதிப்பிட்டுப் பார்த்ததில்லை. தேவைப்படும்போது நிபுணர்களை வரவழைத்துப் பயன் படுத்திக்கொள்ளும் வசதி திட்டக் குழுவுக்கு இருந்தது.

பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முந்தைய காலத்தில் பெரும்பாலான திட்டங்களுக்குத் தேவைப்பட்ட நிபுணத்துவ ஆலோசனை, துறைகளுக்கு உள்ளே 80% அளவுக்கும் வெளியே 20% அளவுக்கும் கிடைத்தது. இப்போது அது தலைகீழ் விகிதமாகிவிட்டது. முக்கியமான துறைகளில் இப்போது தனியார் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. வெளியில் இருக்கும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வழிமுறை ஏதும் அரசிடம் இல்லை. ஆலோ சனைக் குழுக்களோ, நிபுணர்க ளின் வழிகாட்டலோ போதாது. அந்தந்தத் திட்டங்களை மேற் பார்வை பார்த்து அமல் செய்யக் கூடிய நிபுணர்கள் நிர்வாகப் பொறுப்பிலே அரசின் சிறப்பு அதிகாரியாகவே இருக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.2 கோடியில் அந்தந்த வேலைகளுக்கு நிபுணர்களைச் சிறப்பு அதிகாரியாகப் பணியில் அமர்த்திக்கொள்ள தீர்மானம் கொண்டுவந்தேன். அதை வரவேற்றவர்கள், அப்படி ஒருவரைக் கொண்டுவரும் நடைமுறை சிக்கலானது என்று குறிப்பிட்டனர். ஒரு பத்திரிகை அந்தத் தொகை ரொம்ப அதிகம் என்றுகூடக் குற்றம் சாட்டியிருந்தது!

திட்டக் குழு கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது. முந்தைய அமைப்பில் இருந்த குறைகளைக் களையும் விதத்தில் இது இருக்கிறதா, இப்போதைய தேவைக்கு ஏற்ப அமைந்துள்ளதா?

நீங்கள் கூறியபடி இது தொடங்கப்பட்டு சில காலம்தான் ஆகிறது. அங்கே என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியாத போது கருத்துச் சொல்ல முடியவில்லை. புதிய அமைப்பு நன்றாகச் செயல்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தரமான ஆய்வும் கூர்மையான ஆலோசனைகளும் அரசின் கொள்கையைச் சிறப்பாக அமல்படுத்த உதவும். அதுதான் நிதி ஆயோக்கின் வரம்பு என்று கேள்விப்படுகிறேன்.

வளர்ச்சி தொடர்பாக மத்திய புள்ளிவிவரத் துறை அளித்த மதிப்பீடுகள் சரியாகத்தான் கணக்கிடப்பட்டுள் ளனவா என்ற சந்தேகம் இருப்பதாக ப.சிதம்பரம் உட்பட பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். தொழில்துறையில் உண்மையிலேயே மீட்சி ஏற்பட்டிருக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. தரவுகள் சுட்டிக்காட்டும் அளவுக்கு உண்மையில் அத்துறை மீட்சி பெற்றுவிடவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த விவாதத்தில் உங்களுடைய நிலை என்ன? புள்ளிவிவர மதிப்பீடுகளுக்கும் உண்மை நிலைக்கும் இடையே எப்படித் தொடர்பில்லாமல் போக முடியும்?

சிதம்பரம் மட்டும் இந்த சந்தேகத்தை எழுப்பவில்லை. அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே வியப்பு தெரிவித்திருக்கிறது. எனவே, தீர்க்கப்படாத சில அம்சங்கள் இதில் இருக்கின்றன. வளர்ச்சி வீதம் தொடர்பான புதிய புள்ளிவிவரங்கள் பழைய குறியீடுகளைவிட அதிகமாக இருக்கின்றன. இதைப் பற்றி விசாரிக்க பிரணாப் சென் என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். மத்தியப் புள்ளிவிவர அலுவலகம் வெகு விரைவில் இதைத் தீர்த்துவைக்க வேண்டும்.

இப்போது சீனத்தில் வளர்ச்சி வேகம் குறைந்திருக்கிறது. சீனத்தைவிட நம்முடைய வளர்ச்சி வேகம் அதிகம். சீனத்தின் புள்ளிவிவரம் உண்மையான வளர்ச்சியை மிதமிஞ்சிக் காட்டுவதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனத்தின் புள்ளிவிவரமே கேள்விக்குள்ளாக்கப்பட்டால் நம்முடையதும் அப்படியே கேள்விக்குள்ளாக்கப்படும். நம்மிடம் உள்ள தகவல்களை எந்த அளவுக்கு வேகமாக பரிமாறிக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.

இருண்டு காணப்படும் உலகப் பொருளாதாரச் சூழலில் இந்தியா அமைதியான தனித் தீவாகக் காட்சி தருகிறது. பன்னாட்டுச் சூழலின் அதிர்ச்சியால் பாதித்துவிடாமல், உள்நாட்டுத் தொழில் துறை அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. இது இப்படியே நீடிக்குமா? இந்தியப் பொருளாதாரம் பெரும்பாலும் உள்நாட்டு உற்பத்தி, நுகர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதா?

ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி நடைமுறையை நாம் சார்ந்திருக்கவில்லை என்பது உண்மையே. அதனாலேயே நாம் உலக அளவிலான அதிர்ச்சிகளால் பாதிக்கப்படாத நிலையில் இருக்கிறோம் என்று பொருள் அல்ல. முன்பைவிட நாம் இப்போது வெளிப்படையாகச் செயல்படுகிறோம். எனவே, உலகின் எந்தப் பகுதியில், எது நடந்தாலும் நமக்கும் அது முக்கியமே. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு என்ற அதிர்ச்சி இப்போது நமக்குச் சாதகமாக இருக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சி உள்நாட்டு அம்சங்களைப் பொறுத் திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு செய்வதும் தனியார் முதலீட்டைப் புதுப்பிப்பதும் முக்கியம். இவ்விரண்டுமே இறக்குமதியைத்தான் ஊக்குவிக்கும். வெளி வர்த்தகப் பற்றுவரவை நிர்வகிக்க ஏற்றுமதியை அதிகரித்தாக வேண்டும். இந்தியத் தொழில்துறையில் நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்த நேரடி அந்நிய முதலீடும் அவசியம். நமது உற்பத்தி உலக சந்தைக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும். அதற்கு நாம் வர்த்தகப் பேச்சுகளை நடத்த வேண்டும். எனவே, உலகப் பொருளா தாரத்துடன் தொடர்புகொள்வது அவசியம். உலகப் பொருளாதாரத்தை அலட்சியம் செய்தால் நமக்கு அது ஆபத்தைத் தரும்.

ரகுராம் ராஜனுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி பிரச்சாரம் செய்தார். அதனால்தான் அவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை இரண்டாவது முறையாக ஏற்க மறுத்துவிட்டார் என்று நம்பப்படுகிறது. பாஜக அவரை விரட்டிவிட்டது என்றும் கூறுகின்றனர். ராஜன் இந்தியாவில் ஆற்றிய பணி குறித்தும் அவர் வெளியேற்றப்படும் விதம் குறித்தும் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

‘‘மீண்டும் ஆசிரியர் பணிக்குச் செல்கிறேன்’’ என்று ராஜனைச் சொல்ல வைத்தது எது என்று தெரியாது. இந்தியப் பொருளாதார நிர்வாகக் குழுவினருக்கு இது உண்மையிலேயே பேரிழப்பு. மிகச் சிறந்த ஆளுநராக அவர் பணியாற்றினார். சர்வதேச அளவில் அவர் மீது மரியாதை அதிகம். இப்படிப்பட்ட திறமைசாலி ஆளுநராக இருந்தால் இந்தியாவின் கொள்கைகளுக்கே தனி மதிப்பு ஏற்படும்.

2013-ல் ஏற்பட்ட நெருக்கடியை நன்றாகக் கையாண்டார். அவர் தொடங்கிய சீர்திருத்தங்களை வெகு விரைவாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இப்போது இருப்பதைவிட மோசமான நிலைக்கு சீனம் செல்லுமா?

சீனத்தின் பொருளாதாரம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்ற கவலை உலக நாடுகளிடையே காணப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாகப் பராமரித்துவந்த வளர்ச்சி வேகத்திலிருந்து அவர்கள் குறைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 6.5% ஆக அதன் வளர்ச்சி குறைந்தாலும், இந்த நிலையை அது பராமரிக்க முடிந்ததே பாராட்டுக்குரியது என்று கருதப்பட்டது. ஆனால், அந்தத் தரவும் உண்மைதானா என்கிற சந்தேகம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. சிலர் அது 4.5% என்று கூறுகின்றனர். அப்படியானால், வேலைவாய்ப்பு குறைந்து சீனத்திலேயே பதற்றம் அதிகரித்துவிடும். சர்வதேச நெருக்கடிகளுக்குப் பிறகும் கடன் வழங்கியதால் மனை வணிகத் துறை அதிக அடுக்கங்களைக் கட்டி பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்க உதவியது. ஆனால், வேலைவாய்ப்பும் வருமானமும் மற்ற துறைகளில் இல்லாததால் அந்த வீடுகளை வாங்க ஆட்கள் இல்லை. சீனப் பொருளாதார வளர்ச்சியின் அச்சாணியே ஏற்றுமதிதான். இப்போது உலக நாடுகள் நெருக்கடிகளில் ஆழ்ந்திருப்பதால் சீனத்தின் ஏற்றுமதி பெருகுவதற்கும் வாய்ப்புகள் குறைவு. சீனம் பாதிக்கப்பட்டால் அது அலையலையாக பிற நாடுகளிலும் எதிரொலிக்கும்.

பிரெக்ஸிட் சொல்வது என்ன? ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஏற்பாடு வெற்றியா, தோல்வியா? இதன் பொருளாதார விளைவுகள் என்னவாக இருக்கும்?

பிரெக்ஸிட் முடிவு வியப்பளித்தது. மேல்தட்டு வர்க்கம் எவ்வளவோ இனிமையாகப் பேசினாலும் சாமானிய பிரிட்டிஷ் மக்களின் வாழ்க்கையில் வளம் இல்லை. அந்த விரக்தியே பிரெக்ஸிட் ஆதரவாக மாறியிருக்கிறது. பிரிட்டனில் மட்டுமல்ல; ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது. வேலைவாய்ப்பு, வருவாய் குறைந்துவிட்ட நிலையில் வேற்று நாட்டிலிருந்து மக்கள் குடியேறுவது எல்லோரையும் பீதியில் ஆழ்த்திவருகிறது. பிரிட்டன் வெளியேறித்தான் ஆக வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. புதிய பிரதமர் இதை நாடாளுமன்றத்தின் அடுத்த பொதுத் தேர்தலுக்கு தள்ளிவிட வாய்ப்பு இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் என்ற சோதனை முயற்சி இனி சரி செய்ய முடியாத அளவுக்குத் தோற்று விட்டது என்று இப்போதே முடிவு கட்டிவிட முடியாது. பிரெக்ஸிட் டால் ஏற்படக்கூடிய ஆக்கபூர்வ முடிவை யூகிக்க முடிய வில்லை. எதிர்மறையாகப் பலது நடக்கும் என்று தெரிகிறது.

உலகம் முழுக்க தேசியவாதம் வலுத்துவருகிறது. இது பொருளாதாரச் சூழலுடன் தொடர்புள்ளதா? உலகப் பொருளாதாரம் எப்போது மீட்சி பெறும்? எந்தவிதப் பொருளாதாரம் மீட்சிக்குத் தலைமை தாங்கும்?

பொருளாதாரம் சார்ந்த தேசியவாதத்தின் எழுச்சிக்கு இப்போதைய நிரந்தரமான பொருளாதார இன்னல்களே காரணம். நிலைமை திருந்திவிடும் என்று அரசுகள் தொடர்ந்து அலறுகின்றன. உண்மையில் அப்படி எதுவும் நடப்பதில்லை. சீனா இன்னும் பிரச்சினைகளில் ஆழ்ந்திருப்பதால் இந்த ஆண்டு மீட்சி வரும் என்று நினைக்கவில்லை. ஐரோப்பாவில் பிரச்சினைகள் ஏற்கெனவே அதிகம், பிரெக்ஸிட் வேறு பிரச்சினையைப் பெரிதாக்கிவிட்டது. அமெரிக்காவில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நாடுகளில் பொருளாதாரம் மீட்சி அடைந்தால், ஓரளவுக்குப் பலவீனமான மீட்சியை அடுத்த ஆண்டு பார்க்க முடியும். கச்சா எண்ணெய் விலை இப்போதைக்கு அதிகமாக உயராது, இது நமக்கு நன்மை தான். ஆனால், ஏற்றுமதிச் சந்தையில் கடும் போட்டி இருக்கும், அது நமக்கு பாதகமானது. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் அமைப்புரீதியான சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொண்டால் அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் ஈர்க்க முடியும்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்

ராவ்கள் மற்றும் மோடிகள் வரலாறு!

வரலாற்றை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நினைவு கூர்வது முக்கியமானது. எனினும், உலக மயமாக்கலின் 25-வது ஆண்டை வெள்ளி விழா என்று சிலாகிக்க ஏதும் இல்லை.

எனக்கு நரசிம்ம ராவ் இப்படித்தான் ஞாபகத்துக்கு வருகிறார். மைனாரிட்டி அரசாக இருந்தும் ஐந்து வருடங்கள் ‘சாமர்த்திய’மாக ஆட்சியில் நீடித்தவர் அவர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற நடத்திய குதிரை பேரத்திலிருந்து, பாபர் மசூதி இடிப்புக்குப் பச்சைக்கொடி காட்டியது வரையிலான அவரது போக்குகளின் உச்சம், அவரது நந்தியால் வெற்றி. நந்தியால் தொகுதியில் உள்ள பல வாக்கு மையங்களில் மொத்த வாக்காளர்களைவிட அதிகமான ஓட்டுகள் பெற்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதை எப்படி மறப்பது, என்னவென்று எழுதுவது?

நரசிம்ம ராவ் எழுதிய சுயசரிதையின் தலைப்பு ‘இன்சைடர்’ (உள்ளாள்). அவர் காங்கிரஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராக இருந்தபோது பல அரசியல் கட்டுரைகளை ‘இன்சைடர்’ என்கிற புனைபெயரில் ‘மெயின் ஸ்ட்ரீம்’ என்ற ஆங்கில அரசியல் இதழில் எழுதிவந்தார். அக்கட்டுரைகளின் ஆசிரியர் யார் என்பது பலருக்கும் அந்நாட்களில் புரிபடவில்லை. அவற்றை ஆராய்ந்து, நரசிம்ம ராவ்தான் புனைபெயரில் அந்தக் கட்டுரைகளை எழுதிவந்தார் என்ற உண்மையைப் போட்டு உடைத்தார் பத்திரிகையாளர் என்.ராம். ஒரு கட்சியின் உயர்நிலைக் குழுவில் இருந்துகொண்டே அக்குழுவின் முடிவுகளை புனைபெயரில் கட்டுரையாக விவாதிக்கும் ‘சாமர்த்தியம்’ நரசிம்ம ராவுக்கு மட்டுமே சாத்தியம்.

மறைக்கப்பட்ட ராவின் முகம்

நரசிம்ம ராவின் பல முகங்களை மறைத்துவிட்டு, தாராளமயமாக்கலின் தந்தை என்று இன்றைக்குப் பலர் அவரைப் பாராட்டிக் கொண்டாடுவது அறியாமை அல்லது புரட்டு என்றே சொல்ல வேண்டும். ராவ் மட்டும் அல்ல; வாஜ்பாய், மோடி இவர்கள் எல்லோரின் வரலாறுமே இப்படிப்பட்டதுதான். ‘சாமர்த்திய’ வரலாறு.

இந்தியாவை முழுமையாகத் தம் வசப்படுத்த ஏகாதிபத்தியம் நெடுநாட்களாகக் காத்திருந்தது. ராவ் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தபோது, ‘சாமர்த்திய’மாக அதைச் செய்துகொடுத்தார். மத்திய அரசு தொழில் முதலீடுகளில் தனியார் மயக்கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்த ஆரம்பித்தது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் சொற்கள் அரசின் தாரக மந்திரமாக்கப்பட்டு, முதலீட்டாளர்களுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் பட்டுக் கம்பளங்கள் விரிக்கப்பட்டன. இதே காலகட்டத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் நடந்த புரட்சியும் உடன் சேர இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் கொல்லைப்புறமாக மாறியது. இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்தியாவில் தனியார்மயமாக்கல் பெருமளவில் சட்டத் தைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டே உள் நுழைக்கப்பட்டது என்பதுதான். தனியார்மயமாக்கல் தொடர்பான கொள்கை அறிவிப்புகள் பொது மேடைகளில் பெரிய அளவில் வந்தனவே ஒழிய, நாடாளுமன்றத்தில் பெரிய அளவில் அதற்கான விவாதங்கள் ஒலிக்கவில்லை. விஷயம் அதோடு முடியவில்லை. சட்டம் இயற்றும் மன்றங்கள் சரியாகச் செயல்படாதபோது, மக்களின் கடைசி நம்பிக்கை சட்டத்தைப் பாதுகாக்கும் நீதிமன்றங்கள்தான்.

தனியார்மயம் விரோதம் இல்லையா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தலைப்பு வரிகளில், இந்தியா ஒரு ‘சோஷலிஸ குடியரசு’ என்று போடப்பட்டிருக்கிறது. இதற்கு அர்த்தம் என்ன? அரசின் நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது அரசமைப்புச் சட்டத்துக்கு நேர் விரோதமானது இல்லையா? இப்படியான கேள்விகளோடு ‘பால்கோ’ நிறுவனத் தொழிலாளர்கள் போட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் போனது. உச்ச நீதிமன்றம் என்ன செய்தது தெரியுமா? வழக்கைத் தள்ளுபடி செய்தது. “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது” என்று அறிவித்தார்கள் நீதிபதிகள்.

மேலும், அரசமைப்புச் சட்டத்திலுள்ள சோஷலிஸம் என்ற வார்த்தையைக் கேலி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டது: “சோஷலிஸம் என்பது நம்முடைய சரித்திரத்திலிருந்து கிடைத்த கவர்ச்சிகரமான வார்த்தையாக இருக்கலாம். அரசமைப்புச் சட்டத்தின் தலைப்பு வரிகளிலும் காணப்படலாம். இந்தியச் சமூகம், இன்றியமையாத கூறாக சோஷலிஸத்தை மணம் புரிந்துள்ளது என்ற கருத்தாக்கம், மத்திய அரசு 1990-களின் ஆரம்பத்தில் கடைப்பிடிக்கத் தொடங்கிய தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவால் உதிரத் தொடங்கியுள்ளது.” (உ.பி. மாநில வெண்கலப் பொருட்கள் நிறுவனம் வழக்கு, 2006).

மேலும் அதே தீர்ப்பில் குறிப்பிட்டது: “உலக மயமாக்கலினால் நாட்டின் பொருளாதார, சமூகக் காட்சிகளில் தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை விளக்கும்போது மாறிவரும் பொருளாதாரக் காட்சிகளை மனதில் கொண்டு யதார்த்தமான பார்வையுடன் நீதிமன்றம் செயல்பட வேண்டும்.”

பிறகு உச்ச நீதிமன்றம் இப்படியும் சொன்னது: “நிர்வாக அதிகாரிகள் விமான நிலையங்களில் மதுக் கடைகளைத் தொடங்க எண்ணிவருகின்றனர். இதன் மூலம் சமூகம் பொதுவில் மது அருந்தும் கலாச்சாரத்தைப் பெருநகரங்களில் ஏற்றுக்கொண்டுவிட்டது. எனவே, நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பழைய தத்துவங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காமல், மாறிவரும் காட்சிகளைக் கணக்கில்கொண்டு, யதார்த்தத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும்!”

உச்ச நீதிமன்றத்தின் பச்சைக்கொடி

உச்ச நீதிமன்றம் உலகமயமாக்க லுக்கும் தனியார்மயமாக்கலுக்கும் பச்சைக்கொடி காட்டியதோடு மட்டும் அல்லாமல், வெவ்வேறு தரு ணங்களில் அதன் போக்குக்கும் சென்றது என்று சொல்லலாம். மதுக் கடைகளில் மாலை நேரங்களில் பெண்கள் மது விற்பனையாளராக இருப்பதைத் தடை செய்த டெல்லி அரசின் உத்தரவை 2007-ல் ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதற்கு ஒருபடி மேலே போய் 2013-ல் மராட்டிய அரசு மதுக் கடை பார்களில் பெண்களின் நடனங்களைத் தடைசெய்யும் சட்டத்தையும் ரத்துசெய்தது. சட்டம் இயற்றும் மன்றங்களும் சட்டத்தைப் பாதுகாக்கும் மன்றங்களும் உலகமயமாக்கலை வாரி அணைத்துக்கொண்டபோது மக்கள் நிலை என்னவானது? முதலாளிகள் பார்வையிலிருந்து அல்ல; தொழிலாளர்கள் நிலை மூலமாகவே அதை நாம் அறிய முடியும்.

இன்றைக்குத் தொழிலாளர் வர்க்கத்தின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், அவர்கள் நேரடித் தொழிலாளர்கள் அல்ல. அதாவது, தொழிலாளர்கள் எனும் அங்கீகாரம்கூட அவர்களுக்கு இல்லை. எல்லா நிறுவனங்களிலும் நேரடித் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, மறைமுகத் தொழிலாளர்களான ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுவருகிறது. அயல் பணி ஒப்படைப்பு முறையிலான தொழிலாளர்களின் எண்ணிக்கை, நேரடித் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஏறத்தாழ பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு அரசுத் துறை நிறுவனங்களும் விதிவிலக்கல்ல. ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்துவதன் காரணம், குறைந்த கூலியில் அதிக வேலை என்பதோடு, அவர்கள் ஒன்று திரண்டு, சங்கம் அமைத்துத் தங்கள் உரிமைகளுக்காகப் போராட மாட்டார்கள் என்பதும்தான்!

தொழிலாளர்களுக்குப் பொருந்தா சட்டங்கள்

‘ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை சம்பந்தப்பட்ட அரசுகள் தடை செய்தால், அந்தத் தொழிலில் அதுவரை ஈடுபட்ட தொழிலாளர்களை பொதுத் துறை நிறுவனங்கள் நேரடித் தொழிலாளர்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று ‘ஏர் இந்தியா’ வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை (1997) உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு ‘ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா’ வழக்கில் ரத்து செய்தது (2001). இன்றைக்குப் பல கோடித் தொழிலாளர்களுக்குத் தொழிலாளர் நலச் சட்டங்கள் பொருந்துவதில்லை. அவர்களுக்குத் தொழிலாளர்கள் எனும் அடிப்படைத் தகுதிக்கான உரிமைகள்கூட இல்லை.

இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் தவிடுபொடியாக்க தொழிலாளர் சட்டங்களைச் சீர்திருத்தி அமைக்கப்போகிறோம் என்கிறது இன்றைய மோடி அரசு. பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் பல தொழிலாளர் சட்டங்கள் முதலாளிகளின் வேண்டுகோளின்படி திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

மோடி ராஜஸ்தான் அரசைத் தனது தனியார்மயமாக்கலின் சோதனைச் சாலையாகச் செயல்படுத்திவருகிறார். அங்குள்ள பாஜக தலைமையிலான தொழிற்சங்க அமைப்புகளே இச்சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்துப் போராடிவருகின்றன. அதையும் மீறி, பன்னாட்டு நிறுவனங்களின் நிர்ப்பந்தங்களால் இன்றைக்குத் தொழிலாளர் சட்டங்களிலுள்ள முக்கியமான பிரிவுகள் திருத்தங்களின் மூலம் மாற்றி அமைக்கப்படவுள்ளன. நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட வரைவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகமயமாக்கலின் வெள்ளிவிழா ஆண்டைப் பாராட்டி வசனம் எழுதுபவர்கள் எல்லாம், தொழிலாளர் துறையையும் அதற்கான சட்டங்களில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களையும் நினைத்துப் பார்த்தால், அவர்களுக்கு உலகமயமாக்கலின் குரூரம் புரியும்.

நரசிம்ம ராவ் ஏற்றிப் பிடித்த தீச்சட்டியை நரேந்திர மோடி கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தய வீரர்போல் ஓடி வருவதையும் பின்னாளில் ஒரு கும்பல் ‘சாமர்த்தியம்’ கருதிப் புகழலாம். ஆனால், ராவ்கள், வாஜ்பாய்கள், மோடிகளின் ‘சாமர்த்தியம்’ தேசம் கொண்டாடக் கூடிய வரலாறு அல்ல. மக்களின் கடைக்கோடி மனிதன் அந்த வரலாற்றைக் கண்ணீரினூடேதான் பார்ப்பான்!

- கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்