Oct 22, 2015

Anaikatti Agali Siruvani

ANAIKATTI to AGALI
60kms
Cbe friend's marriage. So planned for a weekend trip in western ghats with friends in coimbatore

tried to book for baralikadu ecoTourism on saturday but due to some issues the authorities postponed to the next day-sunday.

so for a refresh planned to go to anaikatti. in our list two places 1. Salim Ali center for ornithology no permission for visitors here
2.NBNP visited for an hour with entry free 50/-.
nothing seem to be interesting for a tourist here. but it might be useful botanical students,
or for the kids who may like to explore the trees around the globe and especially in
Western ghats.

After an hour in NBNP had a ride in the road to Silent valley kerala, via kottathara pudhoor mulli agali
In agali Siruvani river flows between a valley. and had a chillful bath



http://www.nbnaturepark.com/

http://www.nbnaturepark.com/parkmap.html

http://solomondomain.blogspot.com/2011/07/nilgiri-biospehere-reserve-park.html

http://sacon.in/

Lakhsmi Shankar Organic Food


Baralikadu - A Weekend Getaway

Oct 15, 2015

இந்தியப் பறவையியல் பிதாமகன் டி.சி.ஜெர்டான்

தமிழ் இந்து நாளிதழில் வாசித்த கட்டுரை



டி.சி.ஜெர்டான் பிறந்தநாள் அக்டோபர் 12





இந்தியப் பறவையியலின் முன்னோடிகளில் ஒருவரும் டி.சி. ஜெர்டான் என்று அழைக்கப்படுபவருமான தாமஸ் கேவர்ஹில் ஜெர்டான் இங்கிலாந்தின் டெர்ஹாம் கவுண்டியில் 1811-ல் அக்டோபர் 12 அன்று பிறந்தார். மருத்துவம் பயின்ற அவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் அறுவைசிகிச்சை மருத்துவராக (துணை சர்ஜன்) இந்தியாவுக்கு 1836-ல் வந்தார்.

சிறு வயதிலிருந்தே பறவைகள் மீதும் தாவரங்கள் மீதும் ஆர்வம் மிகுந்தவர் ஜெர்டான். இந்தியாவுக்கு வந்த பிறகு பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களை (specimen) சேகரிக்க ஆரம்பித்தார். தக்காணப் பீடபூமி பகுதியிலும் கிழக்கு மலைத் தொடரிலும் அவர் பணிபுரிந்தார். ஃபுளோரா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு நெல்லூர் பகுதியிலும் பின்னர் தலைச்சேரியிலும் பணியாற்றினார். இவை இரண்டுமே அன்றைய மதராஸ் மாகாணத்தின் பகுதிகளாக இருந்தவை.

ஏன் இந்த மாற்றம்?

பறவைகள், தாவரங்கள் மட்டுமன்றிப் பூச்சிகள், ஊர்வன, நீர்நில வாழ்விகள், பாலூட்டிகள் ஆகியவற்றிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. ஆரம்பத்தில் தான் சேகரித்த பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களைச் சரியாக அடையாளம் காண்பதற்காக ஸ்காட்லாந்தில் உள்ள பறவையியலாளர் வில்லியம் ஜார்டைனுக்கு, ஜெர்டான் அனுப்பினார். துரதிர்ஷ்டவசமாக அவரிடம் போய்ச்சேர்வதற்கு முன்பாகவே, அந்தப் பதப்படுத்தப்பட்ட பறவைகளைப் பூச்சிகள் அரித்துவிட்டன.

அதற்குப் பிறகு இனி வேறு யாரையும் நம்பிப் பிரயோஜனமில்லை என்று, தான் சேகரிக்கும் பதப்படுத்தப்பட்ட உயிரினங்களையும், தான் பார்த்ததையும் ஜெர்டான் குறிப்பெடுக்க ஆரம்பித்தார். இப்படியாக, தான் சேகரித்த குறிப்புகளைக்கொண்டு ‘கேட்டலாக் ஆஃப் த பேர்ட்ஸ் ஆஃப் த இண்டியன் பெனின்சுலா’ (1839-1840) என்ற நூலை வெளியிட்டார். இந்த நூலில் 420 பறவைகள் விவரிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்னதாக டபிள்யூ.எச். ஸைக்ஸ் என்பவர் 1830-களில் வெளியிட்ட புத்தகத்தைவிட, ஜெர்டான் புத்தகத்தில் விவரிக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகம்.


முன்னோடிப் புத்தகம்

1862-ல் பணி ஓய்வு பெற்று ஜெர்டான் இங்கிலாந்துக்குச் சென்றார். அப்போது இரண்டு தொகுதிகளாக வெளியானதுதான் ‘தி பேர்ட்ஸ் ஆஃப் இந்தியா’ (1862-1864) என்ற புத்தகம். இந்தியாவில் அதற்குப் பிறகு வெளியான பறவைகள் புத்தகத்துக்கெல்லாம் அதுதான் முன்னோடி.

ஜெர்டானின் புத்தகங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு புத்தகம் ‘இல்லஸ்ட்ரேஷன்ஸ் ஆஃப் இந்தியன் ஆர்னிதாலஜி’ 1847-ல் இது வெளியிடப்பட்ட இடம் அன்றைய மதராஸ் (சென்னை) என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்துக்கும் அவருக்கும் இப்படி ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. இந்தப் புத்தகத்தில் 47 வேறுபட்ட பறவைகளின் 50 ஓவியங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பறவைகளுள் மூன்று இமயமலைப் பறவைகள், ஒன்று இலங்கையைச் சேர்ந்தது. மற்றவையெல்லாம் இந்தியாவுக்குள் காணப்படும் பறவைகள். இதில் பெரும்பாலான பறவைகள் முதன்முறையாக இடம்பெற்றிருந்தது புத்தகத்தை முக்கியமாக்குகிறது.

இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கும் முன்னுரையின்படி பார்த்தால், இந்தப் புத்தகம் பல காலமாகத் தயாரிப்பில் இருந்திருப்பது தெரிகிறது. உள்ளூர் ஓவியர்கள் வரைந்த ஓவியங்களைத் துல்லியத்தின் அடிப்படையில் சரிபார்த்த பிறகு, இந்தப் புத்தகத்தில் ஜெர்டான் சேர்த்திருக்கிறார். அந்த ஓவியங்களுக்கு இணையாக அந்தப் பறவைகளைப் பற்றிய விளக்கங்களையும் ஜெர்டான் எழுதியிருக்கிறார். (இந்தப் புத்தகத்திலிருந்து சில ஓவியங்கள் இங்கே கொடுக்கப் பட்டிருக்கின்றன.) ஜெர்டானின் மற்றப் புத்தகங்கள்: ‘த கேம்பேர்ட்ஸ் அண்டு வைல்டுஃபௌல் ஆஃப் இந்தியா’ (1864), ‘த மேமல்ஸ் ஆஃப் இந்தியா’ (1867).

இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கும் முன்னுரையின்படி பார்த்தால், இந்தப் புத்தகம் பல காலமாகத் தயாரிப்பில் இருந்திருப்பது தெரிகிறது. உள்ளூர் ஓவியர்கள் வரைந்த ஓவியங்களைத் துல்லியத்தின் அடிப்படையில் சரிபார்த்த பிறகு, இந்தப் புத்தகத்தில் ஜெர்டான் சேர்த்திருக்கிறார். அந்த ஓவியங்களுக்கு இணையாக அந்தப் பறவைகளைப் பற்றிய விளக்கங்களையும் ஜெர்டான் எழுதியிருக்கிறார். (இந்தப் புத்தகத்திலிருந்து சில ஓவியங்கள் இங்கே கொடுக்கப் பட்டிருக்கின்றன.) ஜெர்டானின் மற்றப் புத்தகங்கள்: ‘த கேம்பேர்ட்ஸ் அண்டு வைல்டுஃபௌல் ஆஃப் இந்தியா’ (1864), ‘த மேமல்ஸ் ஆஃப் இந்தியா’ (1867).



அரிய பறவைகளின் அடையாளம்

இங்கிலாந்தின் நார்வுட்டில் ஜூன் 12 1872-ல் ஜெர்டான் மரணமடைந்தார். இங்கிலாந்தில் பிறந்து இங்கிலாந்தில் இறந்திருந்தாலும் அவரது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம் இந்தியாவில் கழிந்திருக்கிறது. தனது ஆர்வத்தாலும் அறிவாலும் இந்தியப் பறவையியலுக்குப் பெரும் ஊக்கத்தைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஜெர்டான். அவரால் முதன்முதலாக விளக்கப்பட்ட ஒரு பறவைக்கு அவருடைய நினைவாக ‘ஜெர்டான்ஸ் கோர்ஸர்’ என்ற பெயரை வைத்தார்கள். உலகின் அரிதான பறவைகளுள் ஒன்று அது. 1900-ல் இறுதியாகப் பார்க்கப்பட்ட அந்தப் பறவை அழிந்துபோய்விட்டது என்று கருதப்பட்டு, பிறகு 1986-ல்தான் மறுபடியும் பார்க்கப்பட்டது.

இங்கிலாந்தின் நார்வுட்டில் ஜூன் 12 1872-ல் ஜெர்டான் மரணமடைந்தார். இங்கிலாந்தில் பிறந்து இங்கிலாந்தில் இறந்திருந்தாலும் அவரது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம் இந்தியாவில் கழிந்திருக்கிறது. தனது ஆர்வத்தாலும் அறிவாலும் இந்தியப் பறவையியலுக்குப் பெரும் ஊக்கத்தைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஜெர்டான். அவரால் முதன்முதலாக விளக்கப்பட்ட ஒரு பறவைக்கு அவருடைய நினைவாக ‘ஜெர்டான்ஸ் கோர்ஸர்’ என்ற பெயரை வைத்தார்கள். உலகின் அரிதான பறவைகளுள் ஒன்று அது. 1900-ல் இறுதியாகப் பார்க்கப்பட்ட அந்தப் பறவை அழிந்துபோய்விட்டது என்று கருதப்பட்டு, பிறகு 1986-ல்தான் மறுபடியும் பார்க்கப்பட்டது.

தற்போது ஆந்திராவில் எஞ்சியிருக்கும் அந்தப் பறவைக்கு ‘கலுவிக்கோடி’ என்ற தெலுங்கு பெயர் இருந்தாலும் ‘ஜெர்டான்ஸ் கோர்ஸர்’ என்ற பெயரே இயற்கையியலாளர்கள் மத்தியில் நிலைத்துவிட்டது. அதற்கு டி.சி. ஜெர்டான் மீது உள்ள அன்பும்கூட ஒரு வகையில் காரணம் என்று சொல்லலாம். ஜெர்டானின் நினைவாகப் பெயர் வைக்கப்பட்ட இன்னொரு பறவையான ஜெர்டான்ஸ் பேப்ளரும் (தவிட்டுக்குருவி வகை) ஐம்பது ஆண்டுகளாகப் பார்க்கப்படாமல், இந்த ஆண்டு மீண்டும் பார்க்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அரியனவற்றின் அடையாளம்தானோ ஜெர்டான்?


Oct 9, 2015

4 ஆண்டுகளில் அணு விஞ்ஞானிகள் 11 பேர் மர்மமான முறையில் மரணம்


இந்திய அணுசக்தித் துறையில் பணிபுரிந்த விஞ்ஞானிகளில் 2009-13 காலகட்டத்தில் 11 பேர் இயற்கைக்கு மாறான வகையில் உயிரிழந்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.

ஹரியாணாவைச் சேர்ந்த ராகுல் ஷெராவத் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இதுதொடர்பான தகவல்களை கேட்டிருந்தார்.

அணுசக்தித் துறையின் ஆராய்ச்சி மையங்கள், ஆய்வுக்கூடங்களில் பணிபுரிந்த 8 விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் வெடிவிபத்து, தூக்குப்போட்டு தற்கொலை, கடலில் மூழ்குதல் போன்ற சம்பவங்கள் மூலம் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இரு விஞ்ஞானிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரோம்பேவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த சி கிரேடு விஞ்ஞானிகள் இருவரின் உடல்கள் கடந்த 2010-ல் அவர்களின் வீடுகளில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டன.

இதில் ஒருவர் நீண்டகாலமாக உடல்நலமற்று இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ராவத்பாட்டாவில் பணிபுரிந்த ஒரு விஞ்ஞானி 2012-ல் தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

டிராம்பே பாபா அணு ஆராய்ச்சி மைய வேதியியல் ஆய்வுக் கூடத்தில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற தீ விபத்தில் 2 விஞ்ஞானிகள் உயிரிழந்துள்ளனர். எஃப் கிரேடு விஞ்ஞானி ஒருவர் மும்பையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். ஆனால், குற்றவாளி இன்னும் கண்டறியப்படவில்லை.

கல்பாக்கத்தில் பணிபுரிந்த ஒரு விஞ்ஞானி கடந்த 2013-ல் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

கர்நாடகத்தில் காளி நதியில் குதித்து ஒரு விஞ்ஞானி தற்கொலை செய்துகொண்டார். இவ்வாறு ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Oct 7, 2015

மீண்டும் தாக்கும் டெங்கு!

கு. கணேசன்

தமிழ் இந்து நாளிதழில் வாசித்த கட்டுரை 


கொசுக்களை ஒழிப்பது மட்டுமே டெங்குவைக் கட்டுப்படுத்த ஒரே வழி

முன்பெல்லாம் அக்டோபர், நவம்பர் மாதங்களைப் ‘பருவமழைக் காலம்’ என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றோம். இப்போது சில ஆண்டுகளாக இது ‘டெங்கு காய்ச்சல் காலம்’ என்று பயந்து அலறும்படியாக நிலைமை மாறியிருக்கிறது. நிகழாண்டில் தலைநகர் புதுடெல்லியில் தொடங்கி நாட்டின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தாக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்திலும் ஆங்காங்கே தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது.

இந்த ஆண்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்ச கத்தின் புள்ளிவிவரப்படியே செப்டம்பர் 20 வரை புதுடெல்லியில் மட்டும் 27,668 பேர் டெங்கு வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 60 பேர் இறந்தி ருக்கிறார்கள். இப்போது புதுடெல்லியைத் தவிர்த்து, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளம் ஆகிய தென்மாநிலங்களில்தான் டெங்குவின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் இதுவரை 10,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

'டெங்கு' (Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் டெங்கு காய்ச்சல் வருகிறது. இந்தக் கிருமிகளைச் சுமந்து திரியும் ‘ஏடஸ் எஜிப்தி' (Aedes Aegypti) எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது கிருமிகள் பரவுகின்றன. இந்தக் கொசுக்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. இவை சுத்தமான நீர்நிலைகளில் மட்டுமே வாழக்கூடியவை. பகலில்தான் கடிக்கும்; அதுவும் பெண்கொசுதான் கடிக்கும். கொசு கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கிவிடும்.

அறிகுறிகள் என்ன?

கடுமையான காய்ச்சல், வயிற்றுவலி, தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி, உடல்வலி, மூட்டு வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவுக்கே உரித்தான அறிகுறிகள். எலும்புகளை முறித்துப் போட்டது போல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது இந்த நோயை இனங்காட்டும் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள். அடுத்து உடலில் அரிப்பு ஏற்படும். சிவப்புப் புள்ளிகள் தோன்றும். டெங்கு வைரஸ் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், அவற்றில் துளை விழுந்து ரத்தத்தைக் கசியவிடும். இதன்விளைவால் ஏற்படும் சிவப்புப் புள்ளிகளே இவை.

ஆபத்து எப்போது?

பெரும்பாலோருக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந் ததும் ஓர் அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) உருவாகும். இவர்கள்தான் ஆபத்து மிகுந்தவர்கள். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும். சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறை வதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரை யீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகிய வற்றில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். இதற்கான சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும்.

டெங்கு நோய்க்கென்று தனியாகச் சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை. டெங்கு தானாகத்தான் சரியாக வேண்டும். அதுவரை ரத்தக்கசிவு, குறை ரத்த அழுத்தம், மூச்சிளைப்பு போன்ற ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும். எனவே, டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறி வது மிக முக்கியம். இதன்மூலம் இந்த ஆபத்தான பின்விளைவுகளை வரவிடாமல் தவிர்க்க முடியும். டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM), என்.எஸ்.1 ஆன்டிஜென், எலிசா (Elisa), பிசி.ஆர். (PCR) ஆகிய நவீன பரிசோதனைகளில் டெங்கு பாதிப்பு உடனே தெரிய வரும். இந்தப் பரிசோதனை வசதிகளை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கிடைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்தால், ஏழை எளியவர்கள் இந்தக் காய்ச்சலால் உயிரிழப்பதைத் தவிர்க்கலாம்.

உதவும் நவீனத் தொழில்நுட்பங்கள்

டெங்குவைப் பொறுத்த அளவில் கொசுக்களை ஒழிப்பது ஒன்றே இந்த நோயைக் கட்டுப்படுத்த ஒரே வழி. நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்தான் டெங்கு பரவுகிறது. மத்திய, மாநில அரசுகள் இந்தப் பருவத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவிட வேண்டும். கொசுக்களை ஒழிக்க ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிற மருந்துகளை முறைப்படி முன்கூட்டியே பயன்படுத்துவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அத்தோடு உலக அளவில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பங்களையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் தேவை.

உதாரணத்துக்கு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குளம், குட்டை, பிற நீர்நிலைகளில் 'கம்பூசியா அஃபினிஸ்' ( Gambusia affinis) எனும் மீன்களை வளர்க்கின்றனர். இவை கொசுக் களின் லார்வாக்களைத் தின்றுவிடும். இதனால் கொசுக் கள் வளர்வதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும். கொசுக்களை வேரோடு அழிக்கும் தொழில்நுட்பம் இது. சமீபத்தில், பிரேசில் நாட்டில் கொசுக்களை மலடாக் கும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, குறிப்பிட்ட பருவத்துக்குப் பிறகு கொசுக்கள் வளர்வதற்கு டெட்ராசைக்ளின் மருந்து தேவைப்படும் வகையில் கொசுக்களின் மரபணுக்களை மாற்றி அமைத்து, அந்தக் கொசுக்களை ஒரு பண்ணையில் வளர்த்து, வெளியில் விடுகின்றனர். இந்தக் கொசுக் களோடு மற்ற கொசுக்கள் இணைந்து இனப்பெருக்கம் செய்து பிறக்கிற கொசுக்கள் தொடர்ந்து வளர வேண்டுமானால், அவற்றுக்கு டெட்ராசைக்ளின் மருந்து தேவைப்படும். அது கிடைக்காதபோது அவை இனப்பெருக்கம் செய்ய முடியாது. இறந்து விடும். இந்த வகையில் கொசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி கொசுக்களை ஒழிக்க முன்வந்துள்ளனர். இந்தியாவிலும் இம்மாதிரியான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதற்கு நம் அரசுகள் புதிய திட்டங் களைக் கொண்டுவர வேண்டும்.

மக்கள் கடமை

டெங்கு நோயை ஒழிப்பதில் மக்களுக்கும் அதிக கடமை உண்டு. வீட்டைச்சுற்றி சாக்கடை மட்டு மல்ல, சாதாரண தண்ணீர்கூடத் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தெருக்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, சாக்கடைகளைச் சுத்தப் படுத்துவது போன்றவற்றில் சுகாதாரப் பணியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொசுக்களை ஒழிக்கும் புகை அடிக்கும் பணிகளை உள்ளாட்சிகள் தீவிரப்படுத்த வேண்டும். பூந்தொட்டிகள், அழகு ஜாடிகள், சிறு பாத்திரங்கள், தகர டப்பாக்கள், பயன்படாத டயர்கள், ஆட்டு உரல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டடம் கட்டுமானப்பணிகள் நிகழும் இடங்களில் சுத்தம் காக்கப்பட வேண்டும்.

தண்ணீருக்குத் தட்டுப்பாடு வரும்போதெல்லாம் தொட்டிகளில் தண்ணீர் சேமிக்கும் வழக்கம் எல்லா ஊர்களிலும் உள்ளது. அப்போது அந்தத் தொட்டிகளைச் சரியாக மூடிவைக்க வேண்டும். டெங்கு நோயை நிரந்தரமாக ஒழிக்க வேண்டுமானால், கொசுக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எப்படி பெரியம்மை, மலேரியா, போலியோ போன்ற நோய்களை ஒழிப்பதற்குத் தனித் திட்டங்களைச் செயல்படுத்தி வெற்றி பெற்றோமோ அதுபோல டெங்குவுக்கும் தேசிய அளவில் தனித்ததொரு தடுப்புத் திட்டத்தை வரையறுத்து, போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தினால் மட்டுமே டெங்குவை ஒழிக்க முடியும்.

எண்ணெய் பாக்கெட் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி?

அ.சாதிக்பாட்சா

தமிழ் இந்து நாளிதழில் வாசித்த கட்டுரை


தொடரும் கலப்படங்கள், விதிமீறல்கள் | நுகர்வோர் சங்கத் தலைவர் விளக்கம்

*
சமையல் எண்ணெய் பாக்கெட், பாட்டில் வாங்கும்போது நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய நுகர்வோர் சங்கத் தலைவர் நிர்மலா தேசிகன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள சில பிரபல எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் பாமாயில், பருத்தி விதை எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்றவற்றை ரீபைண்டு செய்து கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் கலப்படம் செய்து விற்பதாக இந்திய நுகர்வோர் சங்கம் (கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா) சமீபத்தில் தெரிவித்தது.
இந்த அமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகன், நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்து ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:

ஒரு பொருளை வாங்கும்போது, பாக்கெட் மீது அச்சிடப்பட்டுள்ள விவரங்களை நன்கு படித்துப் பார்க்க வேண்டும். விலை, காலாவதியாகும் நாள், அக்மார்க் முத்திரை, உணவுப் பாதுகாப்புத் துறையின் முத்திரையுடன் கூடிய லைசென்ஸ் எண், எடையளவு, எண்ணெய்யில் உள்ள சத்துக்கள் பற்றிய தகவல்கள், ‘ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்படமில்லாதது’ என்றெல்லாம் அச்சிடப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.

பாக்கெட் உணவுப் பொருட்களைக் கண்காணிப்பதும், தவறு செய்யும் வணிகர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் எடையளவுச் சட்டப் பிரிவு, அக்மார்க் தர முத்திரை பிரிவு, உணவுப் பாதுகாப்புத் துறை ஆகிய 3 துறையினரின் கடமை. இத்துறைகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால் கடைகளுக்கு நேரில் சென்று மாதிரிகளை சோதனை செய்வது, தவறு செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை அவர்கள் முழுவீச்சில் மேற்கொள்வது இல்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சில வணிகர்கள், விதிமுறைகளை மீறி தங்கள் இஷ்டத்துக்கு உணவுப் பொருட்களை பாக்கெட் செய்து விற்கின்றனர்.

எடையளவுச் சட்டப்படி ஒரு லிட்டர், 500 மி.லி., 250 மி.லி. அளவுகளில் மட்டுமே எண்ணெய் விற்கவேண்டும். ஆனால் 850 மி.லி., 300 மி.லி. என்றெல்லாம் விற்கின்றனர் கொலஸ்ட் ரால் ஃப்ரீ, கொலஸ்ட்ரால் ஃபைட்டர் என விளம்பரம் செய்வதும், ரீபைண்டு ஆயில் என்பதோடு சூப்பர், அல்ட்ரா, மைக்ரோ என்கிற வார்த்தைகளை சேர்த்து விளம்பரம் செய்வதும் தவறு.

‘பிளெண்டட் எடிபிள் வெஜிடபிள் ஆயில்’ என்ற பெயரில் சமையல் எண்ணெய்களில் 20 சதவீதம் வரை பிற உணவு எண்ணெய்களை கலந்து விற்க அரசு அனுமதித்துள்ளது. என் னென்ன விகிதத்தில் என்னென்ன உணவு எண்ணெய்கள் சேர்க்கப் பட்டுள்ளன என்ற விவரத்தை பாக்கெட்டில் கட்டாயம் அச்சிட வேண்டும். மேலும், குறிப்பிட்ட ஒரு எண்ணெய் வித்தின் படத்தை மட்டுமே போட்டு விற்கக்கூடாது.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ஜிமோன் ஆயில் பயன்படுத்திய சிலர் ஆக்ராவில் இறந்தனர். அதன் பிறகு, உணவு எண்ணெய்யாக ஆர்ஜிமோன் ஆயிலை பயன்படுத்த அரசு தடை விதித்தது. ‘ஆர்ஜிமோன் ஆயில் இல்லை’ என எண்ணெய் பாக்கெட்களில் அச்சிடுவதும் கட்டாய மாக்கப்பட்டது. அவ்வாறு அச்சிடப் படாமல் தற்போதும் சில சமையல் எண்ணெய் பாக்கெட்கள் விற்கப்படுகின் றன. இதையும் நுகர்வோர்கள் கவனித்து வாங்க வேண்டும்.
ஆய்வில் நாங்கள் கண்டறிந்த மோசடி விவரங்களை எடையளவு துறை, அக்மார்க் பிரிவு, உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு புகாராக அனுப்பியுள்ளோம். நுகர்வோர் நலன் கருதி இந்த பிரிவுகளில் கூடுதல் பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு நிர்மலா தேசிகன் கூறினார்.

கலப்பட எண்ணெய் பற்றி சந்தேகமா?

கலப்பட எண்ணெய் தொடர்பான கூடுதல் விவரங்கள், சந்தேகங்களுக்கு ‘கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பை 044-24494573, 24494577 ஆகிய தொலைபேசி எண்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை தொடர்பு கொள்ளலாம். caiindia1@gmail.com என்கிற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

அலுவலகத்திலும் கலோரியைக் கரைக்கலாம்

யுகன்

தமிழ் இந்து நாளிதழில் வாசித்த கட்டுரை


நல்லுடல் வளர்ப்போம்!

“எக்சர்சைஸ் செய்யாததாலதான் தொப்பை போடுதுன்னு, நல்லா தெரியுது. என்ன பண்றது சார்? ஆபீஸ் போயிட்டு வர்றதுக்கே நேரம் சரியா இருக்கு. இதுல எங்கே எக்சர்சைஸ் பண்ண?"

“சுகர் இருக்கு. சாப்பாட்டுனால மட்டும் அதை கண்ட்ரோல் பண்ண முடியல. வாக்கிங் போகணும். காலைல குழந்தைங்கள ரெடி பண்றது, சமையல், ஆஃபிஸ் வேலை, அது, இதுன்னு என்னோட அன்றாட வேலைக்கு மத்தில, வாக்கிங் எல்லாம் யோசிக்கவே முடியல”

அலுவலகத்தில் பணிபுரியும் பெரும்பாலானவர்களின் புலம்பல் இப்படியாகத்தான் இருக்கும்.

ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக வேலைகளைச் செய்ய நாள் ஒன்றுக்கு 2,400 கலோரிகள்வரை தேவைப்படுகிறது. உணவு மூலம் நம் உடலுக்குக் கிடைக்கும் கலோரி எனப்படும் சக்தியை, வியர்வை சிந்தி உழைப்பதன் மூலம் எரிக்க வேண்டும். வேலை செய்வதன் மூலம்தான், உடலில் தேவையில்லாத கொழுப்பு படிவது குறைகிறது.

நம்மில் பலருக்கு உடலுக்குத் தேவையான அளவு கலோரி கிடைப்பதில்லை என்ற பிரச்சினை நிச்சயமாக இல்லை. அதேநேரம், உடலில் தேங்கும் கலோரியைச் செலவழிக்காமல் இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகளே அதிகம்.
இப்படிப்பட்டவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. பணிபுரியும் அலுவலகத்திலேயே சில எளிய பயிற்சிகளைச் செய்வதன் மூலம், தேவைக்கு அதிகமான உபரி கலோரியை எரிக்க முயற்சிக்கலாம். அதற்கு உதவும் சில எளிய பயிற்சிகள்:

நிற்பது, நடப்பது

l உங்களுடைய வாகனத்தை உங்கள் அலுவலகம் இருக்கும் வளாகத்தில் நிறுத்தாமல், சற்றுத் தள்ளி வசதி யான வேறொரு இடத் தில் நிறுத்தலாம். வளாகத்துக்குள்தான் நிறுத்த வேண்டும் என்றாலும்கூட, நிறைய நடந்து செல்வது மாதிரியான இடத்தில் நிறுத்துங்கள்.

l தனிநபர் வாகனங்களான இருசக்கர வாகனம், கார் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் பஸ், ரயிலில் பயணிப் பதன் மூலம் கூடுதல் நேரம் நிற்கவும், குறைந்தபட்சமாக வாவது நடக்கவும் வேண்டி வரும். இதுவும் தேவையற்ற கலோரியை எரிக்க நல்ல வழி.

l அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்வதன் மூலம் கணிசமான கலோரியை எரிக்கலாம்.

l லிஃப்ட், எஸ்கலேட்டர் போன்றவற்றைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டு, நடப்பது, மாடிப்படிகளில் ஏறி இறங்குவதுகூட நல்ல உடற்பயிற்சிதான்.

அலுவலகத்துக்குள்

l “அலுவலகத்தில் ஓடியாடி வேலை செய்பவர்களைவிட, ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்களின் ரத்தக் குழாய்கள், கல்லீரல், இதயம், மூளையில் கொழுப்பு தேங்கிவிடுகிறது. இதனால்தான் பகலில் உறக்கமும் வருகிறது" என்கிறார் நியூயார்க் டைம்ஸின் உடற்பயிற்சி பத்தியாளர் சிரட்சன் ரெனால்ட். அதைத் தடுக்க அலுவலக நேரத்தில் உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள எளிய உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவர வேண்டும்.

l கணினியின் முன் அமர்ந்து நேரம் காலம் தெரியாமல் வேலை பார்ப்பதால், ஜிம்முக்குப் போக நேரமில்லை என ஏங்குபவரா நீங்கள்? அலுவலக இடைவெளி நேரத்தை ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சிக்குப் பயன்படுத்துங்கள். எளிமையான விஷயம் நடப்பது. அல்லது உங்கள் அலுவலகத்தில் ஜிம் இருக்கிறது என்றால், அதைப் பயன்படுத்துங்கள்.

l அலுவலகத்தில் நின்றபடி சில வேலைகளைச் செய்வது. ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்குக் கொடுக்க வேண்டிய கோப்புகளை நீங்களே எடுத்துச் சென்று கொடுப்பது போன்றவற்றைச் செய்யும்போது கணிசமாகக் கலோரி எரிக்கப்படும்.


கை, கால் பயிற்சி

l நீண்ட நேரம் நிமிர்ந்து உட்கார்ந்தே செய்யும் வேலை என்றால், இரு கைகளின் விரல்களைக் கோத்து, பின் கழுத்தில் வைத்து நெட்டி முறிப்பதுபோலத் தொடர்ந்து செய்வதன் மூலம் கொஞ்சம் கலோரியை எரிக்கலாம்.

l குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் கை, கால்களைத் தொடர்ச்சியாக நீட்டி மடக்குவதன் மூலம் கொஞ்சம் கலோரியை எரிக்க முடியும்.

l கைகளை உயரத் தூக்கி மடக்குவதன் மூலம் கொஞ்சம் கலோரியை எரிக்க முடியும்.

l சக்கரம் இல்லாத இருக்கை, மேசை போன்றவற்றின் விளிம்பைப் பிடித்துக்கொண்டு, குதிகால் தரையில் படுமாறு வைத்துக்கொண்டு தரையை நோக்கிக் குனிந்து நிமிரலாம்.

இன்னும் கொஞ்சம்

l உங்களுடைய குதிகாலை தரையில் ஊன்றி நிற்பதன் மூலம் பாதத்தில் இருக்கும் அக்குபஞ்சர் மையங்கள் தூண்டப்படும். கால்கள் வலுவடையும்.

l 10-லிருந்து 15 நிமிடங்கள்வரை சிரிப்பதன் மூலம், 10-லிருந்து 40 கலோரிவரை எரிக்கப்படும். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது உண்மைதான்.

l பெரிய பந்தின் மீது செய்யும் உடற்பயிற்சிகளால், இருக்கையில் ஒரே மாதிரி நேராக உட்கார்வதன்மூலம் சோர்வடையும் தசைகளும் எலும்புகளும் புத்துணர்ச்சி பெறுகின்றன.

l டெக்சாஸ் பல்கலைக்கழக உடல்நல மையம் நடத்திய ஆய்வின்படி காற்று ஏற்றப்பட்ட மென்- குளிர்பானங்களைக் குடிப்பதன் காரணமாக இடுப்புச் சுற்றளவு அதிகரிக்கிறது. இதற்குப் பதிலாகப் பழங்களைச் சாப்பிடலாம்.

மதிப்பு கூட்டலில் கிடைக்கும் மகத்தான லாபம்

நீரை மகேந்திரன்

தமிழ் இந்து நாளிதழில் வாசித்த கட்டுரை 


புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதில் மதிப்புக் கூட்டுதல் எனும் மகத்தான கலை முக்கியமான பங்களிப்பை செய்து வருகிறது என்றால் மிகையில்லை. சாதாரண ஒரு விவசாயியின் வருமானத்தை, கனவை, ஆசையை மகத்தான ஒன்றாக மாற்றுகிறது மதிப்புக் கூட்டு தொழில்நுட்பம். மதிப்புக்கூட்டலைக் கற்றுக் கொண்டால் விவசாயி என்கிற நிலையிலிருந்து தொழில் முனைவர் என்கிற இடத்துக்கும் உயர்ந்து விடுகிறார்.

பொதுவாக சந்தைக்கு பொருட் களைக் கொண்டு செல்லும் விவசாயிகள் பெரும்பாலும் சந்தோஷமாக வீடு திரும்பியதாகச் சரித்திரம் இல்லை. அதே சமயம் கொஞ்சம் மாத்தி யோசித்தால் அந்த பொருட்களையே மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கின்றனர் தொழில் முன்னோடிகள்.

விவசாயி - தொழில்முனைவோர்

விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பது உடனடியாக தீர்க்கக்கூடிய விஷயம் இல்லை என்பதை புரிந்து கொண்டு மாற்றுத்தீர்வுகளை யோசித்தால் மதிப்புக் கூட்டி விற்பதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

தென்னை விவசாயி தனது விளைச் சலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று காத்திருப்பதைவிட, தென்னை யிலிருந்து கிடைக்கும் பொருட்களை பல்வேறு விதமாக மதிப்புக் கூட்டி விற்பனை செய்யலாம். தேங்காய், இளநீர், மட்டைகள் என அப்படியே விற்பனை செய்யாமல் அதை மதிப்புக் கூட்ட பழக வேண்டும். தேங்காய் பவுடர், தேங்காய் எண்ணெய் என உற்பத்தி செய்யலாம். தேங்காய் மட்டையை பதப்படுத்தி அதை பித் என்கிற வடிவில் கொண்டு வருகிறபோது அதற்கு ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது.

இளநீரை கார்விங் செய்து அழகாக பேக்கிங் செய்தால் ஷாப்பில் மால்களிலும் விற்பனை செய்ய முடியும். தேங்காய் கொட்டாங்குச்சிகளை எரி பொருளாக மட்டுமே பார்க்கக்கூடாது. இதை வெளிநாடுகளில் ஒரு முறை பயன்படுத்தும் கப்புகளாக பயன்படுத்து வதால் ஏற்றுமதி செய்யலாம்.

ஏற்றுமதி

கார்பன் தயாரிப்புக்கு பயன்படுத்துவதால் அதற்கான வாய்ப்புகளை தேட வேண்டும். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக யோசனை செய்தால் மகத்தான வருமானம் கிடைக்கும் என்பதுதான் உண்மை. பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு விவசாயி தேங்காய் பவுடரை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பவுடரை சாக்லெட், பிஸ்கட், கேக் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகமாக வாங்கிச் செல்கின்றன. வட இந்தியாவிலும் இதற்கு அதிக சந்தை உள்ளது.

தூக்கி எறியும் தேங்காய் மட்டையில் உள்ள நாரைப் பிரித்தெடுத்து அதை விவசாயத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள் ஐரோப்பிய விவசாயிகள். அவர்களுக்குத் தேவையான நார்கள் தமிழ்நாட்டிலிருந்து செல்கிறது. மண் தொட்டியில் தேங்காய் நாரை வைத்து, பத்து லிட்டர் தண்ணீர்வரை ஊற்றினாலும் அப்படியே உறிஞ்சி தக்க வைத்துக் கொள்வதால் அதற்கு வரவேற்பு பலமாக உள்ளது. அந்த நாரில் பயிரை வைத்து வளர்க்கிறார்கள். போன்சாய் மரங்களை வளர்ப்பதற்கு இது சிறந்த முறையாக இருந்து வருகிறது.

தொழிற்சாலை தேவை இல்லை

அதுபோல பால் உற்பத்தியாளர்கள் உரிய விற்பனை விலை கிடைக்க வில்லை, கொள்முதல் இல்லை என பல சிக்கல்களை அனுபவிக்கின்றனர். பல நேரங்களில் கறந்த பாலை கீழே கொட்டியும் அரசின் கவனத்தை ஈர்க்கின்றனர். ஆனால் மதிப்புக் கூட்டல் முறையில் இதில் மகிழ்ச்சியான லாபம் பார்க்கலாம் என்பதுதான் உண்மை. மேலும் இந்த சிக்கல்களுக்கு மதிப்புக் கூட்டல் முறை இவர்களுக்கு தீர்வாக இருக்கும். முக்கியமாக பாலிலிருந்து பல நாட்கள் கெடாமல் இருக்கும் சீஸ் என்கிற பலாடைக் கட்டி தயாரிக்கலாம்.

சீஸ் தயாரிக்க பெரிய தொழிற்சாலை தான் தேவை என்றில்லை, சிறிய அளவில் வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம். பத்து லிட்டர் பாலை ஒரு லிட்டராக சுருக்கி எளிய முறையில் விற்பனை செய்ய முடியும். ஒரு லிட்டர் பாலில் 100 கிராம் சீஸ்தான் தயாரிக்கலாம். ஆனால், நூறு லிட்டர் பாலின் அடக்கவிலை அதிகபட்சம் 3,000 ரூபாய் என்றால் அதிலிருந்து செய்யப்படும் 10 கிலோ சீஸின் குறைந்தபட்ச விற்பனை விலை 4,000 வரை விற்பனை ஆகிறது. உற்பத்தியில் 90% சீஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்கிறது. எவ்வளவு நாட்கள் என்றாலும் கெட்டுப் போகாது. சீஸின் நாட்கள் கூடக் கூட சுவையும் மணமும் அதிகரிக்குமாம்.

பல மடங்கு லாபம்

நெல்லிக்காய் உற்பத்தி செய்த ஒரு விவசாயி இன்று நெல்லி ஜூஸ் தயாரிப்பிலும் கலக்கி வருகிறார். அல்லும் பகலும் கஷ்டப்பட்டு நெல்லிக்காயை நெல்லிக்காயைப் பறித்துக்கொண்டு போனால் ஐந்துக்கும், பத்துக்கும் கேட்டதில் வெறுத்துப்போனவர்தான் ராஜேந்திரன். இன்று நெல்லிக்காயில் இருந்து ஜூஸ், ஜாம், சாக்லெட் போன்றவற்றைத் தயாரிக்கக் கற்றுக் கொண்டு தொழில்முனைவோராக நிற்கிறார். நெல்லி ஊறுகாய், நெல்லி சிப்ஸ், தொக்கு, நெல்லிப் பாக்கு சீவல், நெல்லி குளியல் பவுடர் என பல பொருட்களைத் தயாரிக்கிறார்.

நெல்லிக்காயை பறிச்சு விற்பனை செய்தால் ரூ.50,000 கிடைக்கும். அதையே மதிப்புக் கூட்டப்பட்ட பொரு ளாக விற்பனை செய்கிறபோது பல மடங்கு லாபம் கிடைக்கிறது என்கிறார் இவர். இதைபோல அதிக விளைச்சலால் விலை கிடைக்காமல் அவதிப்படும், தக்காளி விவசாயிகள் மாற்றி யோசிக்கலாம். ஜூஸ், ஜாம், ஊறுகாய், ரெடிமேட் மிக்ஸ் என அதிலிருந்து பல பொருட்களை தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொண்டால் வருமான இழப்பைத் தவிர்க்க முடியும்.

மதிப்புக் கூட்டு கலையால் தேங்காய் மட்டை போன்ற உபபொருட்களைக் கூட விற்கமுடிகிறது. சில மணி நேரங்களில் கெட்டுபோகும் பால் சீஸ், பன்னீர், பால் பவுடர், கிரீம், என்று மாறுகிறபோது நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்கிறது. இது போல ஒவ்வொரு தொழிலுலும் ஒன்றை பத்தாக மாற்றும் வித்தையை கற்றுக் கொள்வதே காலத்துக்கேற்ற மாற்றம்.

பொதுவாக பாரம்பரிய தொழில் நுட்பத்தை மட்டுமே நம்பியிருப்பவர்கள் இந்த மதிப்புக் கூட்டலை நம்புவதில்லை. அடுத்த தலைமுறையினர் தொழிலை கையிலெடுக்கும் போதுதான் தொழில் நவீன வடிவம் பெறுகிறது. அதாவது விவசாயி என்ற நிலை மாறி தொழில் முனைவர் என்ற இடத்துக்கு உயர்த்திக்கொள்ளாதவரை விளைச் சலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று பேசிக்கொண்டிருக்க வேண்டி யதுதான். அந்த நிலை மாற வேண்டும் என்றால் மதிப்புக்கூட்டல் என்கிற மகத்தான தொழில்வடிவத்தை கற்றுக் கொள்வதே சிறந்த தீர்வாக இருக்க முடியும்.

இரண்டாம் தலைநகராகுமா மதுரை?

கே.கே.மகேஷ் / எஸ்.ஸ்ரீனிவாசகன் / கி.மகாராஜன்

தமிழ் இந்து நாளிதழில் வாசித்த கட்டுரை


தலைமைச் செயலக கிளையை தென்னகத்தில் அமைக்க வேண்டும்


தமிழகத்தின் நிர்வாக நலன் கருதி, தலைமைச் செயலக கிளையை மதுரைக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை தென்னகத்தில் வலுவடைந்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களில் இருப்பதுபோல மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

புதிய வருவாய் கோட்டங்கள்

மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி என்பது மட்டும் ஜனநாயகம் அல்ல. அந்த ஆட்சி மக்கள் எளிதில் அணுகக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதை கருத்தில் கொண்டுதான், புதிய மாவட்டங்களும், தாலுகாக்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில், தமிழகத்தில் புதிதாக 9 வருவாய் கோட்டங்களும், 65 புதிய வட்டங்களும், 59 குறுவட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோட்டாட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரையிலான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் சூழலில், தலைமைச் செயலகம் மட்டும் தனது அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி நிற்கிறது. அதுவும் தென்னக மக்களுக்கு பாரமாக, தமிழகத்தில் வடக்கு ஓரமாக ஒதுங்கி நிற்கிறது.

தென்னகத்தின் அவஸ்தை

சென்னையில் தலைநகர் இருப்பதன் அவஸ்தையை தென்னகத்தில் பிறந்தவர்களால்தான் உணர முடியும். சென்னையில் புறப்படும் மின்சார ரயில் தென்னகத்தை அடைய வேண்டுமானால், இடையில் நிறுத்தி டீசல் எஞ்சின் மாற்ற வேண்டிய சூழல் தொடர்கிறது. தென்னக மக்கள் சென்னை போக வேண்டுமானால் 3 மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டிய அவலமும் நீடிக்கிறது. சுமார் 700 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள கன்னியாகுமரி மக்கள், தலைமைச் செயலக அதிகாரி ஒருவரை சந்திக்க வேண்டும் என்றால் குறைந்தது 2 நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டிய கட்டாயமும் தொடர்கிறது.

கிராம மக்களைப் பொருத்தவரையில் ஆட்சியர் அலுவலகங்கள் தான் தலைமைச் செயலகங்கள் என்றாலும் அதிகாரம் எல்லாம் சென்னையில்தான் குவிந்திருக்கிறது. தகுதியிருந்தும் உரிமை மறுக்கப்படும்போது, மேல்முறை யீட்டிற்காக மக்கள் சென்னை செல்கிறார்கள். பணி நியமனம், இடமாற்றம், நில ஒதுக்கீடு போன்றவற்றிற்கு சென்னை சென்றே ஆக வேண்டும். இவ்வளவு ஏன்? உள்ளூர் அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால்கூட, சென்னையில் இருந்து உத்தரவு வர வேண்டியது இருக்கிறது.

வேலை, தொழில் வாய்ப்பு இல்லை

தென்னகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கின்றன. அதில் படித்து வெளியேறுபவர்கள் எல்லாம் சென்னைக்குப் படையெடுக்கிறார்கள். தென்தமிழகம் பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கி இருப்பதற்கு காரணம் இங்கே யாரும் தொழில் தொடங்க முன்வராததுதான். கட்டமைப்பு வசதி இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதனால், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும், தொழில்பேட்டைகளும் காத்தாடுகின்றன.

இதை கருத்தில் கொண்டுதான் "தென்தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்பட வேண்டும் என்றால், அதிகார மையம் பக்கத்தில் இருக்க வேண்டும். மகாராஷ்டிர மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஆண்டுக்கு ஒருமுறையேனும் மதுரையில் கூட்ட வேண்டும்" என்று சட்டப்பேரவையிலேயே வலியுறுத்தி யுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கோடைக்கு நகர், குளிர்காலத்துக்கு ஜம்மு என்று இரண்டு தலைநகரங்கள் இருக்கின்றன. சென்னை மாகாணமாக இருந்தபோது, அதன் கோடைக்கால தலைநகராக சென்னையும், குளிர்கால தலைநகராக ஊட்டியும் இருந்தது. ஆட்சி யாளர்களின் சொகுசுக்காக அரசு ஆவணங்கள் மலையேறிச் செல்லும்போது, மக்களின் வசதிக்காக அவை மதுரைக்கு வந்தால் என்ன? என்பது தென்னக மக்களின் கோரிக்கை.

4 மண்டலமாக பிரிக்கலாம்

2006 திமுக ஆட்சியின்போது அரசின் திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் தமிழருவி மணியன். சென்னையில் அதிகாரம் குவிவதை விரும்பாத அவர், அமைச்சகங்களை தமிழகம் முழுவதும் பரவலாக்கும் திட்டத்தை முதல்வரிடம் வலியுறுத்தினார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

"தலைமை செயலகத்தில் மனு அளித்தால் உட னடி நடவடிக்கை இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறோம். ஆனால் கிராமத்தினர் அணுக முடியாத இடமாக அது இருப்பதால், இடைத்தரகர்கள் அதிகரித்து விட்டார்கள். எனவே, மதுரையில் மட்டுமல்ல திருச்சி, கோவை போன்ற இடங்களிலும் தலைமைச் செயலக கிளை வர வேண்டும். உயரதிகாரிகளை அங்கு நியமிப்பதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் முதல்வரும், அமைச்சர்களும் மக்களை சந்திக்க அங்கு வரவேண்டும்" என்கிறார் விருதுநகர் மாவட்டம் நூர்சாகிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் துள்ளுக்குட்டி.

அரசியல் கட்சிகளும் ஆதரவு

திருச்சியில் துணை தலைநகரம் அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. பின்தங்கிய மாவட்டங்களின் மேம்பாட்டுக்கு கர்நாடகம், மகாராஷ்டிரத்தைப் பின்பற்ற வேண்டும் என்று பாமக கூறுகிறது. "மாநிலத்திற்குள்ளேயே நிலவும் வேறுபாடு களைக் களையும் நோக்குடன் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு இந்திய அரசியல் சாசனத்தின் 371வது பிரிவு வழி செய்துள்ளது. அதன்படி 371(2) பிரிவின் கீழ் மாராட்டிய மாநிலத்திலும், 371(டி) பிரிவின் கீழ் ஆந்திர மாநிலத்திலும், 371(ஜெ) பிரிவின் கீழ் கர்நாடக மாநிலத்திலும் பிராந்திய அளவிலான முன்னேற்றத் திட்டங்களுக்கு வழி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த அரசியலமைப்புச் சட்டத்தில் 371(கே) என்ற புதிய பிரிவு சேர்க்க வேண்டும். இதைப் பயன்படுத்தி தமிழகத்தில் பின்தங்கிய பிராந்தியங்களுக்காக சிறப்பு மேம்பாட்டு வாரியம் அமைத்தல், அரசுத் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்" என்கிறது பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை. இந்த கோரிக்கைகள் வலுத்து வருவதால், சட்டப் பேரவைத் தேர்தலில் இதுவும் முக்கியப் பிரச்சினையாக அமையலாம்.

தலைமைச் செயலக கிளையா? அதிகாரப் பரவலா? என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான். எனவே, தென்தமிழக மக்களிடம் கருத்து கேட்டு, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை.




எல்லாம் சாத்தியமே... வழிகாட்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை

மதுரையை தமிழகத்தின் 2-வது தலைநகராக்கி னால் முழு வெற்றி காண முடியும்... இது மக்களுக்கான மாற்றம்தான் என்பதை தனது 11 ஆண்டுகால சாதனைகள் மூலம் அச்சாரமிட்டு காட்டுகிறது நாட்டின் ‘பசுமை அமர்வு’ என்று அழைக்கப்படும் உயர் நீதிமன்ற மதுரை கிளை.

10ஆண்டுகளுக்கு முன்புவரை தென் மாவட் டங்களைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சென்னைக்குத்தான் செல்ல வேண்டும். கன்னியாகுமரி, நெல்லையில் இருந்து ஒருவர் சென்னைக்கு சென்றுவிட்டு அன்றே ஊருக்குத் திரும்புவது முடியாத காரியம்.

இதற்கு பயந்தே தென் மாவட்ட வழக்கறி ஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு செல்லாமல் தங்களது மாவட்டங்களுக்கு உள்ளேயே பணி செய்து வந்தனர்.

இந்த சூழலில்தான் சென்னை உயர் நீதிம ன்றத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் என தென்மாவட்டத்தில் தீவிர போராட் டம் நடைபெற்றது. இதையடுத்து மதுரை உலகநேரியில் உயர் நீதிமன்ற கிளை 2004-ல் தொடங்கப்பட்டது. உலகில் எங்கும் இதுபோல் அழகும், பிரம்மாண்டமும் நிறைந்த நீதிமன்றக் கட்டிடம் இல்லை எனும் அளவுக்கு மதுரை கிளை தனது பெருமையை பறைசாற்றிவருகிறது.

இங்கு மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திருச்சி, புதுக் கோட்டை, தஞ்சாவூர், கரூர், நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்ட ங்களைச் சேர்ந்த வழக்குகள் விசாரிக்கப் படுகின்றன. கடந்த ஜூலை 24-ம் தேதியுடன் பத்தாவது ஆண்டை நிறைவு செய்து, 11-வது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை. இந்த 10 ஆண்டுகளில் இடைக்கால மனுக்கள் தவிர்த்து பிரதான வழக்குகள் மட்டும் 6.24 லட்சம் முடிக்கப்பட்டுள்ளன. பிரதான மனுக்களுடன் தொடர்புடைய இடைக்கால மனுக்களையும் சேர்த்து கணக்கிட்டால், முடிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டும். இது மிகப் பெரிய சாதனையாகும்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை, மாநில நுகர்வோர் ஆணையத்தின் கிளையில் மதுரையில் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படும் நிலையில், மாநில அரசின் பிற துறைகளின் தலைமையக கிளையை மதுரையில் திறப்பதில் அரசுக்கு சிரமம் இருக்காது. இதனால் ஏக்கத்தில் தவிக்கும் தென் மாவட்ட மக்களின் வாழ்வில் சிரமங்கள் நீங்கும், வளம் பெருகும் என்பது மறுக்க முடியாத உண்மை!

புகையில் கரையும் ஃபோக்ஸ்வேகன்!

எம்.ரமேஷ்

தமிழ் இந்து நாளிதழில் வாசித்த கட்டுரை


புகை நமக்குப் பகை. இன்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை புதைகுழிக்கு இட்டுச் சென்றுள் ளதும் இந்தப் புகைதான். இந்நிறுவ னத்தின் தலைவராக கடந்த 8 ஆண்டு களாக கோலோச்சிய மார்டின் வின்டர் கோர்னை வீட்டுக்கு அனுப்பியதும் இந்தப் புகையே.

பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 78 ஆண்டுக்கால சரித்திரத்தை சற்று பின்னோக்கி பார்த்தால், இன்று உலக அளவில் கார் விற்பனையில் முக்கிய இடத்தில் உள்ள இந்நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள சரிவு அனைவருக்குமே வியப்பாக இருக்கும். ஜெர்மனியின் உல்ஃப்ஸ்பர்க் நகரில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் 1937-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1975-ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் குழுமமாக வளர்ந்த இந்நிறுவனம் இன்று ஜப்பானின் டொயோடா நிறுவனத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகத் திகழ்கிறது.

மக்களின் கார்

1930 களின் ஆரம்பத்தில் ஜெர்மனியில் தயாரான கார்கள் மிகுந்த விலையில் இருந்தன. இதனால் நடுத்தர மக்கள் பெரும்பாலும் போக்குவரத்துக்கு மோட்டார் சைக்கிளையே பயன்படுத் தினர். அப்போது 50 ஜெர்மானியர்களில் ஒருவரிடமே கார் இருந்தது.

1933-ம் ஆண்டு அப்போதைய ஜெர்மன் அதிபர் அடால்ப் ஹிட்லர், அமெரிக்கர்கள் தங்கள் வீடுகளில் கார்களை வைத்திருப்பதைப் போல ஜெர்மானியர்களும் வீட்டுக்கு ஒரு கார் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார்.இப்போது உள்ள சுலப தவணைத் திட்டத்தைப் போல வாரத்துக்கு 5 மார்க் சேமிக்கக்கூடிய குடும்பத்தினர் ஒருகாரை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி 3.36 லட்சம் மக்கள் காருக்கு முன் பதிவு செய்தனர். பின்புறம் இன்ஜின் கொண்ட கார்கள் தயாரிக்கப்பட்டன. இத்தகைய கார்களை தயாரிக்க 1938-ம் ஆண்டு உருவானதுதான் ஃபோக்ஸ்வேகன்.

ஆனால் இரண்டாவது உலக போர் தொடங்கியதால் உற்பத்தி பாதிக் கப்பட்டது. 1939-ம் ஆண்டு ஹிட்லரின் 50-வது பிறந்த தினத்தன்று ஒரு காரை இந்நிறுவனம் அன்பளிப்பாக தயாரித்து அளித்தது. இன்று இந்நிறுவனத்துக்கு 27 நாடுகளில் 100 ஆலைகள் உள்ளன. ஃபோக்ஸ்வேகன் கார்கள் ஓடாத சாலைகளே இல்லை எனலாம். அந்த அளவுக்கு இந்நிறுவன கார்கள் உலகம் முழுவதும் வியாபித்துள்ளன.

முதல் பொய்

இரண்டாம் உலகப் போரின்போது இந்த ஆலை ராணுவ வாகனங்களை தயாரிக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. இந்நிறுவனத்தின் டைப் 82 குபெல்வேகென் கார்களை ராணுவ வீரர்களின் போக்குவரத்துக்கு தயாரித்தது. வாகனத் தயாரிப்பில் போர் அடிமைகளும் பயன்படுத்தப்பட்டனர். ஏறக்குறைய 15 ஆயிரம் அடிமைகளை கார் தயாரிப்புக்குப் பயன்படுத்தியதாக இந்நிறுவனம் 1998-ம் ஆண்டுதான் ஒப்புக் கொண்டது. இதைப் போலத்தான் இப்போதும். 2009-ம் ஆண்டிலிருந்து தவறு செய்து வந்தது. ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டதோ 2013-ல். தவறை ஒப்புக் கொண்டதோ 2015-ல். இந்தக் குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்ட பிறகே இந்நிறுவனம் தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளது.கடந்த 6 ஆண்டுகளில் இந்நிறுவனம் தயாரித்த கார்களின் எண்ணிக்கை 1.10 கோடி.

என்ன தவறு

இந்நிறுவனம் தயாரித்த ஜெட்டா, பீட்டில், கோல்ப், பசாட் மற்றும் ஆடி ஏ3 மாடல் டீசல் கார்களில் புகை அளவு சோதனையைக் காட்டும் சாஃப்ட்வேரில் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாகன புகை சோதனை செய்யும்போது இதில் உள்ள சாஃப்ட்வேர் கருவி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நிர்ணயித்த புகையளவுக்குட்பட்டுத்தான் புகை வெளியேறுவதாகக் காட்டும். ஆனால் உண்மையில் வாகனம் வெளியிடும் புகையின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 40 மடங்கு அதிகம்.

4.82 லட்சம் கார்

அமெரிக்காவில் ஓடும் ஃபோக்ஸ்வேகன் கார்களில் 4.82 லட்சம் கார்கள் அதிக அளவு புகை வெளியிடுவதாக அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகமை (இபிஏ) கண்டுபிடித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் செய்துள்ள இந்த தவறுக்கு 1,800 கோடி டாலர் அபராதம் விதிக்கலாம் என இபிஏ பரிந்துரைத்துள்ளது.

உண்மை வெளி வந்தது எப்படி?

ஃபோக்ஸ்வேகன் கார்களில் மோசடி செய்திருப்பதைக் கண்டுபிடித்தவர் 45 வயதுடைய அமெரிக்க பொறியாளர் டேனியல் கார்டெர். வெஸ்ட் வர்ஜீனியா பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் சிலர் அடங்கிய குழுவி னருடன் இவர் நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. 2012-ம் ஆண்டில் ஆய்வு செய்து 2013-ல் இக்குழுவினர் அறிக்கை அளித்தனர். ஆனால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இரண்டு ஆண்டுகளாகியுள்ளது.

நைட்ரஜன் ஆக்ஸைடு

ஃபோக்ஸ்வேகன் கார்கள் அதிக அளவு நைட்ரஜன் ஆக்ஸைடு வாயுவை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் ஆண்டு தோறும் 2.5 லட்சம் முதல் 10 லட்சம் டன் வரை நைட்ரஜன் ஆக்ஸைடு கூடுதலாக வெளியேறி சுற்றுச் சூழலை பாதித்துள்ளதாம். இந்த அளவானது இங்கிலாந்தில் உள்ள அனைத்து மின் நிலையங்கள், வாகனங்கள், தொழிற் சாலைகள் மற்றும் வேளாண் இயந் திரங்கள் ஒட்டுமொத்தமாக வெளி யிடும் நைட்ரஜன் ஆக்ஸைடு அளவுக்கு சமமானது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நைட்ரஜன் ஆக்ஸைடு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் இது பிற காற்றுகளுடன் கலக்கக் கூடியது. அவ்விதம் கலக்கும்போது மனிதனுக்கு இதய நோய் ஏற்படும். லண்டனில் மட்டும் நைட்ரஜன் ஆக்ஸைடு சுவாசிப் பதால் ஆண்டுதோறும் 9,500 குறைப் பிரசவ மரணங்கள் நிகழ்வதாக கணக் கிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஆண்டு தோறும் 50 ஆயிரம் பேர் மாச டைந்த காற்றை சுவாசிப்பதால் உயிரிழக் கின்றனர். காற்று மாசடைவதற்கு முக்கியக் காரணமே வாகன புகைதான். அதிலும் டீசல் வாகன புகை பெரும் பங்கு வகிக்கிறது.

பாடம்

ஃபோக்ஸ்வேகன் செய்த மோசடி பல நாடுகளுக்கு ஒரு பாடத்தைக் கற்பித்துள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு விஷயத்தில் மெத்தனமாக இருக்கக்கூடாது என்பது இதன் மூலம் உணர்த்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் சூழல் விதிமுறைகள் கடுமையாக உள்ளபோதிலும், அங்கேயே ஃபோக்ஸ்வேகன் இத்தகைய மோசடி செய்துள்ளது அதிர்ச்சியளிக்கும் விஷயம். அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சட்ட திட்டங்கள் கடுமையாக இல்லாத சூழலில் இதுபோன்ற நிறுவனங்கள் எத்தகைய நிலைமைக்கும் செல்லும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

நஷ்டம்

பங்குச் சந்தையில் ஃபோக்ஸ்வேகன் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. இந்நிறுவனத்துக்கு 6,600 கோடி டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்க அரசு அபராதம் விதித்தால் 1,800 கோடி டாலர் செலுத்த வேண்டியிருக்கும். இதைப் போல பிற நாடுகளும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன. அந்த நாடுகளும் அபராதம் விதித்தால் அல்லது ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு தடை விதித்தால், நிறுவனத்தின் 78 ஆண்டுக்கால வளர்ச்சி புகை போல மறையும்.

ஃபோக்ஸ்வேகன் செய்த மோசடி பல நாடுகளுக்கு ஒரு பாடத்தைக் கற்பித்துள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு விஷயத்தில் மெத்தனமாக இருக்கக் கூடாது என்பது இதன் மூலம் உணர்த்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் விதிமுறைகள் கடுமையாக உள்ளபோதிலும், அங்கேயே ஃபோக்ஸ்வேகன் இத்தகைய மோசடி செய்துள்ளது அதிர்ச்சியளிக்கும் விஷயம்.

பிளாட்டினம் விலை சரிவு

ஃபோக்ஸ்வேகன் கார்களின் பிரச்சினையால் பிளாட்டினம் விலை சரிந்துள்ளது. மிகவும் விலை உயர்ந்த உலோகங்களில் பிளாட்டினமும் ஒன்று. ஃபோக்ஸ்வேகன் மோசடியால் அந்நிறுவன பங்குகள் சரிந்ததில் அர்த்தமுண்டு. ஆனால் பிளாட்டினம் விலை கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டீசல் என்ஜினில் புகை அளவைக் கட்டுப்படுத்த பிளாட்டினம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பிளாட்டினம் விலை சர்வதேச சந்தையில் சரிந்துள்ளது.

ஐரோப்பிய யூனியனின் பிளாட்டின தேவையில் நான்கில் ஒரு பங்கு ஆட்டோமொபைல் துறையில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது 17 லட்சம் அவுன்ஸ் (ஒரு அவுன்ஸ் 28.34 கிராம்) பயன்படுத்தப்படுகிறது. ஒரு காருக்கு சராசரியாக 5.5 கிராம் பிளாட்டினம் பயன்படுத்தப்படுகிறது.

காசோலின் கார்களில் பல்லாடியம் பயன்படுத்தப்படுகிறது. பிளாட்டினம் விலை குறைந்தாலும் பல்லாடியம் விலை குறையவில்லை. ஒரு டிராய் அவுன்ஸ் (31 கிராம்) பிளாட்டினம் விலை சர்வதேச சந்தையில் 900 டாலராக சரிந்துவிட்டது. இதற்கு முன்பு ஒரு டிராய் அவுன்ஸ் 1,100 டாலராக இருந்தது.