May 29, 2016

நாவல்களின் காலம்

எஸ்.ராமகிருஷ்ணன் 

கோப்புப் படம்.
 
சமகாலத்தின் முக்கியமான நாவல்கள் எவை? இன்றைய நாவல்களின் போக்கு எப்படி இருக்கிறது? ‘உபபாண்டவம்’, ‘நெடுங்குருதி’, ‘யாமம்’, ‘சஞ்சாரம்’ உள்ளிட்ட நாவல்களை எழுதியவரும் குறிப்பிடத்தகுந்த விமர்சகருமான எஸ்.ராமகிருஷ்ணனிடம் இது குறித்துக் கேட்டோம்.

நம் காலம் நாவல் களின் காலம். உலகெங்கு ம் நாவல்கள் விற்பனையில் மிகப் பெரிய சாதனை படைத்துவருகின்றன. ஹாரிபாட்டர் நாவல் 107 மில்லியன் விற்றிருக்கிறது. லார்டு ஆஃப் தி ரிங்ஸ் நாவல் 150 மில்லியன் பிரதிகள் விற்றிருக்கின்றன. உலகில் எந்தக் கவிதைத் தொகுப்பும், கட்டுரைத் தொகுப்பும் இவ்வளவு விற்றதில்லை. தமிழிலும் நாவலுக்கெனத் தனி வாசக வட்டம் எப்போதும் இருந்துவருகிறது. நாவல் விற்பனையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

தமிழ் நாவல் உலகம் இன்று பெரும் விருட்சமாக வளர்ந்தோங்கி நிற்கிறது. ஆரம்ப காலத் தமிழ் நாவல்களில் கதாசிரியரே கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவார். அனுபவங்கள் மட்டுமே கதையாக உருமாறின. புனைவின் சாத்தியங்கள் அறியப்படவேயில்லை. நவீனத்துவத்தின் வருகையால் நாவல்களில் ஆசிரியரின் குரல் மறைந்துபோனது, அனுபவங்களை மட்டும் விவரிக்காமல் அவற்றுக்குக் காரணமாக உள்ள அரசியல் சமூக பொருளாதார உளவியல் காரணங்களை நாவல் ஆராயத் துவங்கியது.

இரண்டாயிரத்துக்குப் பிறகே தமிழ் நாவல்கள் பாலின்பம் குறித்த திறந்த உரையாடல்கள், அடையாளச் சிக்கல், நகர்மயமாதலின் பிரச்சினைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளின் அக உலகம் எனப் புதிய திசை நோக்கிப் பயணிக்கத் துவங்கியது. இன்றைய நாவல் என்பது ஒரு சிம்பொனிபோல பல்வேறு இசைக் கருவிகளின் ஒன்று சேர்ந்த கூட்டு வடிவம் என்பார் மிலன் குந்தேரா. அது தமிழ் நாவலுக்கும் பொருந்தக்கூடியதே.

மறைக்கப்பட்ட வரலாறு, புதிய வாசிப்புக்குள்ளான தொன்மம், இதிகாசம் பற்றிய புனைவெழுத்து, இனவரவியல் கூறுகள் கொண்ட நாவல் என இன்றைய நாவலின் இயங்குதளங்கள் விரிவுகொள்கின்றன.
 
புத்தாயிரத்துக்குப் பிறகான சிறந்த நாவல்கள்
1. சயந்தனின் ‘ஆறாவடு’ (தமிழினி பதிப்பகம்)ஈழத் தமிழர்களின் துயர்மிகு வாழ்வினைச் சித்தரிக்கும் சிறந்த நாவல்.
 
2. முருகவேளின் ‘மிளிர்கல்’ (பொன்னுலகம் பதிப்பகம்) கண்ணகியைத் தேடும் பயணத்தின் ஊடாக ரத்தினக்கல் தேடும் வணிக சூதின் கதையைச் சொல்லும் புதிய நாவல்.
 
3. நக்கீரனின் ‘காடோடி’ (அடையாளம் பதிப்பகம்) சூழலியல் அக்கறையுடன் எழுதப்பட்ட புதுவகை நாவல்.
 
4. லட்சுமி சரவணக்குமாரின் ‘உப்பு நாய்கள்’ (உயிர்எழுத்து பதிப்பகம்) விளம்புநிலை மக்களின் வாழ்க்கையை நுட்பமாகப் பதிவுசெய்த நாவல்.
 
5. ஜாகிர்ராஜாவின் ‘மீன்காரத் தெரு’ (மருதா பதிப்பகம்) இஸ்லாமியர்களின் வாழ்வியல் நெருக்கடிகளைப் பேசும் நாவல்.
 
6. சுகுமாரனின் ‘வெலிங்டன்’ (காலச்சுவடு பதிப்பகம்) ஊட்டியின் வரலாற்றுடன் பால்ய நினைவுகளை ஒன்று கலந்து விவரிக்கும் சிறந்த நாவல்.
 
7. இரா.முருகனின் ‘அரசூர் வம்சம்’ (கிழக்கு பதிப்பகம்) தலைமுறைகளின் கதையைக் கூறும் மாய யதார்த்தவாத நாவல்
 
8. தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ (உயிர்மை பதிப்பகம்) திராவிட இயக்க அரசியலை மையமாகக் கொண்ட நாவல்.
 
9. யூமாவாசுகியின் ‘ரத்த உறவு’ (தமிழினி பதிப்பகம்) குடியால் அழிந்த குடும்பத்தின் கதையைச் சொல்லும் நாவல்.
 
10. பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’ (தமிழினி பதிப்பகம்) காதலின் துயரைக் கவித்துவமாகப் பதிவுசெய்த நாவல்.

May 26, 2016

சென்ற நூற்றாண்டின் இலக்கியம்

சாரு நிவேதிதா


படம்: பிரபு காளிதாஸ்
படம்: பிரபு காளிதாஸ்
மூத்த படைப்பாளிகளின் படைப்புகள், தவறவிடக் கூடாத புத்தகங்களை இளைய வாசகர் களுக்குப் பரிந்துரைக்குமாறு எழுத்தாளர் சாரு நிவேதாவிடம் கேட்டோம்.

இன்றைய தினம் பெரும்பான்மையான இளைஞர்களிடம் தமிழ் பேச்சு மொழியாக மட்டுமே இருந்துவருவதை நீங்கள் கவனிக்கலாம். தமிழை ஒழுங்காக நான்கு பக்கம் எழுதக்கூடிய இளைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மேலை நாடுகளில் இந்த அவலம் இல்லை. ஐரோப்பாவில் ஒவ்வொரு இளைஞருக்கும் நான்கு மொழிகள் தெரிந்திருக்கின்றன.

ஒரு ஃப்ரெஞ்சு மாணவரை எடுத்துக்கொண்டால் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில்கூட அவர்கள் படித்து முடிக்கும் வரையிலும் - ஆய்வுப் படிப்பிலும்கூட - ஃப்ரெஞ்ச் மொழித் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். ஒரு ஐரோப்பிய மருத்துவ மாணவன் தன் தாய் மொழியோடுகூட லத்தீன் மொழியும் கற்கிறான். மருத்துவச் சொற்களில் பெரும்பாலானவை லத்தீன் மொழியை மூலமாகக் கொண்டவை.

இப்படி, தன் மண்ணின் மொழியை எந்தச் சமூகம் கைவிடாமல் இருக்கிறதோ அந்தச் சமூகமே உயர்வுறும். தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார, அரசியல் வீழ்ச்சிக்கு அடிப்படையான காரணம், தமிழைக் கைவிட்டுவிட்டோம். உங்களுக்குத் தெரியுமா, இங்கே உள்ள 99% தனியார் கல்லூரிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கிறார்கள். என்னால் பெயர்கூடச் சொல்ல முடியும். தமிழ்ப் பேராசிரியர்கள்கூட இங்கே திக்கித் திக்கி ஆங்கிலத்திலேயே பேச வேண்டியிருப்பதன் அவலத்தை வேறு எந்த மண்ணிலும் காண முடியாது. நல்லவேளை, தமிழை ஆங்கிலத்தில் கற்பியுங்கள் என்று உத்தரவு போடவில்லை என்று பகடி செய்தான் என் நண்பராக இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்!

இந்த நிலையில், ஒரு மொழியை எப்படி நாம் தக்க வைத்துக்கொள்வது? சிலர் தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்ற (நல்ல) நோக்கத்தில் தவறான வழியில் செல்வதையும் பார்க்கிறேன். குளம்பியகம், ஆகத்து (ஆகஸ்ட் மாதமாம்!) என்றெல்லாம் தமிழைச் சுத்தப்படுத்துகிறார்கள். இந்த மடி ஆச்சாரமெல்லாம் தமிழைக் காப்பாற்றாது. ஆங்கிலத்தில் உள்ள பெரும்பாலான சொற்கள் பிற மொழிகளிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவைதான்.

ஆக, ஒரு மொழி நிலைத்து நிற்பதற்காக நாம் செய்யக்கூடியது, அம்மொழியில் உள்ள இலக்கியத்தைக் கற்பது மட்டுமே. மேலும், அது ஒன்றும் மொழியைக் காப்பாற்றுவதற்காக நாம் செய்ய வேண்டிய கடமை அல்ல. பட்சிகளுக்கு உணவிடுவது பட்சிகளுக்காக மட்டும் அல்ல என்பதுபோல. பட்சிகளுக்கு உணவிட்டால் பூமி வாழும்; பூமி குளிரும். பூமியின் மரணத்தை இன்னும் பல கோடி ஆண்டுகள் தள்ளிப் போடுவதற்கு விருட்சம் வேண்டும்; வனம் வேண்டும்; மழை வேண்டும்; இந்தப் புவிச் சமநிலையைக் காப்பாற்றுவது பட்சிகள். அதேபோல் நாமும் நம் வாழ்வும் மேன்மையுற, அறம் தழைக்க நாம் செய்ய வேண்டிய அடிப்படையான காரியம், இலக்கியத்தை வாசித்தல். அதற்கு நான் பரிந்துரைக்கக் கூடிய பத்துப் புத்தகங்கள்:

1. சி.சு.செல்லப்பாவின் சுதந்திர தாகம்.
நம்முடைய பழைய வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதுதான் இன்றைய வாழ்வை மேலும் செழுமைப்படுத்திக்கொள்வதற்கு இருக்கும் எளிய வழி. பதிப்பாளர்: வெளி ரங்கராஜன்.

2. ந.சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம்.
என்னை காந்தியவாதியாக மாற்றிய நாவல். இதன் சில பக்கங்களை நம் குழந்தைகளுக்கு வாசித்துக் காண்பித்தால் போதும்; சமுதாயம் இப்போது இருப்பதுபோல் இருக்காது. நற்றிணை பதிப்பகம்.

3. தி.ஜானகிராமனின் செம்பருத்தி. காலச்சுவடு பதிப்பகம்.

4. லா.ச.ரா.வின் சிறுகதைகள்.
இந்த இரண்டு நூல்களும் தமிழைச் சங்கீதம்போல் மாற்றிக் காட்டியவை. டிஸ்கவரி புக் பேலஸ்.

5. எஸ்.சம்பத்தின் இடைவெளி.
உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று இது இப்போது இணையத்தில் மட்டுமே கிடைக்கிறது. விருட்சம் வெளியீடாக வந்திருப்பது திருத்தப்படாத பதிப்பு.

6. எம்.வி.வெங்கட்ராமின் காதுகள்.
இடைவெளிக்குச் சொன்னதையே இதற்கும் சொல்லலாம். காலச்சுவடு பதிப்பகம்.

7. ஆ.மாதவனின் கடைத்தெருக் கதைகள்.
நற்றிணைப் பதிப்பகம்.

8. அசோகமித்திரனின் இன்ஸ்பெக்டர் செண்பகராமன்.
குறுநாவல் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகம்.

9. தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள்.
தமிழில் தஞ்சை ப்ரகாஷுக்கு இணையாக தஞ்சை இஸ்லாமிய வாழ்க்கையை யாரும் எழுதவில்லை. டிஸ்கவரி புக் பேலஸ்.

10. ந.முத்துசாமியின் மேற்கத்திக் கொம்பு மாடுகள்.
க்ரியா பதிப்பகம். முக்கியமான சிறுகதையாளரான ந.முத்துசாமியின் பழைய கதைகளும் புதிய கதைகளும் கலந்த முக்கியமான புத்தகம்.

ஒரு ஐரோப்பிய மருத்துவ மாணவன் தன் தாய் மொழியோடுகூட லத்தீன் மொழியும் கற்கிறான். மருத்துவச் சொற்களில் பெரும்பாலானவை லத்தீன் மொழியை மூலமாகக் கொண்டவை. இப்படி, தன் மண்ணின் மொழியை எந்தச் சமூகம் கைவிடாமல் இருக்கிறதோ அந்த சமூகமே உயர்வுறும்!

May 24, 2016

Books to Buy


உப்பு வேலி - ராய் மாக்ஸிம்

கன்னி - பிரான்சிஸ் கிருபா

ராஜ் கௌதமன்

           தமிழினி பதிப்பகம்

                         சிலுவைராஜ் சரித்திரம்
                         காலச்சுமை
                        இலண்டனில் சிலுவைராஜ்

மாயா

           நம்ம புக்ஸ்

                       அன்று வந்ததும் இதே நிலா

அறந்தை நாராயணன்

            NCBH

                       தமிழ் சினிமாவின் கதை

தஞ்சை பிரகாஷ்

             நடுகல் பதிப்பகம்

                       கள்ளம்
                       கரமுண்டார் வீடு

ஹார்ப்பர் லீ

                         பாடும் பறவையின் மௌனம்

எதிர் வெளியீடு

                        மணற்குன்று பெண்

சித்ராலயா கோபு

                         ஸ்ரீதர் - திரும்பிப்  பார்க்கிறேன்

அடையாளம் வெளியீடு  (04332 273444)

                          தொலைக்காட்சி

யூமா.வாசுகி

                        இரத்த உறவு

லக்ஷ்மி சரவணக்குமார்

                         நீலப்படம்


புத்தாயிரத்தின் படைப்பாளிகள்!

ஜெயமோகன்

இளைய வாசகர்களுக்குப் புதிய படைப்புகள், படைப்பாளிகளை அடையாளம் காட்டுவது இந்தப் பகுதியின் நோக்கம். 2000-க்குப் பின் எழுத வந்தவர்களின் கவனம் ஈர்த்த புத்தகங்களை எழுத்தாளர் ஜெயமோகனிடம் கேட்டோம்.

“சிறுவயதில் எதையாவது விதைத்தால் ஒருநாளில் பத்துப் பதினைந்து தடவை சென்று முளைத்திருக்கிறதா என்று பார்ப்பதுண்டு. சில விதைகளின் ஓடுகள் மிக வலுவானவை. முளைக்க நாளாகும். அதற்குள் தோண்டிப்பார்த்துவிட்டுத் திரும்பப் புதைப்பதும் உண்டு. அதே ஆர்வத்துடன் இணையத்தை, அச்சிதழ்களைப் பார்ப்பது என் வழக்கம். ஆர்வமூட்டும் ஒரு தொடக்கத்துக்காக.
என் இன்றைய வாசிப்பின் அளவுகோல் இது. இப்போது பிரபல இதழ்களில் வணிக எழுத்து இல்லாமலாகிவிட்டிருப்பதால், வணிக எழுத்தே இலக்கிய முத்திரையுடன் பதிப்பகங்களால் வெளியிடப்படுகிறது. படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது என்பதே ஒரு முக்கியமான அளவு கோலாகப் பலரால் சொல்லப்பட்டு, அத்தகைய நூல்கள் முன்னிறுத்தப்படுகின்றன. சுவாரஸ்யம் என்பது இலக்கியத்துக்கான அளவுகோலே அல்ல என்று சொல்ல விரும்புகிறேன். ஆர்வமில்லாத வாசகனையும் வாசிக்கவைப்பதற்காக முயல்பவை வணிக எழுத்துகளே. இலக்கியம் இணையான உள்ளத்துடன் தேடிவரும் வாசகனுடன் நிகழ்த்தப்படும் அந்தரங்கமான உரையாடல். நான் இலக்கிய வாசகர்களுக்குரிய நூல்களை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சென்ற நூறாண்டுக்கால இலக்கிய மரபின் தொடர்ச்சியாக அமையும் ஒரு நூல், அம்மரபில் அதுவரை இல்லாத ஒன்றைச் சேர்ப்பதாக இருக்க வேண்டும். ஒன்றைக் கலைத்து அடுக்குவதாக அமையவும் கூடும். அதுவே எப்போதும் என் தேடல்.

1. அத்துமீறல்: வி.அமலன் ஸ்டேன்லி நல்ல நிலம் பதிப்பகம்
அமலன் ஸ்டேன்லி முக்கியமான கவிதைகளை எழுதியவர். அடிப்படையில் அறிவியலாளர். ஆய்வகச் சுண்டெலி ஒன்றின் வாழ்க்கையின் சித்திரமாக முதல் வாசிப்பில் அமையும் இந்த நுணுக்கமான நாவல், இருத்தலியம் ஓங்கி நின்றிருந்த காலகட்டத்தின் குறியீட்டு நாவல்களின் அழகிய கவித்துவத்தைச் சென்றடைகிறது.

2. ஆதிரை: சயந்தன் - தமிழினி பதிப்பகம்
தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது.

3. துறைவன் - கிறிஸ்டோபர் முக்கூடல் வெளியீடு
கடலோர மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல். நாமறியாத ஒரு நிலப் பகுதியை, உணர்வுக் களத்தை நுணுக்கமான தகவல்களுடன் சொல்கிறது.

4 குறத்தியாறு: கௌதம் சன்னா உயிர்மை பதிப்பகம்
நாட்டார் பண்பாட்டிலிருந்து பெற்ற குறியீடு களையும் நவீனப் புனைவு முறைமைகளையும் கலந்து எழுதப்பட்ட இந்நாவல், சமகால வரலாற்றின் ஒரு மாற்று வடிவம்.

5. காலகண்டம் - எஸ் செந்தில்குமார் உயிர்மை பதிப்பகம்
நூற்றைம்பதாண்டுகாலப் பரப்பில் கண்ணீரும் கையாலாகாத சோர்வும் கொந்தளிப்புமாக ஓடிச்செல்லும் ஆசாரிமார் சமூகத்தின் வாழ்க்கையின் சித்திரம் இந்நாவல்.

6. ஆங்காரம் ஏக்நாத் டிஸ்கவரி புக் பேலஸ்
தென்னகக் கிராமம் ஒன்றின் சித்தரிப்பு வழியாக ஓர் இளைஞனின் தேடலையும் தன்னைக் கண்டறியும் தருணத்தையும் சித்தரிக்கும் குறிப்பிடத்தக்க படைப்பு.

7. ஆயிரம் சந்தோஷ இலைகள் ஷங்கர் ராமசுப்ரமணியன் பரிதி பதிப்பகம்
படிமங்கள், உருவகங்கள் ஆகியவற்றை மெல்லக் கைவிட்டுவிட்டு, நுண் சித்தரிப்புகளாகவோ சிறிய தற்கூற்றுகளாகவோ தன் அழகியலை உருவாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய கவிதை யின் முகம் வெளிப்படும் முக்கியமான முழுத் தொகுப்பு.

8. மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது: குமரகுருபரன் - உயிர்மை பதிப்பகம்
கவிதைக்கு எப்போதுமிருக்கும் கட்டின்மையும் பித்தும் வெளிப்படும் வரிகள் கொண்ட நவீனப் படைப்பு.

9. ஒரு கூர்வாளின் நிழலில்: தமிழினி காலச்சுவடு பதிப்பகம்
மறைந்த விடுதலைப் புலிப் பெண் போராளி ஒருவரின் வாழ்க்கை விவரிப்பு. இதன் நேர்மையின் அனல் காரணமாகவே பெரிதும் விவாதிக்கப்பட்டது. முக்கியமான வரலாற்றுப் பதிவு.

10. சாமிநாதம் (உ.வே.சா.முன்னுரைகள்) : ப.சரவணன் - காலச்சுவடு பதிப்பகம்.
இளைய தலைமுறை தமிழறிஞர்களில் முதன்மை யானவரான ப.சரவணன் தொகுத்தளித்திருக்கும் இந்நூல், அவரது முந்தைய ஆய்வுத் தொகுப் புகளைப் போலவே வரலாற்றை அறிவதற்கான ஒரு முதன்மை வழிகாட்டி.