Aug 24, 2016

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு…


நிலத்திலும், தங்கத்திலும், வீட்டிலும், ஃபிக்ஸட் டெப்பாசிட் களிலும் மட்டுமே முதலீடு செய்துவந்த நம்மில் பலருக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் இன்றும் ஒரு புதிய முதலீடாகவே உள்ளது. பங்குச் சந்தை தற்போது நல்ல நிலையில் இருப்பதால், இனிவரும் ஆண்டுகளிலும் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட் டாளர்களின் கவனம் மியூச்சுவல் ஃபண்டுகளின் பக்கம் திரும்பியுள்ளது. இந்தத் தருணத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைக் காண்போம்.
முதலீட்டுக் காலம்!
மியூச்சுவல் ஃபண்டுகளில் பொதுவாக இரண்டுவகை உள்ளன. ஒன்று, கடன் பத்திரம் சார்ந்த முதலீடு திட்டங்கள். மற்றொன்று, பங்கு சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள். இவை இரண்டும் கலந்தவை கலப்பினத் திட்டங்கள் (hybrid) என்று அழைக்கப்படுகின்றன.
உங்கள் முதலீட்டுக் காலம் எவ்வளவு என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது தேவைப்படாத பணத்தையே பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்யுங்கள். ஏனென்றால், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில், குறுகிய காலங்களில் ஏற்ற இறக்கம் இருப்பது சகஜம். ஆகவே, சில மாதங் களுக்குள் தேவைப்படும் பணத்தை லிக்விட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளிலேயே முதலீடு செய்யுங்கள். அதேபோல, ஓரிரு வருடங் களுக்குள் தேவைப்படும் பணத்தைப் பிற கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்்குள் நுழையும்போது, உங்களின் முதலீட்டுக் கால அளவை குறிப்பாகக் கவனியுங்கள். அதைப் பொறுத்தே நீங்கள் முதலீடு செய்யப் போகும் மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு செய்யப்பட வேண்டும்.
தேவை மற்றும் வயது!
உங்கள் வயது என்ன, நீங்கள் இந்த முதலீட்டிலிருந்து வரும் வருமானத்தை நம்பி வாழ்க்கை நடத்துபவரா, எந்தத் தேவைக்காக நீங்கள் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள், நீங்கள் முதலீடு செய்யப்போகும்முன் இந்த விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். அடுத்த ஆறு மாதத்தில் நடக்கவிருக்கும் உங்கள் மகள் அல்லது மகனின் திருமணத்துக்காக வைத்திருக்கும் பணத்தை முதலீடு செய்ய உள்ளீர்கள் எனில், அதற்கேற்றாற் போல் ரிஸ்க் இல்லாத ஃபண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும். அதேபோல் 25 வருடம் கழித்து வரப்போகும் உங்கள் ஓய்வுக்காலத்துக்கு  முதலீடு செய்ய வேண்டும் எனில், அதற்கேற்றாற்போல் அதிக ரிஸ்க் உள்ள, அதேசமயத்தில் அதிக லாபத்தைத் தரக்கூடிய பங்கு சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
அதேபோல்தான் உங்களின் வயதும் ஒரு முக்கிய அங்கமாக ஃபண்டுகளைத் தேர்வு செய்வதில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். நீங்கள் இளம் வயதினர் எனில், தொடர்ந்து சம்பாதித்துக் கொண்டிருப்பீர்கள். ஆகவே, உங்களிடம் தொடர்ந்து கேஷ் ஃப்ளோவும் இருக்கும். உங்கள் தேவையும் பல ஆண்டுகள் கழித்துதான் இருக்கும். ஆகவே, நீங்கள் ஹைரிஸ்க் உடைய பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
நீங்கள் ஒரு சீனியர் சிட்டிசனாக இருந்து, உங்கள் அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணத்தை நீங்கள் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது மிகவும் குறைவான ரிஸ்க் உடைய ஃபண்டுகளில்தான் முதலீடு செய்ய வேண்டும். ஆகவே, உங்கள் தேவை மற்றும் வயதை, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்முன் கவனியுங்கள்.
எந்த ஆப்ஷன்?
ஃபண்டுகளில் இன்று பலவிதமான ஆப்ஷன்கள் உள்ளன. உதாரணத்துக்கு குரோத், டிவிடெண்ட் பேஅவுட், டிவிடெண்ட் ரீஇன்வெஸ்ட்மென்ட், போனஸ், மாதாந்திர டிவிடெண்ட், ட்ரிக்கர் (ஜிக்ஷீவீரீரீமீக்ஷீ) என பல ஆப்ஷன்கள் இன்று முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. நீங்கள் சீனியர் சிட்டிசனாக இருந்து கேஷ் ஃப்ளோ தேவைப்படுபவராக இருந்தால், டிவிடெண்ட்டை கையில் வாங்கிக் கொள்ளுங்கள். இது டிவிடெண்ட் பேஅவுட் ஆப்ஷன் என்று அழைக்கப் படுகிறது.
அதேசமயத்தில் நீங்கள் இளம் வயதினராக இருந்தால் அல்லது கேஷ் ஃப்ளோ தேவைபடாதவராக இருந்தால், நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது குரோத் ஆப்ஷன்தான். வரிச் சலுகைகளை எதிர்பார்ப்பவர்கள் போனஸ் ஆப்ஷனுக்குச் செல்வார்கள். அதேபோல் கடன் திட்டங்களில் குரோத் ஆப்ஷனில் சென்று, மூன்று வருடத்துக்குமேல் ரிடெம்ப்ஷன் செய்தால் கிடைக்கும் லாபத்துக்கு  மிகக் குறைவான வருமான வரிதான் கட்ட வேண்டி வரும். ஆகவே, எந்த ஆப்ஷன் என்பதைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.
வருமான வரியைக் கவனியுங்கள்!
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, நீங்கள் தேர்வு செய்யும் ஃபண்ட் வகையைப் பொறுத்து, உங்களின் வருமான வரி மாறுபடும். உதாரணத்துக்கு பங்கு சார்ந்த ஃபண்டு களில் முதலீடு செய்து, ஒரு வருடம் உங்களால் காத்திருக்க முடியும் எனில், வரும் லாபத்துக்கு நீங்கள் ஒரு பைசாகூட வரி கட்ட வேண்டாம். ஆனால், கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும் போது வரும் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டி வரும்.
கலப்பினத் திட்டங்கள் அவை வைத்திருக்கும் பங்கு சார்ந்த முதலீட்டு அளவைப் பொறுத்து, கடன் சார்ந்த திட்டங்களாக அல்லது பங்கு சார்ந்த திட்டங்களாகப் பாவிக்கப்படும். அதேபோல், ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் கடன் சார்ந்த திட்டங்களின் அடியில் வரும். உங்களுக்குப் பணம் உடனடியாக தேவையில்லை; மேலும், அந்த முதலீட்டை நம்பி உங்களின் தினசரி வாழ்க்கை இல்லை எனில், இந்தியாவில் இன்றைய தினத்தில் சிறந்த முதலீடு பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் தான். ஆகவே, உங்களின் தேவை மற்றும் வருமான வரிச் சலுகைகள் பற்றி அறிந்து ஃபண்ட் வகையைத் தேர்வு செய்யவும்.
ஃபண்டுகளை எவ்வாறு தேர்வு செய்வது?
நீங்கள் ஓர் ஆலோசகர் மூலம் ஃபண்டைத் தேர்வு செய்யும்போது, ஃபண்டுகளை உங்களுக்காக அவர் தேர்வு செய்வார். ஆனால், நீங்களே தேர்வு செய்யும்போது, சில அடிப்படை விஷயங்களைக் கவனிப்பது சிறந்தது. அவையாவன:
1. குறைந்தது 5 வருடங்களாவது செயல்பாட்டில் இருந்துள்ள ஃபண்ட் நிறுவனம்/ திட்டம். 2. குறைந்தபட்சம் ரூ.300 கோடி சொத்துக்களை நிர்வகித்து வரும் திட்டங்கள். 3. தொடர்ந்து அதன் வகை சார்ந்த சந்தை குறியீட்டைவிட அதிக வருமானத்தைத் தரும் திட்டங்கள். 4. நல்ல ஃபண்ட் மேனேஜர்களைக் கொண்டுள்ள திட்டங்கள்.
இதுபோல் இன்னும் சில ஃபில்ட்டர்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், ஓரிரு ஏற்ற இறக்கங்களைக் கண்ட ஃபண்டுகளைத் தேர்வு செய்வது நல்லது. இதுபோல் தேர்வு செய்த ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருவது நல்லது.
டாக்ஸ் சேவர் ஃபண்டுகள்!
உங்களுக்கு 80சி பிரிவின் கீழ் வருமான வரியில் சலுகை பெற வேண்டுமெனில் மட்டுமே டாக்ஸ் சேவர் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள். வரிச் சலுகை தேவையில்லை என்றால், ஓப்பன் எண்டட் ஃபண்டுகளிலேயே முதலீடு செய்யுங்கள். ஏனென்றால், டாக்ஸ் சேவர் ஃபண்டுகளில் 3 வருட லாக்இன் உள்ளது. ஓப்பன் எண்டட் திட்டங்களில் லாக்இன் கிடையாது. பொதுவாக, ஓர் ஆண்டுக்குள் இதிலிருந்து வெளியேறினால் 1% வெளியேற்றுக் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. தேவை இருந்தால் மட்டுமே டாக்ஸ் சேவர் ஃபண்டுகளை நாடுங்கள்.
வெளியேற்றுக் கட்டணம்!
ஃபண்டுகளில் முதலீடு செய்யும்முன் வெளியேற்றுக் கட்டணத்தையும் கவனியுங்கள். லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் திட்டங்களில் பொதுவாக வெளியேற்றுக் கட்டணம் ஏதும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். பொதுவாக, பங்கு சார்ந்த ஓப்பன் எண்டட் திட்டங்களில், ஒரு வருடத்துக்குள் வெளியேறினால் 1% வெளியேற்றுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சில திட்டங்கள் குறுகிய காலத்தில் வெளியேறுபவர்களுக்கு அதிகமாகவும் (6 மாதத்துக்குள் 2%), ஒரு வருடம் கழித்து வெளியேறுபவர்களுக்கு 1% எனவும் வைத்துள்ளன. சில திட்டங்கள் காலத்தை அதிகப்படுத்தியும் உள்ளன. அதேபோல் கடன் சார்ந்த திட்டங்களும் வெவ்வேறு விதமான வெளியேற்றுக் கட்டணத்தை வைத்துள்ளன. நீங்கள் முதலீடு செய்யப் போகும் திட்டம் எந்த விதமான கட்டணத்தை வைத்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ரிஸ்க்!
ஃபண்டுகளின் ரிஸ்க் அளவைக் கவனியுங்கள். பங்கு சார்ந்த திட்டங்கள் அதிகமான ரிஸ்க் உடையவை. அதிலும் ஸ்மால் கேப் மற்றும் துறை சார்ந்த திட்டங்கள் இன்னும் அதிக ரிஸ்க் உடையவை. அதேபோல் கடன் சார்ந்த திட்டங்களில் கில்ட் ஃபண்டுகள் அதிக ரிஸ்க் உடையவை.
இன்கம் ஃபண்டுகள் அதைவிடச் சற்று ரிஸ்க் குறைவானவை.  நீண்ட நாட்கள் ஒரு ஃபண்டை நீங்கள் வைத்திருக்கும்போது அதன் ரிஸ்க் அளவு வெகுவாகக் குறைந்துவிடுகிறது. ஆகவே, நீங்கள் முதலீடு செய்யப்போகும் முன், அந்த ஃபண்டின் ரிஸ்க் அளவைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
ஃபண்டின் செலவு விகிதம்!
இந்த செலவு ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும், ஃபண்டின் செலவு விகிதத்தின் (Expense Ratio) மேல் ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த செலவு விகிதம் இருப்பது முதலீட்டாளர் களுக்கு நல்லது. இதுபோல் பல விஷயங்களை நீங்கள் கவனித்து முதலீடு செய்யும்போது உங்களின் முதலீடு சிறப்பாகச் செயல்படும். மேலும், நீங்கள் ஆழம் தெரிந்து காலை விடுகிறபோது, ஏமாற்றமும் குறைவாக இருக்கும்.
இதுநாள் வரை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யாதவர்கள், இனியாவது முதலீட்டை செய்யத் தொடங்குங்கள்!
நன்றி-நாணயம் விகடன்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் பெஸ்ட்? பதில் தரும் 13 காரணங்கள்...


இன்றைய தேதியில் நீண்ட கால முதலீட்டை மேற்கொண்டு, வாழ்க்கையின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நினைக்கும் ஒருவருக்கு மியூச்சுவல் ஃபண்ட் என்பது மிகப் பொருத்தமாக இருக்கும்.

ஏன், வேறு முதலீட்டு வகைகள் எல்லாம் இல்லையா, அதில் முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் நமது எதிர்காலத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள முடியாதா என்று நீங்கள் கேட்கலாம்.

மற்ற எல்லா முதலீடுகளையும்விட மியூச்சுவல் ஃபண்ட்தான் பெஸ்ட் என்பதற்கு 13 காரணங்கள் உள்ளன. இந்தக் காரணங்களை நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்களும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நிச்சயம் தேர்வு செய்வீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்தக் காரணங்கள் இதோ: 

1. மிக, மிக வெளிப்படையான முதலீடு!

இன்று நீங்கள் ரூ.1 லட்சத்தை எடுத்து வங்கி டெபாசிட்டில் போடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வங்கி உங்கள் பணத்தை யாருக்கு கடனாகக் கொடுக்கிறது என்ற விவரம் உங்களுக்குத் தெரியாது. உங்களது டெபாசிட்டுக்கு, வங்கி உங்களுக்குக் கொடுக்கும் வட்டி எவ்வளவு சதவிகிதம் என்பது மட்டும்தான் தெரியும். உங்களது பணத்தை என்ன வட்டி விகிதத்துக்குக் கடன் கொடுக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.

அதுபோல், லட்சக்கணக்கான இந்தியர்கள் முதலீடு செய்யும் எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் திட்டங்களில் வசூலிக்கப்படும் பணத்தை, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் எதில், எப்படி முதலீடு செய்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் எங்கெங்கு, என்னென்ன சதவிகிதத்தில் முதலீடு செய்யப்படுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக 365 நாளும் தெரிந்துகொள்ளலாம். மேலும், கிம் (KIM – Key Information Memorandum) என்ற புத்தகத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் தங்களது ஒவ்வொரு திட்டமும் எங்கு, எவ்வாறு முதலீடு செய்யும் என்பதை விண்ணப்பப் படிவத்துடன் வெளியிடுகின்றன. அதில் கூறியுள்ளபடிதான் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் முதலீட்டினை மேற்கொள்ளும். இதில் பெரிய மாறுதல் ஏதும் இருப்பின், அனைத்து முதலீட் டாளர்களுக்கும் உடனடியாகக் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும்.

நீங்கள் வாங்கிய இடத்தின் தினசரி விலை என்னவென்று தெரிந்துகொள்ள முடியாது. ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகள் தினசரி என்ஏவியை வெளியிடுகின்றன. எனவே, மியூச்சுவல் ஃபண்டுகள்போல் மிகவும் வெளிப்படைத்தன்மை நிறைந்த வேறொரு முதலீட்டைக் காண்பது மிக மிக அரிது.

2. நிலத்தைவிட, தங்கத்தைவிட பாதுகாப்பானது!

இன்றைய தினத்தில் தங்கத்தை வாங்கி வீட்டில் வைத்திருப்பதன்மூலம் ஆபத்தை நாமே விலை தந்து வாங்குகிறோம். பெண்கள் நகையை வீதிகளில் அணிந்து செல்லக்கூட பயப்படு கிறார்கள். அவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பணம் கொடுத்து வங்கிகளில் லாக்கர் வாடகைக்கு எடுக்க வேண்டியிருக்கிறது. லாக்கரில் திருடுபோனால் அதற்கு வங்கி உத்தரவாதம் ஏதும் தராது.

இது இப்படி இருக்க, இடத்தை (Plot) வாங்கினால், அதில் யார் எப்போது ஆக்கிரமிப்பார்கள் என்பது தெரியாது. நிலத்தைக் குத்தகைக்குவிட்டாலும் சில பிரச்னைகள் வரவே செய்கிறது.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகள் மிகவும் பாதுகாப்பான முதலீடு. நீங்கள் குறிப்பிட்டுள்ள உங்கள் வங்கிக் கணக்கைத் தவிர, வேறு எந்தக் கணக்குக்கும் செல்லாது. எனவே, பாதுகாப்பு பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

3. உங்களைத் தவிர யாருக்கும் தெரியாது!

நீங்கள் பெரிய வீடு வைத்தி ருந்தால் ஊருக்கே தெரியும். தங்க நகைகளை அணிந்து கொண்டு சென்றால் ஊரார் அனைவருக்கும் தெரியும். நீங்கள் எம்பிஏ (M – Mercedes Benz; B – BMW; A – Audi) காரை ஓட்டிக் கொண்டு சென்றால், நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரர் என்று உலகத்துக்கே தெரிந்துவிடும். அதனால் நண்பர்களும் உண்டாகலாம்; எதிரிகளும் உண்டாகலாம்.

ஆனால், நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் வைத்திருக்கும் தொகை எத்தனை கோடியானாலும், நீங்கள் சொன்னால் தவிர, வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. உங்கள் முதலீடு மற்றவர்களுக்கு தெரிந்து, உங்கள் நிம்மதி பறிபோய்விடுமோ என்கிற கவலை இல்லாமல், நீங்கள் நிம்மதியாகத் தூங்கலாம்.

4. அள்ளித்தந்த ஃபண்டுகள்!

பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கடந்த காலத்தில் லாபங்களை முதலீட்டாளர்களுக்கு அள்ளித் தந்திருக்கின்றன. கடந்த காலங் களில் ஃபிக்ஸட் டெபாசிட் வருமானங்களைப் போல் 2 – 3 மடங்கு வருவாயை ஒவ்வொரு ஆண்டும் தந்துள்ளன. இனிவரும் காலங்களிலும் இது தொடர வாய்ப்புகள் அதிகம்.

கடந்த 10, 15, 20 ஆண்டுகளில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்கள் ஆண்டுக்காண்டு கூட்டுவட்டி அடிப்படையில் 20 சதவிகிதத்துக்கும் மேலான வருமானத்தைச் சுலபமாகச் சம்பாதித்துள் ளார்கள். ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்குமுன் ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் இன்று 80 லட்சத்துக்கும் மேலாக உள்ளது. இதுபோல் இனிவரும் காலத்திலும் பிற சொத்துக்களுடன் ஒப்பிடும்போது, ஓர் உயரிய வருமானத்தைத் தர வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அந்த அளவுக்கு முக்கியமான விஷயமாக உள்ளது.

5. பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம்!

நாம் செய்யும் எந்த முதலீடாக இருந்தாலும், அது பணவீக்கத்தைத் தாண்டி வருமானம் தர வேண்டும். உதாரணத்துக்கு, பணவீக்கம் 7% என்றால், நமது முதலீட்டின் வருமானம் அதைவிட சில சதவிகிதங்கள் அதிகமாக இருக்க வேண்டும்.

ஆனால், நம் நாட்டில், ஒரு சில ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களே பணவீக்கத்தைவிட ஒன்றிரண்டு சதவிகிதம் அதிக வருமானம் தருகிறது. தங்கமோ, மிக நீண்ட காலத்தில் மட்டுமே, பணவீக்கத்தை ஒட்டிய வருமானத்தைத் தருவதாக இருக்கிறது. ஆக, எளிதில் காசாக்கக்கூடிய முதலீட்டு வகைகளில் பணவீக்கத்தைப்போல் இரண்டு, மூன்று மடங்கு வருமானத்தைத் தரவல்லது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் மட்டும்தான்!

6. சிறு துளி; பெரு வெள்ளம்!

நீங்கள் இன்று ஒரு இடத்தையோ அல்லது வீட்டையோ வாங்கச் சென்றீர்களேயானால், உங்களிடம் நிறைய பணம் தயாராக இருக்க வேண்டும். அல்லது வங்கியில் கடன் பெற்று வாங்க வேண்டும்.

நீங்கள் ஒரு தொழில் ஆரம்பிக்கிறீர்கள் என்றால், அதற்காக பல காலம் பணத்தைச் சேர்த்து வைத்திருக்க வேண்டும். அல்லது கடன் வாங்கித் தொழிலை ஆரம்பிக்க வேண்டும். ஆக, நல்ல வருமானம் தரும் முதலீடுகளுக்கு நீங்கள் மொத்தமாகத் தொகையை வைத்திருந்தால்தான் முதலீடு செய்ய முடியும்.

ஆனால், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு ஒரு பெருந்தொகையைத் திரட்டிக்கொண்டுதான் முதலீடு செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. மாதத்துக்கு ரூ.250-லிருந்து உங்களது முதலீட்டை ஆரம்பிக்கலாம். அதீத வளர்ச்சியுள்ள ஒரு முதலீட்டு வாய்ப்பில் பங்கேற்பதற்கு, இதைவிடக் குறைவான அளவில் வேறு எந்தச் சொத்திலும் ஒருவர் முதலீடு செய்ய முடியாது. ஒவ்வொரு மாதமும் 4,000 ரூபாயை அடுத்த 25 வருடங்களில் வருடத்துக்கு 15% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒருவரால் முதலீடு செய்ய முடியும் எனில், 25 ஆண்டு களுக்குப் பின் அவர் ஒரு கோடீஸ்வரர்!

7. பரவலாக்கம் தரும் ஒரே முதலீடு!

நீங்கள் ரியல் எஸ்டேட்டில் உங்களது முதலீட்டை பரவலாக்க வேண்டும் எனில், ஒவ்வொரு ஊரிலும் சொத்து வாங்க வேண்டும். உங்களது தொழிலில் ரிஸ்க்கை குறைக்க வேண்டுமானால், வெவ்வேறு விதமான தொழில்களை ஆரம்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் பல நாடுகளில் உங்களது தொழிலை நிறுவ வேண்டும். பங்குச் சந்தையில் நீங்கள் முதலீடு செய்தீர்களென்றால், உங்களது முதலீட்டை பரவலாக்க சில ஆயிரம் அல்லது சில லட்சம் ரூபாயாவது வேண்டும்.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தீர்களேயானால், அது இந்தியாவில் உள்ள பல துறைகளைச் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப் படுகிறது. இதன்மூலம் உங்கள் முதலீட்டின் ரிஸ்க் வெகுவாகக் குறைக்கப்படுகிறது. கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கும் இதுவே பொருந்தும்.

8. செபியின் கடும் சட்டதிட்டங்கள்!

இன்று இந்தியாவில் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம்புரளும் ரியல் எஸ்டேட் துறைக்கு இதுவரை ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு வாரியம் கிடையாது. ஆனால், இந்தத் துறையில்தான் நம்மவர்கள் அதிகம் முதலீடு செய்து வருகிறார்கள். பல லட்சங்கள் கொடுத்து வாங்கிய அடுக்குமாடிக் குடியிருப்பின் கட்டட புரமோட்டர் சொன்னபடி, கட்டித்தரவில்லை எனில், நீங்கள் யாரிடம் சென்று புகார் செய்வீர்கள்? அவர்கள் கொடுக்கும் விற்பனை கையேட்டில், அவர்களைப் பற்றிய புகார் இருந்தால், யாரிடம் முறையிட வேண்டும் என்பது தெரியாது.

நீங்கள் வாங்கும் தங்க ஆபரணத்தில், அதிருப்தி இருப்பின் யாரிடம் சென்று முறையிட வேண்டும் என்று கடைக்காரர் தரும் ரசீதில் அச்சிடப்பட்டுள்ளதா? ஆனால், நீங்கள் மாதம் ரூ.250 முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் கையேட்டில், யாரிடம் புகார் செய்ய வேண்டும் என்பது அச்சிடப்பட் டிருக்கும். அவ்வாறு அவரும் செவி சாய்க்கவில்லை எனில், நீங்கள் செபியிடம் புகார் செய்யலாம். ஆகவே, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், கடும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வருவது, முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்புப் பாதுகாப்பு ஆகும்.

9. குறைவான செலவு, புரொஃபஷனல் நிர்வாகம்!

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், தலைசிறந்த கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் இருந்து வெளிவரும் திறமையான மாணவர்களையே வேலைக்கு எடுக்கின்றன. அவ்வாறு உருவாக்கப்படும் திறமையான அனலிஸ்ட்டுகள் மற்றும் ஃபண்ட் மேனேஜர்களைக் கொண்டு, தங்களது திட்டங்களை நிர்வாகம் செய்கின்றன.

பல இடங்களில் பணம் அதிகம் முதலீடு செய்பவர் களுக்கென்று தனிக் கவனிப்பு இருக்கும். ஆனால், இங்கோ நீங்கள் ரூ.5,000 முதலீடு செய்தாலும் சரி, ரூ.500 கோடி முதலீடு செய்தாலும் சரி, இருவருக்குமே ஒரே மேனேஜ்மென்ட் டீம்தான்.

10. முதலீடு செய்வது எளிமை!

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது, பல முதலீடுகளைத் தொடங்குவதைக் காட்டிலும் மிகவும் எளிமையானது. ஒரே ஒருமுறை கேஒய்சி (KYC – Know Your Customer) படிவத்தைப் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும். அது இந்தியாவில் உள்ள அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கும் சென்றடைந்துவிடும். அவ்வாறு கொடுக்கும் போது உங்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுக்கான நகல்களைக் கொடுக்க வேண்டும்.

பிறகு உங்களிடம் வங்கி சேமிப்புக் கணக்கு காசோலையுடன் இருக்க வேண்டும். அவ்வளவுதான், நீங்கள் முதலீடு செய்யத் தயார். விண்ணப்பப் படிவத்துடன் ஒரு காசோலையை வைத்துக் கொடுத்துவிட்டால், யூனிட்டுகள் அன்றைய விலையில் வாங்கப்பட்டு விடும்.

11. தேவைக்கேற்ப சாய்ஸ்கள்!

நீங்கள் நமது மத்திய அரசாங்க பாண்டுகளில் முதலீடு செய்ய வேண்டுமா, அமெரிக்காவில், ஜப்பானில், ஐரோப்பாவில், சீனாவில் முதலீடு செய்ய வேண்டுமா, இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் அல்லது பொதுத்துறை வங்கிகளின் பாண்டுகளில் முதலீடு செய்ய வேண்டுமா, இந்தியாவின் வங்கித் துறையில் அல்லது மருந்துத் துறையில் அல்லது இன்ஃப்ரா துறையில் முதலீடு செய்ய வேண்டுமா,

தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா, மிகக் குறுகிய காலத்துக்கு ரிஸ்க் இல்லாமல் வங்கிகளைவிட அதிக வட்டியில் முதலீடு செய்ய வேண்டுமா, நீண்ட காலத்துக்கு ரிஸ்க்குடன் கூடிய அதிக வருமானத்தில், வருமான வரி இல்லாமல் முதலீடு செய்ய வேண்டுமா? உங்களின் ஒவ்வொரு எண்ணத்துக்கும் முதலீட்டு வாய்ப்புக்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் உண்டு.

12. தேவைப்படும்போது பணம்!

நிலத்தையோ அல்லது வீட்டையோ நீங்கள் நினைத்த நேரத்தில் விற்க முடியாது. தங்கத்தை விற்கப்போனால், சந்தை விலை ஒன்றாக இருக்கும்; கடைக்காரர் வேறொரு விலைக்குக் கேட்பார். இந்த இரண்டு சொத்துக்களையும், வேண்டிய போதெல்லாம் பிரித்து சிறிது சிறிதாக விற்க முடியாது.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளில் திட்டத்தைப் பொறுத்து ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்துக்குள்ளோ பணம் உங்களுக்குக் கிடைத்துவிடும். தேவைப்படுகிற அளவு நீங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அது ரூ.5,000-ஆக இருந்தாலும் சரி, ரூ.50 லட்சமாக இருந்தாலும் சரி.

13. வருமான வரி இல்லை!

பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு, ஒரு வருடத்துக்குமேல் வைத்திருக்கை யில் வருமான வரி ஏதும் இல்லை; கடன் சார்ந்த திட்டங்களுக்கு, மூன்று வருடங்களுக்குமேல் வைத்திருக்கையில் மிகவும் குறைவான வருமான வரி கட்டினால் போதும். ஆனால், ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்பட எல்லா முதலீடுகளுக்கும் வருமான வரி கட்டியாக வேண்டும்.

கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் உங்கள் முதலீடு மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருக்கையில், பணவீக்கத்துக்கு அட்ஜஸ்ட் செய்தபிறகு இருக்கும் லாபத்துக்கு வரி கட்டினால் போதுமானது. அவ்வாறு கட்டும் வரியின் சத விகிதம் மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்.
இதுவே, நீங்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்யும்போது, வரும் வட்டிக்கு உங்கள் வருமான வரம்பில் உள்ள சதவிகிதத்தில் நீங்கள் வரிச் செலுத்த வேண்டும்.

மேலும், கடன் சார்ந்த திட்டங்களில் நீங்கள் பணத்தை வெளியில் எடுக்கும் ஆண்டில்தான் வரித் தாக்கலுக்குக் கொண்டு வரவேண்டும். ஆனால், ஃபிக்ஸட் டெபாசிட்டில் வட்டி உங்கள் கைக்குக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நீங்கள் வரிச் செலுத்த வேண்டும்.

இத்தனை பாசிட்டிவ் அம்சங்கள் நிறைந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நீங்கள் முதலீடு செய்ய ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை என்பது மட்டும் நிச்சயம்!

நன்றி:நாணயவிகடன்

முதல் செலவு: அஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள்

எளிமைதான் எத்தனை வசீகரமானது. முதலீட்டுத் திட்டங்கள் என்று வரும் போது வங்கிகளில் சென்று வாங்கும் வைப்பு நிதிகளைப் போல ஒரு எளிமையான சாதனம் எதுவும் இல்லை. இந்த எளிமையின் ஆதாரம் என்ன? ஒரு முதலீட்டாளர் எந்த ஒரு சிக்கலான தேர்வும் செய்யத் தேவையில்லை. கத்திரிக்காய் கிலோ என்ன விலை என்பது போல, இத்தனை மாதங்களுக்கு எத்தனை வட்டி என்று விசாரித்து விட்டு, பணத்தைக் கொடுத்து பத்திரத்தை வாங்கிக் கொண்டு பத்திரமாய் வீட்டுக்குத் திரும்பி விடலாம்.

திட்டங்கள் ஏராளம்

ரிஸ்க் சார்ந்த முதலீட்டுச் சாதனங் களில் அந்த எளிமை இல்லைதான். ஆனால், அதற்கு ஈடாக லாப சாத்தியம் அதிகம், குறிப்பாக நீண்ட கால திட்டங்களில். இதனால்தான் அவற்றை ஆலோசகர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு சரி என்று முன் வருபவர்களுக்கும் எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்ற தேர்வு சற்று மலைக்கத்தான் வைக்கிறது. சந்தையில் இருக்கும் சுமார் ஆயிரம் திட்டங்களில் நல்லவை எவை?

சென்ற வாரத்தில் ஆரம்ப கால நிர்ணயத்தோடு கூடிய நிதித்திட்டத்தை உருவாக்கி அதில் எவ்வளவு முதலீடு செய்வது (மாதாந் திர அளவில்) என்பதை பார்த்தோம். இன்று அந்த மாதாந்திர முதலீட்டினை எந்த திட்டங் களில் முதலீடு செய்வது என்பதைக் காண்போம்.

ஐந்து திட்டங்கள்

நான் இன்று பரிந்துரைக்கப் போகும் ஐந்து திட்டங்கள் நல்ல, சிறப்பான திட்டங்கள். இவற்றை நிறைய கணித ஆய்வுகளுக்குப் பின்னரும், இவற்றின் பல வருடத்திய செயல்பாடுகளை கூர்ந்து நோக்கிய பின்னும் தேர்வு செய்திருக்கிறோம். இருப்பினும் இவற்றையே பரஸ்பர நிதிச் சந்தையின் ஆகச் சிறந்த திட்டங்கள் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட திட்டங்கள்தாம் நமக்குத் தேவை என்ற அவசியமும் இல்லை. நான் இந்தக் கட்டுரையில் விளக்கும் விதத்தில் இத்திட்டங்களில் உங்கள் முதலீடுகளைத் துவங்கி விட்டு, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்து வந்தால் போதுமானது.

டாடா பேலன்ஸ்டு திட்டம்

முதல் திட்டம் டாடா பரஸ்பர நிதி நிறுவனத்திடம் அளிக்கும் டாடா பேலன்ஸ்டு திட்டம். இதை ஒரு பல்கலைத் திட்டம் என்று சொல்லலாம். இத்திட்டம் பங்குச் சந்தையில் முக்கால் பங்கும், கடன் சந்தையில் கால் பங்கும் முதலீடு செய்யும் திட்டம்.

நீண்டகால அடிப்படையில் பங்குச் சந்தை முதலீடுகளே அதிக லாபம் தரும் என்றாலும் கூட, அதில் முக்கால் பங்கே முதலீடு செய்யும் இந்தத் திட்டம், முழு பங்குச் சந்தைத் திட்டங்களுக்கு நிகராக லாபம் கொடுத்திருக்கிறது. அதாவது, குறைவான ரிஸ்க் எடுத்தும் கூட, நிறைவான லாபம் கொடுத்திருக்கும் திட்டம்.

சுமார் பத்தொன்பது ஆண்டு களுக்கு மேலாக செயல்பட்டு வரும் இத்திட்டம் இத்தகைய கலப்புத் திட்டங்களிடையே முதன்மையானது என்று சொல்லலாம். அது போல மற்றும் ரகுபதி ஆச்சார்யா ஆகியோர் இத்திட்டத்தின் நிர்வாகிகள்.

யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ்

2-வது திட்டம் யூடிஐ நிறுவனத்திட மிருந்து வரும் யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் என்ற திட்டம். இது ஒரு முழுமையான பங்குச் சந்தைத் திட்டம். அனூப் பாஸ்கர் என்ற தேர்ந்த நிபுணரால் பராமரிக்கப்படும் இந்த பத்து வருடப் பாரம்பரியத் திட்டத்தில், பெரும் நிறுவனங்களில் அதிகம் முதலீடுகள் செய்யப்படுகின்றன.
இந்தியப் பொருளாதாரத்தை மேலிருந்து நோக்கி எத்தகைய துறைகள் மேல் நோக்கி இருக்கின்றன என்று கண்டறிந்து அத்துறைகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதே இந்தத் திட்டத்தின் சிறப்பு. பெரிய நிறுவனங்களில் அதிகம் முதலீடு செய்வதால், திட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் சற்று குறைவாக இருக்கும்.

ப்ரைமா ப்ளஸ் திட்டம்

3-வது திட்டம் ஃப்ராங்க்ளின் இந்தியா நிறுவனத்தின் ப்ரைமா ப்ளஸ் திட்டம். ஃப்பராங்க்ளின் பரஸ்பர நிதித் திட்டங்கள் இந்திய தனியார் திட்டங்களில் மிகவும் பழமையானவை. நீண்டு நிலைத்து முதலீட்டாளர்களிடம் நற்பெயர் பெற்றவை.
இந்த ப்ரைமா ப்ளஸ் திட்டம் ஆனந்த் ராதாகிருஷ்ணன் மற்றும் ஜானகிராமன் ஆகியோரால் சென்னையில் நிர்வகிக்கப்படும் திட்டம். இந்திய நிதித் திட்டங்களில் மிகச் சில திட்டங்களே இருபது வருடங்களுக்கு மேலான பாரம்பரியம் உள்ளவை. அவற்றில் இந்தத் திட்டமும் ஒன்று. சந்தை மேலே செல்லும் போது நல்ல லாபமும், கீழிறக்கத்தில் குறைவான நஷ்டமும் தந்து வந்திருக்கிறது.

ஐசிஐசிஐ வால்யூ டிஸ்கவரி

4-வது திட்டம், ஒரு சிறு நிறுவனங் களில் முதலீடு செய்யும் திட்டம். ஐசிஐசிஐ நிதி நிறுவனம் வழங்கும் ஐசிஐசிஐ வால்யூ டிஸ்கவரி என்ற இந்தத் திட்டம், நல்ல சிறிய நிறுவனங்களை அடையாளம் கண்டு முதலீடு செய்வதில் மிகவும் தேர்ச்சி பெற்ற திட்டம். சங்கர் நாராயணன் என்பவர் நிர்வகிக்கும் இந்தத் திட்டத்தில் ரிஸ்க் கொஞ்சம் அதிகம் என்றாலும், அதற்கேற்ற லாபத்தையும் தந்திருக்கிறது.

டைனமிக் பாண்ட்

5-வது திட்டம், பிர்லா சன்லைஃப் நிறுவனம் வழங்குவது. டைனமிக் பாண்ட் என்ற இந்தத் திட்டம் முழுக்க முழுக்க கடன் சந்தை சார்ந்த திட்டம். காலத்திற்கேற்ப எந்த மாதிரியான கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் நல்லது என்று பார்த்து முதலீடு செய்யும் இந்தத் திட்டத்தினை மனீஷ் டாங்கி என்பவர் நிர்வகிக்கிறார்.

இந்தத் திட்டத்தில் ரிஸ்க் குறைவு, லாப சாத்தியமும் குறைவு. ஆனால், மற்ற திட்டங்களுக்கு ஒரு தேர்ந்த துணைத்திட்டமாக இது அமையும். ஆக, இவை நீங்கள் முதலீடு செய்வதற்கு உகந்த ஐந்து திட்டங்கள். இவை ஐந்திலும் முதலீடு செய்ய வேண்டுமா என்றால், இல்லை. உங்கள் மாதாந்திர சேமிப்புத் தொகையைப் பொறுத்து இவற்றுள் உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு செய்யலாம்.

அதற்காகத்தான் இவற்றை ஒரு வரிசையில் பட்டியலிட்டிருக்கிறேன். உங்களால் மாதம் ஒரு ஆயிரம் ரூபாய் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்றால், நீங்கள் முதல் திட்டமான டாடா பேலன்ஸ்டு ஃபண்டில் மட்டும் செய்யுங்கள்.
அதிகப்படியான ஒவ்வொரு ஆயிரத்திற்கும் இதே வரிசையில் ஒவ்வொரு திட்டத்தினை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஐயாயிரத்துக்கு மேல் முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் தொகையை ஐந்தால் வகுத்து ஒவ்வொரு திட்டத்திலும் முதலீடு செய்யுங்கள்.

அவ்வளவு ஒன்றும் கடினமாக இல்லை, அல்லவா? இதுவும் சற்றேனும் எளிமையாகத் தானே இருக்கிறது?

மியூச்சுவல் ஃபண்ட் - எளிய மனிதர்களுக்கான எளிய திட்டம்

ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒவ்வொரு வகையான ரிஸ்க் (நிச்சயமற்ற தன்மையின் விளைவுகளை எதிர்கொள்வது) இருக்கிறது. அதில் முதலீடு செய்யப்படும் அனைவருக்கும் ஒரே ரிஸ்க் தான். உதாரணத்துக்கு வைப்பு நிதியில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அதில் கிடைக்கும் லாபம் அனைவருக்கும் ஒன்றுதான். அதே போல எதாவது ரிஸ்க் என்றாலும் அனைவருக்கும் ஒன்றுதான். இதே போலத்தான், பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் என பல வகையான முதலீடுகள் இருந்தாலும் அதில் இருக்கும் ரிஸ்க்கின் அளவு கிட்டத்தட்ட அனைவருக்கும் சமமாகதான் இருக்கும். ஆனால் உங்களின் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு ஏற்ப முதலீட்டு திட்டங்கள் இருப்பது மியூச்சுவல் ஃபண்டில்தான்.

ரிஸ்கே எடுக்க வேண்டாம், குறைந்த வருமானம் போதும் என்று நீங்கள் நினைத்தாலும் அதற்கேற்ற முதலீட்டுத்திட்டங்கள் இருக்கின்றன. ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் பட்சத்தில் அதற்கேற்ற முதலீட்டு வாய்ப்புகள் இருக்கிறது. அதிக ரிஸ்க், மிக அதிக ரிஸ்க் என, உங்களின் ரிஸ்க் அளவிற்கு ஏற்றதுபோல இங்கு முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், வெளிநாட்டில் வர்த்தகமாகும் சொத்துகள்/பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலும் கூட மியூச்சுவல் ஃபண்ட்களில் வழி இருக்கிறது. இதைத் தாண்டியும் மியூச்சுவல் ஃபண்ட்கள் பல வழிகளில் சாதாரண மக்களின் முதலீட்டுக்கு ஏற்றதாகவே இருக்கிறது.

முதலீட்டு முறை:

ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை மற்றும் தங்கம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பெரிய முதலீடு தேவைப்படும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய மாதம் 500 ரூபாய் கூட போதும். (சில ஃபண்ட்களில் மாதம் 100 ரூபாய் கூட முதலீடு செய்யலாம்). உங்கள் வசதிக்கு ஏற்ற தேதியில் இ.சி.எஸ். கொடுத்துவிட்டால் போதும், தானாக முதலீடு செய்யப்பட்டுவிடும். இதற்கு ’’சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்”(எஸ்.ஐ.பி.) என்று சொல்லுவார்கள். அதேபோல சில வருடங்களுக்கு முதலீடு செய்தபிறகு, முதலீடு செய்த தொகையை ஒவ்வொரு மாதமும் திரும்ப வாங்கிக்கொள்ளலாம்.

குறைந்த ரிஸ்க் அதிக வருமானம்!

வங்கி வைப்புத்தொகையில் முதலீடு செய்யும் போது 9 சதவிகிதம் வருமானம் கிடைக்கும். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இன்னும் அதிகமான வருமானம் கிடைக்கும். ஆனால் பங்குச்சந்தை அதிக லாபம் வர வாய்ப்பு இருக்கிற அதே சமயத்தில் அதிக நஷ்டமும் வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய கொஞ்சம் அதிக பணம் தேவை. அப்படியே கொஞ்சம் பணம் இருந்தாலும் அந்த பணத்தை ஒரு பங்குகளிலோ அல்லது இரண்டு பங்குகளிலோதான் முதலீடு செய்ய முடியும். இது ரிஸ்க்கான விளையாட்டு. இதில் ஒரு பங்கு சரிவடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் இந்த ரிஸ்க் கிடையாது. ஒரு ஃபண்டில் திரட்டப்படும் தொகையை சுமார் 50 பங்குகளில் முதலீடு செய்வார்கள். இதனால் ஒரு சில பங்களில் நஷ்டத்தை கொடுத்தாலும் பெரிய சரிவு வர வாய்ப்பு இல்லை. கடந்த ஐந்தாண்டுகளைப் பார்க்கும் போது சில ஃபண்ட்கள் அபரிமிதமான வருமானத்தை கொடுத்திருந்தாலும், 12 சதவிகித வருமானத்துக்கு மேலே கொடுத்திருக்கும் ஃபண்ட்கள் சந்தையில் நிறையவே இருக்கின்றன. (அதற்கான இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு எந்தவிதமான உத்தரவாத வருமானமும் கிடையாது என்பதையும் தெரிந்துக்கொள்ள வேண்டும்)

வரிச்சலுகை

மாதச் சம்பளக்காரர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று வரி கட்டுவது. குறிப்பாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அவர்களின்பாடு திண்டாட்டம்தான். வரி சேமிப்புக்கு என்றே தனியாக மியூச்சுவல் ஃபண்ட்கள் இருக்கின்றன. 80சி பிரிவின் கீழ் ஒரு நிதிஆண்டுக்கு அதிகபட்சம் 1லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யமுடியும். (புதிய நேரடி வரிவிதிப்பு முறை வரும் போது இந்த திட்டம் இருக்காது என்று சொல்லப்படுகிறது, ஆனால் இன்னும் அந்த சட்டம் அமல்படுத்தபடவில்லை)இந்த முதலீட்டினை மூன்று வருடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். சந்தையில் இருக்கும் மற்ற வரி சேமிப்பு முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும் போது இந்த காலம் மிக குறைவு.

விரைவில் பணம்!

இதில் முதலீடு செய்யப்படும் தொகையை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். (சில திட்டங்களுக்கு ’’லாக் இன்” காலம் இருக்கிறது, அது முடிந்த பிறகு எப்போது வேண்டுமானாலும்) இதற்கான விண்ணப்பத்தை கொடுத்த இரண்டு வேலை நாட்களில் பணம் கிடைத்துவிடும்.
சேமிப்பை பற்றி கொஞ்சம் யோசிக்கலாமே!

Mutual Funds

http://www.noolulagam.com/product/?pid=242

http://www.charteredclub.com/debt-mutual-funds-vs-equity-mutual-funds/

http://tamil.thehindu.com/business/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8275000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/article7243587.ece

http://tamil.thehindu.com/business/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-8-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article9014386.ece

http://tamil.thehindu.com/business/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article8988398.ece

http://tamil.thehindu.com/business/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/article8955458.ece

http://www.eegarai.net/t117122-13

https://senthilvayal.com/2014/08/14/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80/

http://athikalaisooriyan.blogspot.in/2012/09/blog-post_4900.html

http://www.vikatan.com/personalfinance/index.php?cid=38

Aug 15, 2016

புதிய கல்விக் கொள்கை: ஓர் அறிமுகம்

ஆயிஷா இரா.நடராஜன்

நம் கல்வி... நம் உரிமை!


ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள் வெளியாகவிருக்கின்றன. இன்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கி நவீன இந்தியாவில் முன்வைக்கப்பட்ட கல்விக் கொள்கைகள், அவற்றின் நோக்கங்கள், தாக்கங்களின் வரலாற்றுப் பின்னணியில் புதிய கல்விக் கொள்கையின் சுருக்கமான அறிமுகம்.

புதிய கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கை எனும் பெயரில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 43 பக்கக் கொள்கைப் பிரகடனம், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது. பலரும் சுட்டிக்காட்டும் சம்ஸ்கிருதத் திணிப்பு என்பதையும் தாண்டி, பல்வேறு அபாயங்களை மோடி அரசின் கல்விக் கொள்கை கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை அலசும் முன்னர், இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட முக்கியமான கல்விக் குழுக்களைப் பார்த்துவிடலாம்.

மெக்காலேவுக்கு முன்னும் பின்னும்

1813-ல் முதன்முறையாக இந்திய மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பைத் தனது பணியாக ஏற்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. கல்வி சாசனம் எனும் ஆவணத்தையும் வெளியிட்டது. அதற்காக அன்று உடனடியாக ரூ. 1 லட்சம் ஒதுக்கப்பட்டதும், அது கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டதும் வரலாறு. ஆங்கிலக் கல்வியே தனது கல்வி என இந்த ஆவணம் பகிரங்கமாக அறிவித்தது. கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்க்க, இந்திய மக்களுக்குச் சாதி, மதம் உள்ளிட்ட தகுதி தேவையில்லை. பிரிட்டிஷ் கல்வி நிறுவனக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும் என அதன் இரண்டாம் ஷரத்து குறிப்பிடுகிறது.

1834-ல் மெக்காலே இந்தியா வந்தார். அவருடன் ஆலோசனை நடத்திய கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு, இந்தியக் கல்விக்கு - பொதுக் கற்பித்தல் முறை எனப் பெயரிட்டு, அவரையே அதன் தலைவராக்கினார். எண்ணத்திலும் அறிவாற்றலிலும் கலாச்சாரத்திலும் ஆங்கிலேயராகவும் ஆனால், ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் இருக்கும் ஒருவரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என அறிவித்த மெக்காலே, 267 பக்கம் கொண்ட கல்விக் கருத்துருவை அரசுக்குச் சமர்ப்பித்தார்.

ஆங்கிலக் கல்வியை முழுதும் வேலையாள் தகுதி பெறும் கல்வியாக மாற்றினார். பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதைக்கூடத் தடை செய்தார். “வியாபார, நிர்வாக மொழியாய் ஆங்கிலம்; அதற்காக பிரிட்டிஷ் அரசுக்குத் தேவைப்படும் லட்சக்கணக்கான - கணக்காளர், எழுத்தர் வேலைக்கான கல்வி ஆகியவை போதுமானவை. பெரிய மேதாவிகள், தத்துவ அறிஞர்கள் எல்லாம் நமக்கு எதற்கு?” என அவர் பகிரங்கமாக அறிவித்தார். 1835-ல் வில்லியம் பெண்டிங் பிரபு, மெக்காலே குறிப்புகளை ஏற்று முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டார். பிற்காலத்தில், ‘வேலை… கும்பேனி அரசு வேலை, தனியார் ஆலை வேலை எனும் ஈர்ப்பே கல்வியின் அடிநாதமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி தரும் சான்றிதழ், வேலை பெறும் ஒரு அடையாளச் சீட்டாகப் பயனாகிறது’ என்று காந்தி விமர்சித்தது குறிப்பிடத் தக்கது.

1853-ல் இங்கிலாந்தின் கல்விக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் தலைவராக இருந்த சார்லஸ் வுட் தலைமையில் ஒரு கல்விக் குழு இந்தியா வந்தது. 1854-ல் கர்சன் பிரபுவின் காலத்தில் இதன் அறிக்கை முன்வைக்கப்பட்டது. நமது கல்வி முறையில் இருக்கும் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு என்பதெல்லாம் இக்குழுவின் கைங்கர்யம்தான். பள்ளிக்கான சீருடை, ஒரு பாடமாகப் பிராந்திய மொழி போன்றவற்றை 1882-ல் வில்லியம் ஹண்டர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய கல்வி கமிஷன் கொண்டுவந்தது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு

நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே, பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை ஆராய, அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக் குழுவை நியமித்தார் பிரதமர் நேரு. பிரதான பிரச்சினை பல்கலைக்கழகக் கல்வியல்ல; அனைவருக்குமான ஆரம்பக் கல்விதான் என அம்பேத்கர், மேகநாத் சாஹா, அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் அப்போதே கருத்துத் தெரிவித்தனர். ஆனால், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவைத் தோற்றுவித்தது உட்பட, உயர் கல்வியை நிறுவனமயமாக்கி, தனியார் கல்லூரிகளை உள்ளூர்க் குழுமங்கள் உருவாக்கி, மானியக் குழுவிடம் பண உதவிபெறலாம் என்றெல்லாம் முன்மொழிந்தது டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்விக் குழு.

டாக்டர் லட்சுமணசாமி குழு

1952-ல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு கல்விக் குழு அமைக்கப்பட்டது. இதில் தந்தை பெரியார், ஜி.டி.நாயுடு உட்பட பலர் நேரில் ஆஜராகி, கல்வி குறித்து விவாதித்தனர். பெண் கல்வி மேம்பட பெண்களுக்கான கல்வி நிலையங்களைத் தொடங்குதல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளைப் பயிற்று மொழியாக்குதல் என இரண்டு முக்கிய மாற்றங்களை இக்குழு முன் மொழிந்தது.

கோத்தாரி கல்விக் குழு

டாக்டர் டி.எஸ்.கோத்தாரி தலைமையில் நேரு உருவாக்கிய இந்தக் குழுவின் அமைப்பே வித்தியாசமாக இருந்தது. பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். 1964 அக்டோபர் 2-ல் தனது பணியைத் தொடங்கிய இக்குழு, 9,000 பேரிடம் கருத்தறிந்து, 2,400 பக்க அறிக்கையை 1966-ல் வழங்கியது. இந்தியக் கல்விக் குழுக்களிலேயே நமது மண்ணின் ஆதாரக் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக முன்வைத்தது கோத்தாரி கல்விக் குழுதான்.

அரசு தனது ஒட்டுமொத்த உற்பத்தியில் 6%ஐக் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என அக்குழு பரிந்துரை செய்தது (தற்போது மோடி அரசு கல்விக்கு ஒதுக்கியிருப்பது 3.47% மட்டுமே). பொதுப் பள்ளிகளை அக்குழுதான் அறிமுகம் செய்தது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி, 2 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி, 3 கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என கல்விச் சாலைகளைக் கட்டமைத்தது. தறிப் பயிற்சி, தோட்டக் கலை, குடிமைப் பயிற்சி ஆகியவற்றை அறிமுகம் செய்தது. விளையாட்டு, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இக்குழுவின் சாதனைகள். இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளை அரசுகள் முழுமையாக அமல்படுத்தவில்லை.

ராஜீவின் புதிய கல்விக் கொள்கை

1986-ல் புதிய கல்விக் கொள்கை எனும் பெயரில் கல்வியில் மாற்றங்களை அறிவித்தது ராஜீவ் அரசு. பெருநிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக்குப் பணியாளர்களை வழங்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது அது. தொழில் கல்வியே அதன் பிரதானம். முன்பு பிரிட்டிஷ்காரர்களுக்குக் கணக்காளர்களை உருவாக்கிய மெக்காலே கல்வி போலவே இந்தப் புதிய கொள்கை செயல்பட்டது. மதிப்பெண்களைத் துரத்தும் மனப்பாடக் கல்விக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. ஆங்கிலமே வேலைவாய்ப்பைத் தர முடியும் என்பதால், பட்டிதொட்டிகளில் எல்லாம் நர்சரிப் பள்ளிகள் முளைத்தன. பில்கேட்ஸின் பணியாட்களை உருவாக்க வடிவமைக்கப்பட்ட கல்விக் கொள்கை என்று கல்வியாளர்கள் இதை விமர்சிக்கிறார்கள்.

யஷ்பால் கல்விக் குழு

உலகம் முழுதும் கல்வி எனும் பெயரில் குழந்தைகள் வதைபடுவதைக் கடுமையாக விமர்சித்த யுனிசெஃப், யுனெஸ்கோ போன்ற ஐநா சபையின் குழந்தைகள் நல அமைப்புகள், கற்றலைச் சுமையற்றதாக்கவும் இனிமையாக் கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி நாடுகளை அழைத்தன.

சாதி, சமய, வர்க்க வேறுபாடுகள் இன்றி, ஒரே மாதிரிக் கல்வி எனும் நிர்ப்பந்தம் வந்தபோது 2009-ல் அமைக்கப்பட்டதுதான் பேராசிரியர் யஷ்பால் தலைமையிலான கல்விக் குழு. தேர்வுகளுக்குப் பதிலாக, மாற்றுக் கல்வித் தொடர் மற்றும் முழுமை மதிப்பீட்டை (சி.சி.இ.) இக்குழு அறிமுகம் செய்தது. எட்டாம் வகுப்பு வரை தொடர் தேர்ச்சி என்பதை இக்குழு கொண்டுவந்தது. இன்று பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் 100 குழந்தைகளில் 76 பேரை எட்டாம் வகுப்பில் நம்மால் தக்கவைக்க முடிந்துள்ளது.

மோடி முன்வைக்கும் கல்விக் கொள்கை

இந்தச் சூழலில்தான் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடும் புதிய கல்விக் கொள்கை, பல்வேறு அச்சங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்காலே - ராஜீவ் கல்விக் கொள்கைகளை நினைவுபடுத்தும் இக்கொள்கை, அடுத்த 20 ஆண்டுகளில் கல்வி என்னவாகும் எனும் பெருங்கவலையையும் ஏற்படுத்துகிறது. வேதகாலக் கல்வியே புனிதமானது என்றெல்லாம் சொல்வதைவிடவும், இதற்கு முன்பு யஷ்பால் குழு என்று ஒன்று இருந்ததையோ அது சுமையற்ற கற்றல் முதல், குழந்தைகள் உரிமைகளை, ஆசிரியர்களின் கடமையை உருவாக்கியதையோ கணக்கில் எடுக்கவில்லை என்பதுதான் பெரும் அதிர்ச்சி. எந்த ஒரு கல்விக் கொள்கையும் தனக்கு முன் நடந்தவற்றை, பட்டியலாகவாவது குறிப்பிட்டு அதன் தொடர்ச்சியாகத் தன்னை அறிவித்துக்கொள்ள வேண்டும் என்பதே மரபு.

இதன் முக்கிய அம்சங்கள்

1. பொருத்தமில்லாத பாடப் பொருள் மற்றும் ஊக்கமற்ற கற்பித்தல் முறை, நம் கல்வியில் முன்பிருந்த தரம் போய்விட்டது என்று சொல்லும் புதிய கல்விக் கொள்கை, இதைச் சரிசெய்ய இரண்டு வழிகளை முன்வைக்கிறது. முதலாவதாக, பழையபடி மத்தியப் பட்டியலுக்குக் கல்வி வரவேண்டும் என்கிறது. ஆனால், இது மாநிலங்களின் உரிமையைப் பறித்துவிடும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.

அடுத்து, நான்காம் வகுப்பின் முடிவிலிருந்தே தேர்ச்சி / தோல்வி என மாணவர்களைச் சலித்தெடுக்க வேண்டும் என்கிறது. இது பழையபடி பள்ளியிலிருந்து பல மாணவர்கள் வெளியேறுவதற்குத்தான் வழிவகுக்கும்.

2. திறன்களை, குறிப்பாக வேலைவாய்ப்புத் திறன்களை வளர்க்க நமது கல்வி தவறிவிட்டது; வேலைக்குத் தகுதியற்ற படித்தவர்களை உருவாக்கி வீணடித்துவிட்டது என்று சொல்லும் புதிய கொள்கை, இதைச் சரிசெய்ய திறன் மேம்பாட்டு ஆணையம் அமைத்து, பள்ளிக்கூடங்களில் தொழில்துறை தேவைகளை மனதில் வைத்து, மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க வேண்டும் என்கிறது. மேலும், கல்வி முழுமை பெறும் முன்னமே வேலைத் தகுதிச் சான்றிதழ் மூலம் (மாணவர்கள் விரும்பினால்) ஒன்பதாம் வகுப்போடு தொழில் துறையில் இணையலாம் என்கிறது. இது குலக் கல்விமுறையை நினைவுபடுத்துவதாகக் கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

3. இந்திய அளவிலான கல்வியின் தரத்தை மேம்படுத்த, கல்வி அமைப்புகள், பள்ளிகளுக்கான தரப்பட்டியல் தயாரிக்க கல்லூரி அளவிலான தரமேம்பாட்டுக் குழு போல ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். தேசிய அளவிலான பள்ளிக் கல்வி தரச்சான்று ஆணையம் என அது அழைக்கப்படும் என்கிறது இந்த அறிக்கை. இது அரசுப் பள்ளிகளை முற்றிலும் முடங்கச் செய்துவிடும் எனும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

4. ஆசிரியர்களின் தரம் - தலைமை ஆசிரியரின் தகுதி இவற்றில் எந்த சமரசத்தையும் மோடி அரசு ஏற்றுக்கொள்ளாது. இதற்காகவே திறன் சோதனைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்று சொல்லும் இந்த அறிக்கை, குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தரச்சான்றுத் தேர்வுகளை ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்கிறது. ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சிப் பட்டப் படிப்புகளுக்கு சேர ஆள் இல்லை என்பது வேறு விஷயம்.

5. மதிய உணவுத் திட்டத்திலிருந்து ஆசிரியர்களை விடுவிக்கிறது இந்தப் புதிய கொள்கை. அதேசமயம், பள்ளிகளுக்கு அரசு நேரடியாக உணவு தராது. அதற்குப் பதிலாக அவற்றைத் தர்ம அமைப்புகளிடம் (தனியார்) ஒப்படைத்துவிடும். அரசின் நலத்திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி இது.

6. ‘இந்திய கலாச்சாரக் கூறுகளை இன்றைய கல்வி முற்றிலும் கைவிட்டு விட்டது. இதைச் சரிசெய்ய வகுப்பில் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதம் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சம்ஸ்கிருத ஆசிரியர் நியமிக்கப்படுவார்’ என்று இக்கொள்கை முன்வைக்கும் திட்டம் அப்பட்டமான காவி மயம் என்று விமர்சிக்கப்படுகிறது.
கோத்தாரிக் குழு இந்தியாவைச் சமூகம் என்று அழைத்தது. இந்த ஆவணமோ இந்தியப் பொருளாதாரம் என்றே அழைக்கிறது. கோத்தாரிக் குழு கல்வியை சேவை என்று அழைத்தது. மோடியின் புதிய கல்விக் கொள்கை ஆவணமோ கல்வியை முதலீடு என்கிறது. கூடவே ‘குருகுல’ மாதிரி என்பதை வருவாய் என்கிறது.

மெக்காலேவுக்குத் தேவைப்பட்டது பிரிட்டிஷ் காலக் கணக்காளர்கள்; ராஜீவ் காந்திக்குத் தேவைப்பட்டது பில்கேட்ஸின் வேலையாட்கள்; மோடியின் தேவை மேலும் மாறுபட்டது. அவ்வளவே. கடந்த பல பத்தாண்டுகளில் கடும் போராட்டங்கள், சோதனைகளுக்கிடையில் உரு வான ஏகலைவர்களின் கட்டை விரல்களைத் துண் டாடிய குருதியில்தான் இக்கல்விக் கொள்கை எழுதப் பட்டுள்ளது.

ஆயிஷா இரா.நடராஜன், கல்வியாளர்
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

நீங்கள் தேசியவாதியா, தேசப்பற்றாளரா?

குர்சரண் தாஸ்

இன்று இந்தியா சுதந்திரம் பெற்ற தினம். இந்த நாளில் இந்தியன் என்று பெருமை கொள்வதன் அர்த்தத்தை ஆழமாக அலசிப் பார்ப்பது அவசியமாகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் தேசியவாதத்தின் எழுச்சியால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சினைகள் பூதாகரமாக வெடித்தன. புதிதாய், புதிராய் பிறந்த தேசியவாதத்தால் ஏராளமான இழப்புகள் நேரிட்டன.

பொதுவாகவே நமது அன்றாட பேச்சு வழக்கில் தேசியவாதம், தேசப்பற்று ஆகிய இரண்டையும் குழப்பத்துடன் புரிந்தும் புரியாமல் பயன்படுத்தி வருகிறோம். இரண்டும் நேர் எதிரிகள் என்பது நமக்கு எளிதில் புரிவது இல்லை. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை இன்றைய இந்தியனுக்கு தெளிவுபடுத்துவது அவசியமாகிறது.

தேசப்பற்றாளர் தனது நாட்டை நேசிக்கிறார். மக்களின் வாழ்க்கை முறை, நாட்டின் சாதனைகள், வரலாற்றில் பெருமிதம் கொள்கிறார். அதேநேரம் அவர் தனது கருத்துகளை அடுத்தவர் மீது திணிக்க முற்படுவது இல்லை.

தேசப்பற்றாளரை போலவே தேசியவாதியும் தனது நாட்டை நேசிக்கிறார். ஆனால் அவரை அதிகார மமதையும் கர்வமும் ஆட்டிப் படைக்கிறது. தனது நாடு மற்ற நாடுகளைவிட மேலானது, பலம் வாய்ந்தது என்று தம்பட்டம் அடிக்கிறார். தனது கருத்துகளை அடுத்தவர் மீது திணிக்க முற்படுகிறார்.

இந்தியா 1947-ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தது. அந்த காலகட்டத்தில் ஹிட்லர், ஸ்டாலின், மாவோ ஆகிய சர்வாதிகாரிகளின் தேசியவாத கொள்கைகள் உலகம் முழுவதும் நிழலாடிக் கொண்டிருந்தன. அதேநேரம் மகாத்மா காந்தி போன்ற அஹிம்சைவாதிகள் இந்தியாவில் உண்மையான தேசப்பற்றை விதைத்தனர். நாம் இந்துக்கள், முஸ்லிம்கள் என வாழக்கூடாது, இந்தியர் களாக வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுத்தனர்.

ஹிட்லர், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் தேசியவாதத்தால் ஜெர்மனி, ரஷ்யா, சீனாவில் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவிலோ காந்தியின் தேசப்பற்று கொள்கையால் ஒரு லிட்டர் ரத்தம்கூட சிந்தாமல் நாம் சுதந்திரக் காற்றை சுவாசித்தோம்.

கடந்த ஓராண்டாகவே தேசியவாதத்தால் உலகம் மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்து வருகிறது. பிரிட்டனில் தேசப்பற்று என்ற பெயரில் தேசியவாதிகள் நடத்திய பிரச்சாரத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அந்த நாடு வெளியேறி உள்ளது. அமெரிக்காவில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்பை உமிழ்ந்து வருகிறார். அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டினரை, அகதிகளை அடித்து விரட்டுவேன் என்று மிரட்டுகிறார். சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியை நிறுத்துவேன், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை அந்நியர் தட்டிப் பறிப்பதை தடுப்பேன் என்று சபதம் செய்கிறார். பிரிட்டனின் தேசியவாதிகள், அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் தங்கள் நாடுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புகின்றனர்.

கடந்த பிப்ரவரியில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் விவகாரத்தில் தேசியவாதமும் தேசப்பற்றும் இந்தியர்களைக் குழப்பத்தின் உச்சிக்கு கொண்டு சென்றன. தேசத் துரோகம் குறித்த விவாதங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கண்ணையா குமார் தன்னை தேசப்பற்றாளர் என்று அறிவித்தார். ஆனால் தேசியவாதிகள் அவர் தேசத்துரோகி என்று முத்திரை குத்தினர்.

தேசப்பற்றாளர்களும் தேசியவாதிகளும் நமது நாடு வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். தேசப்பற்றாளரை பொறுத்தவரை சிறுபான்மையினர் உட்பட அனைத்து சமூகத்தினரும் ஒருசேர முன்னேற வேண்டும் என்று விரும்புகின்றனர். தேசியவாதிகளைப் பொறுத்தவரை சமூகநீதியில் அவர்களுக்கு அக்கறை இல்லை. நாட்டின் வலிமையை பறைசாற்ற வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றனர்.

ஒரு தேசியவாதி எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டை தூக்கிப் பிடிக்கிறார். தனது நாடு தவறே செய்யாது என்று வாதிடுகிறார். தேசப்பற்றாளரோ தனது நாட்டை நேசிக்கும் அதே நேரத்தில் அதன் நிறை, குறைகளையும் சுட்டிக் காட்டுகிறார். சமூகநீதி, சமஉரிமைக்கு பங்கம் ஏற்படும்போது மனம்திறந்து விமர்சனம் செய்கிறார். ஆனால் தேசியவாதியால் தனது நாடு குறித்து யாரும் விமர்சனம் செய்வதைக்கூட சகித்துக் கொள்ள முடியாது.

தேசியவாதம் மூலமே நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் உலக வரலாற்றை திரும்பிப் பார்த்தால் தேசியவாதத்தால் ஏற்பட்ட அழிவுகளைக் கண்கூடாக பார்க்கலாம். 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வியாபித்து பரவிய தேசியவாதத்தால்தான் ஆசியா, ஆப்பிரிக்க கண்டங்களின் நாடுகள் அடிமைப்படுத்தப்பட்டன. இந்தியா பிரிட்டனின் காலனி நாடாக மாறியது. 20-ம் நூற்றாண்டில் எழுந்த தேசியவாதத்தால் 2 உலகப் போர்கள் உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டின.

தேசியவாதத்தின் மிக மோசமான உதாரணம் ஹிட்லர். 2-ம் உலகப் போருக்கு வித்திட்ட அவர், ஆரியர்களே உலகில் உயர்ந்த இனம் என்று வாதிட்டார். பல நாடுகளை ஆக்கிரமித்தார். 80 லட்சத் துக்கும் மேற்பட்ட யூதர்களைக் கொன்று குவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி மாநிலங்களவையில் சரக்கு, சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) நிறைவேறியது. அப்போது தேசப்பற்றாளர்களும் தேசியவாதிகளும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்தியாவை வல்லரசாக, அசைக்க முடியாத சக்தியாக மாற்ற ஜிஎஸ்டி வழிவகுக்கும் என்று தேசியவாதிகள் ஆனந்த தாண்டவமாடினர். அதேநேரம் ஜி.எஸ்.டி. மசோதாவால் கடைக்கோடி ஏழைக்கும் பயன் கிடைக்கும் என்று தேசப்பற்றாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

பிரிட்டனின் தேசியவாதிகளும் அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்பும் தற்போது இனவாதத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்கின்றனர். தங்கள் நாடுகளின் கடந்த காலப் பெருமைகளைக் கதை, கதையாக பேசுகின்றனர். இதேபாணியில் இந்து தேசியவாதிகளும் கடந்த கால ஆரிய நாகரிகத்தின் பெருமைகளைப் பேசுகின்றனர். இந்தியா இந்துக்களின் பூர்விக பூமி என்று பிரகடனம் செய்கின்றனர். இந்தியாவை இந்து தேசமாக மாற்ற வேண்டும் என்று கோஷமிடுகின்றனர். அதன்மூலம் பூர்வகால உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்று நம்புகின்றனர்.இப்போது நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டிருப்பீர்கள். நான் ஒரு தேசப்பற்றாளன், தேசியவாதி அல்ல என்பதை. ஒரு விஷயம் என்னை சோகத்தில் ஆழ்த்துகிறது. இந்தியாவில் தேசியவாதிகளும் தேசப்பற்றாளர்களும் இதுவரை அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்றதே இல்லை.

என்னைப் பொறுத்தவரை எனது நாட்டின் இயற்கை அழகில் மூழ்கித் திளைக்கிறேன். இந்தியர்களின் எண்ணற்ற சாதனைகளை எண்ணி மகிழ்கிறேன். நாட்டின் வரலாற்றில் பெருமிதம் கொள்கிறேன். எனது நாட்டை நேசிக்கிறேன். அந்த நேசத்தால் அடுத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். எனது அன்பும் நேசமும் எல்லைகளைத் தாண்டி பயணம் செய்கிறது. அதற்கு காரணம் முதலில் நான் மனிதன், அதன் பிறகுதான் இந்தியக் குடிமகன்.

தமிழில் சு.கோயில்பிச்சை

சுதந்திர உணர்வும் அடிமை உணவும்

கு.சிவராமன்

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது.
கிட்டத்தட்ட 500, 600 ஆண்டுகளுக்கு முன்பு மிளகு ஓரிரு டாலர் விலை உயர்ந்ததால்தான், 400 ஆண்டுகால அடிமை வாழ்வு இந்தியாவுக்கு ஏற்பட்டது என்கிறார்கள் வரலாற்றாளர்கள். அப்போது வரி செலுத்தக்கூடிய நாணயமாக மிளகு கருதப்பட்டது. அரபு வணிர்கள் மட்டுமே மிளகை இந்திய நிலத்திலிந்து எடுத்துச் சென்று ஐரோப்பாவில் வணிகம் செய்துவந்தனர். அந்தச் சூழலில், இந்த விலை உயர்வு ஐரோப்பிய அரசுகளுக்கு நெருக்கடி தந்தது. நாமே ஏன் மிளகு வணிகத்தைத் கையிலெடுக்கக் கூடாது, மிளகு விளையும் நிலத்தைக் கைப்பற்றக் கூடாது என்று ஐரோப்பியர்களுக்குள் ஏற்பட்ட சிந்தனைதான், இந்தியாவுக்குள் அவர்கள் நுழைய வழிவகுத்தது. இது வரலாறு அறிந்த சேதி. 

அதன் பின்னர், 400 ஆண்டுகள் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு, எத்தனையோ பேர் ரத்தம் சிந்தித்தான் சுதந்திரம் பெற்றோம். இந்த சுதந்திர தின விழாவில் ஒவ்வொருவரும் மகிழ்வோடு பரிமாறிக்கொள்ளும் வாழ்த்து ‘சுதந்திர தின வாழ்த்துகள்’. அப்படி உச்சரிக்கும் நமது ஒவ்வொருவரது வாயுமே உண்மையில் இன்னும் ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டு இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

அந்நியக் கை

அன்று அந்நிய நாட்டிலிருந்து வந்த உடைகளை உதறியெறிந்து, கதராடை உடுத்தி, ‘அந்நியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்’எனும் முழக்கத்துடன் சுதந்திர வேள்வித் தீ காந்தியடிகளால் மூட்டப்பட்டது. இன்று காலை முதல் இரவு வரை நம் பசிக்காகவும், வாய் ருசிக்காகவும், ஆற்றல் பெறவும், நோய்த் தடுப்பு பெறவும் சாப்பிடும் சராசரி உணவாகட்டும் அல்லது ஊக்க உணவாகட்டும் அதில் பெரும்பான்மைப் பகுதி நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்நிய நாட்டுப் பிடியில்தான் இருக்கிறது. நாம் எதைச் சாப்பிட வேண்டும், நமக்கான தேர்வு எது, உலகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தரம் எது என அத்தனையுமே மறைமுகமாக வணிகச் சிந்தனையோடு பன்னாட்டு நிறுவனங்களால் பெரும்பாலும் நிர்ணயிக்கப்படுகின்றன.

1992 டங்கல் அறிக்கைக்குப் பின்னர் மெல்ல மெல்ல உலகெங்கும் ஆதிக்க நாடுகளின் வசதிக்காக, வணிக வாய்ப்புகளுக்காக, சில 100 நிறுவனங்களின் பங்குக் கணக்குகளை எப்போதும் பத்திரமாக வைத்திருக்க, உணவுக் கொள்கைகள் தொடர்ந்து வகுக்கப்படுகின்றன. நம் தட்டில் பரிமாறப்படும் உணவு வேறொருவரால் தீர்மானிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த உணவுக் கொள்கையும் சரி, விவசாயக் கொள்கைகளும் சரி, சுதந்திரத்தின் அடிநாதமாக இருந்த சுதேசிச் சிந்தனையை முற்றிலும் சீரழித்துவிட்டன. நாமெல்லாம் முன்பு எப்போதோ ருசித்துவந்த காஷ்மீர் ஆப்பிள், சிம்லா ஐஸ்க்ரீம் ஆப்பிள் இன்று அநேகமாகக் கிடையாது. மாறாக 50% இறக்குமதி வரி கட்டிப் பெறப்படும், வாஷிங்டன் ஆப்பிளும் சீன ஆப்பிளும் பாகிஸ்தான் ஆப்பிளும் நம் பழக்கடைகளை அலங்கரித்துக் கொண்டிருக் கின்றன.

குதிரைகளுக்கான உணவு கொஞ்சம் மிதமிஞ்சி விளைவதால், “அதுதான் உன் உடலைக் குறைக்கும். உனக்கேற்ற உணவு” என அறிவியல் தரவுகளோடு புது அடையாளம் பூசப்பட்டு, ஒவ்வொரு வீட்டு காலைச் சிற்றுண்டிகளையும் களவாடிவிட்டது ஓட்ஸ் தானியம்.

வணிகப் பிரச்சாரங்கள்

ஐரோப்பாவில் மத்தியத் தரைக்கடல் பகுதியில் தயாரிக்கப்படும் உணவுக்கு உலகில் பெரும் மதிப்பு உண்டு. அதற்கு முதல் காரணம், அங்கு கிடைக்கும் ஆலிவ் பழத்தின் எண்ணெய். ‘இந்த எண்ணெய் மட்டுமே உன் மாரடைப்பத் தவிர்க்கும்’ என வணிகப் பிரச்சாரம் செய்து, அந்த ஆலிவ் எண்ணெய் நம் வீட்டு அடுப்பங்கரைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. முன்பு சூரியகாந்தி எண்ணெய்க்காக நம் நாட்டுத் தேங்காய் எண்ணெயைப் பறிகொடுத்ததுபோல இன்று நல்லெண்ணெயையும் கடுகு எண்ணெயையும் பறிகொடுக்கிறோம். உலகில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக நகர்ந்துகொண்டிருந்த வேளையில், கடந்த 10,15 ஆண்டுகளாகத் தொடர்ச்சியான சறுக்கல்கள். நம் வீட்டு சாம்பாரிலும் பருப்புப் பொடியிலும் நம் குழந்தைக்கு ஊட்டும் பருப்பு சாதத்திலும் கிட்டத்தட்ட 60%-க்கு மேலான பருப்பு தான்சானியா முதலான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பதை அறிவோமா?

இந்தியத் தேவையில், இன்றைக்கும் 40% பருப்பு, பயறு உற்பத்தியில் இன்னமும் பின்னடைவில்தான் நாம் இருக்கிறோம். இந்த நேரத்தில் சுதந்திரத்துக்கு வித்திட்ட காந்தியின் ஆலோசகராகவும் சுதந்திர இந்தியாவின் முதல் திட்டக் குழுவின் தலைவராகவும் இருந்த, நம்மில் அநேகம் பேர் மறந்துவிட்ட ஜே.சி.குமரப்பா எனும் தமிழனின் கூற்றுதான் நினைவுக்கு வருகிறது. காந்தியப் பொருளாதாரத்தை வடிவமைத்த அவர், 1940-களிலேயே, ஒரு கோடி மக்களுக்கு உணவுக்கும் உடைக்கும் என்ன உற்பத்தி இந்தியாவில் ஏற்பட வேண்டும்; அது கிராம ஊரக வளர்ச்சியோடு எப்படிக் கட்டமைக்கப்பட வேண்டும் எனத் தன்னுடைய நிலைபேற்றுப் பொருளாதாரத்தில் (economy of permanence) மிகத் தெளிவுபடக் கூறியிருந்தார்.

ஏன் மறந்தோம்?

இந்தியாவுக்குப் பெரிய அணைக்கட்டுகள், மிகப் பெரும் செயற்கை நீர்த்தேக்கங்கள் அவசியம் இல்லை. வெளிநாட்டு விவசாயக் கட்டமைப்பு வேறு, விரிவுபட்ட பரந்த இந்தியாவின் உயர் தட்பவெப்ப மண்டலம் வேறு என்று இந்த நாட்டுக்கான உற்பத்தியை இந்த நாட்டுக்கான விவசாயக் கட்டமைப்போடு கனவு கண்டவர் குமரப்பா. துரதிர்ஷ்டவசமாக, அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் இந்த நிலைபேற்றுப் பொருளாதாரக் கருத்துகள் ஒட்டுமொத்தமாக மறக்கடிக்கப்பட்டதில் உணவு விஷயத்தில் மெல்ல மெல்ல வெளிநாட்டுக்கு அடிமைப்படவும், கையேந்தவும் நாகரிகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறோம்.

சுதந்திரம் என்பது நம்மை நாமே ஆள்வது மட்டுமல்ல. எந்த விதத்திலும் ஒரு பன்னாட்டுப் பிடிக்குள் மறைமுகமாகச் சிக்கியிருப்பதும் ஒருவகையில் அடிமைத்தனமே. மரபணு மாற்றப்பட்ட பருத்திதான் இந்தியப் பருத்தி விவசாயிகளைக் காப்பாற்றும் என 2002-ல் நுழைந்தது பி.டி.பருத்தி. கிட்டத்தட்ட 12, 13 ஆண்டுகளில் ஒட்டுமொத்த இந்தியப் பருத்தியும் (96%) பி.டி.பருத்தியாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், இன்று சுதந்திரதின விழாவில் பெருமையுடன் பறக்கும் இந்திய தேசியக் கொடிகூட பி.டி.பருத்தியால் ஆனதுதான் என்பது எவ்வளவு வெட்கம்?

விதர்பாவில் நடந்த விவசாயத் தற்கொலைகளுக்கும் இன்னும் இந்தியாவில் ஆங்காங்கே நடைபெறக்கூடிய விவசாயத் தற்கொலைகளுக்கும், விவசாய உற்பத்தியில் கூடிவரும் கட்டுக்கடங்காத கடன் தொல்லையும் அந்தக் கடன் தொல்லைக்கு அடித்தளமாக இருக்கக் கூடிய 20 மடங்குக்கு மேல் விலையேற்றம் உள்ள இதுபோன்ற மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளும் முக்கியக் காரணங்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. சுதந்திர தினம் அன்று பத்தாவது முறையாக காந்தி படம் பார்ப்பது, அன்றைக்கு மட்டும் கதராடை அணிவது, விடுதலைப் போராட்ட வசனம் பேசுவது என இராமல், எதற்குப் பெற்றோம் இந்தச் சுதந்திரத்தை? பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கிறோமா? என கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

நெல்லி தரும் விட்டமின் சி-யை விடச் சிறப்பாக நியூசிலாந்து கிவி பழம் எதையும் கொடுத்துவிடப்போவ தில்லை. உடலுக்குத் தேவையான ஊக்க ஆற்றலை கொய்யா கொடுப்பதைவிட அதிகமாக ஆஸ்திரியா ஆப்பிள் தந்துவிடப்போவதில்லை. தினை, ராகி முதலான சிறுதானியங்கள் தரும் உணவுச் சத்துக்களைவிட அதிகமாக ஆஸ்திரேலிய ஓட்ஸ் கொடுத்து விடப்போவதில்லை. காந்திய - குமரப்ப பொருளாதாரமும், சூழலைத் துளியும் மாசுபடுத்தாமல் தரும் இந்த ஊட்டமும் உணர்வும்தான் சுதந்திர இந்தியாவுக்கான உண்மையான தேவை!

- கு.சிவராமன், மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com