Dec 27, 2015

தன்னைத்தானே தூர்வாரிக் கொண்ட அதிசய அணைகள்!

கொடிவேரி அணைக்கட்டு.
கொடிவேரி அணைக்கட்டு.

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

நவீன காலத்தில் கட்டப்பட்ட அணைகள் எப்படி தூர் மேடிட்டிருக்கின்றன என்பதைப் பார்த்தோம். ஆனால் நம் முன்னோர்கள் கட்டிய அணைகள் தன்னைத் தானே தூர் வாரிக்கொண்ட அதிசயத்தை அறிவீர்களா?

மனிதன் தேவையில்லை, மண்வெட்டி தேவையில்லை, இயந்திரங்கள் தேவை யில்லை. விவசாயிகள் போராடத் தேவை யில்லை, நீதிமன்றம் தலையிடத் தேவை யில்லை. கோடிக்கணக்கான நிதி தேவை யில்லை, ஊழல் இல்லை, முறைகேடும் இல்லை. காரணம், நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அரியதொழில்நுட்பங்கள். அந்தத் தொழில்நுட்பங்களை இன்று வரை நமது அறிவியலாளர்களால் அறிந் துக்கொள்ள முடியவில்லை அல்லது அறிந்துக்கொள்ள அக்கறையில்லை.

வரலாற்று எழுத்தாளரும் தடப் பள்ளி - அரசன்கோட்டை பாசன சபைத் தலைவருமான சுபி.தளபதி செப்பேடு கள், மைசூர் மன்னர்களின் கல்வெட்டு கள், ஆங்கிலேயரின் ஆவணங்கள் மற்றும் பவானி நீர்நிலைகளைப் பராமரித்த ‘நீர் மணியம்’ சமூகத்தினரின் செவிவழிச் செய்திகள் மூலம் பவானி ஆற்றின் நீர் மேலாண்மை பற்றிய வரலாற்றை தொகுத்துவருகிறார். அவரிடம் பேசியபோது கொடிவேரி அணைக்கட்டுப் பற்றிய அறியப்படாத அரிய தகவல்கள் கிடைத்தன.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தி, கோபி, நம்பியூர், அந்தியூர் உள்ளிட்ட பவானி ஆற்றுப் பகுதிகள் மைசூர் மன்னர்கள் மற்றும் விஜயநகர பேரர சின் ஆளுகையில் இருந்தன. மைசூர் மேல்நாடு என்றும் சத்தி உள்ளிட்டவை கீழ்நாடு என்றும் அழைக்கப்பட்டன. அன்றைய மக்கள் சத்தியமங்கலம் காசிபாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே ஏரா ளமான பாறைகளைக் கொட்டி சிறு நீர்த் தேக்கம்போல உருவாக்கி பாசனத் துக்குப் பயன்படுத்தினர். ஆனால், பவானியில் அடிக்கடி பெருக்கெடுத்த வெள்ளம் இதனை அடித்துச் சென்றது.

இதனால், 1490-ல் உம்மத்தூரை ஆட்சி புரிந்த மன்னர் நஞ்சராய உடை யாரிடம் சென்ற கீழ்நாட்டு மக்கள் ஆற்றில் தடுப்பணை கட்டித் தரும்படி கேட்டனர். அதன்படி கொடிவேலி செடிகள் சூழ்ந்த ஓர் இடத்தில் தடுப் பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அங்கே பாறைகள் இல்லாததால் சத்திய மங்கலத்தில் இருந்து 10 கி.மீ தொலை வில் உள்ள கம்பத்ராயன் மலையில் இருந்து பாறைகள் வெட்டிக் கொண்டு வரப்பட்டன. கட்டுமானப் பணிகளுக்காக ஒடிஷா, கர்நாடகம், ஆந்திர மாநிலங் களில் இருந்து கல்வேலைகளில் தேர்ச்சிபெற்ற கல் ஒட்டர் சமூகத்தினர் வரவழைக்கப்பட்டனர்.

சுமார் 3 ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்பட்டது. அணையை திறக்க நாள் குறித்து, மன்னர் வருவதாக ஏற் பாடானது. ஆனால், திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்து அணை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. தகவல் மன்னருக்குச் சென்றது. அவர் மீண்டும் அணையைக் கட்ட உத்தரவிட்டார். அதன்படி சுமார் ஒன்றரை ஆண்டுகளில் மீண்டும் அணை கட்டப்பட்டது. மறுபடி யும் அணையைத் திறக்க மன்னர் வர விருந்த நிலையில் மீண்டும் வெள்ளம். இந்த முறை ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள்.

மிகுந்த மனவேதனை அடைந்த மன்னர், ‘‘பண்ணாரி அம்மனும் நஞ்சுண் டேஷ்வரரும் நான் கீழ்நாட்டுக்குச் செல்வதை தடுக்கிறார்கள். இனிமேல் நானோ, என் குடும்பத்தினரோ கீழ் நாட்டுக்கு வர மாட்டோம்’’ என்று சொல் கிறார். மேலும், மீண்டும் அணையைக் கட்ட உத்தரவிட்டவர், அணை கட்டி முடித்தவுடன் தகவல் தனக்கு வராமல் பார்த்துக்கொள்ளும்படி சொல்கிறார். அதன்படி மூன்றாவது முறையாக அணை கட்டி முடிக்கப்பட்டது. அதுதான் இன்றைக்கும் நிலைத்து நிற்கும் கொடி வேரி அணைக்கட்டு. அதன்படி 151 மீட்டர் நீளம், 30 அடி அகலத்தில் அணை கட்டப்பட்டது. அணையின் வலதுப் பக்கத்தில் தடப்பள்ளி வாய்க்காலும், இடதுப் பக்கத்தில் அரசன்கோட்டை வாய்க்காலும் சுமார் 5 கி.மீ நீளத்துக்கு ஆற்றை ஒட்டியே வெட்டப்பட்டன. பிற்காலங்களில் பாசனம் பெருகப் பெருக தடப்பள்ளி வாய்க்கால் 26 கி.மீ வரையும் அரசன்கோட்டை வாய்க்கால் 42 கி.மீ வரையும் வெட்டப்பட்டன. கொடிவேரி அணையின் சிறப்பே அதன் கால்வாய்கள் மற்றும் மணல் வாரிகள்தான். நுட்பமான நீரியல் தொழில்நுட்பம் கொண்டவை அவை.

ஓர் ஆற்றில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் எடுக்கக் கூடாது. குறிப் பிட்ட அளவு ஆற்றின் நீர் கடலில் கலக்க வேண்டும். ஆற்றின் நீரியல்போக்கு திசையில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேலாக எந்தக் காரணம் கொண்டும் திருப்பக்கூடாது என்கிறது உலக ஆறுகள் பாதுகாப்பு விதிமுறைகள் (Helsinki Rules). ஆனால், அன்றைக்கே நம் முன்னோர்கள் இதனை கொடிவேரி அணைக்கட்டுப் பாசனத்தில் நடை முறைப்படுத்தியிருக்கிறார்கள்.

தடப்பள்ளி கால்வாயும் அரசன் கோட்டை கால்வாயும் ஆற்றை ஒட்டியே இருபுறமும் செல்கிறது. இதனால் ஆற்றின் நீரோட்டம் திசை திருப் பப்படுவதில்லை. மேலும், ஆற்றில் இருந்து கால்வாய்களுக்குச் செல்லும் தண்ணீர் வயல்களுக்குச் சென்று அதன் கசிவு நீர் மீண்டும் வாய்க்கால் வழியாக ஆற்றுக்கு வந்துவிடும். அதாவது ஒரு பாசன நிலம் தனக்குத் தேவை யானதுபோக மீதமிருக்கும் தண்ணீரை மீண்டும் ஆற்றுக்கு அனுப்பிவிடுகிறது. இதற்காகப் பாசன நிலங்களின் மட்டத்துக்கு ஏற்ப கால்வாய்கள் அமைக் கப்பட்டன.

மிகச் சிறந்த சிக்கன நீர் மேலாண்மை இது. இங்கிருந்து ஆற்றுக்கு கீழே 60 கி.மீ தொலைவில் இருக்கிறது காலிங் கராயன் அணைக்கட்டு. தடப்பள்ளி - அரசன்கோட்டை கால்வாய்களின் மிகச் சிறந்த நீர் மேலாண்மை காரணமாக இன்றைக்கும் கொடிவேரி அணையில் பாசனத்துக்காக விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்தால், அந்தத் தண்ணீர் இடைப்பட்ட பகுதிகளின் பாசனத்துக்கு போக மீதம் சுமார் 400 கனஅடி தண்ணீர் காலிங்கராயன் அணைக்குச் சென்றுசேர்கிறது. அதேசமயம் நவீன காலத்தில் வெட்டப்பட்ட கிருஷ்ணா நதி கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரில் பாதியளவுகூட சென்னைக்கு வருவ தில்லை என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்தது மணல்போக்கி தொழில் நுட்பம். அணைக்கட்டின் மையப் பகுதி யில் தண்ணீரின் குவி மையத்தில் கிணறு வடிவில் சுரங்கம் வெட்டப்பட்டிருக்கிறது. இது அணைக்கு வெளியே தண்ணீர் திறக்கப்படும் இடத்துக்கு சுமார் 20 அடி தூரத்துக்கு அப்பால் சென்று முடிகிறது. சுரங்கத்தின் வாய்ப் பகுதி அகலமாகவும் உள்ளேச் செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுரங்கத் துக்குள் கல்லால் ஆன நுட்பமான சல் லடை அமைப்புகள் மற்றும் கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்பு கள் செய்யப்பட்டிருக்கின்றன. மணல் போக்கிகளைக் கரையில் இருந்தே மூடும் வகையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவுகள் அமைக்கப்பட்டன. இந்த மணல்போக்கிகள் மணலையும் சேற் றையும் உள்ளே இழுத்து மறுபக்க சுரங்கத்தின் துவாரம் அணைக்கு வெளியே தள்ளிவிடும். இதன் மூலம் அணையில் மணலும் சேறும் தங்கவில்லை. மேலும் இதன் வழியாக தண்ணீரும் வெளியேறாது என்பதும் இதன் தனி சிறப்பு. இதனால் அணையின் நீர் தூய்மையாக இருந்தது. அணை தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் தொழில்நுட்பம் இது.

இந்த அரிய தொழில்நுட்பங்களை இன்றைய மக்கள் அறியாமல் போனது தான் வேதனை. இன்று கொடிவேரி அணைக்கட்டு சுற்றுலாத் தளமாக மட்டுமே அறியப்படுகிறது. குடிநோயாளி களில் சொர்க்க பூமியாக மாறியிருக் கிறது அது. கூட்டம் கூட்டமாக வந்து மது அருந்துகிறார்கள். காலி பாட்டில் களை அணைக்குள் எறிகிறார்கள். குடித்துவிட்டு குளிப்பவர்கள் அணைக் குள் இருக்கும் மணல்போக்கிகளுக்குள் சிக்கி இறந்துவிடுகிறார்கள் என்று அவற்றில் பாறைகளையும் மண்ணையும் போட்டு தூர்த்து வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாக நவீன சமூகத் திடம் சிக்கித் தவிக்கின்றன நமது முன்னோர்களின் அணைகள்! 

அணையில் பதிந்திருப்பது சேறல்ல ஆட்சியாளர்கள் மீதான கறை!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

சோழர் கட்டிய கல்லணையில் தூர் இல்லை. பாண்டியர் கட்டிய மருதூர் அணைக்கட்டில் தூர் இல்லை. பழந்தமிழர் கட்டிய காலிங்கராயன் அணைக்கட்டு, கொடிவேரி அணைக்கட்டு எவற்றிலும் தூர் இல்லை. காமராஜர் கட்டிய அணைகளிலும் பெரியதாகக் குறை சொல்ல முடியாது. அதேசமயம் கடந்த 1982 தொடங்கி 2001-ம் ஆண்டு வரை இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் மாறி மாறி சோத்துப்பாறை என்கிற நீர்த்தேக்கம் ஒன்று கட்டப்பட்டது. சுமார் 20 ஆண்டுகள் இழுத்தடித்து கட்டி முடிக்கப்பட்டது அணை இது. அவ்வளவு ஆண்டுகளாக கட்ட வேண்டிய பெரிய அணைக்கட்டும் அல்ல அது. சிறு நீர்த்தேக்கம் மட்டுமே அது. அதில்தான் இன்று தூர் ஏறி துர்நாற்றம் அடிக்கிறது. தவறு தண்ணீரில் இல்லை. பொறியாளர்கள் மீதும் இல்லை. அநாகரிக அரசியலால் உருவான துர்நாற்றம் அது.

கொடைக்கானல் மலையில் இருந்து உற்பத்தியாகும் வராக நதி பேரிஜம் நீர்த்தேக்கம் வழியாக வைகை நதிக்கு வந்துகொண்டிருந்தது. 1982-ல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தார். அப்போது பெரியகுளம் அருகே லட்சுமிபுரம், கைலாசப்பட்டி, கல்லுப்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 1040 ஏக்கரில் புதிய நஞ்சை ஆயக்கட்டு அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி பெரியகுளத்தில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் சோத்துப்பாறை என்கிற இடத்தில் வராக நதியில் அணை கட்டும் பணிகள் தொடங்கின. இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி வாங்குவது உட்பட தொடக்கக் காலத்தில் சில சில சிக்கல்கள் இருந்தன.

ஆனால், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பங் களால் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதிமுக மற்றும் திமுக அடுத்தடுத்த ஆட்சி அமைத்தாலும் 14 ஆண்டுகள் இந்தத் திட்டத்துக்கு பெரியளவில் ஒன்றும் நிதி ஒதுக்கவில்லை. 96-ம் ஆண்டுதான் இந்தப் பகுதியை நேரில் பார்வையிட்ட அன்றைய முதல்வர் கருணாநிதி இந்தத் திட்டத்துக்காக ரூ.35 கோடியை ஒதுக்கினார். ஒருவழியாக பணிகள் மீண்டும் நடந்தன. 2000-ம் ஆண்டில் 100 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கும் வகையில் கிட்டத்தட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருந்தன. அதேசமயம் அணைக்காக வெட்டிய மண், பாறைகள், வனங்களில் அப்புறப்படுத்திய மரம், செடிகள் எல்லாம் அணைக்குள் மலைபோல தேங்கியிருந்தன. அவற்றை அப்புறப்படுத்திவிட்டு, சில இடங்களில் கல் பதிக்கும் பணிகளைச் செய்ய வேண்டியதுதான் மிச்சம். இன்னும் சில இடங்களில் மணல்போக்கிகளை அமைக்கலாம் என்று பொறியாளர்கள் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

திட்டத்தை மீண்டும் மறந்துப் போனார்கள். உள்ளே மலைபோல் கொட்டப்பட்டிருந்த மண், கற்கள், மரங்கள் எதுவும் அப்புறப்படுத்தப்பட வில்லை. விவசாயிகள் எவ்வளவோ போராட்டங்களை நடத்தினார்கள். அசைந்துகொடுக்கவில்லை அதிகாரிகள். அதேசமயம் மழை பெய்யத் தொடங் கியது. அணையில் தண்ணீர் ஏறியது. ஏற்கெனவே அணையில் மண், பாறை மற்றும் குப்பைகள் மேடிட்டிருந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. வேறு வழியில்லாமல் அணையைத் திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போதும் ஆட்சியாளர்கள் யாரும் இங்கு எட்டிக்கூட பார்க்கவில்லை. அன்றைக்கு அதிகாரத்தின் உச்ச பொறுப்பில் இருந்தவரின் சொந்த மாவட்டம் இது. கடைசியில் பெரும் அரசியல் சர்ச்சைகளுக்கு இடையே மாவட்ட ஆட்சியர் வந்து அணையைத் திறந்தார்.

அதன் பின்பு 14 ஆண்டுகளில் அணையில் ஏராளமான சேறு, மணல் சேகரமாகிவிட்டது. பலமாக ஒருமழை பெய்தால் அணை நிரம்பிவிடும். அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் தாமரைக்குளம், பாப்பையன்பட்டி, பொய்குளம் உள்ளிட்ட கண்மாய்கள் வழியாக வராக நதிக்குச் செல்கிறது. அணையின் கொள்ளளவு சுமார் 70 சதவீதம் குறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள் விவசாயிகள். இந்தத் துர்நாற்றம் அடிக்கும் தண்ணீர்தான் பெரியகுளம் நகராட்சி மற்றும் 15 ஊராட்சிகளின் குடிநீர்த் திட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது. அரசியல் காழ்ப்புணர்வு ஓர் அணையை எப்படியெல்லாம் அலங் கோலமாக்கியிருக்கிறது என்பதற்கான உதாரணம் சோத்துப்பாறை அணை.

சுமார் 6 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் அருகே நெய்க்காரப்பட்டி கிராமத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. யாருமே எதிர்பார்க்காத பெரும் வெள்ளம் அது. சாலைகள் அனைத்தும் மூழ்கிவிட்ட நிலையில் மக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

வெள்ளத்துக்குக் காரணம் தூர் வாரப்படாத குதிரையாறு அணை என்கிறார்கள் விவசாயிகள். கொடைக்கானல் மலையில் இருந்து வரும் குதிரையாற்றில் பழநி கோயிலின் தெற்கே கட்டப்பட் டிருக்கிறது குதிரையாறு அணை. பழநி, நெய்க்காரப்பட்டி, சின்ன களையம் புத்தூர், பாப்பம்பட்டி, காவலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 6,500 ஏக்கர் இந்த அணையின் மூலம் பாசனம் பெறுகின்றன. அணை மிகவும் சிறியது என்பதாலும் அணையிலும் தூர் மேடிட்டிருப்பதாலும் கொள்ளளவு குறைந்து ஒருநாள் கூட இதில் தண்ணீர் தேங்குவது இல்லை. இப்படி வேகமாக வழிந்தோடிய வெள்ளம்தான் நெய்க்காரப்பட்டியைச் சூழ்ந்தது. சமீபத்தில் உலக வங்கியின் நிதியில் ரூ.1 கோடியில் இந்த அணையின் கரை களைப் பலப்படுத்துவது, கதவுகளைச் சீரமைப்பது போன்றப் பணிகளை செய்தார்கள். ஆனால், அணையைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்கி றார்கள் விவசாயிகள்.

கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் இன்னொரு ஆறான பரப்பலாற்றில் ஒட்டன்சத்திரத்துக்கு மேலே 1974-ம் ஆண்டு வனத்துக்குள் கட்டப்பட்டது பரப்பலாறு அணை. 90 அடி உயரம் கொண்ட இதில் 197.98 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கலாம். இந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் முட்டு சமுத்திரம், பெருமாள் குளம், பாப்பாகுளம், ஓட்டைக்குளம், முத்துகோபால சமுத்திரம், காவேரியம்மாபட்டி குளம், சடையகுளம், செங்குளம், கருங்குளம் உள்ளிட்ட குளங்களை நிரப்புகிறது. ஆனால், இன்று இதில் சுமார் 50 சதவீதம் தூர் மேடிட்டுக் கிடக்கிறது. இதனால், அணை ஒரு மாதத்துக்குள் வற்றிவிடுகிறது.

மேற்கண்ட அணைகள் எல்லாம் சிறு துளி உதாரணங்கள் மட்டுமே. மேட்டூர் அணை தூர் வாராததால் கடந்த 40 ஆண்டுகளில் கடலுக்குச் சென்ற மிகை நீர் 3,025 டி.எம்.சி. இதன் ஆண்டு சராசரி 75 டி.எம்.சி. தமிழகத்தில் அணைகள் தூர் வாராததால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தில் சராசரியாக கடலில் கலக்கும் மிகை நீர் 259.76 டி.எம்.சி. இது அரசு தெரிவிக்கும் புள்ளிவிவரம். உண்மையில் வெள்ளக் காலங்களில் 400 டி.எம்.சி. கடலில் கலக்கிறது என்கிறார்கள் நீரியல் நிபுணர்கள். தமிழகத்தின் 25 நீர்த் தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு 5,738.15 மில்லியன் கனமீட்டர். ஆனால், இதில் சேற்றின் அளவு மட்டும் சுமார் 2,000 மில்லியன் கனமீட்டர்.

இது வெறும் சேறு மட்டுமல்ல. குளறுபடியின் குறியீடு இது. ஊழலின் குறியீடு இது. அலட்சியத்தின் குறியீடு இது. அழிவின் குறியீடு இது. எல்லாவற்றையும்விட சுமார் அரை நூற்றாண்டாக தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளின் மீது படிந்த கறையின் குறீயிடு இந்தச் சேறு! 

மதுரையின் கூவம் கிருதுமால் நதி!

மதுரை எல்லீஸ் நகரில் ஓடும் கிருதுமால் நதி. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை எல்லீஸ் நகரில் ஓடும் கிருதுமால் நதி. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

நதிகள் இணைப்புத் திட்டம் தொடங்கி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் வரை ஏராள மான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. சொல்லப்போனால் நாம் புதியதாக எந்தத் திட்டத்தையும் தீட்டத் தேவையில்லை. நமக்கு என்னென்ன தேவை என்பதை நமது முன்னோர் கள் முறையாக செய்து வைத்துவிட்டார்கள். நாம் அவற்றை அழிக்காமல் இருந்தாலே போதும்.

பண்டைய தமிழர்களின் நீர்ப் பாசனக் கட்டுமான தொழில்நுட்பத் திறமைக்குக் கிடைத்த முதல் ஆதாரம் வைகை நதியில் கண்டெடுக்கப்பட்ட அரிகேசரி கால்வாய் தொடர்பான கல்வெட்டுதான். கி.பி. 690-ம் ஆண்டு பாண்டிய மன்னன் அரிகேசரியால் வைகை ஆற்றில் சோழவந்தான் அருகே வாய்க்கால் வெட்டப்பட்டது என்று ஏற்கெனவே பார்த்தோம். வைகையின் உபரி நீர் வீணாகக் கூடாது என்பதற்காக வெட் டப்பட்ட அந்தக் கால்வாயை பாண்டியர்கள் நாகமலையில் உற்பத்தியாகி ஓடும் காட்டாறான கிருதுமாலுடன் இணைத்தார் கள். அந்த வகையில் தமிழர்களின் மிகத் தொன்மையான பாசனக் கட்டமைப்பு வைகை - அரிகேசரி கால்வாய் - கிருதுமால் நதி இணைப்பு திட்டம்.

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத் தில் இருந்து இடதுபுறமாக பிரியும் ஒரு கால்வாய் தேனூர், திருவேடகம், சமய நல்லூர், பரவை, வண்டியூர் ஆகிய பகுதிகள் வழியாக சென்று கண்மாய்களை நிரப்பியது. வலதுபுறம் செல்லும் கால்வாய் தென்கரை கால்வாய், நிலையூர் கால்வாய், கொடிமங்கலம், மாடக்குளம், கீழமாத்தூர், துவரிமான், கோச்சடை, அச்சம்பத்து, பல்லவ ராயன், அவனியாபுரம், சிந்தாமணி, ராவுத்த பாளையம், ஆரப்பாளையம், அனுப்பானடி, பனையூர், சொட்டதட்டி, கொட்டியனூர், கொந்தகை, விறகனூர் வழியாக சென்று கண்மாய்களை நிரப்பியது. மற்றொரு பக்கம் பிரியும் கால்வாயின் இடதுபுறம் சக்கி மங்கலம், குன்னத்தூர், சாக்குடி, பூவந்தி, அங்காடிமங்கலம், மாடப்புறம், கணக்கன்குடி, பதினெட்டான் கோட்டை, கரிசக்குளம் கண்மாய்களை நிரப்பியது.

வலதுபுறம் செல்லும் கால்வாய் புளியங்குளம், மணலூர், திருப்புவனம் வரையில் கண்மாய்களை நிரப்பியது. இப்படியாக சுமார் 86 கண்மாய்கள் வைகை - அரிகேசரி - கிருதுுமால் இணைப்பு மூலம் தண்ணீரைப் பெற்றன. மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்றன. கிருதுமாலின் மொத்த நீளம் 200 கி.மீ. மதுரை நகருக்குள் மட்டும் இது சுமார் 30 கி.மீ ஓடுகிறது. இறுதியாக கிருதுுமால் ராமேசுவரம் அருகே கடலில் கலக்கிறது.

பாசனத்துக்கு மட்டுமல்ல, பக்திக்கும் பெயர் பெற்றது கிருதுமால் நதி. கூடலழகர் கோயில் அருகே ஓடிய கிருதுமாலின் தண்ணீரில்தான் கூடலழகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. கூடற்புராணம் கிருதுமாலை கூடலழகர் அணிந்த மாலை என்று போற்றுகிறது.
 
‘வேகமாதலின் வேகவதி என்றும்
மாகம் வாய்ந்ததனால் வையை என்றும்தார்
ஆகலால் கிருதுமாலையதாம் என்றும்
நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ’

- என்கிறது அந்தப் பாடல்.
 
அதாவது வேகமாக பாய்வதால் வேகவதி என்றும், திருமாலின் ஒரு திருவடி சத்தியலோகம் சென்று அங்கிருந்து நீர் வையத்தில் விழுந்ததால் வையை என்றும், அதன் ஒரு பிரிவு கூடலழகருக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. அதுவே கிருதுமாலை என்கிறது கூடற்புராணம்.

மதுரையில் இப்போதும் தைப்பூசத்துக்கு முதல் நாள் அறுப்புத் திருவிழா நடக்கும். சுந்தரேஸ்வரரும் அம்மனும் கோயிலில் இருந்து புறப்பட்டு சிந்தாமணி கிருதுமால் நதிக்கரைக்கு வருவார்கள். நதிக்கரையில் மீனாட்சி அம்மனே நெல் அறுவடை செய்கிறாள் என்பதை உணர்த்தும் சடங்கு இது. இதுமட்டுமல்ல, மதுரையின் தொன்மையான விழாக்கள் அனைத்தும் கிருதுமால் நதியை அடிப்படையாகவே கொண்டிருந்தன. கிருத யுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலி யுகம் ஆகிய அனைத்து யுகங்களிலும் கிருதுமால் நதியின் சிறப்பை கூடற்புராணம் விளக்குகிறது.

ஆனால், நவீன யுகத்தில்தான் நதியை அழித்துவிட்டார்கள். 1980-களின் தொடக் கத்தில் மிகக் குறுகிய காலத்தில் அதிவேக மாக அழிக்கப்பட்டது கிருதுமால் நதி. மதுரை யில் வடிவேலன் என்றொரு நண்பர் இருக் கிறார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அரசரடி கிருதுமாலை பார்க்கும்போதெல்லாம் கண்ணீர் விடுவார்.

“நல்லா ஞாபகம் இருக்கு. 1980-ம் வருஷம் இங்கனதான் தண்ணியை மொண்டு குடிப்போம்” என்பார் அவர். இன்னொரு பெரி யவர் அழகுமுத்து வேலாயுதம். கிருதுமால் நதியை சீரமைக்கக் கோரி அரசு அலுவல கங்கள் மற்றும் நீதிமன்றங்களின் படிகள் ஏறிக்கொண்டிருக்கிறார். 90-களின் தொடக் கம் வரையிலும் கூட மதுரை புறநகரிலும் சிவகங்கையிலும் நதியை நன்னீருக்காக மக்கள் புழங்கியிருக்கிறார்கள்.

இன்றைய தலைமுறையினருக்கு கிருது மால் என்கிற பெயரே தெரியவில்லை. ‘அய்யே, சாக்கடைண்ணே’ என்கிறார்கள். பொன்மேனி, எல்லீஸ் நகர், மதுரை மத்திய பேருந்து நிலையம், மாகாளிப்பட்டி, கீரைத் துரை, சிந்தாமணி இங்கெல்லாம் கிருது மாலை நெருங்க முடியவில்லை. துர்நாற்றம் மூச்சடைக்கிறது. நகரின் அத்தனை கழிவு களும் பகிரங்கமாக நதியில் கொட்டப்படுகி றது. தனியாரும் அரசாங்கமும் கண்மண் தெரி யாமல் நதியை ஆக்கிரமித்திருக்கிறார்கள். நதியின் உடல் நசுக்கி ஓடுகின்றன மதுரை - போடி, மதுரை - விருதுநகர், மதுரை - ராமேசுவரம் இருப்புப் பாதைகள்.

கிருதுமால் நதியை நம்பியிருந்த கண்மாய்கள் அத்தனையும் காய்ந்துப்போய் விட்டன. சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாயம் அழிந்துவிட்டது. 2004-ல் ரூ.25 கோடி மதிப்பில் ஜவஹர்லால் நேரு புனரமைப்புத் திட்டத்தில் கிருதுமாலை சுத்திகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நதி மேலும் சாக்கடை ஆனது. உலக வங்கி உதவி யோடு தமிழ்நாடு நீர்வள, நிலவள மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 74 கோடியில் பணிகள் நடந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையே நதியை சீரமைக்க மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. நதிக்கு அல்ல, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரி களுக்கும் யோகம்தான். பணத்தை செல வழிக்க சென்னைக்கு கூவம், மதுரைக்கு கிருதுமால்.

புராணங்களில் கூடலழகரின் மார்பில் மாலையாக படர்ந்தது கிருதுமால் நதி. பாண்டியர்கள் காலத்தில் தொன்மையான பாசனத் திட்டமாக இருந்தது கிருதுமால் நதி. நம் காலத்தில்தான் அது சாக்கடையாக மாறிவிட்டது. நிகழ்காலத்தில் நாம் செய்த பாவம் அது. அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். தெய்வம் கொல்லாவிட்டாலும் நதி ஒருநாள் தன்னை அடைந்தே தீரும். 

சென்னைவாசிகளுக்கு வந்தால் மட்டும்தான் ரத்தமா?

  • 30 ஆண்டு கால ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கும் பெரியகுளம் பகுதியின் பொட்டல் குளம், நஞ்சாவரம் குளங்கள்.
    30 ஆண்டு கால ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கும் பெரியகுளம் பகுதியின் பொட்டல் குளம், நஞ்சாவரம் குளங்கள்.

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

இத்தனை காலமாக இல்லாத கோபம் இப்போது வந்திருக்கிறது. சென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி அடித்தட்டு மக்கள் வரை நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொங்குகிறார்கள். அடையாறு வெள்ளத்துக்குக் காரணமான ஆக்கிரமிப்புகள் அடித்து நொறுக்கப் படுகின்றன. பெரும் கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள், கோயில்களும்கூட தப்ப முடிய வில்லை. அசுர வெள்ளத்துக்கு முன் அரசியல் தலையீடுகள் அமுங்கிவிட்டன. சாட்டையைச் சுழற்றுகிறார்கள் அதிகாரிகள். அனல் பறக் கின்றன தொலைக்காட்சி விவாதங்கள். வரிந்துக்கட்டிக்கொண்டு எழுதுகிறார்கள் வல்லுநர்கள். நல்ல விஷயம். வரவேற்போம். 

அதேசமயம் சென்னைவாசிகளுக்கு வந்தால் மட்டும்தான் ரத்தமா? அதுவே கிராமத்து விவசாயிக்கு வந்தால் தக்காளி சட்னியா என்று எழும் கேள்வியை அவ்வளவு எளிதாக ஒதுக்கித் தள்ள முடியவில்லை. நேற்று இன்றல்ல, சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண் மாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற் றுங்கள், வெள்ளம் வந்து வெள்ளாமை மூழ்கிபோகின்றன என்று கதறுகிறார்கள் பெரியகுளம் விவசாயிகள். நடத்தாத போராட்டம் இல்லை. பார்க்காத அமைச் சர்கள் இல்லை. முதல்வர், பிரதமர், ஜனாதிபதி வரை புகார் அனுப்பி விட்டார்கள். தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் லாசர் சட்டமன்றத்திலும் பேசிவிட்டார். இன்றும் குறைந்தது மாதத்துக்கு 10 போராட் டங்கள் நடைபெறுகின்றன. இன்னும் என்னதான் செய்வது? ஒபாமாவுக்கா ஓலை அனுப்ப முடியும்?

ஒவ்வோர் ஆண்டும் நொந்து சாகிறார் கள் விவசாயிகள். கண்மாய்களின் ஆக்கி ரமிப்பின் நீட்சியாக ஆண்டுதோறும் சிந்துவம்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு கலவரங்கள் வெடிக்கின்றன. வெட்டு குத்துக்கள் நடக்கின்றன. பருவமழை தொடங்குகிறதோ இல்லையோ, நவம்பர் மாதம் பிறந்தால் பெரியகுளத்தில் இருந்து ஒரு போலீஸ் பட்டாலியன் அங்கு செல்வது சம்பிரதாயமாகிவிட்டது. கடந்த வாரம் நடந்த ஒரு தண்ணீர் பற் றாக்குறை சண்டையில்கூட டிராக்டரை கண்மாய்க்குள் தள்ளிவிட்டார்கள் விவசாயிகள்.

அடிப்படையில் தேனி மாவட்டம் ஆறுகள் சூழ்ந்த ஊர். தெற்கே முல்லை பெரியாறு, சண்முகா நதி, வைகை ஓடு கின்றன. மேற்கே குரங்கணி நதி ஓடுகிறது. வடக்கே வராக நதி, மஞ்சளாறு, பாம்பாறு ஓடுகின்றன. இவற்றில் பெரி யாறு தவிர, மற்ற ஆறுகளில் மழைக் காலங்களில் மட்டுமே தண்ணீர் இருக்கும். வைகை இங்கே ஓடினாலும் அதிலிருந்து பாசனம் கிடையாது. அது இங்கே பெரும் பள்ளத்தில் ஓடு கிறது. அணைக்காக நிலங்களைக் கொடுத்த விவசாயிகள் பரந்து விரிந்த அணையையும் பள்ளத்தில் ஓடும் வைகையையும் கண்குளிரப் பார்த்துக்கொள்ள மட்டும் முடியும். அள்ளி அனுபவிக்க முடியாது. இங்கி ருந்து 45 கி.மீ தொலைவுக்கு அப்பால் அணைப்பட்டியில்தான் வைகையின் நேரடிப் பாசனம் தொடங்குகிறது.

ஆக, இங்கு கண்மாய் பாசனம்தான் பிரதானம். அந்தக் கண்மாய்களிலேயே கை வைத்திருப்பதுதான் பிரச்சினைக்கு அடிப்படை காரணம். பெரியகுளம் தாலுகாவில் பொட்டல்குளம், நஞ்சா வரம் குளம், நெடுங்குளம், குட்டிக்குளம், ரெங்கன் குளம் ஆகிய ஐந்து கண் மாய்கள் இருக்கின்றன. பாம்பாறு மூலம் தண்ணீர் பெறும் சங்கிலித் தொடர் கண்மாய்கள் இவை. இந்த ஐந்து குளங்களும் நிரம்பி மறுகால் பாய்ந் தால் அடுத்தடுத்த ஊர்களில் இருக்கும் குள்ளப்புரம் முதல் கண்மாய், இரண் டாம் கண்மாய், மறுகால்பட்டி கண்மாய், பொம்மிநாயக்கன்பட்டி கண்மாய், சிந்துவம்பட்டி கண்மாய் ஆகிய அடுத்த ஐந்து குளங்களுக்குத் தண்ணீர் செல்லும்.

ஆனால், பொட்டல்குளம், நஞ்சாவரம் குளம், நெடுங்குளம், குட்டிக்குளம், ரெங்கன் குளம் ஆகிய ஐந்து கண் மாய்கள் சுமார் 20 ஆண்டுகளாகவே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. கரை தொடங்கி கண்மாய் வரை தென்னை, வாழை, கரும்பு தோட்டங்கள் போட்டிருக் கிறார்கள். பல இடங்களில் கண்மாயின் சுவடே தெரியவில்லை. கண்மாய்க்குள் தண்ணீர் வந்துவிடக் கூடாது என்பதற்காகக் கரைகளை வெட்டிவிடு கிறார்கள். இதனால், அருகில் இருக்கும் சுமார் 2,000 ஏக்கர் விவசாய நிலங்க ளுக்குள் வெள்ளம் புகுந்து பயிர்கள் மூழ்கிவிடுகின்றன. அதேசமயம், ஆக்கிர மிப்பு காரணமாக அடுத்துள்ள ஐந்து கண்மாய்களுக்குத் தண்ணீர் செல்வதும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தடைபட்டிருக்கிறது. அங்கெல்லாம் வறட்சியில் தவிக்கிறார்கள் விவசாயிகள். ஒருபக்கம் வெள்ளம், இன்னொரு பக்கம் வறட்சி.

அதிகாரிகளிடம் கேட்டால் கை வைத்தால் தூக்கி அடித்துவிடுவார்கள் என்கிறார்கள். ஆக்கிரமித்திருப்பது அத்தனை பேரும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள். இப்போது நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வரும் முக்கிய எதிர்க்கட்சியின் இரண்டு பிரமுகர்கள் சுமார் 600 ஏக்கர் கண்மாய் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்கள். அதற்கு மின் இணைப்பும் கொடுக்கப் பட்டிருக்கிறது. அரசியலோடு சாதிய மும் கைகோத்திருக்கிறது. ஆக்கிரமிப் பாளர்களில் பெரும்பாலானவர்கள் தேனி மாவட்டத்தின் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். கை வைத்தால் ஓட்டு வங்கியில் ஓட்டை விழுந்துவிடும் என்று அஞ்சுகிறது அரசு.

சென்னையில் போரூர் ஏரியின் நடுவே தனியார் கல்வி நிறுவனத்துக்காக பொதுப் பணித்துறை போட்ட சாலையை அகற்றும்படி உத்தரவிட்டுள்ளது பசு மைத் தீர்ப்பாயம். கூவத்தில் கழிவு நீரை திறந்துவிட்டதற்காக மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனத்தை மூட உத்தரவிட்டுள்ளது பசுமை தீர்ப்பாயம். இப்போது மட்டுமல்ல; நீதிமன்றங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பல காலமாக உத்தரவுகளைப் பிறப் பித்துக்கொண்டேதான் இருக்கின்றன. அரசுகள்தான் அலட்சியம் காட்டுகின்றன.

2001-ல் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில் “ஒரு குளத்தில் தண்ணீர் இல்லை என்பதாலேயே அதனை பிற பயன்பாட்டுக்கு மாற்றக் கூடாது. தண்ணீர் இருந்தாலும் இல்லா விட்டாலும் குளம் குளம்தான். அவற்றை பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு” என்றது. 2005-ல் கள்ளக்குறிச்சி தச்சூர் ஏரி ஓடைப் புறம் போக்கு ஆக்கிரமிப்பின்போது தீர்ப்பு கூறிய உயர் நீதிமன்றம், “தச்சூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், ஓடைகள், வரத்துக்கால், வெள்ளக்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டது. 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “நீர்நிலைகள் அரசுக்குச் சொந்தமானவை அல்ல; அவற்றை காக்கும் அறங்காவலர்களாகவே அரசு இருக்க வேண்டும். அவற்றை எடுத்துக் கொள்ளவும் பிறருக்குப் பயன்படுத்த அனுமதிக்கவும் அரசுக்கு அனுமதி இல்லை” என்றது.

சமீபத்தில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், “நீர்நிலைகளின் ஆக்கி ரமிப்பை அகற்றுவது குறித்து அரசு விரிவான வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது. கடந்த வாரம் இயற்கை வளம் சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், “தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து எந்தக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது. தமிழக அரசு இதனை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்” என்றது.

நீதிபதிகள் உத்தரவிடத்தான் முடியும். உத்தரவுகளை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை அல்லவா! 

வராத வைகையை வரவேற்ற அதிகாரிகள்!

கோவில்பட்டி குளம்
கோவில்பட்டி குளம்

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

பாண்டியர்களின் நீரியல் தொழில் நுட்பங்களைப் பார்த்தோம். நிகழ் காலத்துக்கு வருவோம். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டிக்குத் தெற்கே வேலப்பர் மலையில் உற்பத்தியாகிறது நாகலாறு. இதன் மூலம் ஆசாரிப்பட்டி, முத்து சங்கிலிப்பட்டி, பாலசமுத்திரம் நல்லிடைச் சேரி, கோவில்பட்டி சக்கிலிச்சி அம்மன் ஆகிய கண்மாய்கள் தண்ணீர் பெறுகின்றன. வடகிழக்குப் பருவ மழை மட்டுமே இந்த கண்மாய்களின் நீர் ஆதாரம். 
 
ஒருமுறை இந்தப் பகுதியில் பருவ மழை பொய்த்தது. அதேசமயம், வருச நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வைகை பெருக்கெடுத்தது, கண்டனூர், ஆத்தாங் கரைப்பட்டி கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அப்போது வெள்ளச் சேதங் களைப் பார்வையிட அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். இங்கே வந்தார். 

ஆண்டிப்பட்டி மக்கள் எம்.ஜி.ஆரிடம், “கைக்கு எட்டும் தூரத்தில் வைகை இருந்தாலும் எங்கள் கண்மாய்கள் காய்ந்து கிடக்கின்றன. வைகையில் கால்வாய் வெட்டி கண்மாய்களுக்கு தண் ணீரைத் திருப்பிவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்கள். அதன் படி துரைசாமிபுரம் வைகை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டது. அதிலிருந்து 23.5 கி.மீ-க்கு மரிக்குண்டு, கோடாங்கி நாயக்கர், பாலசமுத்திரம் நல்லிடைச் சேரி, கோவில்பட்டி சக்கிலிச்சி அம்மன் கண்மாய்கள் வரை கால்வாய் வெட்டப் பட்டது. ஒரே ஆண்டில் பணிகள் முடிந் தன. அந்த ஆண்டு மழையும் பெய்தது. வைகையில் தண்ணீரும் ஓடியது. ஆனால், புதியதாக வெட்டப்பட்ட கால் வாயில் மட்டும் தண்ணீர் வரவில்லை. கண்மாய்கள் காய்ந்தே கிடந்தன. 

ஆனால், அதெல்லாம் அதிகாரிக ளுக்கு முக்கியமாகப்படவில்லை. கால் வாய்களின் திறப்பு விழாவை நடத்திவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார்கள் அவர்கள். தடபுடலாக ரிப்பன் வெட்டி கால்வாயைத் திறந்து வைத்தார்கள். வராத வைகையைக் கைதட்டி வரவேற்றார்கள். இந்தக் கூத்தை எல்லாம் காண சகிக்காத விவ சாயிகள், அங்கேயே பிரச்சினை எழுப்பி னார்கள். அரசு விழாவின் ஆடம்பரத்தில் அமுங்கிப்போனது ஏழை விவசாயிகளின் குரல். 

தண்ணீர் வராததற்கு காரணம் இது தான்: வாய்க்கால்கள் வரும் வழியில் 11 இடங்களில் சாலைகள் மற்றும் ஓடைகள் குறுக்கிடுகின்றன. அங்கெல்லாம் வாய்க் காலைவிட குறைவான விட்டத்தில் ‘ப’ வடிவ தூம்புக் குழாய்கள் அமைக்கப் பட்டுள்ளன. குறைவான விட்டம் கொண்டவை என்பதால் அவற்றில் ஆற்று நீர் வேகமாக புகுந்து வரமுடியவில்லை. தூம்பு குழாய்களின் உள்ளே ஓர் ஆள் இறங்கி பழுது பார்க்கும்படியாக அமைக்கப்படவில்லை. இதனால் உள்ளே அடைத்துக்கொண்டிருக்கும் மண், கற்களை எளிதில் அகற்ற முடிய வில்லை. வாய்க்காலும் சரியான நில மட்டத்தில் அமைக்கப்படவில்லை.

இதற்கிடையே இன்னொரு கொடுமை யும் நடந்தது. நாகலாற்றில் மணலை அள்ளி ஏலம் விட அரசு முடிவு செய் தது. விவசாயிகளோ, “மணலை அள்ளினால் தெப்பம்பட்டி, ராஜதானி, பாலக்கோம்பைப் பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றிவிடும். ஏற்கெனவே தேனி, ஆண் டிப்பட்டி, சின்னமனூர் பகுதிகள் நிலத்தடி நீர் வற்றிய கரும்புள்ளி பட்டியலில்தான் இருக்கின்றன” என்று எதிர்ப்பு தெரி வித்தார்கள். பதிலுக்கு அதிகாரிகள், “நாகலாற்றின் குறுக்கே கண்மாயை அமைத்து, நிலத்தடி நீர் வற்றாமல் பார்த்துக்கொள்கிறோம்” என்று உத்தரவாதம் கொடுத்தார்கள். ஆனால், அங்கேயும் ஒரு பிரச்சினை முளைத்தது.
“நாகலாற்றில் கண்மாய் அமைத்தால் எங்கள் பகுதிகளின் கண்மாய்களுக்ககுத் தண்ணீர் வருவது தடைப்பட்டுவிடும்” என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள் ஆசாரிப்பட்டி, முத்துசங்கிலிப்பட்டி, நல்லிடைச்சேரி, சக்கிலிச்சி அம்மன் கண்மாய் பாசனதாரர்கள். அதிகாரிகள் அதற்கும் தயாராக ஒரு பதிலை வைத்திருந்தார்கள். “வைகை அணையில் இருந்து அந்த கண்மாய்க ளுக்குத் தண்ணீர் போகிறது” என்று கோப்புகளைக் காட்டினார்கள். அரசும் ஒப்புதல் அளித்தது. ஆற்றின் ஒட்டு மொத்த மணலும் அள்ளப்பட்டது. நாக லாற்றில் கண்மாய் கட்டப்பட்டது. விவ சாயிகள் அஞ்சியதுபோலவே அடுத் தடுத்த கண்மாய்களுக்கு தண்ணீர் வரு வது நின்றுபோனது. மணலை அள்ளிய தால் நிலத்தடி நீர் வற்றி 1,350 பாசனக் கிணறுகளில் 818 மட்டுமே மிச்சமிருந்தன.

சோதனை இதோடு முடிந்துவிட வில்லை. அடிமேல் அடிபட்டார்கள் விவசாயிகள். சித்தார்பட்டி மலையில் இருந்து உற்பத்தியாகும் தண்ணீர் விருமானுத்தூர் ஓடையாக கண்டமனூர் அருகே ஓடிக்கொண்டிருந்தது. இதன் மூலமாக நல்லிடைச்சேரி கண்மாய், சக்கிலிச்சி அம்மன் கண்மாய் ஆகி யவை கொஞ்சம் தண்ணீர் பெற்று வந்தன. இங்கே அடிக்கடி சினிமா படப்பிடிப்புகள் நடக்கும். படப்பிடிப்புக்கு வந்த நடிகர்கள் பலர் விருமானூத்தூர் ஓடைக்கு இரு பக்கமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிப் போட்டார்கள். இவர்களின் தோட்டங்களில் உள்ள கிணறுகள் வற்றாமல் இருக்க விருமானூத்தூர் ஓடையில் ஒரு கண்மாயை வெட்ட அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். அதன் படி விருமானூத்தூர் ஓடை சமவெளிக்கு வந்துச் சேரும் இடத்திலேயே கண்மாய் அமைக்கப்பட்டது. அங்கேயே நின்று போனது விருமானூத்தூர் ஓடை.

இன்று தண்ணீர் இல்லாததால் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் ஒரு குழி நெல்லைக்கூட விதைக்க முடியவில்லை. நஞ்சைதான் போகட்டும்; புஞ்சை போடவும் அங்கே வழி இல்லை. லேசாக தெளிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லாமல் மானாவாரிக்கு மாறிவிட்டார்கள். நெல் விளைந்த பூமியில் மக்காச்சோளம் போட்டிருக் கிறார்கள். கால்நடைகளுக்காவது தீவ னம் வேண்டுமே. எத்தனை எத்தனை குளறுபடிகள். ஆனால், அலட்சியத்துக்கு மட்டும் குறை இல்லை. பராமரிப்பு இல் லாமல் கிடக்கும் தூம்புகளையும் சீரமைத்துத் தரும்படி கேட்கிறார்கள் விவசாயிகள். ஆனால், நிதியில்லை என்கிறார்கள் அதிகாரிகள். வேறு வழி யில்லாமல் கடந்த மாதம் விவசாயிகளே ரூ.1,26,000-யை திரட்டி தூம்புகளைப் பழுது பார்த்திருக்கிறார்கள்.

மன்னர்கள் காலத்தில் மயிலாடும்பாறை வைகை ஆற்றின் தடுப்பணையில் இருந்து வாய்க்கால் மூலம் இந்தப் பகுதிக்கு தண்ணீர் வந்துகொண்டிருந்ததாம். உள்ளூர் ஜமீன்கள் இதனை பராமரித்தார்கள். ஆங்கிலேயர் காலத்தில் இந்தக் கால்வாய்கள் பராமரிக்கப்படாததால் தண்ணீர் வருவது தடைப்பட்டது. விளைச்சல் பாதிக்கப்பட்டது. வரி செலுத்த விவசாயிகள் மறுத்துவிட்டனர். விசாரணை நடத்திய ஆங்கிலேயர், கால்வாயை சரியாக பராமரிக்கவில்லை என்றுச் சொல்லி கண்டமனூர் ஜமீனுக்கு ரூ.16,000 அபராதம் விதித்தார்கள். (ஆதாரம்: தமிழ்நாட்டில் ஜமீன்தாரி முறை - மதுரை மாவட்டம், பேராசிரியர் எஸ்.வர்க்கீஸ் ஜெயராஜ்)

ஆனால், இன்றைய அலட்சியங் களுக்கு அபராதம் விதிப்பது யார்? 

பாண்டியர்கள் தாலாட்டிய வைகை

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

தமிழகத்தில் இறந்து கொண்டிருக்கும் நதிகளில் ஒன்று வைகை. அது பாதி செத்துவிட்டது. மதுரையில் மனிதர்களைவிட அதிகம் கொலை செய்யப்பட்டது வைகையாகத்தான் இருக்கும். ஆற்றின் பல இடங்களில் மலக் கழிவு கால்வாய்கள் புதைக்கப்பட்டிருக் கின்றன. சகஜமாகக் கலக்கின்றன சாக்கடைகள். சலனமின்றி கடந்து போகிறார்கள் மனிதர்கள். மனசாட்சி என்பதே இல்லாமல் போய்விட்டது.

எப்படி இருந்த நதி தெரியுமா வைகை? ஒருகாலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தது வைகை நதி. பாண்டியர்களின் செல்லப் பிள்ளை அது. வருசநாட்டிலிருந்து ராமநாதபுரம் வரை ஒரு இளவரசியைப்போல வலம் வந்தது வைகை. பாண்டியர்கள் வைகையை மடியில் வைத்து தாலாட்டினார்கள். ஏரிகள், கண்மாய்கள் என்னும் தொட்டிலில் வைத்து சீராட்டினார்கள். அகமகிழ்ந்து வாரி வழங்கியது வைகை.

வைகையை கடலில் புகாத நதி என்பார்கள். உவமானத்துக்கு சொன்னா லும் உண்மையும் இருக்கிறது. இப் போதும் வைகையின் நீர் நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெள்ளங் களின்போது மட்டுமே கடலில் கலக்கிறது. காரணம், பாண்டியர்களின் நீர் மேலாண்மை. நீரை வீணாக்கக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார் கள். பாண்டியர்கள் காலத்தில் வைகை யில் சுமார் 3000 சங்கிலித் தொடர் ஏரிகள், கண்மாய்கள் அமைக்கப்பட்டன. அந்த நீர் நிலைகள் அத்தனையும் வைகையின் நீரை உள்வாங்கிக்கொண்டன. இதனால், கடலுக்கு வைகையின் நீர் மிகக் குறை வான அளவே சென்றது.

இதை வைத்து ஒருமுறை ஒட்டக்கூத் தருக்கும் புகழேந்திப் புலவருக்கும் பாட்டுப் போட்டி நடந்தது. அப்போது ஓட்டக்கூத்தர்,
 
“நாரியிடப் பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதாத வைகையே” என்று பாடினார்.

அதாவது, உமையை இடப்பக்கமாகக் கொண்ட சிவபெருமானுக்கு பாற்கடல் நஞ்சை கொடுத்ததால் நான் கடலுக்கு புகமாட்டேன் என்று மறுத்துவிட்டதாம் வைகை.

இதற்கு எதிர்ப்பாட்டு பாடினார் புகழேந்திப் புலவர்.
“வாரி இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ் பாண்டிய நாடு”

என்றார் அவர். 

முன்னவர் புராண ரீதியாக காரணம் சொன்னார் எனில் பின்னவர் புவியியல் ரீதியாக காரணத்தை விளக்கினார். வைகை தனது தண்ணீரை இரு கரைகளிலும் வாரி வாரி (வாய்க்கால்கள் வழியாக) வழங்கிவிட்டதால் கடலுக்கு செல்ல நீர் இல்லை என்கிறார்.

வைகை நதி மேற்குத் தொடர்ச்சி மலை யின் கிழக்குப் பகுதியிலுள்ள வருசநாடு - ஆண்டிபட்டி மலைத் தொடரின் உயரமான மேகமலைப் பகுதியில் உற்பத்தியாகிறது. வனத்துக்குள்ளேயே வைகையுடன் மேல் மணலாறு, இரவங்கலாறு இணைந் துக்கொள்கின்றன. சதுரமலையிலிருந்து வரும் மூங்கிலாறு வருச நாட்டில் இணை கிறது. கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து வரும் முல்லையாறு, தேனிக்கும் ஆண்டிப்பட்டிக்கும் இடையே இணைந்து வைகை அணையை அடைகிறது. கூடலூருக்கு மேற்கே கலிக்கவையாறு, சுருளி மலையிலிருந்து சுருளியாறு, சுருளிப்பட்டிக்கு வடக்கில் கூத்தநாச்சி வாய்க்கால், காமயக்கவுண் டன்பட்டிக்கும் அணைப்பட்டிக்கும் இடையே வறட்டாறு என்கிற தேனியாறு மற்றும் சில ஓடைகள் வைகையுடன் இணைகின்றன. வைகை அணைக்கு கிழக்கிலும் ஓடைகள் வைகையுடன் இணைகின்றன. பழனி மலையின் மேற்கில் உற்பத்தியாகும் சோற்றுப்பாறை ஆறு, பாம்பாறு ஆகியவை வராக நதியுடன் கலந்து வைகையுடன் இணைகின்றன. இதற்கு கீழே மஞ்சலாறு, மருதா நதி ஆகியவை வைகையின் வடகரையில் இணைகின்றன. இதுவரை மலைப் பள்ளதாக்குகளில் ஓடி வரும் வைகை, அணைக்கரைப்பட்டியில் சமதளத்தை அடைகிறது. பின்பு மதுரை அருகே சாத்தையாறு ஓடையும், மானாமதுரை அருகே உப்போடையும் வைகையுடன் கலக்கின்றன. இத்தனை நதிகள் இணைந்ததால் கடல் போல பொங்கி ஓடியது வைகை. அது ஒரு காலம்.

அதேசமயம் வடகிழக்கு பருவ மழையை மட்டுமே நம்பியிருந்தது வைகை. ஆற்றில் எப்போதும் தண்ணீர் ஓடும் என்று சொல்ல முடியாது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த உண்மையை உணர்ந்த பாண்டியர்கள் ஆற்றில் தண்ணீர் ஓடும்போது அதனை முழுமையாக ஏரிகளில் சேமித்துக் கொண்டார்கள். வைகையின் இந்த நீரியல் ஓட்டத்தை அவர்கள் நன்றாக புரிந்து வைத்திருந்தார்கள். குறிப்பிட்ட ஆண்டில் வைகையில் நிச்சயம் நீர்ப்பாயும் என்று தெரிந்தால் குறிப்பிட்ட ஏரிகள் நிரம்பும் வகையில் ஆற்றிலிருந்து நேரடி கால்வாய்கள் வெட்டினார்கள். வெள்ளக்காலங்களில் அந்தக் கால்வாய்கள் திறக்கப்பட்டன. நீர்வரத்து குறைவான காலங்களில் ஆற்றின் குறுக்கே சாய்வாக மரம், தழை, மண் கொண்டு தற்காலிக கொரம்புகளை அமைத்தார்கள். சில இடங்களில் பாறைகள் கொண்டு சிறு அணைகளை அமைத்தனர்.

நாஞ்சில் நாட்டில் பறலையாற்றையும் பழையாற்றையும் இணைத்ததுபோல வைகையில் கால்வாய் வெட்டி அருகிலுள்ள கீழ்குண்டாறு, சருகுணி ஆறு ஆகியவற்றுடன் வைகையை இணைத்தார்கள். வைகையின் வடிநிலப் பகுதியும் அதனை அடுத்துள்ள குண்டாறு, சருகணியாறு வடிநிலப் பகுதியையும் பிரிக்கும் பகுதி வைகையின் தளத்தைவிட மிகக் குறைந்த அளவே உயரம் கொண்டது. அதேசமயம் வைகையின் வடிநிலம் குறுகலானது. இந்த புவியியல் பொறியியல் உண்மையை புரிந்துகொண்ட பாண்டியர்கள், வைகையின் நீரியல் ஓட்டத்துக்கு ஏற்ற பொறியியல் நுட்பங்களுடன் வைகையிலிருந்து கால்வாய்களை அமைத்தார்கள்.

பாண்டிய மன்னன் செழியன் சேந்தனால் (கி.பி.620 - 650) வைகையில் மதகு மற்றும் அரிகேசரி கால்வாய் வெட்டப்பட்டது. சோழவந்தான் தென் கரை கண்மாயை உருவாக்கியதும் செழின் சேந்தன்தான். குருவித்துறை, நாகமலை புதுக்கோட்டை, மாடக்குளம், நிலையூர், கூத்தியார்குண்டு, உறப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால்களை வெட்டி கண்மாய்களை நிரப்பினார்கள். சுட்ட செங்கற்களால் ஏரியின் மதகை வடிவமைத்தார்கள். நீர் கசியாதபடி மண்ணுடன் தாவர பிசின் உள்ளிட்ட சில பொருட்களை சேர்த்து ‘அரைமண்ணை’ பயன்படுத்தி ஏரிக் கரைகளை அமைத்தார்கள்.

இன்று ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய ஊர்களில் கண்மாய்கள் காய்ந்துக் கிடக்கின்றன. தமிழகமே வெள்ளக்காடாக மிதந்தபோதும் அந்தக் கண்மாய்களில் துளி தண்ணீர் வந்து சேரவில்லை. விவசாயம் பொய்த்துவிட்டது. கண்ணீர் வடிக்கிறார்கள் விவசாயிகள். காரணம், வைகை ஆற்றில் நமது நவீன பொறியாளர்கள் கட்டிய கால்வாய்கள். பாண்டியர்களுக்கு தெரிந்திருந்த வைகையின் நீரியல் தொழில்நுட்பம், பொறியியல் படித்த பொறியாளர்களுக்கு தெரியாமல் போனதுதான் வேதனை. 

குளத்தில் இருப்பது தண்ணீர் மட்டுமில்லை கோவை மக்களின் வியர்வையும்தான்!

  • சீரமைப்புப் பணிகளுக்குப் பின்பு நிரம்பிய உக்கடம் பெரிய குளம்.
    சீரமைப்புப் பணிகளுக்குப் பின்பு நிரம்பிய உக்கடம் பெரிய குளம். 
     
  • நண்டங்கரை ஓடையில் சீரமைப்புக்குப் பின்பு கட்டப்பட்ட தடுப்பணையில் நிரம்பியிருக்கும் தண்ணீர்.
    நண்டங்கரை ஓடையில் சீரமைப்புக்குப் பின்பு கட்டப்பட்ட தடுப்பணையில் நிரம்பியிருக்கும் தண்ணீர்.

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

தண்ணீரின் இயல்பு குளிர்ச்சி. மனிதனுக்கு உணர்வை தருகிறது தண்ணீர். நல்ல மனதை தருகிறது தண்ணீர். மனித மனங்களில் அன்பை ஊற்றெடுக்க வைக்கிறது தண்ணீர். ஒவ்வொரு நாளும் நம்மை புதிதாய் பிறக்க வைக்கிறது தண்ணீர். ஒரு சமூகத்தின் மனநிலையைக் கண்ணாடியாகப் பிரதிபலிக் கிறது தண்ணீர். வானமும், பூமியும், காற்றும், நீர் நிலைகளும், பசுஞ்சோலைகளும், புல் வெளிகளும்தான் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. தண்ணீர் இல்லை என்றால் எதுவும் இல்லை. தண்ணீர் இல்லாத சமூகம் வறண்டுபோகும். வறட்சி யின் வெம்மையில் பிறக்கிறது வெறுப்பு. அடங்காத தாகத்தில் பிறக்கிறது கோபம். இல்லாத வேதனையில் பிறக்கிறது பொறாமை. எல்லாமுமாகச் சேர்ந்து உருவெடுக்கிறது வன்முறை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இவ்வளவு அழகான இயற்கையை அழித்துவிட்டு நாம் புதிதாய் வேறு எதை உருவாக்கப்போகிறோம்? 

நம்மால் இன்னொரு மனிதனைத் தவிர உயிர்ப்போடு எதையாவது உருவாக்க முடியுமா? ஒரு துளித் தண்ணீரை? ஒரு பிடி மண்ணை? ஒரு நொடி சுவா சத்துக்கான காற்றை? அழகாய் பூக் கும் மலரை? இதில் ஒன்றையாவது நம்மால் உருவாக்க முடியுமா? நவீன தொழில்நுட்பங்களில் நாம் உரு வாக்கியது எல்லாம் இயற்கையின் மாதிரிகளே. இயற்கைதான் எல்லாம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. அந்த இயற் கையை அழித்துவிட்டு எதை சாதிக்கப் போகிறோம் நாம்? பேராசை வெறியில் நம் கழுத்தை, நாமே அறுத்து ரத்தம் குடித்துக் கொண்டிருக்கிறோம்!

அன்றைக்கு நொய்யல் ஆற்றிலும் அப்படிதான் நடந்தது. “இனி குளத்துக்குத் தண்ணீர் வருவது சிரமம். இங்கே ஒரு கும்பல் வந்து ஏராளமான இடங்களில் கால்வாய் கரைகளை உடைத்துவிட்டு போய்விட்டார்கள். வேக மாக வந்த தண்ணீர் உடைப்புகளில் வெளியேறிவிட்டது. ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் இனி கோவை நகரம் வரை தண்ணீர் வர சாத்தியமே இல்லை” என்றார்கள். குளத்தைத் தூர் வாரும் தகவல் கிடைத்ததும் சிலருக் குத் தூக்கம் கெட்டது. அவர்கள் நொய் யல் ஆற்றையும், கரையோரங்களையும், குளத்துக்குத் தண்ணீர் வரும் கால் வாயையும் குளத்தையுமே ஆக்கிரமித் திருந்தனர். குளத்தில் மட்டும் சுமார் 1,000 குடியிருப்புகள் ஆக்கிரமித்திருந்தன. தண்ணீர் வந்தால் பாதிப்பு நமக்கு தான் என்று அஞ்சினார்கள் ஆக்கிரமிப் பாளர்கள். அதனாலேயே கரைகளை உடைத்துப்போட்டார்கள். இந்தத் தகவல் வந்தபோது நள்ளிரவு 12 மணி. மண்வெட்டிப் பிடித்து குழந்தைகளின் பிஞ்சு விரல்கள் வெடித்திருந்தன. தங்கள் வீடுகளில்கூட அவர்கள் அப்படி வேலை செய்திருக்க மாட்டார்கள். லட்சம் பேரின் உழைப்பு அது. ஒரு சமூகத் தின் கனவு அது. நள்ளிரவில் அத்தனை பேரும் கலங்கி அழுதார்கள். குளத்தின் வறண்ட மண்ணில் மழையாகப் பொழிந் தது மக்களின் கண்ணீர்.

ஆனால், அதுவே அவர்களை வைராக் கியம் கொள்ளச் செய்தது. நள்ளிரவு என்றும் பார்க்காமல் அப்போதே கிளம் பினார்கள். வாய்க்கால் வழியில் வீறு நடை போட்டது பெரும் படை. இன் னொரு பக்கம் மாநகராட்சி, பொதுப் பணித்துறை, காவல் துறைகள் கைகோத் தன. விடியற்காலை 3 மணிக்கு உடைப் பெடுத்த இடங்களை அடைந்தார்கள். பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உடைக் கப்பட்டிருந்தன. இரவோடு இரவாக செங்கல், சிமெண்ட், மணல் மூட்டைகள் குவிந்தன. அந்த நிமிடமே தொடங்கியது கட்டுமானப் பணி. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்தார்கள். புதிய கரையைத் தண்ணீர் கரைக்காமல் இருக்க நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. அதற்கு பின்னால் கரை கட்டப்பட்டது. வேலை முடித்து நிமிர்ந்தபோது சூரியன் உதிக்கத் தொடங்கியிருந்தது. ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வை உணர்ந்தது இயற்கை. பெரு மழை கொட்டத் தொடங் கியது. மெதுவாய் பாம்புபோல ஊர்ந்து வந்த தண்ணீர் பாதங்களுடன் மக்கள் இதயங்களையும் நனைத்தது. சிறிது நேரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு நகரத்தின் குளத்துக் குள் வந்துச் சேர்ந்தது தண்ணீர். மக்கள் மலர்களைத் தூவி ஆரவாரித்தார்கள். உணர்ச்சிப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். பல ஆண்டுக ளுக்குப் பிறகு நிரம்பியது கோவை பெரிய குளம். இப்போது அந்தக் குளத்தில் இருப்பது தண்ணீர் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான மக்களின் வியர் வையும் ஆனந்தக் கண்ணீரும்தான்!

தயவுசெய்து மீண்டும் அதில் சாக்கடையைக் கலக்காதீர்கள்.

கோவையில் இன்னொரு சாதனையும் நடந்திருக்கிறது. அதையும் பார்த்து விடுவோம். ஒருகாலத்தில் நொய்யலாறு 34 சிற்றாறுகளைத் தனது நாடி நரம்பு களாகக் கொண்டிருந்தது. பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சிப் பொங்க அவை ஓடின. காலப்போக்கில் அந்த நாடி நரம்புகள் வெட்டி எறியப்பட்டன. மண் ணுக்குள் புதைக்கப்பட்டன. இன்று எஞ்சியவை நண்டங்கரை, முண்டந் துறை, இருட்டுப்பள்ளம் இவை மூன்றும் தான். குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கும் இந்த ஓடைகளை எட்டிப் பார்க்க அஞ்சுகிறது தண்ணீர். இதில் சிறுவாணி அடிவாரத்தில் இருக்கும் நண்டங்கரை ஓடையைதான் ‘சிறுதுளி’ உயிர்ப்பித்திருக்கிறது.

ஓர் ஆண்டுக்கு முன்பு அவர்கள் அந்த ஓடைக்குச் சென்றபோது அங்கே ஓடை ஓடியதற்கான தடயமே இல்லை. நிச்சயம் அந்த ஓடை இங்கு இல்லை என்றுதான் நினைத்தார்கள். அப்பகுதி விவசாயிகள்தான் ‘இல்லை, நண்டங்கரை ஓடை இங்கேதான் ஓடியது’ என்று படம் வரைந்து பாகம் குறித்துக் காட்டினார்கள். அதுமட்டுமல்ல; மீண்டும் ஓடையைத் தூர் வாரினாலும் தண்ணீர் வரவே வராது என்று சத்தியம் செய் தார்கள். ஆனது ஆகட்டும், முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று களமிறங்கியது ‘சிறுதுளி’. மக்களும் கைகோத்தார்கள். ஊரக வளர்ச்சித் துறையின் ‘நமக்கு நாமே’ திட்டம் கைகொடுத்தது. அரசாங்கம் 49 % மக் கள் 51 % அடிப்படையில் நிதி சேர்ந்தது.

சந்தேகமாகத்தான் ஓடையைத் தோண்டினார்கள். ஆனால், சில அடி கள் தோண்டும்போதே தண்ணீர் ஊற் றெடுத்துப் பொங்கியது. அடைத்து வைத்த கோபத்தில் பீய்ச்சியடித்தது தண்ணீர். ஓடையில் வரும் தண்ணீரைச் சேகரிக்க சிறிய தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. எட்டு மாதங்கள் தீவிரமாக பணிகள் நடைபெற்றன. தடுப் பணை முழுவதும் நீர் நிரம்பியது. சுமார் ஐந்தாண்டுகள் அந்தப் பகுதியில் தண் ணீர் இல்லாமல் தவித்தார்கள் மக்கள். ஓடையும் தடுப்பணையும் வந்தபிறகு வீட்டுக் கிணறுகளின் தண்ணீரை மொண் டுக் குடிக்கிறார்கள் அவர்கள். சிறுவாணி ஊற்றல்லவா அது!
 

நற்குறி சொன்ன நாஞ்சில் நாட்டு அடிமைகள்!


நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றாத அலட்சியம், அதன் நீட்சியாக நிகழ்ந்த வெள்ளம், ஏரியில் தண்ணீர் திறப்பு சர்ச்சைகள், நிவாரணப் பணிகளின் தாமதம் இப்படி சங்கிலித் தொடராக அமைந்த எதிர்மறையான விஷயங்களுக்கு எல்லாம் அடிப்படை காரணம் என்ன? அரசியல் சுதந்திரமின்மை. மொத்த அதிகாரத்தின் குவி மையமாக இருக்கிறார்கள் கட்சிகளின் தலைவர்கள். இதனை கட்சியின் கட்டுக்கோப்பு என்று சொல்ல இயலாது. யாரும் சுயமாக கருத்து சொல்ல முடியாது. சுயமாக செயல்பட முடியாது. தலைமை தவறிழைக்கும்போது தட்டிக் கேட்க முடியாது. 1980-களில் சென்னையின் முக்கிய ஏரியை தலைவர் ஒருவர் தனியாருக்குக் கொடுத்தபோது அதனை கேள்வி கேட்பார் யாரும் இல்லை. ஆற்று மணலை எல்லாம் அள்ள கட்சிகளின் தலைமைகளே தலை அசைத்தபோது தட்டி கேட்பார் யாரும் இல்லை. நீர் நிலைகளைப் பாதுக்காக்கும் சட்டங்களைத் தளர்த்தியபோது கேள்வி கேட்பார் யாரும் இல்லை.

நாஞ்சில் நாட்டில் மன்னர்கள் காலத்தில் அடிமை முறை இருந்தது. இந்த அடிமைகளை ஒப்பிடும்போது அந்த அடிமைகளின் திறமை களைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. அதற்காக அடிமை முறையை நியாயப்படுத்தவில்லை. வரலாற்றை திரும்பிப் பார்க்கிறோம், அவ்வளவே. நாஞ்சில் நாட்டில் கடந்த 18.6.1853 வரை அடிமை முறை இருந் தது என்கிறார் நட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள். அடிமை சமூகத்தில் பிற்படுத்தப் பட்ட சமூகங்களைச் சேர்ந்த அடிமைகள்தான் அதிகம். சில குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த அடிமைகளை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்கத் தயாராக இருந்தார்கள் பண்ணையாளர் கள். காரணம், நீர் நிலைகள் பராமரிப்பு மற்றும் பாசனத் தொழில்நுட்பங்களில் அவர்களுக்கு இருந்த அபாரத் திறமை. நீர் நிலைகளை எப்படி பாதுகாக்க வேண்டும்? எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை எல்லாம் அவர்கள் அறிந்திருந்தார்கள். இயற்கையை அவர்கள் துல்லியமாக கணித்தார் கள்
 
எப்போது மழை பெய்யும்?

“சூரியனையும் சந்திரனையும் ஒளிவட்டம் சூழ்ந்து நின்றால் அது மழைக்கான அறிகுறி. இதை ‘வட்டம் கட்டுதல்’ என்று அழைத்தார்கள். இதைப் பார்த்துவிட்டு வித்தும் வைக்கோலும் காய வைத்தார்கள். பருந்து சிறகை விரித்து வெயிலில் நின்றாலோ, வெள்ளைக் கொக்கு பந்தி பந்தியாக நெடுநேரம் உட்கார்ந்திருந்தாலோ, மேட்டில் வெள்ளெலி வளை தோண்டினாலோ, நாரை, வெள்ளைக் கொக்கு, நமுகு வடக்கு நோக்கி பறந்தாலோ மழை பெய்யும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் ஈசல் பறப்பதும், கறையான் கள் புற்றைத் திறப்பதும், புரட்டாசி 15-ம் தேதிக்கு மேல் கீழ்க்காற்று அடிப்பதும், வடமேற்கில் காற்றடிப்பதும் மழைக்குரிய அடையாளம். சூரியன் மறையும்போது கிழக்கே மூன்று பட்டைகளாக நீலக்கோடு இருந்தாலோ, வெண்ணிறமாக இருந்தாலோ மழை பெய்யும். சூரியன் உதயத்தின்போதும் மறைவின்போதும் பக்கச் சூரியன் தெரிவதும் மழைக்குரிய அடையாளம்.
 
எப்போது மழை பொய்க்கும்?

கார்த்திகை மாதம் மருளைமுத்துக் கொடி தழைத்தால் மழை பெய்யாது. கோழிக்காளான் பூத்தால் மழை பெய்யாது. நாரை, வெள்ளைக் கொக்கு ஆகிய பறவைகள் தெற்கு நோக்கி வலசை சென்றால் மழை பெய்யாது. வெள்ளெலி பள்ளத்தில் புடை எடுத்தால் மழை பெய்யாது. புரட்டாசி முதல் மாசி வரை தென்மேற்கில் காற்றடித்தால் கிழக்கில் இருந்து வரும் மழைக் காற்று உலர்ந்து, மழை பெய்யாது. முழு நிலவைச் சுற்றி இடைவெளியுடன் வட்டம் தெரிந்தால் மழை பெய்யாது. இதனை ‘கோட்டை கட்டுதல்’ என்பார்கள். இதனை எல்லாம் அடிமைகள் சொல்லக் கேட்டு அதற்கேற்ப முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மழைக்கு முன்பாக நீர் நிலைகளைப் பராமரித்தார்கள். வறட்சியை அறிந்து தானியங்களை சேமித்தார்கள். வெள்ளம் மற்றும் புயலை அறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.

சுமார் 60-க்கும் மேற்பட்ட நெல் வகைகளை அடிமைகள் அறிந்திருந்தார்கள். சம்பா, முண்டன், அரிக்கிராவி போன்ற நெல் வகைகள் பாமர மக்களின் உணவாக இருந்தன. சீரகச் சம்பா, கொத்தமல்லிச் சம்பா, மல்லிகை சம்பா, புனுகுச் சம்பா, ஆனைக் கொம்பானை போன்ற நெல் வகைகள் வசதி படைத்தவர்களின் உணவாக இருந்தன. அறுவங்குறுவா நெல் அறுபது நாட்களில் விளைந்தது. புளுதி புரட்டி நெல்லை கையாலே மண்ணை புரட்டி பருவம் செய்தார்கள்.

நீண்ட தூரம் செல்லும் வழிப்போக்கர்களுக்கு சொர்ண வாரி என்கிற நெல் வகை இருந்தது. அரிசியை இடிக்கத் தேவையில்லை. சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து புட்டுக்குழலில் போட்டு அவித்தால் போதும். கொக்கிச் சம்பா மீன் குழம்புக்கு ஏற்றது. சிவப்பு நிற வல்லரக்கன் அரிசி கொழுக்கட்டைக்கு ஏற்றது. இவை நீண்ட நேரம் பசி தாங்கும். இதுவும் தொலைதூரப் பயண உணவாகப் பயன்பட்டது. சீரகச் சம்பாவை பயிரிடும்போதே வயலில் கறிவேப்பிலையை நறுக்கிப் பொடியாக தூவிவிடுவார்கள். சாதம் வடிக்கும்போது அரிசி மணக்கும்.

இந்த நெல் வகைகளை எல்லாம் எப்படி பயிர் செய்ய வேண்டும்? எந்த காலத்தில் எந்த நெல் வளரும்? பயிரை பூச்சிகள் தாக்காமல் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது எல்லாம் அடிமைகளுக்குத் தெரிந்திருந்தது. அன்னத்துப்பூச்சி பயிர்கள் பாதிக்கும் செம்பநோய் அல்லது கவலை நோய்க்கு வேப்பம் விதையைப் பொடித்து தண்ணீர் கலந்து வயலில் தெளித்தார்கள். சிலர் ஊர்ச் சுற்றி பன்றியின் மலத்தையும் தண்ணீரில் கலந்து தெளித்தார்கள். நெற்பயிரை வெட்டுக்கிளி கடித்து குருத்து நோய் ஏற்பட்டால் மிளகாய்ப் பொடியை வயலில் தூவினார்கள். ஒட்டுண்ணிப் பூச்சியால் வரும் அருவிளை நோய்க்கு சாம்பலை தூவினார்கள்.
 
ராப்பாடிகள் பாடிய நீர்நிலைப் பாட்டு

ராப்பாடிகள் என்றொரு பிரிவினர் இருந்தார்கள். இவர்கள் குறிப்பிட்ட ஓர் ஒடுக்கப்பட்ட பிரிவிலேயே மேலும் ஒடுக்கப்பட்ட பிரிவினர். இவர்கள் பகலில் வெளி வரக்கூடாது; பெண்கள் இவர்களைப் பார்க்கக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தன. ராப்பாடி இரவு நேரத்தில்தான் ஊருக்குள் வருவார்கள். அவர்கள் உடலைக் கருப்பு நிற அங்கியால் போர்த்தியிருப்பார்கள். தலையில் உச்சி வளைந்த சர்க்கஸ் கோமாளி போன்ற கருப்புத் தொப்பி அணிந்திருப்பார்கள். கையில் சிற்றுடுக்கு இருக் கும். அதை அடித்தபடியே கண்ணை உருட்டி உச்சஸ்தாயியில் பாடுவார்கள். மழை எப்போது பெய்யும்? எப்போது பொய்க்கும்? வெள்ளம் எப்போது வரும்? பஞ்சம் எப்போது வரும்? ஊருக் குள் ஏரிகள் எப்படி இருக்கின்றன? குளங்களில் கரைகளில் செய்ய வேண்டிய வேலைகள் என்ன? நீர்நிலைகளை எப்படி பராமரிப்பது? இந்த வருடம் என்ன பயிரை நடுவது என்பதெல்லாம் அந்தப் பாட்டின் மையமாக இருக்கும்.

ராப்பாடிகளின் உடுக்கைச் சத்தம் தூரத்தில் கேட்கும்போதே மக்கள் சிறுபாத்திரத்தில் நெல்லை வாசலில் வைத்துவிடுவார்கள். ராப்பாடியுடன் வரும் உதவியாளர் ஒருவர் நெல்லை சேகரித்துக் கொள்வார். இந்த ராப்பாடிகளைப் பார்த்தால் தெரு நாய்கள் எல்லாம் தெறித்து ஓடிவிடும். காரணம், இவர்களின் தோற்றம் அல்ல. இவர்கள் வரும்போதே காட்டுக்குள் சென்று அப்போது கழித்த ஓநாயின் மலத்தை உடலெங்கும் பூசிக்கொண்டு வருவார்களாம். அந்த மலத்தின் வாடையை நாய்களால் தாங்க முடியாது. அதுதான் நாய்கள் தெறித்து ஓடும் ரகசியம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட நாஞ்சில் நாட்டு கிராமங்களில் இந்த ராப்பாடிகள் பாடி வந்தார்கள்’’ என்கிறார் அ.கா.பெருமாள். 

திருவிதாங்கூர் மன்னர்களும்... திராவிடக் கட்சிகளின் குறுநில மன்னர்களும்!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*
பயிர்கள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதால் விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டுகிறார்கள் டெல்டா விவசாயிகள். கீழ்பவானியில் பாசன வாய்க்கால்களை மேம்படுத்த வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள். மருதூர் மேலகால்வாயைத் தூர் வார வேண்டும் என்கிறார்கள் தூத்துக்குடி விவசாயிகள். அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவுத் திட்டத்தில் கவுசிகா நதியை மீட்டுத் தர வேண்டும் என்கிறார்கள் கொங்கு மண்டல விவசாயிகள். கொடிவேரி அணைக்கட்டு, காலிங்கராயன் அணைக் கட்டு வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்கிறார்கள் ஈரோடு விவசாயிகள். கடைமடைக்கும் காவிரி செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்கிறார்கள் நாகை விவசாயிகள். பாலாற்றில் மணல் அள்ள வேண்டாம் என்கிறார்கள் காஞ்சிபுரம் விவசாயிகள். தொழுதூர் அணை - வெலிங்டன் ஏரி வாய்க்காலை தூர் வார வேண்டும் என்கிறார்கள் கடலூர் விவசாயிகள். மேட்டூர் அணை - அய்யாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்கிறார்கள் சேலம் விவசாயிகள். வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், விவசாயிகளின் குரலை கேட்கத்தான் ஆளில்லை. விவசாயி களின் தொடர்பு எல்லைக்கு வெளியே வெகுதூரம் போய்விட்டார்கள் மக்கள் பிரதிநிதிகள். அதிகாரத்தின் முன்பு விவசாயி கூனிக்குறுகி கெஞ்ச வேண்டியிருக்கிறது. இடையிடையே பதற வைக்கின்றன மீத்தேன், எரிபொருள் எண்ணெய் குழாய் திட்டங்கள். அதிகாரிகளின் கைகள் அரசியலால் கட்டப்பட்டிருக்கின்றன. காவிரிப் பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்த 2008-ம் ஆண்டு பொதுப்பணித்துறையின் பணிப் படை (Task force) தயாரித்துக் கொடுத்த ரூ.5,100 கோடி மதிப்பி லான திட்டங்கள் கோப்புகளில் உறங்குகின்றன. திறமையான பாசனப் பொறியாளர்களை வெறுமனே மேஜை தேய்க்கவிட்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

பொதுவாக கேள்வி கேட்க ஆளில்லாத ஆட்சியைப் பற்றி சொல்லும்போது, ‘இங்கே என்ன மன்னராட்சியா நடக்கிறது?’ என்று கேட்போம். ஆனால், ஒருகாலத்தில் நாஞ்சில் நாட்டு மன்னர்கள் நேரடியாக களத்துக்கு வந்து விவசாயிகளின் குரலைக் கேட்டார்கள். விவசாயிகளும் உரிமையாக மன்னர்களிடம் பிரச்சினை களை சொன்னார்கள். அவற்றை உடனுக்குடன் தீர்த்தும் வைத்தார்கள். திருவிதாங்கூர் ராஜாக்கள் காலத்தில் நடந்த இதுதொடர்பான வரலாற்று நிகழ்வுகளை அழகியபாண்டியபுரம் முதலியார்கள் ஓலைக் சுவடிகளில் எழுதி வைத்துள்ளனர். சுமார் 600 ஓலைச்சுவடிகளில் ‘மலையாமை’ (தமிழ் மற்றும் மலையாளம் கலந்த வடிவம்) மொழியில் எழுதப்பட்ட ஆவணம் அது. 12-ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 1810-ம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள் அதில் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப் பாக, நீர் நிலைகள் பராமரிப்பு, பாசனம் தொடர்பான விஷயங்கள், குடிமைப் பணிகள் அவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ‘முதலியார் ஆவணங்கள்’ எனப்படும் இவற்றில் 240 ஓலைச்சுவடிகளை கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தமிழ்படுத்தியிருக் கிறார். 100 ஓலைச் சுவடிகளை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் தமிழ்படுத்தியிருக்கிறார்.

சுசீந்திரம் கோயில் தேரோட்டத் திருவிழாவின்போது நாஞ்சில்நாட்டு விவசாயிகள் அனைவரும் சுசீந்திரம் கோயிலில் ஒன்றாக கூடுவது அன்றைய வழக்கமாக இருந்திருக்கிறது. அவர்கள் தங்களுடைய பிரச்சினைகளை அங்கு கலந்து ஆலோசித்தார்கள். இந்தக் கூட்டங்களுக்கு திருவிதாங்கூர் மன்னர்கள் நேரில் வந்து விவசாயிகளின் பிரச்சினைகளைக் கேட்டு தீர்வு கிடைக்கச் செய்தார்கள். இவ்வாறு வரும் விவசாயிகளுக்கு சுசீந்திரம் கோயிலிலேயே உணவு, தங்குமிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சுசீந்திரம் கோயில் தேரோட்டத் திருவிழாவின்போது நாஞ்சில்நாட்டு விவசாயிகள் அனைவரும் சுசீந்திரம் கோயிலில் ஒன்றாக கூடுவது அன்றைய வழக்கமாக இருந்திருக்கிறது. அவர்கள் தங்களுடைய பிரச்சினைகளை அங்கு கலந்து ஆலோசித்தார்கள். இந்தக் கூட்டங்களுக்கு திருவிதாங்கூர் மன்னர்கள் நேரில் வந்து விவசாயிகளின் பிரச்சினைகளைக் கேட்டு தீர்வு கிடைக்கச் செய்தார்கள். இவ்வாறு வரும் விவசாயிகளுக்கு சுசீந்திரம் கோயிலிலேயே உணவு, தங்குமிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

கி.பி. 1785-ம் ஆண்டில் பதிவு செய்யப் பட்ட ஓர் ஆவணத்தில் ஒவ்வொரு பங்குனி, சித்திரை மாதங்களிலும் குளங்கள் தூர் வாரப்பட்டன. மதகுகளும் கரைகளும் செப்பனிடப்பட்டன. இது மன்னனின் முக்கிய கடமையாக இருந்தது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் பறலையாற்றின் (பரளியாறு) வெள்ளம் அனந்தனாறு சென்று கடலில் கலந்துக்கொண்டிருந்தது. இதனால் விவசாயிகள் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டனர். இதுதொடர்பாக ஊரின் பொது இடத்தில் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு தர்மராஜா நேரில் வந்தார். அவரிடம் விவசாயிகள் 6 மீட்டர் அகலமும் 8 மீட்டர் உயரமும் கொண்ட தடுப்பணை கட்டித் தர வேண்டும் என்கிறார்கள். அதன்படி அணையும் கட்டித்தந்தார் அவர்.

கடந்த 1812-ம் ஆண்டுவரை கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான நிலங்கள், சொத்துக்கள் மடங்கள், கோயில்களுக்கு சொந்தமாக இருந்தன. தனியார் சொத்துக்கள் மிகக் குறைவு. கிட்டத்தட்ட பொதுவுடைமை போன்ற அமைப்பு அது. விவசாயிகள் அனைவரும் குத்தகை அடிப்படையில் விவசாயம் பார்த்தார்கள். அப்போது நீர் நிலைகளைப் பராமரிக்க விவசாயி களிடம் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டது. ஆனால் விவசாயிகளோ, “நாங்கள் சாகுபடி செய்தது எதையும் வீட்டுக்கு எடுத்துப் போவதில்லை. அனைத்தையும் கோயிலுக்குக் கொடுத்துவிடுகிறோம். கோயில் நிர்வாகம் எங்கள் உழைப்புக்கு கூலியாக தானியங்களை அளிக்கிறது. அதனால், கோயில் மேல்வாரத்தில் இருந்து (உபரி வருவாய்) நீர் நிலைகளைத் தூர் வார நிதி அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி கோயில் உபரி வருவாயிலிருந்து நீர்நிலைகளைத் தூர் வார நிதி ஒதுக்கப்பட்டது. இதை 1730-ம் ஆண்டின் ஆவணம் தெரிவிக்கிறது.

1719-ம் ஆண்டின் ஆவணம் ஒன்று மன்னனிடம் கோபித்துக்கொண்டு மலை ஏறிய விவசாயிகளைப் பற்றி சொல்கிறது. அந்தக் காலகட்டத்தில் விவசாயிகளுக்கு நில வரி விதிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அந்த வரி விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகவில்லை. மன்னரிடம் வரியைக் குறைக்கச் சொல்லி விவசாயிகள் கோரிக்கை விடுத்தார்கள். ஆனால், மன்னன் கேட்பதாக இல்லை. பொறுத்துப் பார்த்த விவசாயிகள் ஒருகட்டத்தில் கோபம் கொண்டு, ‘இனி நாங்கள் பயிர் செய்ய மாட்டோம்’என்று சொல்லிவிட்டு, மலை மீது ஏறி சென்றுவிட்டார்கள். கடைசியில் மன்னர் வேறு வழியில்லாமல் விவசாயிகளை நேரில் சென்று சமாதானப்படுத்தி, அவர்களை நாட்டுக்கு அழைத்து வந்தார். நிலவரியும் குறைக்கப்பட்டது.

இன்று தமிழகத்தில் நடப்பது மக்களாட்சிதான். ஆனால், திராவிடக் கட்சிகளின் மக்களாட்சியில் அதிகார பீடத்தின் பிரதிநிதிகள் எல்லோரும் குறுநில மன்னர்களாக உலா வரு கின்றனர். விவசாயிகள்தான் ஒரு மன்னரையும் நேரில் பார்க்க முடிவதில்லை!

பிற்காலப் பாண்டியர்கள் கட்டிய 13 தடுப்பணைகள் ஒவ்வொன்றில் இருந்தும், எந்தந்த வயல்களுக்கு எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்கிற அளவுகள் பழைய தமிழ் எழுத்துக்களில் அணைகளில் பொறிக் கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் அ.கா.பெருமாள். அதாவது 1 எனில் க, 2 எனில் உ, 3 எனில் நு, 5 எனில் கு, 7 எனில் எ, 8 எனில் அ, 100 எனில் m ஆகிய வடிவங்களில் பழைய தமிழ் எழுத்துக்கள் இருக்கின்றன. இந்த அணைக்கட்டு பாசனத்தில் நெல்லுடன் பருத்தியும் கணிசமாகப் பயிரிடப்பட்டது. பேச்சிப்பாறை அணை கட்டிய பின்புதான் பருத்தி பயிர் சாகுபடி கன்னியாகுமரி மாவட்டத்தில் அழிந்துப்போனது. 

பாண்டியர்கள் இணைத்த பறலையாறு - பழையாறு! - நாட்டில் நடந்த முதல் நதி நீர் இணைப்பு

பாண்டியன் அணைக்கட்டின் தடுப்பணைகளில் ஒன்றான பள்ளிகொண்டான் தடுப்பணை.
பாண்டியன் அணைக்கட்டின் தடுப்பணைகளில் ஒன்றான பள்ளிகொண்டான் தடுப்பணை.

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

தமிழகத்தின் நதிகளை இணைக்க வேண்டும் என்பது நமது நீண்ட கால நிறைவேறாத கோரிக்கை. காவிரி - குண்டாறு, தாமிரபரணி - கரு மேனியாறு - நம்பியாறு, தென்பெண்ணை - செய்யாறு ஆகிய இணைப்புத் திட்டங்கள் எல்லாம் தொங்கலில் நிற்கின்றன. எவ்வ ளவோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ராட்சத ரோபோக்கள், நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போதுமான நிதியும் இருக்கிறது. இவ்வளவு இருந்தும் நதிகளை இணைக்க முடியவில்லை. குறைந்தபட்சம் நம்மால் ஒரு ஏரியைக் கூட தூர் வார திராணியில்லை.

ஆனால், எந்த நவீன தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத 9-ம் நூற்றாண்டி லேயே நதி நீர் இணைப்பை சாத்தியப் படுத்தினார்கள் பாண்டியர்கள். அநேகமாக அதுதான் நம் நாட்டில் நடந்த முதல் நதி நீர் இணைப்பாக இருக்கலாம் என்கிறார்கள் நீரியல் நிபுணர்கள். மேற்குத் தொடர்ச்சி மலை யின் மகேந்திரகிரி தென் பகுதியில் பறலையாறு உற்பத்தியாகிறது. இது கோதை ஆற்றுடன் இணைந்து அரபிக் கடலில் கலக்கிறது. அதே மலையின் இன்னொரு பக்கத்தில் உற்பத்தியாகி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடி தேங் காய்ப்பட்டணத்தில் கடலில் கலக்கிறது பழையாறு. பறலை ஆற்றுடன் ஒப்பிட் டால் பழையாறு மிகவும் சிறியது. நீர் வளம் குறைந்தது. கோடை காலங்களில் வறண்டுபோனது. இதனால் தோவாளை, அகஸ்தீஸ்வரம் உள்ளிட்ட நாஞ்சில் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவு இல்லாமல் தவித்தனர்.

அதேசமயம் கொஞ்சம் தொலைவில் இருந்த பறலை ஆற்றில் ஆண்டு முழு வதும் தண்ணீர் ஓடி, ஏராளமான நீர் கடலில் கலந்தது. இதனால், நாஞ்சில் நாட்டு மக்கள் பறலை ஆற்று தண் ணீரை பழையாற்றுக்கு திருப்பி பாசனத் துக்கு உதவும்படி பாண்டிய மன்னன் இரண்டாம் ராஜசிம்ஹனிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கி.பி.900-ல் பழையாற்றின் குறுக்கே 20 அடி உயரத் தில் நீண்ட மலைப் பாறைகளைக் கொண்டு அணை கட்டப்பட்டது. அதே போல உயரமான பாறைக் குன்றுகளைக் குடைந்து சுமார் 2 மைல் நீளத்துக்குக் கால்வாய் வெட்டப்பட்டது.

இந்தக் கால்வாய் மூலம் பறலை ஆற்றில் இருந்து பழையாற்றுக்குத் தண்ணீர் வந்து சேர்ந்தது. இன்றும் வருகிறது. ஒரு ஆற்று வழி நீர் நிலப்பரப்பில் இருந்து மற்றொரு ஆற்று வழி நீர் நிலப்பரப்புக்கு நீர் பரிமாற்றம் (Inter basin transfer of water) செய்யப்பட்ட முதல் திட்டம் இது. திருவிதாங்கூர் ஆவண அறிக்கையில் இதுகுறித்த குறிப்பு கள் இருக்கின்றன. இந்த நதிகளை இணைத்தப் பின்புதான் நாஞ்சில் நாடு செழித்தது.

நாஞ்சில் நாடு செழித்ததைக் கண்ட விளவங்கோடு, கல்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கும் இப்படி ஒரு புதிய அணை வேண்டும் என்று திருவிதாங்கூர் மன்னர் முதலாம் மார்த்தாண்ட வர்மனிடம் கேட்ட னர். அதன்படி கி.பி.1750-ம் ஆண்டு பாண்டியன் அணைக்குக் கீழே 460 மீட்டர் தள்ளி சரிவான பகுதியில் ஆற்றில் குறுக்கே 6 அடி முதல் 30 அடி வரை கற்சுவர்கள் எழுப்பப்பட்டு புதிய அணை கட்டப்பட்டது. அதுதான் புத்தன் (புதிய) அணை. இன்னும் சிலர் அங்கிருந்த பாண்டியன் அணையின் தடுப்பணை ஒன்றை மேம்படுத்திக் கட்டப்பட்டதுதான் புத்தன் அணை என்றும் கூறுகின்றனர்.

புத்தன் அணையில் இருந்து பத்ம நாபபுரம் - புத்தனாறு கால்வாய் 19 மைல் தூரம் வெட்டப்பட்டது. தொழில்நுட்பச் சிறப்புவாய்ந்தக் கால்வாய் இது. நீரியல் நிபுணர்களான ச.மா.ரத்தினவேல் மற்றும் கள்ளபிரான் ஆகியோர் இதைப் பற்றி குறிப்பிடும்போது, “கடினமானதும் மிகச் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டது மான இந்த மனித முயற்சி ஆச்சர்யம் தருகிறது. சில இடங்களில் இந்தக் கால் வாயின் தரைமட்டம் அங்குள்ள பூமியின் மட்டத்தை விட 10 அடி உயரமாக உள்ளது. அந்தப் பகுதிகளில் எல்லாம் தேவைப்படும் உயரத்துக்கு மண் கரை எழுப்பி அதில் கால்வாய் எடுத்துச் செல்லப்படுகிறது” என்கின்றனர். 

தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பாசனப் பொறியாளராக பணியாற்றிவர் ஹார்ஸ்லி. ஆங்கிலேயரான இவர் மேற்கண்ட பாசனக் கட்டமைப்புகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர். அவர் இந்தக் கட்டமைப்புகளைப் பற்றி குறிப்பிடும்போது, “மற்ற நாடு களிலும் இந்தியாவிலும் பெரும் பாசனத் திட்டங்களை உருவாக்கும் பொறி யாளர்கள், தாங்கள் அமைத்த கட்டு மானங்கள் வெற்றி பெற்றதற்கு தங்களது திறமையும் விடாமுயற்சியும் தான் காரணம் என்று பெருமைப்படு வார்கள். ஆனால், நான் தயக்கமின்றிச் சொல்வேன், பாண்டியன் வாய்க் கால், பத்மநாபபுரம், புத்தனார் வாய்க் கால்களை உருவாக்கியவர்களின் தொழில்நுட்பம் பிரமிக்க வைக்கிறது. தொழில்நுட்பத்தில் அவர்கள் வழியை பின்பற்றுவது கலப்பில்லாத மகிழ்ச் சியைத் தருகிறது. இவர்களே எனது பாசனத் தொழில்நுட்ப ஆசான்கள். இவர்களின் பாசனக் கட்டமைப்புகளில் நான் வேலை செய்வதில் மனநிறைவு கொள்கிறேன்” என்று பதிவு செய்கிறார் (திருவிதாங்கூர் இரண்டாம் பாகம், ஏ.அப்பாதுரை).

இந்த அணைகளைத் தொடர்ந்து பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் வேணாடு மன்னர்கள் காலத்திலும் பழை யாற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. விளாவடிக்கால் அணைக்கட்டுக்கு கீழே வீரப்புலி அணைக்கட்டு, குட்டி அணைக் கட்டு, பள்ளிகொண்டான் அணைக் கட்டு, சாட்டுப்புதூர் அணைக் கட்டு, செட்டித்தோப்பு அணைக்கட்டு, வீர நாராயணமங்கலம் அணைக்கட்டு, சபரி அணைக்கட்டு, குமரி அணைக்கட்டு, சோழந்திட்டை அணைக்கட்டு, பிள்ளை பெத்தான் அணைக்கட்டு, மிஷன் அணைக்கட்டு, மணக்குடி காயல் அணைக்கட்டு உட்பட 13 தடுப்பணை கள் கட்டப்பட்டன. இன்றும் குமரி மாவட்டத்தின் பாசனத்துக்குக் குடிநீர் திட்டங்களுக்கு உறுதுணையாக இருக் கின்றன அந்த அணைகள். இந்த அணைகள் அத்தனையுமே பெரும் கற்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து அமைக்கப்பட்டன. பாறைகளை இணைப்புப் பகுதியில் ஈயம் காய்ச்சி ஊற்றப்பட்டது. மன்னர்கள் காலங்களில் பங்குனி, சித்திரை மாதங்களில் இந்த அணைகளில் கொல்லர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார்கள் என் கிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய் வாளர் அ.கா.பெருமாள்.

சமீபத்தில் இந்தத் தடுப்பணை களுக்குச் சென்றபோது “30 வருஷமா இந்தக் காட்டு வெள்ளத்துல தனியாளா வேலை பாக்குறேன். சம்பளமும் ஏத்தலை, பர்மனென்டும் பண்ணலை” என்கிறார் பொதுப்பணித்துறையின் பணியாளர் ஒருவர். நீர்நிலைகள் மீது அரசு காட்டும் அக்கறைக்கு ஓர் உதாரணம் அவர்!
 

தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணைகள் குறித்த சரியான கல்வெட்டு குறிப்புகள் கிடைக்கவில்லை. அதனால் அவை நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால், பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் அந்தத் தடுப்பணைகள் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிவிக்கிறார் நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் மருதூர் அணையின் பாசன உரிமைதாரருமான அ.வியனரசு. 
 
அவர் கூறும்போது, “ஆராய்ச்சிப் பேராசிரியர் சதாசிவ பண்டாரத்தார் எழுதிய ‘பாண்டியர் வரலாறு’, பேராசிரியர் ம.இராசசேகர தங்கமணி எழுதிய ‘பாண்டியர் வரலாறு’, கு.செந்தில் மள்ளர் எழுதிய ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு’ ஆகிய மூன்று நூல்களின் குறிப்புகளின்படி கி.பி.1352 முதல் கி.பி.1748 வரை தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு பிற்காலப் பாண்டியர்கள் 14 பேர் ஆட்சி புரிந்தார்கள். 
 
தாமிரபரணி ஆற்றில் அரியநாயகபுரம் அணை மட்டுமே பாண்டியர்களால் கட்டப்படவில்லை. மற்ற அணைகள் அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன், பராக்கிரம குலசேகரப் பாண்டியன், ஆகவராமப் பாண்டியன், சடையவர்மன் சிவல்லப் பாண்டியன் அல்லது சடையவர்மன் பராக்கிரம குலசேகரப் பாண்டியன் ஆகியோரால் கட்டப்பட்டிருக்க வேண்டும்” என்கிறார்.  

முன்னோர்களிடம் இருந்தது தெய்வ நம்பிக்கை மட்டுமல்ல... மனிதநேயமும்தான்!

கலிங்கின் அணைக் கற்கள் வழியாக அடுத்த ஏரிக்குப் பாய்ந்தோடும் தண்ணீர்.
கலிங்கின் அணைக் கற்கள் வழியாக அடுத்த ஏரிக்குப் பாய்ந்தோடும் தண்ணீர்.

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

ஏரிகள், குளங்களுக்கும் நமது முன்னோரின் தெய்வ நம்பிக்கை களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அன்று ஒவ்வொரு கோயிலிலும் குளம் வெட்டுவது முக்கியமான கடமையாகக் கருதப்பட்டது. அதனால்தான் தமிழகத்தில் இன்றும் 3 ஆயிரம் கோயில் குளங்கள் இருக்கின்றன. அவை பராமரிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அழியாமல் இருப்பதற்குக் காரணம் 
இந்த தெய்வ நம்பிக்கைதான். அதே சமயம் நம் முன்னோர்களின் தெய்வ நம்பிக்கையில் ஒரு நியாயமும் இருந்தது.

சங்கிலித் தொடர்களாக அமைக்கப் பட்ட குளங்களில் பெரும்பாலும் கடை சிக் குளங்கள் கோயில் குளங்களாக அமைக்கப்பட்டன. உதாரணத்துக்கு, திருநெல்வேலி தாமிரபரணியின் கடைசிக் குளம் திருச்செந்தூர் முருகன் கோயில் குளம். கன்னியாகுமரி பழை யாற்றின் கடைசிக் குளம் பகவதி அம்மன் கோயில் குளம். நம் முன் னோர்கள் மழை பெய்யத் தொடங்கிய வுடன் விவசாயப் பணிகளை ஆரம்பித்து விடவில்லை. கோயில் குளம் நீர் நிரம்பும் வரை காத்திருந்தார்கள். அந்தக் கடைசிக் குளத்தில் தண்ணீர் நிரம்புவதை உறுதி செய்யும் வகையிலான தொழில் நுட்பங்களை வடிவமைத்தார்கள்.

அவற்றில் முக்கியமானவை கலிங்கு கள், அணைக் கற்கள் தொழில்நுட்பம். சங்கிலித் தொடர் குளங்களில் ஒரு குளத்தில் நீர் நிறைந்ததும், உபரி நீர் கலிங்குகள் வழியாக வெளியேறி அடுத்தடுத்த ஏரிகளை அடையும். இந்த கலிங்குகளின் மட்டத்துக்கு மேல் 2 அடி உயரத்துக்கு அணைக் கற்கள் நடப்பட்டன. வரிசையாக குச்சி போன்று நீட்டிக்கொண்டிருக்கும் இந்த அணைக் கற்களுக்கு இடையே வெள்ளக் காலங்களில் பலகைகளை சொருகுவார்கள். இதனால், மேலும் 2 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேங்கும். இதன் மூலம் வெள்ளத்தில் இருந்து ஊரும் காப்பாற்றப்பட்டது. இவ்வாறு ஓர் ஏரியின் கலிங்கு வரை தண்ணீர் தேங்கினால் அதுதான் அந்த ஏரியின் பாதி கொள்ளளவு. கலிங்குக்கு மேல் இருக்கும் அணைக் கற்களின் பலகை யின் மேல்மட்டம் வரை தண்ணீர் தேங் கினால் அதுதான் அந்த ஏரியின் முழுக் கொள்ளளவு.

தலைமடை பகுதியின் வரத்துக் கால்வாயில் தண்ணீர் வரும்போது அனைத்துக் குளங்களின் அணைக் கற்களில் இருந்து பலகைகளை எடுத்து விடுவார்கள். இதனால், தண்ணீர் வேக மாகக் கடைமடையின் கடைசிக் குளம் வரை செல்லும். கடைசி குளத்தின் கலிங்கு மட்டத்துக்குத் தண்ணீர் நிரம்பியதும் மீண்டும் அனைத்துக் குளங்களிலும் பலகையைப் போடு வார்கள். இதன்படி அனைத்துக் குளங்க ளிலும் சரிசமமாக நீர் நிரம்பியது உறுதி செய்யப்பட்டது.

கடைசிக் குளம் நிரம்பியதும் அதிலி ருந்து தண்ணீரை எடுத்து தெய்வத்துக்கு அபிஷேகம் செய்வார்கள். அதன் பின்பே தலைமடை தொடங்கி கடைமடை வரை ஒரே நேரத்தில் விவசாயப் பணி கள் தொடங்கும். இதிலிருந்து நாம் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். தெய்வத்துக்கு அபிஷேகம் செய்த பின்பு விவசாயப் பணிகளைத் தொடங்குவது என்பது தெய்வ நம் பிக்கை மட்டுமல்ல; அதில் நியாயம் வலியுறுத்தப்பட்டது. சமத்துவம் வலி யுறுத்தப்பட்டது. கடைமடையின் கடைசிக் குளத்துக்கு தண்ணீர் சேரும் முன்பு தலைமடைப் பகுதியில் விவ சாயத்துக்குத் தண்ணீர் எடுத்தால் அடுத்தடுத்த மடைப் பகுதிகளில் இருக்கும் விவசாயிகளுக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும். எனவே, கடை மடையின் கடைசிக் குளம் நிரம்பும் வரை காத்திருந்தார்கள். இருக்கும் நீரை சரிசமமாக பங்கிட்டு பாசனம் செய்தார்கள்.

இதேபோல ஆறு, ஏரிகளின் முக்கியக் கரை, கலிங்குகளில் அய்யனார், சுடலை மாடன், நாட்றாயன், கருப்பர் போன்ற எல்லைச் சாமிகளுக்கும் சப்த கன் னிக்கைகளுக்கும் கோயில்கள் எழுப்பி னார்கள். காரணம், தெய்வ நம்பிக்கை மட்டுமல்ல; கலிங்குப் பகுதிகளில் யாரும் மண் எடுத்துவிடக் கூடாது; கலிங் குகள் பலவீனம் அடைந்துவிடக் கூடாது என்கிற பாதுகாப்பு உணர்வும் அதில் அடங்கியிருந்தது.

ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக நடந்த ஏரிகள் சீரமைப்பின்போது இந்த அணைக் கற்கள் அகற்றப்பட்டன. புதிய ஏரிகளில் கலிங்குகள் அணைக் கற்க ளுடன் அமைக்கப்படவில்லை. கலிங்கு களே நேரடியாக அணைக் கற்கள் உயரத் துக்கு அமைக்கப்படுகின்றன. இதனால் தலைமடை குளங்களே நிரம்பத் தாமதமா கின்றன. மழைக்கு ஏற்ப அல்லது வெள் ளத்துக்கு ஏற்ப தண்ணீரை அடுத் தடுத்து திறந்துவிட முடிவதில்லை. பல நேரங்களில் கடை மடைக் குளங்க ளுக்குத் தண்ணீர் செல்வதில்லை.

வளர்ச்சி அடைந்த நவீன சமூகமாக சொல்லிக்கொள்ளும் நம்மிடையேதான் எத்தனை எத்தனை தண்ணீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகள். நாடுகளுக்கு இடையே, மாநிலங்களுக்கு இடையே மட்டுமல்ல, இன்று இங்கே ஒவ்வொரு மாவட்டங்களுக்கு இடையேயும் இருக்கிறது தண்ணீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை. கிராமங்களுக்கு இடையே இருக்கிறது தண்ணீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை. ஒருகாலத்தில் பவானி சாகர் அணை கட்டினால் தங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது என்று ஆட்சேபணை தெரிவித்தார்கள் டெல்டா விவசாயிகள். இன்றும் திருநெல்வேலி - தூத்துக்குடி விவசாயிகள் இடையே தாமிரபரணி நதி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் இருக் கின்றன.

அவ்வளவு ஏன்? இன்று பெரு நகரங்களில் பல வீடுகளில் வீட்டின் உரிமையாளருக்கு தனியாக ஒரு தண்ணீர்த் தொட்டி. வாடகைதாரர் களுக்குத் தனியாக ஒரு தண்ணீர்த் தொட்டி. வாடகைதாரர்களின் தொட்டி ஒருபோதும் முழுமையாக நிரம்பாது. இருப்பவர் முங்கிக் குளித்துக்கொள்ள லாம். இல்லாதவர் முக்கால் உடம்புகூட நனைக்க முடியாது. என்ன ஒரு சமத்துவம், சகோதரத்துவம்!

காவிரி, தாமிரபரணி ஆறுகளின் தண்ணீர் கடைமடை விவசாயி வரைச் சென்று சேராததற்குக் காரணம் மழை யின்மை கிடையாது. நமது மனமின்மை. அக்கறையின்மை. அடுத்தவர் எக்கெடு கெட்டால் என்ன என்கிற சுயநலம். கூடவே அநாகரிக அரசியல், தொழில் நுட்பக் கோளாறுகள், பராமரிப்பின்மை, அலட்சியம்.

நம் முன்னோருக்கு அறிவியலும் தெரிந்திருந்தது. ஆன்மிகமும் தெரிந் திருந்தது. சமத்துவமும் தெரிந்திருந்தது. குறிப்பாக, அவர்களிடம் இருந்தது தெய்வ நம்பிக்கை மட்டுமல்ல; மனித நேயமும்தான்!