Aug 31, 2015

தஞ்சை ப்ரகாஷ் 4 - சாரு

தினமணி இதழில் வெளிவரும் பழுப்பு நிறப் பக்கங்கள்



வன் ஒரு அடியாள். பிச்சுவா, கோடரி, வீச்சருவாள், கொன்னருவாள், உளி போன்ற ஆயுதங்களோடும் ரத்த வாடையோடும் வாழ்பவன். எதிரிகள் துரத்தி வரும்போது ஒளிந்து கொள்ளும் இடம் இஸ்லாமியர் வாழும் தைக்கால் மேடு. அங்கே நூரி என்ற பெண். அவள் அடிக்கடி அந்த மனிதனைப் பார்க்கிறாள். எப்படி? அந்தக் கூடத்திலிருந்த 13 ஜன்னல்களை ஒவ்வொன்றாகத் திறந்து கொண்டே வந்து வீட்டுக்குள்ளேயே நடந்து கூடம், ஹஜான், உக்கிரானம், ஹாடிகானா பக்கம், தோட்டம் என்று நீண்டு போகும் அந்தத் தெருவின் பெரியதான அந்த வீடு ஒரு ஏக்கர் பரப்பில் அடுத்த தெருவை பின்புறமாகத் தாண்டி வீட்டுச் சுவர் நீண்டபோது, அதே சுவரில் இருந்த பல ஜன்னல்களை நூரி பதுங்கிப் பதுங்கித் தாண்டி முன் கட்டுக்கு வந்ததும், அதிலிருந்த பதினெட்டாவது ஜன்னலை மெல்லத் திறந்ததும் அவளுக்கு வியர்வையில் பயமும், பயத்தில் திடுக்கமும், திடுக்கத்தில் ஆச்சரியமுமாய் பயம்!
ஆளுகளை அவன் பந்து பந்தா சுருட்டி அடிக்கறதப் பாத்தா பயமா இருந்தது. அது என்ன கையா? இரும்பா? எல்லோருடைய குடல்களையும் மாலையாகக் கழுத்தில் மாட்டிக் கொண்டாற்போல் யாரோ ஒரு ஜின் நிற்கிற மாதிரி இருந்தது. யார் இவன்? என்ன சண்டை? என்ன ஜாதி? என்ன மதம்? வாப்பா பார்த்தால் கொன்னே போட்டு விடுவார். எல்லோரும் தூங்குகிறார்கள். இவளுக்குத் தூக்கம் வராமல் போய் நாலைந்து வருசங்கள் ஆகிறது. நிக்கா வருது வருதுன்னாங்க. ஆனா கொமராவே வெச்சிருக்காங்க. வாப்பாவுக்குப் போன மாசம் கூட ஒரு நிக்கா நடந்தது. எட்டாவது நிக்கா. சிவப்பா தமிழ் தெரியாத பதினெட்டு வயது பொண்ணான பல்கீஸ் ஜன்னத் என்கிற அந்த அரபிப் பெண்ணை உம்மா என்று அழைக்கச் சொல்லி உம்மா, நடு உம்மா எல்லாம் அவளைத் திட்டினார்கள். ஜன்னத்தை விட நூரி ஐந்து வயது மூத்தவள்.
ஏகப்பட்ட சுர்மாவை எழுதி மைலாஞ்சி பூசி அரபி ஒடம்பெத் தமிழ் ஒடம்பா மாத்தி எழுதி சித்திரமா வளத்திருந்த மைமூனா பீவிய வாப்பா அரபி மண்ல நிக்கா பண்ணிக்கிட்டு இந்தியா வந்து பத்து பசங்களப் பெத்து அப்புறமா கடைக்குட்டியா நூரியெப் பெத்தெடுத்துப் போட்டப்போ தஞ்சாவூரே முக்குல வெரல போட்டுது. அப்போ மைமூனா பீவிக்கே அறுவது வயசுன்னா வாப்பாக்கு என்ன வயது?
ஒரு கட்டத்தில் வீட்டையும் சமூகத்தையும் எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி ரவுடி ரெங்கராஜனை மணந்து கொள்கிறாள் நூரி. ரெங்கராஜனின் பெயர் முத்தலீஃபாக ஆகி விடுகிறது. ரெங்கராஜனை மடியில் போட்டுக் கொண்டு அவன் முஸ்லீமாக ஆக வேண்டிய அவசியத்தைச் சொல்கிறாள் நூரி. நபிகள் குரைஷிக் கூட்டத்திடம் பட்ட அவதிகளைக் கதைகதையாக சொல்கிறாள். இஸ்லாம் என்றால் அமைதி என்றும் சமாதானம் என்றும் கற்பிக்கிறாள். ஆனால் அவனுக்கு ரத்தம்தான் பிடித்திருந்தது. ரத்தம் தண்ணீர் மாதிரி ருசித்தது அவனுக்கு. வீட்டை விட்டு ஓடியாந்தது இதுக்குத்தானா அல்லாஹூ ரப்பே!
ராத்திரி அகால வேளையில் அக்பர் லாலா சந்து கல்லுக் கம்பத்தின் அருகில் இருட்டுக்குள் எப்போது வருவான் என்று காத்துக் காத்து பல வேளைகள். விடிந்தும் அவள் நிற்பதை தெருப் பெண்கள் கலக்கத்தோடு பார்ப்பார்கள். முத்தலீஃபு நிறையத்தான் சம்பாதித்தான். திடீரென்று பதினைந்து நாள் காணாமலே போய் விடுவான். அப்போதெல்லாம் நூரி ஒற்றை விளக்கேற்றி குர் ஆன் ஓதிக் கொண்டேயிருப்பாள். நூரிக்குக் கனவுகள் ஏதும் கிடையாது. ரெங்கராஜன் தான் கனவு!
யாரையாவது யாருக்காவது வெட்டித் தள்ளி விட்டு வந்திருப்பான். முத்தலீஃபின் உலகம் அவளுக்கு நன்றாகவே தெரியும். அங்கே எந்த தர்மத்துக்கும் ஒரே பதில். அடிக்கு அடி. கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல். உயிருக்கு உயிர். குலை நடுக்கமும் பயமும் இல்லாத நாளே கிடையாது. ஆனால் முத்தலீஃப் இரவுகளில் அரசன். ராணியிடம் வந்து விட்டால் அவன் பூந்தி நெய் லட்டுதான். அத்தனை இனிப்பு, மயக்கம், புதையல்.
இடைச்செருகலாக ஒரு விஷயம். தஞ்சாவூர் மாவட்டத்து இஸ்லாமிய வாழ்க்கை தமிழ் இலக்கியத்தில் அவ்வளவாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. உணவையும் தேகத்தையும் இசையையும் அந்த அளவுக்குக் கொண்டாடும் ஒரு இனம் இந்தியாவில் வேறேதும் இருக்க முடியும் என்று சொல்ல முடியவில்லை. பஞ்சாப், குஜராத் இரண்டையும் கூட அதற்கு அடுத்தாற்போல் தான் வைக்க முடியும். (ஆம், குஜராத்தியர்களைப் பற்றி இந்தியர்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் படிமம் தவறானது. கொண்டாட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் குஜராத்திகள்.) தஞ்சை மண்ணில் இஸ்லாமியர் மட்டுமல்லாமல் மற்ற சமூகத்திலும் 75 வயது ஆள் 16 வயது பெண்ணை மணப்பதும், 60 வயதுக்கு மேற்பட்ட பெண் கர்ப்பமடைவதும் குழந்தை பெற்றுக் கொள்வதும் அந்தக் காலத்தில் சர்வசாதாரணமாகக் காணக் கூடியதாக இருந்தது.
தஞ்சை ப்ரகாஷ் தஞ்சாவூர் மாவட்டத்தின் இஸ்லாமிய வாழ்க்கையை அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கிறார்.
மீண்டும் நாம் கதைக்குள் செல்வோம். 
ஒருநாள் இரவு மூன்று மணி. தெருச் சந்தில் முத்தலீஃபுக்காகக் காத்துக் கொண்டு நிற்கிறாள் நூரி. பத்து நாளாக ஆள் அரவமே இல்லை. வீடு பூராவும் தூசி மண்டிக் கிடக்கிறது. பெருக்கவில்லை. சமைக்கவில்லை. வாசல் தெளிக்கவில்லை. எவ எவ தாலியறுத்து எவ எவ பொழப்புல மண்ணள்ளிப் போட்டு… அல்லாஹூ! என்னா பொறவி இது!
கடைசியில் வந்து சேர்கிறான் முத்தலீஃப். வழக்கம் போல் தன் உடம்பால் அவளை வசப்படுத்துகிறான். அதில்தான் நாசமே. வந்ததும் வீழ்த்தி விடும் வசம். இன்னும் அவளை ஆழத்தில் புதைக்கும் சதி. இவனை மீற இவள் – இவளையே மீறியாக வேண்டும். பசிக்கப் பரிதவிக்க அடித்து – சாகவிருக்கும் கணத்திலேயே அமிர்தவர்ஷத்தால் மூழ்கடித்து மூச்சு விடக் கூட நேரம் தராதவன்!
அந்தத் தருணத்தில் அவளுக்குத் தோன்றுகிறது தன்னில் கரு உருவாகி விட்டதென்று. பெண்களால் அந்த சூக்ஷ்ம உணர்வைப் புரிந்து கொள்ள முடியும். ஆ, இன்னொரு ரெங்கராஜனா? சின்ன முத்தலீஃபா? யா அல்லா…! அப்பனைப் போல் தெருவில் அலையும் அடியாளாக – அதற்கும் திமிரும் ஆண்மையும் அழுத்தும் பாரமும் இனிக்கும் உடம்பும் இருக்குமா? வேண்டாம் மாமூ! நெருப்பாய் எரியிது, போதும்!
என்னடீ போதும், வா சைத்தான்…
மூச்சைப் பிடித்துக் கொண்டு உயிர்நிலையில் உதைக்கிறாள் நூரி. மீண்டும் எழுந்து அவளிடம் வரப் போகிறான் முத்தலீஃப். எழுந்திரு உம்மா எழுந்திரு… வயிற்றிலிருந்த குழந்தையின் குரல் அவளுக்குக் கேட்கிறது. எழுந்து மின்னல் போல் இருட்டில் பாய்ந்த அவள் நூரியா? அல்ல. விலங்கில் பூட்டப்பட்ட அடியுண்ட மிருகம்!
கயாமத் எனும் இறுதித் தீர்ப்பு நாள் என்ற சிறுகதையைப் படித்து முடித்தபோது நூரி முத்தலீஃபை ஏன் கொலை செய்தாள் என்பதற்கான காரணத்தை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. கர்ப்பம் கலைந்து விடும் என்பதனால் செய்தாளோ என சம்சயம். நல்ல இலக்கியப் பரிச்சயமுள்ள என் தோழி வெரோனிகாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். ‘நூரிக்கு முத்தலீஃப் மேல் அதீதமாக இருப்பது பாலியல் ரீதியான பிணைப்பு மட்டுமே. திருமணத்துக்குப் பிறகாவது அவனை நல்ல மனிதனாக மாற்ற நினைக்கிறாள். ஆனால் அவனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இப்போது கருத்தரித்த பிறகு இன்னொரு ரெங்கராஜனா என திகைக்கிறாள். தன் கணவனையாவது ரௌடியாக ஒரு பெண் ஏற்றுக் கொள்ளுவாளே தவிர தன் மகனை அப்படி ஏற்றுக் கொள்ள எந்தப் பெண்ணுக்கும் மனம் வராது. மேலும் நூரி ரெங்கராஜனின் அடிமையாகவே ஆகி விட்டாள். இப்போது அவனை அழிக்காவிட்டால் தன் மகனும் இன்னொரு ரெங்கராஜனாகத்தான் வருவான் என்று அவளுக்கு அந்தத் தருணத்தில் தெரிந்து போகிறது. ‘தன் உணர்வுகளை அடக்க முடியாமல் ஒருவனிடம் திரும்பத் திரும்ப அடிமையாகவே ஆகிறோமே; அந்தக் குறிப்பிட்ட ஒரு தருணத்தை உன்னால் அவனில்லாமல் தாண்ட முடியவில்லையா?’ என்பது ஒரு பெண்ணுக்குப் பெரும் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்தக் கூடிய விஷயம். அதனால்தான் நூரி ரெங்கராஜனை உயிர்நிலையில் தாக்கிக் கொல்லுகிறாள்’ என்றார் வெரோனிகா.
***
தஞ்சை ப்ரகாஷின் கதைகளில் பிரதானமாகக் காண்பது பெண்கள், பெண்களின் வாழ்க்கை, பெண்கள் மீதான அடக்குமுறை மற்றும் பெண்களின் அடக்கப்பட்ட காமம். காமம் கொண்டாடிய பொறா ஷோக்கு, கயாமத் போன்ற கதைகளுக்கு நேர் எதிராக ஒரு கதை ஜானுப் பாட்டி அழுது கொண்டிருக்கிறாள். காமம் அடக்கப்பட்ட பிராமணப் பெண்கள். அந்த வீட்டில் இரண்டு பெண்கள். ஒருத்தி சீதா. அவள் இப்படி அறிமுகமாகிறாள்: கண்ணாடியில் சீதா தன்னைப் பார்த்துக் கிளுகிளுத்தாள். சிவப்பு முகத்தில் அந்த சிவப்புச் சாந்து ரத்தம் துளிர்த்து விட்டது போல் அடர்ந்தது. குளித்ததால் நனைந்த ஈரம் பூரணமாகத் துடைக்காததாலேயே அந்தக் கண்ணாடியில் அவளைப் பூரணமாக்கித்தான் இருந்தது. காதுகள் பளபளத்தன. காதோரம் சுருள்கள் நனைவில் ஈரம் பூத்து சுருண்டு அடங்கியிருந்தன. கழுத்தும் ஈரத்தில் மினுங்கியது. குவடுகளில், புஜத்தின் சரிவில், நடுமுதுகுப் பாம்பு மடிப்பில் ஈரம். கண் இமைகளில் புருவங்களில் நெற்றி வளைவில்… குளித்த அவசரமா? அப்படியே பிழிந்த பாவாடையும் துண்டும் திண்ணையில் கட்டியிருந்த கொடியில் ரஸமாகக் காற்று ஊடே இழைந்து ஜன்னலருகில் கண்ணாடியில் குலவிக் கொண்டிருந்த சீதாவைப் புல்லரிக்க வைத்தது. கைகளைப் பார்த்துக் கொண்டாள். சிலிர்த்து விட்டதால் முன்மயிர் நிரம்பிய அந்தக் கைகள் முழுதும் ஒவ்வொரு மயிர்க்காலும் சிலிர்த்து எழுந்திருந்தது. கையும் காலும்! உடல் முழுதும்! என்ன கை! என்ன கால்! என்ன புஜம்! என்ன உடம்பு!
இன்னொருத்தி கண் பார்வை மங்கிய, எண்பது வயது ஜானுப் பாட்டி. பாட்டிக்கும் பேத்திக்கும் இடையே நடக்கும் மௌன யுத்தம்தான் கதை. எதைப் பற்றியது யுத்தம்? சீதாவின் உடம்பு. அதன் மீதான ஜானுப் பாட்டியின் கண்காணிப்பு. அதையும் தாண்டிய சீதாவின் தந்திரம். ‘ஸ்வாமிக்கு வெளக்கப் போட்டியோ?’ ‘ஆச்சுன்னேனே?’ ‘என்னது, வாசல் கேட்டேன்னா ஆரோ தெறக்றாப்ல இருக்கே?’ ‘யாருமில்ல பாட்டி. காத்து. அவ்வளவுதான்.’
கிணற்றோரம் நின்ற வாழைப் பட்டையில் உட்கார்ந்திருக்கும் வலியனைப் பாட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். தென்னை காற்றில் சிலுசிலுத்துச் சிரித்தது. கோவில் பிரகாரத்தைப் பார்த்தபடியே அசையாது உட்கார்ந்திருந்தாள் பாட்டி. இந்த ஆடி கடந்தால் பாட்டிக்கு எண்பது வயது. காலையில் ஜபம். நீராகாரம். மழைக் காலமானாலும் தலையைச் சிரைப்பதோ பட்டினி கிடப்பதோ அவலைப் போட்டுக் கொண்டு வேளையை ஓட்டுவதோ ஈரத்தோடே ஸ்தோத்திரத்தைச் சொல்லிக் கொண்டு செடிகளுடன் முனகுவதோ தண்ணீர் விடுவதோ எதுவுமே சிக்கலாகாது ஜானுப் பாட்டிக்கு. பிரகாரத்தில் யாரோ நடப்பது போல் தோன்றுகிறது. கண்ணைக் கசக்கியபடியே பார்க்கிறாள். பால் குடித்துக் கொண்டிருக்கும்போது தலைதூக்கிப் பார்க்கும் பூனை போல் வினோத சப்தம். கண்ணாடிப் பாத்திரம் சுவரில் உரசுவது போல வேறு ஒரு சப்த அனுபவம். என்ன இது? அமைதி. இருள். சுவர்க்கோழிகளின் இசை. பாட்டி மெதுவாக பிரகாரத்தில் நுழைந்து அகல் இருக்கும் மாடத்தில் எச்சரிக்கையோடு கை நீட்டுகிறாள். விளக்கு எரிகிறதா? வெப்பம் இல்லையே? பாட்டி அகலில் கை வைக்கிறாள். அகல் ஜில்லென்று இருக்கிறது. எப்படி இருக்கிறது? ஜில்லென்று… பாட்டி மூச்சு விடுவதை நிறுத்தி நின்று பார்க்கிறாள். மூச்சுக்கள் மோதும் ஓசை. கண்தான் குருடு. காதுமா குருடு?
இப்போது மீண்டும் வாசல் கேட்டு நாதாங்கி தைரியமாகவே ஓசையிடுகிறது. ராஜாராமன். ‘வாடா ராஜாராமா! கொஞ்ச நாழிக்கி மிந்தி இப்படித்தான் லொட்ன்னு நாதாங்கி சத்தம் கேட்டுது. நீ தானோன்னு நெனச்சிண்டேன்.’ ‘நான் இப்போதானே வர்றேன்.’ கூடத்தில் பட்டுப் பாவாடையின் சரசரப்பு கேட்கிறது. ‘ஏண்டாப்பா, ஊர்லேர்ந்து ஒம் பொண்டாட்டி இன்னம் வரல்லியே, லட்டர் கிட்டர் எழுதிப் போடப்படாதோ?’ பிறகு நேரடியாகவே தாக்குகிறாள் பாட்டி. ‘என் அவிஞ்ச கண்ணுல மண்ணெத் தூவிட்டு அவளெ இழுத்துண்டு அங்கே போயிட்டே… குட்டி கொஞ்சம் நிகுநிகுன்னு வளர ஆரமிச்சா போதும்டா ஒங்களுக்கு அன்னிலேர்ந்து… அயோக்கிய ராஸ்கல்… பதினாறு வயசாகல்லே… லோகந் தெரிஞ்சுடுத்து… தரிப்பாளோ? இனிமே இங்க வந்தே ஒம் பொண்டாட்டி கிட்ட நேராப் போய்டும் விஷயம், ஆமா?’ ராஜாராமன் அரண்டு போய் ஓடி விடுகிறான்.
பிறகு சீதாவை அழைத்து ‘கோவுல்ல மறந்துட்டு வெளக்கேத்தாமலே வந்துட்டே… இப்போவானும் எண்ணெய எடுத்துண்டு போயி குளுர எண்ணெ விட்டு திரியப் போட்டு நன்னா ஏத்தி வெச்சுப்ட்டு சாமி நல்ல புத்தியெக் குடூன்னு நன்னா வேண்டிண்டு வாடீ!’ என்கிறாள் பாட்டி.
விளக்கு ஏற்றி விட்டு வந்ததும் பாட்டி அமைதியாக சீதாவின் தலையைக் கோதுகிறாள். இருவருமாக திண்ணையில் வந்து உட்கார்ந்த பின் நீண்ட மௌனம். ஜானுப்பாட்டி அவளை அருகே இழுத்துப் போட்டுக் கொண்டாள். பாட்டியின் மடியில் தலை வைத்தபடி கிடந்தாள் சீதா. பாட்டியின் கை அவள் தலையைக் கோதியபடியே இருந்தது.
இருட்டு. சீதாவின் கழுத்தில் ஏதோ சொட்டுச் சொட்டாக சொட்டுவது போல ஒரு பிரமை. விரல்களால் தொட்டுப் பார்க்கிறாள் சீதா பயத்தோடு. ஆமாம் – ஜானுப்பாட்டி அழுது கொண்டிருக்கிறாள்.
எப்பேர்ப்பட்ட கதை! ஜானுப்பாட்டியின் கண்ணீர் பெண்களின் எத்தனை யுகயுகாந்திரமான தாபத்தையும் ஏக்கத்தையும் வேதனையையும் தனிமையையும் சொல்லுகிறது!
(தொடரும்)

Aug 28, 2015

நான் முதல் தலைமுறை விவசாயி

பிருந்தா சீனிவாசன்


நல்ல சம்பளம் தரும் ஐ.டி. துறை வேலைக்குப் பதிலாக விவசாயத்தில் ஈடுபாடு காட்டும் இளைஞர்களின் வரிசையில் ஒருவர்தான் என்றாலும், செந்தில்குமாரின் வாழ்க்கையும் இயற்கை வேளாண்மையை அவர் முன்னெடுக்கும் முறையும் வித்தியாசமானவை. நமது மரபு விவசாய முறைகள் குறித்த செந்தில்குமாரின் தேடல், வேர்களை நோக்கி அவரைத் திருப்பியது. ஒரு விவசாயியாக இன்று அவர் பரிணமித்திருக்கிறார்.

நம்முடைய மரபு சாகுபடி முறைகளை மீட்டெடுப்பதிலும், அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் வேலையையும் அவர் செய்துவருகிறார். வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குச் சென்றபோது செந்தில்குமாருக்கு ஏற்பட்ட அனுபவமே, நம்முடைய மரபு சாகுபடி முறைகள் மீது அவரை கவனம் செலுத்தத் தூண்டியது.

வெளிநாடு தந்த விழிப்பு

“நான் வேலை பார்த்த சாஃப்ட்வேர் கம்பெனி சார்பாக அமெரிக்கா சென்றேன். அங்கே தமிழர்கள் குறித்தும் நம் வாழ்க்கைமுறை குறித்தும் அவர்கள் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் என்னை வியக்கவைத்தது. நம் உழவுக் கலாச்சாரத்தையும் தற்காப்புக் கலைகளையும் அவர்கள் பெரிதாக மதிக்கின்றனர். ஆனால், நம்மிடமோ அது பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லை.

நம் மண்ணில் விளைகிற பொருட்களை மட்டமாகவும் தரக்குறைவாகவும் நினைத்து ஒதுக்கிவிட்டு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விரும்பி வாங்கிச் சாப்பிடுகிறோம். வெளிநாட்டில் ஒருவர் வாழைப்பழத்தைச் சாப்பிட்டுக்கொண்டே, அதன் மகத்துவத்தைப் பற்றி சொன்னபோது, அத்தனை நாட்களாக வாழைப்பழத்தை அலட்சியமாக நினைத்த எனக்கு அவமானமாக இருந்தது” என்று சொல்லும் செந்தில்குமார், சென்னை திரும்பியதும் நம் மரபு வேளாண்மை குறித்த தேடலில் இறங்கினார்.

பட்டறிவும் களப்பணியும்

வேளாண் வல்லுநர் சுபாஷ்பாலேக்கரின் ‘ஜீரோ பட்ஜெட் வேளாண்மை’, செந்திலின் தேடலுக்குப் பாதை அமைத்தது. அவர் நடத்திய வேளாண் கருத்தரங்குகளில் பங்கேற்று தன் பார்வையை விரிவுபடுத்திக்கொண்டார். களப்பணி இல்லாத பட்டறிவு, வேளாண்மையைப் புரிந்துகொள்ள உதவாது என்பதால் தும்கூர், மைசூர் ஆகிய இடங்களுக்குச் சென்று விவசாய முறைகளைத் தெரிந்துகொண்டார். தும்கூரில் நடந்த உலக வேளாண் அறிஞர்களின் மாநாடு, செந்திலுக்குக் கூடுதல் விஷயங்களைப் புரியவைத்தது.

ஒவ்வொரு நாட்டிலும் எப்படியெல்லாம் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படுகிறது என்பதை, அந்தந்த நாட்டு வேளாண் அறிஞர்கள் மூலமாகத் தெரிந்துகொண்டார். பனிபடர்ந்த அண்டார்ட்டிகா கண்டத்திலேயே விவசாயம் நடைபெறும்போது, வேளாண் மற்றும் தரிசு நிலங்களைப் பெருமளவு கொண்ட இந்தியாவில் ஏன் அது சாத்தியமாகாது என்ற கேள்வி, செந்திலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.

விவசாயிகளே வல்லுநர்கள்!

அடுத்ததாக இயற்கை வேளாண் முன்னோடி நம்மாழ்வார் நடத்திய பயிற்சி முகாம்களில் பங்கேற்றது, வேளாண்மை செய்வதற்கான செந்திலின் தன்னம்பிக்கையை அதிகரித்தது. பல தலைமுறைகளாக விவசாயம் செய்துவருகிறவர்களைச் சந்தித்து, அவர்களுடைய விவசாய முறைகளைக் கற்றறிந்தார். அப்போது, எழுதப் படிக்கத் தெரியாத நம் விவசாயிகளுக்குக் கிட்டத்தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட வேளாண் கலைகள் தெரிந்திருப்பது செந்திலின் ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது.

“ஏர் உழ ஏற்ற நாளைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, ஒரு பருவத்தின் காலநிலை, மழை பொழியும் அளவு, மண் வளம், மண்ணுக்கேற்ற இயற்கை உரங்கள், நுண்ணுயிர்களின் செயல்பாடு, நிலப் பாகுபாடு, கால்நடை பராமரிப்பு, பயிர்ப் பாதுகாப்பு என்று வேளாண்மையோடு தொடர்புடைய அனைத்தும் விவசாயிகளுக்கு அத்துப்படியாக இருந்தது, அவர்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்தியது” என்று சொல்லும் செந்தில்குமார், விவசாயத்துக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளும் செயல்களில் இறங்கினார்.

“ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் விவசாயிகள் பண்படுத்தி வைத்திருந்த நிலத்தை, ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் வளமற்றதாகி மாற்றிவருகின்றன. நிலமும் நிலம் சார்ந்த வாழ்க்கையுமாக இருந்த நம் ஐந்திணைக் கோட்பாடு காலப்போக்கில் மடிந்து, எதை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம் என்று மாறிவிட்டது. மண்ணுக்கேற்ற பயிர்கள், கால்நடைகள் என்று இயற்கையோடு ஒன்றிவாழ்கிற வாழ்வே சிறந்தது” என்று நம் விவசாய முறையின் பெருமையைப் பகிர்ந்துகொள்கிறார் செந்தில்.

தற்சார்பு விவசாயம்

பெருமைகளைப் பகிர்ந்துகொள்வதுடன் செந்தில்குமார் நின்றுவிடவில்லை. வேலூர் மாவட்டம் அத்தித்தாங்கலை அடுத்த ஒழலை கிராமத்தில், ஐந்து ஏக்கர் பரப்பளவில் வெற்றிகரமாக விவசாயம் செய்துவருகிறார். நிலத்தை வாங்கி நான்கே ஆண்டுகளில், ஆச்சரியப்படத் தக்க உற்பத்தியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார். முதலில் அந்த நிலத்தில் படிந்திருக்கும் ரசாயனத்தை அகற்றி, பண்பட்ட நிலமாக மாற்றினார். விவசாயத்துக்கு ஊட்டமளிக்க உள்நாட்டு கால்நடைகள்தான் தேவை என்பதால் உம்பளச்சேரி, திருவண்ணாமலை குட்டை ரக மாடுகளை வளர்த்துவருகிறார்.

இங்கே சூரிய அட்டவணைப்படி விவசாயம் நடக்கிறது. நீர்ப்பிடிப்புக்காகப் பண்ணைக் குட்டைகள் அமைத்திருக்கிறார்கள். சுபாஷ் பாலேக்கரின் ஐந்தடுக்கு விவசாயம் இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது. மரங்கள், தானியப் பயிர்கள், மூலிகைச் செடிகள் என இங்கே பல பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பஞ்சக் கவ்யா, பழ உரம், மீன் உரம், திரவ உரம், சாம்பல் உரம் எனப் பல்வேறு வகையான உரங்களும் இங்கே தயாரிக்கப்படுகின்றன. பச்சிலை பூச்சி விரட்டி, சாம்பல் - மூலிகை பூச்சி விரட்டி, இஞ்சி - பூண்டுக் கலவை பூச்சி விரட்டி, உலர் மூலிகைப் பூச்சி விரட்டி போன்றவையும் இங்கேயே தயாரிக்கப்படுகின்றன.

உழைப்பும் முக்கியம்

“நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த விவசாய நிலத்தை வாங்கினேன். நிலத்தில் இறங்கிப் பாடுபட்டால், அதற்கு நிச்சயம் பலன் உண்டு என்பதற்கு, இந்த நிலமே சாட்சி. ஐ.டி. கம்பெனியில் இருந்துகொண்டு விவசாய வேலை பார்ப்பதை ஆரம்பத்தில் எதிர்மறையாகப் பேசியவர்களும்கூட, பாரம்பரிய விவசாயத்தின் அவசியத்தை இன்றைக்குப் புரிந்துகொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. நான் முதல் தலைமுறை விவசாயி என்பதில் பெருமிதமடைகிறேன்” என்று சொல்லும் செந்தில்குமார், அதேநேரம் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு வேலையை விடுவது நல்லதல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

“விவசாயம் செய்ய வேண்டும் என்றால், நிலத்தில் இறங்கிப் பாடுபடத் தயாராக இருக்க வேண்டும். எடுத்ததுமே பலன் கிடைத்துவிடாது. பொறுமையும் கடின உழைப்பும் அவசியம். இன்று மக்களிடம் ஆர்கானிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு அதிகமாகியிருக்கிறது. ஆனால், இதிலும் கலப்படம் வந்துவிட்டதைப் பார்க்க முடிகிறது. விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்தால், கலப்படத்தைத் தவிர்க்கலாம்” என்கிறார்.

ஒரே நாளில் எந்த மாற்றத்தையும் செய்துவிட முடியாது. ஆனால் மாற்றத்துக்கான விதையை ஊன்றுவதற்கு ஒரு நாள் போதும். நீங்கள் விதை ஊன்றத் தயாரா?

கான்கிரீட் காடுகள் சூழ்ந்த பெருநகரங்களில் நகர்ப்புற விவசாயத்தைச் செயல்படுத்தும் நோக்கத்துடன் தன் நண்பர்களுடன் இணைந்து ‘சென்னை கிரீன் கம்யூன்’என்ற அமைப்பை 2008-ல் செந்தில்குமார் தொடங்கினார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும், நம் மரபு உணவுப் பொருட்களான சிறுதானியங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். இயற்கை விவசாயம் மூலம் அமைக்கப்படுகிற தோட்டங்கள் குறித்தும் அவற்றில் விளையும் காய்கறிகள் குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இவர்களுடைய செயல்பாடு குறிப்பிடத்தக்கது. வீடுகளிலும் மாடிகளிலும் தோட்டம் அமைக்க விரும்புகிறவர்களுக்கு இக்குழு வழிகாட்டுகிறது.

தனியார் மற்றும் பொது இடங்களில் இயற்கை வேளாண்மை குறித்த பயிலரங்குகளை இலவசமாக நடத்துகின்றனர். பெரிய அளவிலான கூட்டங்களுக்குக் குறைந்த கட்டணம் வசூலிக்கின்றனர். இவர்களுடைய அமைப்பு சென்னை மட்டுமல்லாமல் மைசூர், ஓசூர், கேரளா என்று பல்வேறு இடங்களிலும் கிளை விரித்திருக்கிறது. சென்னை கிரீன் கம்யூன் மூலம் கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இயற்கை வேளாண்மையிலும் மாடித் தோட்டம் அமைக்கும் செயல்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

விதைகளைக் காப்போம்

அவருடைய பணி அத்துடன் முடிந்துவிடவில்லை. வேளாண்மையின் ஆதாரமே தரமான விதைகள்தான். வீட்டையே விற்கிற வறுமையிலும் விதைநெல்லை விற்காத விவசாயிகளைக் கொண்ட சமூகம் நம்முடையது. நம் பாரம்பரிய வேளாண்மை முறைகளை மீட்டு, அதைப் பரவலாக்கி, பாதுகாக்கும் நோக்கத்துடன் ‘தமிழர் மரபியல் நிறுவனம்’ என்ற அமைப்பையும் செந்தில்குமார் நடத்திவருகிறார். தன்னார்வலர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆதரவுடன் செயல்படும் இந்த அமைப்பு மூலம், பள்ளி மாணவர்களுக்கு விதை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது.

“நம் பாரம்பரிய விதைகளை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் எங்கள் நோக்கம், தடங்கல் இல்லாமல் நடந்துவருகிறது. மாநகராட்சிப் பள்ளிகளில் தொடங்கி, சர்வதேசப் பள்ளிகள்வரை அனைத்துத் தரப்பு மாணவர்களையும் சந்தித்து, நம் மரபு விதைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம். தங்கள் கையால் பயிரிட்டு, விளைகிற காய்கறிகளை ஆர்வத்துடன் அறுவடை செய்கிற மாணவர்கள், எதிர்காலம் குறித்த நம்பிக்கையை நம் மனதில் அதிகரிக்கிறார்கள்” என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் செந்தில்குமார்.

செந்தில்குமார் தொடர்புக்கு: 99400 28160

சென்னை : ஒரு ஜல சமாதி

ஆதி வள்ளியப்பன்

தமிழ் இந்து நாளிதழில் வாசித்த முக்கியமான கட்டுரை



இன்று நாம் வாழும் இடமெல்லாம், ஏதோ ஒரு காலத்தில் அடர்ந்த காடாகத்தான் இருந்திருக்கும். பல ஊர்களுக்கு இது பொருந்தும். ஆனால், சென்னையில் இன்றைக்கு எழுந்து நிற்கும் பல பகுதிகளுக்கு அடியில், ஏதோ ஒரு நீர்நிலை இருந்த சுவடு தெரியாமல் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கும். சென்னையின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் எவரும், இதை உணர்ந்துகொள்ளலாம்.
இந்தப் பின்னணியில்தான் சென்னையில் எஞ்சியுள்ள முக்கிய நீராதாரங்களில் ஒன்றான போரூர் ஏரியைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் போராட ஆரம்பித்திருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.



தண்ணீர் வரலாறு

சென்னையும் தண்ணீர் பஞ்சமும் ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் போன்றவை. 19-ம் நூற்றாண்டின் மத்தியக் காலம்வரை கிணறுகளில் இருந்தும், ஏரிகள்-நீர்நிலைகளில் இருந்தும் சென்னை நகருக்குத் தேவையான தண்ணீர் எடுக்கப்பட்டுவந்தது. ஆனால், 1940-களில் சென்னையின் தண்ணீர் தேவை பூர்த்தியாகாமல், சிக்கலானதாகவே இருந்தது. நாடு விடுதலை பெற்ற பிறகு பூண்டி, செங்குன்றம், சோழவரம் நீர்த்தேக்கங்களில் இருந்து கிடைத்த தண்ணீர், தேவையை நிறைவு செய்துவந்தது. அதுவும் போதாத நிலையில் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை அன்றைய முதல்வர் அண்ணா 1967-ல் அறிவித்தார்.
இத்தனை அம்சங்களும் கைகொடுத்தும்கூட, 1974-75-ல் சென்னையின் தண்ணீர் தேவை தீர்த்துவைக்க முடியாததாக இருந்தது. அப்போதுதான் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் ஆழ்குழாய் கிணறுகளும் தண்ணீர் லாரிகளும் கால் பதித்தன. 1990-களில் சாதாரண மக்களின் கைக்கு எட்டாத தொலைவுக்குத் தண்ணீர் செல்ல ஆரம்பித்தபோது, தனியார் நிறுவனங்கள் புறநகர் பகுதியிலிருந்து தண்ணீரை உறிஞ்சி, லாரிகளில் கொண்டுவந்து விற்க ஆரம்பித்தன. 2003-04-ம் ஆண்டில் நீர்த்தேக்கங்கள் வறண்டபோது, சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு மீண்டும் மோசமாகத் தலைதூக்கியது.

சுருங்கிய இடைவெளி

இப்படியாக, பக்கத்தில் இருந்த நீர்நிலையில் கிடைத்துக்கொண்டிருந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து குழாய் விநியோகத்துக்கு மாறி, கடைசியில் லாரிகளில் விநியோகிக்கப்படும் விஷயமாகத் தலைகீழாக மாறிவிட்டது. இன்றைக்குத் தண்ணீருக்குக் கட்டணமாகக் கொடுக்கப்படும் விலையும் அதிகம், தண்ணீருக்கு இயற்கை சூழல் கொடுக்கும் விலையோ கணக்கிட முடியாத அளவு அதிகம்.
சென்னையின் தண்ணீர் பஞ்ச வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் முதலில் 80 ஆண்டு இடைவெளி, பிறகு 35 ஆண்டு இடைவெளி, பிறகு 15 ஆண்டு இடைவெளி என தண்ணீர்ப் பஞ்சம் வரும் காலம் சுருங்கிக்கொண்டே வந்திருக்கிறது. இதன்படியும் பருவநிலை மாற்றங்களையும் ஆராய்ந்தால், சென்னையின் தண்ணீர் பஞ்சம் இயற்கையானதல்ல என்பதை உணர்ந்துகொள்ளலாம்.



பறிபோன பராமரிப்பு

ஆறு போன்ற நிரந்தர நீர்வளம் இல்லாத சென்னை-பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் வாழ்ந்த நம் மூதாதையர்கள், நீர்த்தேவையின் அவசியத்தை உணர்ந்து அதற்கேற்பச் செயல்பட்டுள்ளனர். இயற்கையாக அமைந்த மற்றும் தேவை காரணமாக வெட்டப்பட்ட ஏரிகள், பாசன ஏரிகள் காலம்காலமாகப் பராமரிக்கப்பட்டு வந்ததற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. நூறு ஆண்டு காலத்துக்கு முன்வரை இந்தத் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது.
அதற்குப் பிறகு நீர்நிலைகள் சார்ந்த அக்கறை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்திருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பிறகு 'நகர வளர்ச்சி' முதன்மை பெற்றபோது, முதலில் காவு வாங்கப்பட்டவை நீர்நிலைகளே. இங்கே இடம்பெற்றுள்ள படங்களே அதற்குச் சாட்சி. சென்னை மாநகராட்சி அமைந்துள்ள ரிப்பன் கட்டிடம் 1913-ல் கட்டப்பட்டது. பறவை பார்வையில் எடுக்கப்பட்ட படத்தில், அதற்குப் பின்னால் அமைந்திருந்த மக்கள் பூங்கா - மாநகராட்சி விலங்கு காட்சிசாலை பகுதியில் 11 குளங்கள் இருந்துள்ளன. அவற்றில் பெரிதாக நீண்டிருக்கும் குளத்தைப் பார்க்கும்போது, ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இன்று அது இல்லை.

காணாமல் போன குதிரைலாட ஏரி

இன்றைக்குச் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏரிக்கரை சாலை, கால்வாய்க்கரை சாலை, முகப்பேர் ஏரி வீட்டுவசதித் திட்டம், மாம்பலம் ஏரி வீட்டுவசதித் திட்டம் என்பது போன்ற சாலைகளையும் திட்டங்களையும் பார்க்கலாம். இந்தப் பகுதிகள் அனைத்துமே ஒரு காலத்தில் ஏரியாக, கால்வாயாக இருந்தவைதான். இன்றைக்குப் பெயர்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன, ஏரிகள் காணாமல் போய்விட்டன.
இப்படிக் காணாமல் போன ஏரிகளில் முதன்மையானது, 'லாங் டேங்க்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட சென்னையின் பிரம்மாண்ட ஏரி. சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டைவரை குதிரைலாட வடிவில் நீண்டிருந்தது இந்த ஏரி. அமைந்திருந்த பகுதிக்கு ஏற்ப நுங்கம்பாக்கம் ஏரி, மாம்பலம் ஏரி, மயிலாப்பூர் ஏரி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுவந்தது. 1909 அரசிதழில் வெளியான வரைபடத்தில் இந்த ஏரி உள்ளது.
நுங்கம்பாக்கம் ஏரி இருந்த பகுதியில்தான் சூளைமேடு, லயோலா கல்லூரி, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்டவை இன்றைக்கு அமைந்துள்ளன. அதேபோல மாம்பலம் ஏரி இருந்த பகுதியில்தான் மேற்கு மாம்பலம், பாண்டி பஜார், பனகல் பூங்கா, கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி போன்றவை உள்ளன. தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில்தான் இந்தக் குதிரைலாட ஏரியின் அன்றைய எல்லை என்று கூறப்படுகிறது. இன்றைக்கு அந்த நீண்ட ஏரியின் எந்தச் சுவடும் இல்லை. இப்படியாக சுவடுகூடத் தெரியாமல் ஏரிகள் அழிக்கப்பட்டால், பிற்பாடு தண்ணீர் மட்டும் எப்படிக் கிடைக்கும்?


பாழான பள்ளிக்கரணை

மேற்கண்ட நீர்நிலைகளின் அழிவு நம் காலத்துக்கு முந்தையது என்றால், தென் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் அழிவு நம் கண் முன்னே நடந்துகொண்டிருக்கிறது. 1960-களில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் ராஜிவ் காந்தி சாலை தொடங்கும் மத்தியக் கைலாஷ்வரை 5000 ஹெக்டேருக்கு நீண்டிருந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அடுத்த 40 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் பல வகைகளில் சூறையாடப்பட்டது. இன்றைக்கு எஞ்சியிருப்பது, அதில் பத்தில் ஒரு பங்குதான்.
இந்த சதுப்புநிலத்தின் மேல் கிட்டத்தட்ட 80 ஹெக்டேர் பரப்புக்கு மாநகராட்சி குப்பைகளைக் கொட்டியிருக்கிறது. 2012 செயற்கைக்கோள் படத்தில் பச்சையாகத் தெரிவது சதுப்புநிலத்தின் நீர்ப்பகுதி. நடுவில் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள பழுப்பு நிறப் பகுதிதான் குப்பை கொட்டப்பட்டுள்ள இடம். அது மட்டுமில்லாமல் வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம், மத்திய அரசு நிறுவனங்கள், பாலங்கள் எனப் பல்வேறு கட்டிடங்கள் சதுப்புநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. ரியல் எஸ்டேட்டும் பள்ளிக்கரணையை பதம் பார்க்காமல் இல்லை.


எஞ்சியுள்ளது காப்பாற்றப்படுமா?

நாடு விடுதலை பெறுவதற்கு முன் சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் 124 முக்கிய ஏரிகள் இருந்ததாகப் புவியியலாளர்கள் சுசீலா ராகவன், இந்திரா நாராயணன் ஆகிய இருவரும் குறிப்பிடுகிறார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாகச் சுரண்டப்பட்டு இந்த நூற்றாண்டில் 40-க்கும் குறைவான ஏரிகளே எஞ்சியிருப்பதாகத் தெரிகிறது. அந்த ஏரிகள், நீர்நிலைகள் ஆரோக்கியமாக இல்லை என்பது மட்டும் நிச்சயம். பெருமளவு ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கலப்பது, குப்பை கொட்டப்படுவது எனச் சீரழிந்து கிடக்கின்றன. அது மட்டுமல்லாமல் நீர்நிலைகளுக்குத் தண்ணீரைக் கொண்டுவந்து சேர்க்கும் பாதைகளும் மூடப்பட்டுவிட்டன. இந்த நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை அப்படியே பயன் படுத்த முடியாது என்பது உண்மைதான்.
அதேநேரம் எஞ்சியுள்ள நீர்நிலை களைப் பாதுகாப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் ஆரோக்கியமான அளவில் இருக்கும். சென்னையின் கடற்கரைப் பகுதிகளான திருவல்லிக்கேணி, திருவான்மியூர் மட்டுமில்லாமல் உட்புறப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு சரிந்துவிட்டதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்த முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இவற்றிலிருந்து சென்னை முழு வதும் விரவிக்கிடந்த நீர்நிலைகள் தொடர்பாக அரசின் அலட்சிய மனோபாவமும், மக்களின் அக்கறை யின்மையும்தான் தொடர்ச்சியான குடிநீர் தட்டுப்பாட்டுக்கு அடிப்படை என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.
சிதைந்த நிலையில் இருந்தாலும் போரூர் போன்று எஞ்சியுள்ள நீர்நிலைகளும் அழிக்கப்பட்டால் ஆழ்குழாய் கிணறு, தண்ணீர் லாரிகள் மூலம் காலம் தள்ளிக்கொண்டிருக்கும் நம்முடைய நிலை, எதிர்காலத்தில் பாலைவனத்தில் முடிவடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Aug 27, 2015

பிள்ளை வளர்க்கலாம் வாங்க

என்.ராஜேஸ்வரி




தென்னை வளர்க்கலாம் வாங்க என்பது போல் ஒலிக்கிறது தலைப்பு. தரையில் தண்ணீர் ஊற்றினால் தலையில் இளநீர் சுமக்கும் தென்னை போன்று பிள்ளை வளர்ப்பு எளிதல்ல குழந்தை வளர்ப்பு எனப் புலம்புகிறோம் நாம். ஆனால் வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், ` குழந்தையை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்` என்கிறார்.

செடியாக இருக்கும்பொழுது, கிளையை வெட்டி விட்டால் செடி `போன்சாய்` ரகமாக மாறும். மரமான பின் சீர்படுத்தினாலும், சீர்படுத்தாவிட்டாலும் மரம் அழகுதான். ’படுத்தறான் பையன’் என்றால் உங்களை சீர்படுத்தச் சொல்லுகிறான் என்று அர்த்தம். அதற்காக அவர்களின் செயல்களை வெட்டி கொண்டே இருந்தால், முழுதாய் சீராய் வளர்வது எப்படி?

முதலில் பிள்ளை சொன்ன பேச்சைக் கேட்க வேண்டுமானால், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அதற்கு முதலில் தாய் எப்போதும் தூய்மையாகவும், சிரித்த முகத்துடனும் இருக்க வேண்டும். அதாவது இருபத்திநாலு மணி நேரமும்.

உடைத்துச் சொல்ல வேண்டுமென்றால், தாய் குளிக்காமல் சமைத்தால், பிள்ளை குளிக்காமல்தானே சாப்பிடும். தாய் இப்படி இருந்து கொண்டு, பிள்ளை குளித்து முழுகி சீருடை அணிந்து, கடவுளை வணங்கி, சாப்பிட கை நனைக்கும்பொழுது, தாயைப் பார்க்கும் அம்மா முகம் பார்த்து பால் குடித்த ஞாபகத்தில். அன்று புன்னகை பூத்து சுத்தமாக இருந்த அம்மாவின் முகம் இன்று சமையலறை போராட்டத்தினால், வாடி வதங்கி எண்ணெய் கரை படிந்து, மிரட்டும் விழிகளுடன் காண்பது பழகிவிட்டாலும் தினம் தினம் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் பிள்ளைக்கு ஏற்படுத்திவிடுகிறது. இந்த சொல்லத் தெரியாத வேதனையை விழுங்குவதா? அல்லது அந்தச் சோற்றை விழுங்குவதா? பரிதவித்துப் போகிறது பிள்ளையின் அம்மா பாசம்.

உங்கள் கவலைகளை யாரும் தூக்கிக் கொண்டு போய்விடமாட்டார்கள். அது உங்களின் நீங்காத சொத்துதான். ஒன்று போனால் ஒன்று வந்து ஒட்டிக் கொள்வது சகஜம்தான். பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் வரையிலாவது நடியுங்கள். உங்களுக்கு கவலையே இல்லாதது போல் முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
பிள்ளை வளர்ப்பதில் அவர்கள் அன்னையின் சொல்லைக் கேட்ட வேண்டுமானால், வாழ்வின் முடிவு வரை தொடர வேண்டிய முக மலர்ச்சி எப்போதும் முகத்தில் குடி கொண்டு இருந்துதான் ஆக வேண்டும். நீங்கள் அழகாய் இருந்து பாருங்கள், பிள்ளைகளின் ஆனந்தச் சிரிப்பை காணலாம். அமிர்தவல்லி அம்மா சொல்வார்கள் "தாய் இறக்கும் தருவாயிலும், இறந்த பின்னும் கூட அழகாய் தோற்றமளிக்க வேண்டும் பிள்ளைக்காக. ஏனெனில் தாயின் கடைசி முக முழி கூட பிள்ளைக்கு மனதில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். அழகாய் இருப்போம், பிள்ளைகளின் ஆனந்த வாழ்வுக்காக."

இதுவே பிள்ளைகளுக்கு தாய் தரும் மிகப் பெரிய சொத்து.

இப்போது பிள்ளை வளர்ப்புக்கு வந்து விடலாம். தெலுங்கு மொழி தோழி அவள். தன் ஒரு வயது மகளைப் பார்த்து, `கூவக்கா` என்பாள். அப்படி என்றால் கத்தாதே என்று அர்த்தம். உடனே அந்தப் பெண் குழந்தை கத்தும். இதனை பார்த்து குடும்பமே கை கொட்டிச் சிரிக்கும். குழந்தைதானே என்று. சொன்னால் நம்ப மாட்டீர்கள் முப்பது வயதான அந்த பெண் இன்றும் எது சொன்னாலும் கேட்பதில்லை. தனக்காகவும் தெரியவில்லை. சிறு வயது நிகழ்ச்சிதான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், ஏதோ தொடர்பு இருப்பது போலவே தோன்றுகிறது. தோற்ற மாயையாக இருக்கலாம்.

தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். தந்தை போல் என்று எந்தப் பழமொழியும் இருப்பதாகத் தெரியவில்லை. பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது போல தாய் இருந்தாலே போதும். தானே பிள்ளை, தங்கக் கம்பி ஆகிவிடுவான். பின்னர் அதுவே தங்கக் குடமாக மாறிவிடும். இதுபோதாது சொல்லிக் கொடுத்துதான் வளர்க்க வேண்டும் என்று தாய் விரும்பினால், முதலில் 'டிவி'யை அணைத்து விடுங்கள்.
நீங்கள் முதலில் சொல் பேச்சு கேட்கிறீர்களாக என்பதை 'டெஸ்ட்' செய்யத்தான் இந்த சும்மா ஆணை. 'டிவி' போடலாம் தப்பில்லை. தற்போது உங்களிடம் இருப்பது ஆறு மாதக் குழந்தை என்று வைத்துக் கொள்ளுங்கள். மடியில் இருந்த குழந்தை பாலுக்கு அழுகிறது.

நீங்களோ பிரபல 'சிங்கர்' நிகழ்ச்சியில் ஒன்றி இருக்கிறீர்கள். குழந்தைக்கு அப்படி ஒன்றும் கொலைப் பசி இல்லை என்பது தாய்க்குத் தெரியும். அப்போது குழந்தையிடம் சொல்லுங்கள், "இந்த நிகழ்ச்சி முடியும் வரை பொறுத்திரு, இன்னும் ஐந்து நிமிடம்தான் இருக்கு" என்று சிரித்தபடி.அதிசயம் என்னவென்றால் வயிற்றுக்குள் இருந்தே தாய் குரலைக் கேட்டுக் கொண்டிருந்த குழந்தைக்கு, தாயின் இந்த ஆணை புரியும். அமைதியாக இருக்கும் குழந்தை. நிகழ்ச்சி முடிந்த அடுத்த கணம் வீறிட்டு கத்தி தன் இருப்பை அறிவிக்கும். சொல் பேச்சு கேட்கவும், தன் உரிமை கோரவும் கற்றுக் கொண்டுவிட்டான் பிள்ளை. இதனைப் போல் இயல்பாகச் செய்ய வேண்டும். வலிந்து செய்தால் பலனற்றுப் போகும்.

பழங்காலத்தில் சொல்வார்கள் பெரியவர்களை எதிர்த்துப் பேசாதே என்று. பெரியவர்களை எதிர்த்துப் பேசுதல் என்ன இது கெட்ட பழக்கம் என்று கூட அதட்டிச் சொல்வார்கள். ஆனால் இக்காலத்தில் பிள்ளைகளை எதிர்த்துப் பேசாதீர்கள் என்பதுதான் சரி. ஆமாம், அது என்ன கெட்டப் பழக்கம் பிள்ளைகளை எதிர்த்துப் பேசுவது? இயல்பாக எடுத்துச் சொல்லுங்கள் அவர்கள் நம் பிள்ளைகள். ஒரு நாள் இல்லாவிட்டால், வேறொரு நாள் புரிந்து கொள்வார்கள்.

ஊதுகின்ற சங்கை மென்மையாகவும், இனிமையாகவும் ஊதிவிட்டால் போதும். ஒருபோதும் பிறர் முன்னிலையில் அவர்களை குறை கூறாதீர்கள். எதிர்காற்றில் எச்சில் உமிழ்ந்த கதை ஆகிவிடும். உங்களைப் போலவே உங்கள் பிள்ளை இருந்தால் அது 'போர்'. விதவிதமான ஆடைகள் போல, ஒவ்வொருவரும் விதவிதமாக இருத்தலே இயல்பு. உங்களைப் போல் இயல்பாகவே பிள்ளைகள் இருந்துவிட்டால் பரவாயில்லை. வேறு விதமான விருப்பங்கள் கொண்டிருந்தால் நல்லது. என்னைப் போல் ஆக்குகிறேன் என்றோ, உங்கள் ஆசையை அவர்கள் மேல் திணிக்கிறீர்கள் என்றாலோ என்ன தெரியுமா? அவர்களை வளைத்து, முறுக்கி, இழுக்கிறீர்கள் என்று அர்த்தம். பின்னர் 'சிக்கல் விழுந்து' சிக்கலாகிவிடும்.

நல்ல படிப்பைத் தவிர உலகில் நன்கு வாழ இரண்டு குணங்கள் மட்டுமே முக்கியம். ஒன்று சிக்கனம். இரண்டு உண்மை கூறுதல். முதலில் சிக்கனம் கற்றுத் தரலாம். ரொம்ப செலவு வைக்கிறார்கள் என்பதே பிள்ளைகள் குறித்த முதல் புகாராக இருக்கிறது. சின்ன விஷயமாகவே இதைக் கற்றுக் கொடுத்து விடலாம். வீட்டில் உள்ள வேண்டாத இடத்தில் எரியும் விளக்குகளையும், மின் விசிறியையும் 'சுவிட்ச் ஆஃப்' செய்தால், ஒரு தடவைக்கு ஒரு பாயின்ட் என்ற கணக்கில் நூறு பாயிண்ட் எடுத்தால் ஒரு பரிசு என்று பிள்ளையிடம் அறிவியுங்கள். பரிசுத் தொகை குறைந்தபட்சம் நூறு ரூபாயாக இருக்க வேண்டும். தினந்தோறும் எத்தனை 'பாயின்டு'கள் என்று குறிக்க வேண்டும். இதனால் அடுத்த மாதம் மின்சார பில் வரும்போது பதினைந்து ரூபாயாவது குறைந்து இருக்கும். இதனை மறவாமல் பிள்ளைக்குச் சுட்டிக்காட்ட வேண்டும்.

இது போல் தொடர்ந்து பழக்கிய பிறகு, மாதாந்திர காய்கறி மற்றும் பழச் செலவை செய்யச் சொல்லி, அம்மாதத்திற்கான மொத்தப் பணத்தையும் ஒரு டைரியில் வைத்து, அன்றன்றைக்கு ஆன செலவை எழுதச் சொல்லவேண்டும். இதனால் அவர்கள் மூன்று விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். ஒன்று, சரியான மீத சில்லறை பெறுதல். இரண்டு, பருவ பண்டங்கள் வாங்கினால் விலை குறைவு என்ற சமூகப் பொருளாதாரம். மூன்று, கூச்சம் விலகித் தன்னம்பிக்கை பெறுதல். பிள்ளைகள் அறியாமல் இவை அனைத்தும் உங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

இவற்றைச் சரியாகக் கற்றுத் தந்துவிட்டீர்கள் என்றால் பிள்ளைக்கு 'ஊதாரி' என்ற அவப்பெயர் ஒருபோதும் ஏற்படாது.
அடுத்தது உண்மை பேசுதல். இதற்கு உங்களைத்தான் முன்னுதாரணமாக கொள்கிறார்கள் பிள்ளைகள். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். இதைப் போலத்தான் உங்களது உண்மை பேசும் குணம், பிள்ளையிடம் பரிமளிக்கும்.

பிள்ளைகளுக்கான வாழ்க்கையை நல்ல பண்புகளைக் கொண்டு 'ரிசர்வ்' பண்ணுங்க, பயணம் சுகமாக இருக்கும்.

Aug 25, 2015

தஞ்சை ப்ரகாஷ் 3 - சாரு

தினமணி இதழில் வெளிவரும் பழுப்பு நிறப் பக்கங்கள்


            ற்றி எரிந்த தென்னை மரம், கயாமத் எனும் இறுதித் தீர்ப்பின் நாள், ஜானுப்பாட்டி அழுது கொண்டிருக்கிறாள், இருட்டின் நிறங்கள், கடைசிக் கட்டி மாம்பழம், எரித்தும் புதைத்தும், கொலைஞன், நாகம், நியூஸன்ஸ், பேய்க் கவிதை, பூகோஸ், பள்ளத்தாக்கு, பொறா ஷோக்கு, புலன் விசாரணை, இராவண சீதை, சோடியம் விளக்குகளின் கீழ், சுயம், வத்ஸலி, உம்பளாயி, வடிகால் வாரியம், ஆலமண்டபம், என்னைச் சந்திக்க வந்த என் கதாபாத்திரம், தஞ்சையின் முதல் சுதந்திரப் போராட்டம், திண்டி, உனக்கும் ஒரு பக்கம், அங்கிள், வைரமாலை, வெட்கங்கெட்டவன், மேபல், அங்குசம், அஞ்சுமாடி – ப்ரகாஷின் இந்தச் சிறுகதைகளைப் படித்து விட்டு ‘இந்தத் தொடருக்காக இதுவரை நான் படித்ததிலேயே இதுதான் உச்சபட்ச எழுத்து’ என்று என் நண்பரிடம் சொன்னபோது ‘ஒவ்வொருவரைப் பற்றியுமே அப்படித்தானே சொல்கிறீர்கள்?’ என்றார். ஒரு மலையேறி கிளிமாஞ்சரோ மலையில் ஏறி முடிக்கும்போது இதுதான் இருப்பதிலேயே உச்சம் என நினைக்கிறான். பிறகு நங்கா பர்வதத்தில் ஏறுகிறான். அது கிளிமாஞ்சரோவை விட உயரம். பிறகு லோட்ஸே, அதன் பிறகு காஞ்சன்சுங்கா, கடைசியில் எவரெஸ்டைத் தொடும் போது உலகின் ஆக உச்சம். தஞ்சை ப்ரகாஷை அப்படித்தான் பார்க்கிறேன். ஆக உச்சம். மகா கலைஞன். இவனை பாரதியோடு ஒப்பிடுவதா? சிறுகதை இலக்கியத்தில் உலக சாதனை செய்துள்ள போர்ஹேஸ், சாதத் ஹாஸன் மாண்ட்டோ, செகாவ், பல்ஸாக், மாப்பஸான், ஆகியோருடன் ஒப்பிடுவதா? இவர்கள் எல்லோரையுமே விஞ்சியவராகத் தெரிகிறார் தஞ்சை ப்ரகாஷ். ஏனென்றால், ப்ரகாஷின் ஒவ்வொரு சிறுகதையுமே ஒரு குறுங்காவியத்தை வாசித்தது போன்ற உணர்வைத் தருகிறது. ஒவ்வொரு கதையுமே நமக்குள் காவியங்களின் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ப்ரகாஷின் பதினெட்டாம் நூற்றாண்டின் கதைகளையெல்லாம் வாசிக்கும் போது இவர் அந்த நூற்றாண்டில் வாழ்ந்தவரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறார். அதனாலேயே இப்படிப்பட்ட ஒருவர் எழுதுவதைத் தவிர வேறு எந்த வேலையையும் செய்திருக்கக் கூடாதே; செல்வச் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர் ஏன் பத்துப் பதினைந்து தொழில்களைச் செய்தும் பல்வேறு பத்திரிகைகளை நடத்தியும் வாழ்நாளை வீணடித்தார் என்ற துக்கம் மேவுகிறது. இவ்வளவு விஸ்தாரமாக, இத்தனை துல்லியமாக, இப்படிப் பரந்து பட்ட அளவில் ஒரு மனிதனால் எழுதக் கூடுமா, மனித எத்தனத்தில் இதெல்லாம் சாத்தியமா என்ற திகைப்பு ஏற்படுகிறது.
தஞ்சாவூர் மண்ணில் பல்வேறுபட்ட கலாசாரங்களின் சங்கமத்தை நாம் காண முடியும். இது எப்படி நிகழ்ந்தது என்று ப்ரகாஷின் ‘பொறா ஷோக்கு’ என்ற கதையில் ஒரு குறிப்பு வருகிறது.
‘ஏராளமான ஜனங்கள் தெக்குச் சீமையிலிருந்தும் வடக்குச் சீமையிலிருந்தும் தஞ்சாவூருக்குப் பஞ்சம் பிழைக்க வந்து கொண்டிருந்த தாது வருஷப் பஞ்சம் அது. இராமநாதபுரம் பக்கம் இருந்து வந்த தேவமார்கள், தேவாங்குச் செட்டிகள், தெலுங்கு பேசும் நாயக்கர்கள், பிராமணத் தெலுங்கு ராவ்கள் ஆந்திரப் பிரதேச வடுக தேசத்திலிருந்து வந்தார்கள். கொடுமையான பஞ்சம். கோயம்புத்தூர் பக்கமிருந்து வந்த கீதாரிகள் என்று தஞ்சாவூர் கிடுகிடுத்தது. எங்கும் தொழில் இல்லை. சோற்றுக்கு விதைக்க நெல்லும் இல்லை. விதை நெல்லை வேக வைத்து சாப்பிட்ட காலம். சிங்கம்புணரி பாலயம்பட்டியிலிருந்து வந்த பஞ்சத்துக்குப் பயந்தோடி வந்த நாடார்கள் தஞ்சாவூர் கோட்டைக்கு வெளியே கூலிக்கு வயலில் புரியாமல் வேலை செய்தார்கள். அரண்மனையில் மராட்டியர்களின் மாற்றம் – தெலுங்கு பேசியவர்கள் மராட்டி பேசினார்கள். பட்டினி வியாதி கொள்ளை நோயால் தப்பித்து வந்தவர்களைக் காவிரி சேர்த்துக் கொண்ட விபரீதம். வடக்கே இருந்து வந்த ராஜு ஜாதியினர் கோட்டைக்குள் புகுந்தனர். மழை பெய்தது. ஆலங்கட்டி மழை! தண்ணீரே இல்லாத பனிப்பாறை மழை! ஜனங்கள் வெளியே வர பயந்து பட்டினியாய் வீட்டுக்குள் காலம் கழித்த நேரம்.’
‘இருநூறு வருடங்களுக்கு முன்பு தஞ்சைக்குள் நுழைந்த மாலிக்காப்பூரின் படை துரத்தித் துரத்தி அடித்துத் தஞ்சாவூர் மக்களின் உடுதுணிகளையும் சேலைகளையும் பிடுங்கி முதுகில் கொறடாவால் ஒவ்வொருவருக்கும் ஒரு முத்திரை போட்டு விட்ட ரத்த அடையாளம்… கொள்ளை அடித்துச் சென்ற கோடிக் கணக்கான கோயில் சொத்துக்கள்… இதே அகழ்நீரில் மிதந்த நூற்றுக் கணக்கான பிராமண உத்தமர்களின் சடலங்கள்… பின்னர் விரட்டி வந்த காலத்தில் மூன்றரை லட்சம் போர் வீரர்களோடு தஞ்சையைச் சூறையாடிய மாதவராவ் சிங்ளே… அவனைத் தொடர்ந்து குலநாசம், ஸ்தலநாசம், பூமிநாசம் செய்த மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆடிய ஆட்டம்…’
‘அடுத்து குறுக்கில் வந்த ஹைதர் அலி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்து திண்டுக்கல் வழியே தஞ்சையைக் கவிழ்க்கப் பாய்ந்து வந்த முஸ்லீம் படைகள்… வெடித்துச் சிதறிய பீரங்கிக் கங்குகள்… தஞ்சை இப்படிப் பலமுறை சுடுகாடாகி, வந்ததையெல்லாம் விற்று, பறித்ததையெல்லாம் தின்று, சாலையோரத்துப் புளியமரத்தில் இருந்த புளியைக் கரைத்துக் குடித்து இந்த அகழ் தண்ணீரில் இறங்கி எத்தனை பெண்கள் மானமிழந்த உடல்கள் எத்தனை நூற்றாண்டுகளாய் மிதக்கின்றன…’
தஞ்சாவூரில் பல்வேறு இனங்கள் சங்கமித்ததன் கதை இதுதான்.  
இவற்றில் பிராமணர், கள்ளர், இஸ்லாமியர் என்ற மூன்று கலாசாரப் பிரிவினர் பற்றியும் தனித்தனியாக மிக விஸ்தாரமாக எழுதியிருக்கிறார் ப்ரகாஷ். ஒவ்வொரு பிரிவிலுமே அரை நூற்றாண்டு வாழ்ந்தவரைப் போல் அவர்களின் கலாசார வாழ்வை துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். 
பொறா ஷோக்கு என்று ஒரு கதை. இவ்வளவுக்கும் எழுதி முடிக்கப்படாத கதை. உலகின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாகக் கருதப்படத்தக்கது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், நான் மேலே குறிப்பிட்ட அத்தனை சிறுகதைகளுமே ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன. ஒரு படைப்பாளி தான் எழுதிய அத்தனை சிறுகதைகளிலுமா உச்சம் தொட முடியும்? ப்ரகாஷிடம் சாத்தியமாகி இருக்கிறது. 

தஞ்சாவூர் கீழவாசல் காசீம்பாய் ராவுத்தருக்கு வயது 106. தலையைச் சுற்றிலும் லேசான வழுக்கையும் அடர்த்தியான முடியும் யாரும் அறுபத்து ஐந்து வயதுக்கு மேல் சொல்ல முடியாது. வில் போன்ற தேகம். ராவுத்தருக்கு 106 வயதில் 18 வயது மகள். 75 வயதில் 18 வயது ஜைத்தூனை மணந்ததால் உருவான வாரிசு.  இதுதான் தஞ்சை மண்ணின் விசேஷம். இதைத்தான் கு.ப.ரா.விலிருந்து கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம் வரை அத்தனை தஞ்சை எழுத்தாளர்களும் எழுதித் தீர்த்தார்கள். 
ஆண், பெண் இருபாலரின் தேக அழகை ப்ரகாஷ் அளவுக்குத் தமிழில் எழுதியது யாராகவும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. தெய்வீக அருள் பெற்ற சிற்பி ஒருவன் உலகின் மகத்தான சிலையை வடிப்பது போல் ஆண் பெண்களின் தேகத்தை வர்ணிக்கிறார் ப்ரகாஷ். பேய்க்கவிதை என்ற சிறுகதையில்:
வெள்ளைத் தோலும் சிவப்பு சருமமும் மஞ்சள் கூடிக் கிடந்த பால் போன்ற நிறமும், உடலின் மேடு பள்ளங்கள் துல்லியமாய்த் தெரியும் பட்டுப் புடவையின் சலசலப்பும் மெல்லிய மிருதுவான மணம் வீசும் பூக்களும், மிதமான சுடர் வீசும் வைர நகைகளும் கடல் போன்ற அவளது விழிகளும் யாரையும் அயர வைப்பது அவளுக்குப் பழக்கமாகி செரித்துப் போன விஷயம்.
கொலைஞன் என்ற கதையில்: ஐநூறு கிலோ இரும்பு தட்டுகளை அடுக்கி இருபுறமுமாக மாட்டி குறுக்குக் கம்பியின் மூலம் பளு தூக்கினான் அவன். எல்லோரும் அவன் உடம்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். கரளை கரளையான சதை சொன்னபடி கேட்டது. பலகை பலகையாக மாரும் முதுகும் சதையாலேயே இரும்புச் சிலை போல் அமைந்திருந்தது.
நாகம் என்ற கதையில்: சாட்டை போன்ற பளபளக்கும் உடல். என்னெல்லாம் அடங்கியிருக்குமோ அப்படி நெஞ்சு நிமிர்ந்து அவள் நடந்து வரும்போது ஆண் களையேறிய அற்புத வளமை.
கைகளா அவைகள்! வைரத் தண்டுகள்!
மல்லிகை மொக்குப் போல மாப்பிசைந்து உருட்டியது போன்ற கரங்கள்.
சுந்தரமூர்த்தியின் உடம்பு பற்றி நாகம் எண்ணுகிறாள்: என்ன உடம்பு அது? சந்தனமா இல்லை செந்தூரமும் சந்தனமும் கலந்து உருட்டிய மேனியா? பனியன் கூட இல்லாத இந்த மேனியில் ஏதாவது ஒரு புள்ளி மாசு இருக்கிறதா… சுருள்சுருளாய் அலைந்த இந்தத் தலைமுடி யாருடையது? என்னுடையது! பாலூற்றியது போல் அகன்று விரிந்த அந்த நெற்றியும் விசிறிக் கிடக்கும் புருவங்களும் கடல்விழிகளும் கபடமில்லாத குணத்தைக் காட்டும் நேரான அந்தச் செதுக்கிய மூக்கும் உதடுகளும் சங்கைக் கடைந்த வளையக் கழுத்தும் யாருடையவை? என்னுடையவை!
 பொறா ஷோக்கு கதையில் 75 வயது ராவுத்தருக்கு மனைவியான ஜைத்தூன் இப்படி அறிமுகமாகிறாள்: 
என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மலங்க மலங்க விழித்தபடி கைகளைத் தொங்கவிட்டாள் ஜைத்தூன். காதோரம் முடி சுருளைகளாக வியர்வையில் பேரழகு சிந்தின. வெறும் கழுத்தில் இருந்த கறுப்புக் கயிறு மார்பிலிருந்த ஒரு ஒற்றைப் பரு கருப்பில் முட்டியபடி பிரிந்து கொடுத்தது. அந்த 75 வயதுக் கிழவரே இல்லை என்று சொல்லி விடவில்லை. அலுமினியம் மூடியில் ரொட்டியை எடுத்துக் கறியில் தோய்த்து வாயில் திணித்து அவளையே பார்த்தபடி ‘எங்கிட்ட என்ன இருக்குன்னிட்டு இவளக் கட்டறேங்கறே’ என்று கேட்கும் முன் ஜைத்தூனின் உம்மா அவள் கையைப் பிடித்து ‘இந்தாங்க பிடிங்க’ என்று ஒப்படைத்தாள். கறியின் மணமும் சுவையும் ஜைத்துனின் சாகசமும் சாதுர்யமும் ஒரே நேரத்தில் அவரை அமுக்கி அடித்ததை விட ஜைத்தூனின் பேரழகு அவரை மீண்டும் பூமியைப் பார்க்க வைத்தது. பூமி சிவந்தது.
ஆனால் அன்றிரவே ஜைத்தூன் மஸ்தானுடன் ஓடி விடுகிறாள். மஸ்தான் அவளைக் கேரளத்தில் கொண்டு போய் விற்று விடுகிறான்.  நான்கு ஆண்கள் எமகிங்கரர்கள் போல் அவளைத் தூக்கிச் சுவற்றில் மாட்டுகின்றனர்… அங்கிருந்து தப்பி பத்து நாள் பட்டினியுடன் உடல் முழுவதும் அடியும் உதையும் வாங்கிய கன்றிப் போன புண்களுடன் ராவுத்தரிடமே வந்து சேர்கிறாள் ஜைத்தூன். அதற்குப் பிறகு சுத்தமான ஒரு குழந்தையை ராவுத்தரின் ரத்தத்தில் பெற்றெடுக்கிறாள். அவள்தான் ரம்லத்.
வானளாவிய சுவர்கள். ராமர் செங்கற்களால் கட்டப்பட்ட புராதனச் சுவர்கள். கீழே செம்பாராங்கற்கள் மீது எந்தப் பிடிப்பில் அவை நிற்கின்றனவோ? தஞ்சாவூரின் கீழவாசல் கோட்டை முழுக்க பள்ளம் முழுவதும் முஸ்லீம்களால் நிரம்பியிருக்கின்றன. கீழக்கோட்டை வாசலிலிருந்து நீண்ட சரிவான பாதை இருபுறங்களிலும் அகழிநீர் அலையடித்துக் கொண்டிருந்தது. கோட்டை இப்போது கோட்டையல்ல. இன்று கோட்டைச் சுவர் மீது பன்றிகள் மேய்கின்றன. கீழவாசல் மேட்டுச் சுவரின் நீட்சியில் ஒரு சிறிய மேடு. அதுதான் பீரங்கி மேடு. பிரம்மாண்டமான பீரங்கி. நூற்று இருபத்தைந்து அடிகளுக்கும் மேல் நீண்ட பெரிய பீரங்கி மேட்டில் பல மணி நேரம் வெய்யிலில் குளிர் காய்ந்து கொண்டு பீடியை உறிஞ்சி ஊதிக் கொண்டு அதோ காசீம் முகைதீன் ராவுத்தர்.
‘இந்த துனியாவுல அதும் மாதிரி ஆம்பளை சுத்தமான ஆம்பளை கிடையாது. ஜைத்தூன், வயசாச்சேன்னு நெனைக்காதே. சுத்தமான ஆம்பளை. இருபத்தைஞ்சு வருஷமா எனக்குத் தெரியும். ஒன்னையெ கெட்டுனது அல்லாவோட கிருபை. தூங்கிடாதே ஜைத்தூனு. அந்த ஆளெ தூங்க உட்றாதே! வேன்னா தெருவுக்குத்தான் வரணும். கெட்டிப் புடி. உட்றாதே! முட்டியடி. வணங்க மாட்டான். வணங்கு. கொடல் கறியும் வெதர் பொரியலும் பண்ணி ஊட்டி உடு. கஞ்சி கூட செவுரொட்டிக் கஞ்சி வை. மடியில இருந்து ஊட்டு. அப்பா மாதிரி அம்மா மாதிரிதான். கொஞ்சம் கொஞ்சமா எளக்கி மாட்டு. உட்றாதே’ என்று சொல்லி ஜைத்தூனை ராவுத்தரிடம் அனுப்பி வைக்கிறாள் ஜைத்தூனின் உம்மா ஷம்ஷாத்.
ஆனால் ராவுத்தரிடம் அசைவு இல்லை. நிக்கா முடிஞ்சு மூணு மாசம் கழிந்த போதும் ராவுத்தர் மடியில் தூங்கிக் கிடக்கும் ஜைத்தூன் பீவியை இருட்டில் வந்து அடித்து எழுப்பி துணியையும் உருவி திரும்பி ராவுத்தரிடம் விரட்டும் வேலையும் பயன் தரவில்லை. ராவுத்தர் முப்பது வருடத் தனிமையில் இருந்தவர். பெண்ணின் ஸ்பரிசம் மறந்து விட்டது. பிறகு எப்படி அவர் ஜைத்தூனுடன் கலந்தார் என்பதை இந்தக் கட்டுரையில் என்னால் சொல்ல இயலாது. நீங்களே வாசித்துக் கொள்ள வேண்டியதுதான்.
காசீம் ராவுத்தர் ஜைத்தூனை இணந்ததும் பிளந்த முதல் கனவு நிஜமாய் அனல் சுடர்ந்தது. உம்மா சொன்னது நிஜம். நிஜம். முரட்டு ஆம்பிளைதான். அடங்காத ஆம்பளை. ஆச்சரியமான வேகம். சுடரும் ஆம்பளை காசீம். அரற்றலுக்கு ஜைத்தூனின் உம்மா ஷம்ஷாத் இடமே தராமல் கதவுகளை இறுக அடைத்தாள்.
கதையில் ஷம்ஷாதின் கதையும் வருகிறது. ஷம்ஷாத்தை பதினோரு வயதில் அரண்மனையில் கோடாவாயாவாய் இருந்த முரட்டுக் குதிரைக்காரன் ரப்பேலுக்குக் கொடுத்துக் கன்னி கழித்தாள் அவள் உம்மா. அது அந்தக் காலம். அப்போதும் ஏழ்மை தன் கொடுங்கரத்தை விரித்து ஷம்ஷாத்தை உறிஞ்சியது. பசியின் காலம். ஷம்ஷாத்தை பத்து மாத பத்து மாத இடைவெளியில் ஓயாமல் பிரசவிக்க வைத்துப் பிழிந்தெடுத்தான் ரப்பேல். பெரும்பாலும் பட்டினியும் பசியும் புளியங்கொம்பிலிருந்து கொழுந்து பறித்துத் தின்பதும் புளியங்கொட்டையை அறைத்து இடித்துக் கஞ்சி வைப்பதுமான கொடூரமான காலம். ஆனாலும் நினைக்கவே பலம் தந்த உறவு ரப்பேலுடையது. ஊக்கமான ஆள். அவனுக்கு அரண்மனையில் சாப்பாடு கிடைத்து விடும். ஷம்ஷாத்தின் பர்தாவை உருவி எறிந்து விட்டு இரவு முழுவதும் ஹீனமான குரல் அனுங்க அனுங்க ஷம்ஷாத்தை வெறியின் வடிவமாக்கும் ரப்பேலிடம் ஒரே நல்ல குணம் விடாமல் அவளை உயிருடன் வைத்திருந்ததுதான்.
பிறகு ஆப்பக் கடை போடுகிறாள் ஷம்ஷாத். அந்தக் காலத்தில் கீழவாசலில் அவள் ஆப்பம் பிரசித்தம். பெரிய வீட்டு ஹாஜியார் பொண்டாட்டி கூட வாங்கிச் சாப்பிடுகிற அபூர்வமான ஆப்பம். திடீரென்று ரப்பேல் வருவான். ஒரு அடுக்கு வெல்ல ஆப்பத்தை இபிலீஸ் மாதிரி சுருட்டிச் சுருட்டி வாயில் திணித்து கபளீகரம் செய்து அன்றைய வியாபாரத்தை ஸ்தம்பிக்க வைத்து விட்டு அதைக் கேட்டதும் ஷம்ஷாத்தை இழுத்துப் போட்டு அதே இடத்தில் சாத்து சாத்து என்று சாத்தி தெருவையே ஸ்தம்பிக்க வைத்து விட்டு ரௌடிப் பெண்கள் தடுக்க வரும்போது அவர்களையும் இழுத்துப் போட்டு அறைந்து விட்டுப் போவான்.
காசீம் ராவுத்தரின் இளம் பிராயம் எப்படி இருந்தது? ராவுத்தருக்கு ஐந்து பீவிகள். எப்போதாவது அந்த வீட்டு மாடிக்குப் போய் வானத்தில் இருந்து புறாக்களுடன் சமிக்ஞை பழக மேலே போகும் போதுதான் அந்த வீட்டுப் பெண் மக்கள் அவரைக் கண்டதும் பர்தாவை இழுத்து வீட்டுக்குள் ஒதுங்கும் போது தெரியும் முக்கோண முகங்களைக் கொண்டுதான் இவள் இன்னாள் என்று தெரியும். அடேயப்பா எத்தனை பெண்கள் எத்தனை பெருமூச்சுகள். ஒன்றும் முடியாமல் அவரைத் தேடி வரும் பெண்களை எத்தனை முறை ஒதுக்கி புத்தி சொல்லி அனுப்பியிருக்கிறார். அந்த வீட்டில் இருள் இப்போது நிரந்தரம் ஆயிற்று. ஆலங்கட்டி மழையில் அந்த வீட்டுச் சிறுவர்களும் சிறுமிகளும் பனிக்கட்டி பொறுக்கும் வேளைகளிலும் கூட மனைவிகளின் தாபத்தைத் தணிக்க வீடு தங்க மாட்டார் காசீம் முகைத்தீன் ராவுத்தர்.
வீட்டுக்குள் வரும் போதெல்லாம் பீவிகளின் வியர்வை ஊறலில்தான் விழிப்பார் காசீம். ஐந்து பீவிகளும் கிரமமாக அவருக்கு – அவருக்கு மட்டும் - வாரி வாரி வழங்கி கொடுமையான வேகத்துடன் காதலித்தார்கள். தெய்வம் போன்ற பெண்கள் – சமைப்பதும் ஊட்டுவதும் காப்பதும் ஆன அபூர்வமான மூடுபடம் இட்ட பாயும் குதிரைகள் அவர்கள். காசீம் பாயை ஊட்டி ஊட்டி அவரது உயிரை வளர்த்தது ஆச்சரியம். வெளி ஆண்கள் யாரையும் தெரியாது. அந்த வீட்டின் இருண்ட மூலைகளும் அரவை எந்திரமும் உரலும் குந்தாணியும் திருவையும் மட்டும்தான் தெரியும். உள்வீட்டுக்குள் அங்கணத்தில் யாரும் வர முடியாத கோட்டை போன்ற வீடு. வீட்டு ஆண்களுடன் கூட அதிகம் பேச யாரும் இருப்பதில்லை. ஆலங்கட்டி மழை பொழியும்போது மட்டும் எல்லாப் பெண்களும் வேடிக்கை பார்க்க வாசல் குறட்டில் வந்து நிற்கும்போதும் யாரும் அவர்களைப் பார்க்க முடிந்ததில்லை.
‘ஜொஹரா புள்ளையாண்டிருக்கிறா. மூணு மாசம் பாருங்க அத்தா! அவ கூட புள்ளை பெறப் போறா’ என்றாள் ஜன்னத் வெட்கப் புன்னகையுடன், அவர் மார்பில் அவளது கனிகள் கசங்க இறுக அணைத்தபடி. ராவுத்தரின் ஐந்து பீவிகளின் தலைவி ஜன்னத். ‘எனக்குத் தெரியாம எப்படி நடந்தது?’ என்று முட்டி முட்டி அவரைத் திகைக்க அடித்தாள். ஆலங்கட்டி மழையின் இரைச்சலில் ஜன்னத்தின் ஆபாசமான திட்டுதல் அவருக்குப் புரியவில்லை. அவர் மேல் ஏறி இறுக்கியபடி ‘ஜொஹரா கிட்ட எப்ப போனியோ? எப்ப? எப்ப?’ என்று கசக்கி வதக்கினாள்.
காசீம் ராவுத்தர் ஜொஹ்ரா என்ற பெண்ணை நிக்கா செய்த அன்று பார்த்ததுதான். அதற்குப் பிறகு அவர் அவளைப் பார்க்கவில்லை. எப்படிப் பண்ணினீங்க நிக்கா என்று சவுக்கை எடுத்துக் கொண்டு சொடுக்குகிறாள் ஜன்னத். ஜொஹ்ராவைக் கூப்பிட்டு வெள்ளிக் கம்பியால் பழுக்க வைத்து இழுக்கிறாள். எனக்குத் தெரியாம எப்படி அவுசாரி போனே என்று அடித்துத் துவைக்கிறாள். அன்றைய இரவும் ஆலங்கட்டி மழை பெய்தது. இரண்டு அனல் பறக்கும் பிறை முகம் அக்னி உதடுகளுடன் ‘அத்தா என்னெ உட்றாதிய உட்றாதிய’ என்றபடி ராவுத்தரை புனுகு ஜவ்வாது மணத்துடன் காரை வளையல்களும் தங்க வளையல்களும் நெருங்க, இரண்டு கரங்கள் சின்ன அழுகுரல் சிணுங்கலுடன் தழுவிக் கொண்டன. காசீம்பாய் இயங்கினார். ஆவேசம் பயம் மூச்சு முட்டும் ஆசை. ஜொஹ்ராவுக்கு ஆணின் முதல் ஸ்பரிசம் உள்ளிறங்கி கொடி வீசி மின்னலுடன் ஆலங்கட்டி மழை வேறு பனியுடன் கனத்த குளிர் நெருக்கியடிக்க, ஜன்னத் நாரி வர்றதுக்குள்ள வர்றதுக்குள்ள என்று புலம்பிப் புலம்பி நடுங்கியபடி சூழந்து பொங்கிய ஜொஹ்ராவின் வடிவ அழகை மெல்ல மெல்ல பீடிக் கங்கின் வெளிச்சத்தில் பார்த்து அசந்து போனார் காசீம். அல்லா. படச்சவனே. என்ன ஆனந்தம் இது! இது கேவலம், துனியாவுல பெண்ணாசை தப்புன்னு அல்லா சொல்லவே இல்லெ. அப்பா இத்தினி நாளு ஜொஹ்ராவுக்குத் தர வேண்டிய சொகத்தைத் தராதது எத்தனை பெரிய தப்பு! எல்லாருக்கும் எத்தனை பணிஞ்சி மாடு மாதிரி இந்த வீட்டுக்கு எத்தனி வருஷமா உழைக்கிற ஜொஹ்ரா! இந்த நினைப்பு வந்ததும் தாமரை இதழ்களைக் கடித்துச் சுவைத்து மார்புகளில் குடியேறி இரண்டறப் புகுந்தார் காசிம்பாய். ஜொஹ்ரா மந்திரம் பூண்டு தங்க முலாம் பூசிய உடம்பை அவருக்குள் நடுங்கியபடி ஜன்னத்தின் பயத்திலும் அவரை வாரித் தழுவிச் சென்றாள்.
ஆனால் ஜன்னத்தைப் பொறுத்தவரை ஜொஹ்ரா ஒரு அடிமை. வேலைக்கு நிற்கின்ற கூலி. ஜன்னத் போலவே அந்த வீட்டில் ஆண் வாசனைக்குக் காத்திருக்கும் அற்புதமான கற்புக்கரசிகளான பன்னிரண்டு பெண்கள் அந்த வீட்டில் புழுங்கிக் கிடந்தது யாருக்குத் தெரியும். எல்லா ஆம்பிளைகளும் சஃபரு போயிருந்ததால் சாப்பிடாமல் தூங்காமல் ஓதாமல் கன்னி காக்கும் அந்தப் பெண்கள்…
காசீம் ராவுத்தருக்கு இன்னும் ஒரு தடவை ஜொஹ்ராவைப் பார்க்க ஆசைதான். ஆனால் அதற்கு முன்னதாகவே கர்ப்பம் ஆகி விட்டாள். எப்படி என்று தெரியவில்லையாமே. வெள்ளிக் கம்பியைப் பழுக்க வைத்து இழுத்தும் யார் என்று சொல்ல மறுத்தாள் ஜொஹ்ரா. கதறக் கதற அவளை அடித்து நொறுக்கி அள்ளினாள் ஜன்னத். ‘யாருடி பண்ணா? யாரு செஞ்சா? யாரு கிட்ட படுத்தே?’ ஜன்னத் மிருகம் குதறியது. திடீரென்று உள்ளே வந்தார் காசீம். வாழ்க்கையிலேயே முதல் முறையாக ஜன்னத்தைத் தன் நீண்ட கரங்களில் இழுத்துத் தடுத்துப் பிடித்து நாலு பீவிகளும் கதற தூக்கிப் போட்டு மிதித்தபடியே ‘நான் தாண்டி காரணம். நான் தான் செஞ்சேன். ஏம்பொண்டாட்டி தான? ஏம்பீவிதான அவளும்? அவ வயித்துப் புள்ள என்னுது. பேசாதடி. மூச்சு உடாதெ’ என்று அறைந்தார் காசீம்.
பொறா ஷோக்கு என்ற இந்தக் கதையில் வெறும் இருபத்து நான்கே பக்கங்களில் ஒரு பெரும் காவியத்தையே சிருஷ்டித்திருக்கிறார் ப்ரகாஷ். கிரேக்க எழுத்தாளரான Nikoz Kazantzakis-இடம் இயேசு, புத்தன், மார்க்ஸ் ஆகிய மூன்று பேரின் தர்ஸனங்களையும் ஒருங்கே காணலாம். ப்ரகாஷின் கதைகளிலும் அதே தர்ஸனத்தைக் காண முடிகிறது.
காசீம் ராவுத்தரின் வாழ்க்கை இரவு பகலாக புறாக்களுடனேயே கழிந்தது. சோறு வேண்டாம் தூக்கம் வேண்டாம் மனைவி வேண்டாம் குடும்பம் வேண்டாம். புறாக்கள் போதும் அவருக்கு. அது என்னவோ அவரைக் கண்டதும் புறாக்கள் கும்மளி இட்டுக் கொண்டு அவரைச் சுற்றிச் சுற்றி பறப்பதும் அவரது தோள், தலை, உடல் முழுவதும் உட்காருவதும் ஆச்சரியமான காட்சி எங்கும் கிடைக்காது. வாயில் புகையும் பீடியுடன் ஒவ்வொரு புறாவாகப் பிடித்து தட்டிக் கொடுத்து வாய் நிறைய தானியத்தைத் தன் எச்சிலோடு சேர்த்து ஊட்டும் அவரது வாயும் புறாவின் அலகும் ஒன்றாகி விடும். நீளமாக ஊதி விடும் அந்த உணவு சில நேரம் அவருக்கும் உணவாகி விடும். சுவைத்து சுவைத்து தான் உண்டதை கக்கிக் கக்கி புறாக்களுக்கு ஊதி விட்டுத் தரும் ஊட்டு முறை அந்தப் புறாக்களுக்கு இனிக்கும் போல. ஒரே நேரத்தில் பறந்து பறந்து அவர் வாயிலிருந்து மென்று நைவான தானிய உணவை அவருக்கு வலிக்காமல் அள்ளி உண்ணுகிற காட்சி பெரிய வீட்டுப் பெண்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் யாருக்கும் சலிக்காது. தேவலோகத்தில் இருந்து வந்த காப்ரியல் மலக்கு மாதிரி அவர் அந்தப் புறாக்களின் நாயகனாக அவற்றுடன் உறவாடி அவருக்கு வேறு நினைவே அற்றுப் போனது. யாருடனும் பேசவே மாட்டார். இரவு பகல் என்று தஞ்சாவூர் தெருக்களில் அலைவது எல்லாம் புறாக்களுக்காகத்தான். அரண்மனைக்குள் நாயக்க மன்னர்கள் அவருக்குத் தனி உரிமை கொடுத்திருந்தனர். திருவையாற்றின் கரையில் ஆற்றாங்கரையிலும் என்றைக்கும் விளங்கும் புறா வீடு உண்டு. குலமங்கலம் போகும் ஆற்றோரப் பாதையில் புறாக்கள் வந்தடையும் தனிக்கூண்டுகளை அரசர்கள் கட்டித் தந்தார்கள். பல தேசங்களில் இருந்து குறிப்பாக பாரசீகத்திலிருந்தும் அரேபியாவிலிருந்தும் தருவிக்கப்பட்டன. வந்ததும் அவற்றுடன் பேசிப் பழக்கி அவைகளின் பாஷையையும் தனதாக்கிக் கொள்ளும் ஆச்சரியமான அல்லாவின் மனிதன் காசீம். அந்தப் புறாக்களும் அவரை மீறி எதுவும் செய்ய முடியாத அன்பில் பிணையுண்டு நின்றன.
காசீம் பாய் ஒரு ஹராமி என்று முஸ்லீம்கள் சொன்னார்கள். காஷ்மீர் என்று மௌல்வி சொன்னார். ஆனால் புறாக்கள் அவருக்குக் கற்றுத் தந்தன. ஐம்பது ஆண்டுகளாக மனிதர்களுடன் பழகுவதை விட புறாக்களைப் புரிந்து கொள்வதில் நேரம் செலுத்திப் பழகி வந்த தெய்வீக மனிதரின் குரல். கனவு போன்ற அவரது கண்களும் சிவந்த உதடுகளும் இளமை மாறாத ஆண்மைப் புன்னகையும் நெடிய ஆறடி உயரமும் அனல் போன்று சூடு பிடிக்கும் அவரது ரத்தமும் எல்லாமே புறாக்களால் போஷிக்கப்பட்டவை. அவரது குரல் கேட்டு வானத்தில் பறக்கும் புறாக்கள் விர்ரென்று திரும்பி அவரை நோக்கிப் பாய்ந்து வரும் வித்தையும் அவரது ரகசியமும் அந்தப் புறாக்களுக்கு மட்டுமே தெரியும். அவரது ஆணை எதையும் உடனடியாக நிறைவேற்றி விட்டுத்தான் அவை அடங்கும். நினைத்தால் அவரது எதிரியின் கண்களை நிமிடத்தில் குருடாக்கும். அந்த பாஷை அத்தனை வலுவானது. ஆணை அத்தனை அன்பு வடிவானது. மனிதன் மீறி விடுவான். அவரது குரலுக்கு உயிர் கொடுக்கும் துணிவும் தியாகமும் வீரமும் அந்த ஈரறிவு உயிருக்கு இருந்தது வியப்பல்ல.
கதையின் இறுதியில் மதக் கலவரம் ஏற்படுகிறது. ‘ஊரு ரெண்டு பட்டுக் கெடக்கே பாபா. இஞ்ச பொறா புடிக்க ஏன் வந்திய? துனியா ரொம்ப கெட்டுப் போச்சி. ஜாக்ரதையா போங்க. ஆத்தங்கரையெல்லாம் பொம்பளை கொமர்களோட பொணம் கெடக்கு. யார் என்ன ஏதுன்னு யாரும் கேக்க முடியலை. நாயக்கர் காலமில்ல இது. முஸ்லீம்களுக்குக் காலமில்ல தாதா. உங்களுக்கு இன்னும் பொறா ஷோக்கு உட மாட்டேங்குது. கவனமா போங்க’ என்றார் ஆலம் பக்கீர்.
‘ஆலம் சாஹிப். படச்சவன் இருக்கும்போது என்ன பயம்? அவன் எங்கும் இருக்கான் பாய். அவனை மீறி எதுவும் இல்ல. யாரை நம்பி நம்ம அப்பன் பாட்டன்மார் இஞ்ச வந்தாங்க. அல்லா அவுகளை தஞ்சாவூர்ல பாலைவனத்துல இருந்து எந்த தைரியத்துல கொண்டாந்து சேர்த்தாராம். தஞ்சாவூருக்கு வர முந்தி என் பாட்டன் பூட்டான்மார் அரேபியாவில் இருந்து மேனாவிலேயும் பல்லக்குலேயும் வந்தாக. பாலைவனத்துல இருந்து ஆப்கானிஸ்தான் பலூஜிஸ்தான் ராஜஸ்தான் எல்லாம் நடந்து நடந்து, நடக்கும்போதே பலுகிப் பெருகி, நடக்கும்போது படிச்சி, நடக்கும் போதே வேட்டையாடி சாப்பிட்டு, நடக்கும் போதே தனியா என்னென்னமோ படிச்சிக்கிட்டு, நடக்கும்போதே மருந்து செடியெல்லாம் பறிச்சி வைத்தியம் யுனானி எல்லாம் செஞ்சுகிட்டு நடந்து கிட்டே சண்டை போட்டு சேந்தவங்களையெல்லாம் முஸ்லீம் ஆக்கிக்கிட்டு யாருகிட்டயும் வேத்து வாசனை நேராம கூட்டம் கூட்டமா புள்ளை குமர்களைப் பெத்தெடுத்து திடீர்னு இஞ்ச பாளையம் எறங்கினாங்களே, ஆரெக் கேட்டு? ஆரு சொன்னா? முன்னூறு வருஷமா இஞ்ச தொழுகையும் ஸவ்வாத்தும் து ஆவும் செய்யலியா? பொழுது விடியலியா? சாஹிபு. பைத்தியம் மாதிரி பயப்படாதிக. எந்தக் காலமும் நிலையானது இல்ல சாஹிப். எவனும் நிக்கிறதில்லெ. ரத்தம் தெளிவா இருக்கிற வரைக்குதான் எல்லாம். ரத்தம் கலங்கினால் கலந்து கொட்ட வேண்டியதுதான். துனியாவுல இதெல்லாம் பாத்து பயப்பட என்ன இருக்கு. ஆலம் சாஹிப் ஒங்க பத்து கொமருகளையும் காவு கொடுக்கலியா? படச்ச அல்லா இருக்கான். என்னைக்கும் இதெல்லாம் இப்படியேதான் இருக்கும். கொஞ்ச நாள் ஆட்டம்! அப்றம் மர்கயா! நீங்க பாக்காததா?’ என்றார் ராவுத்தர்.
ப்ரகாஷ்… நீ இருந்த திசை நோக்கித் தொழுகின்றேன்…
(தொடரும்)