ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
பாண்டியர்களின் நீரியல் தொழில் நுட்பங்களைப் பார்த்தோம். நிகழ்
காலத்துக்கு வருவோம். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டிக்குத் தெற்கே வேலப்பர்
மலையில் உற்பத்தியாகிறது நாகலாறு. இதன் மூலம் ஆசாரிப்பட்டி, முத்து
சங்கிலிப்பட்டி, பாலசமுத்திரம் நல்லிடைச் சேரி, கோவில்பட்டி சக்கிலிச்சி
அம்மன் ஆகிய கண்மாய்கள் தண்ணீர் பெறுகின்றன. வடகிழக்குப் பருவ மழை மட்டுமே
இந்த கண்மாய்களின் நீர் ஆதாரம்.
ஒருமுறை இந்தப் பகுதியில் பருவ மழை பொய்த்தது. அதேசமயம், வருச நாட்டின்
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வைகை பெருக்கெடுத்தது,
கண்டனூர், ஆத்தாங் கரைப்பட்டி கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அப்போது
வெள்ளச் சேதங் களைப் பார்வையிட அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். இங்கே
வந்தார்.
ஆண்டிப்பட்டி மக்கள் எம்.ஜி.ஆரிடம், “கைக்கு எட்டும் தூரத்தில் வைகை
இருந்தாலும் எங்கள் கண்மாய்கள் காய்ந்து கிடக்கின்றன. வைகையில் கால்வாய்
வெட்டி கண்மாய்களுக்கு தண் ணீரைத் திருப்பிவிட வேண்டும்” என்று கோரிக்கை
வைத்தார்கள். அதன் படி துரைசாமிபுரம் வைகை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டது.
அதிலிருந்து 23.5 கி.மீ-க்கு மரிக்குண்டு, கோடாங்கி நாயக்கர்,
பாலசமுத்திரம் நல்லிடைச் சேரி, கோவில்பட்டி சக்கிலிச்சி அம்மன் கண்மாய்கள்
வரை கால்வாய் வெட்டப் பட்டது. ஒரே ஆண்டில் பணிகள் முடிந் தன. அந்த ஆண்டு
மழையும் பெய்தது. வைகையில் தண்ணீரும் ஓடியது. ஆனால், புதியதாக வெட்டப்பட்ட
கால் வாயில் மட்டும் தண்ணீர் வரவில்லை. கண்மாய்கள் காய்ந்தே கிடந்தன.
ஆனால், அதெல்லாம் அதிகாரிக ளுக்கு முக்கியமாகப்படவில்லை. கால் வாய்களின்
திறப்பு விழாவை நடத்திவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார்கள்
அவர்கள். தடபுடலாக ரிப்பன் வெட்டி கால்வாயைத் திறந்து வைத்தார்கள். வராத
வைகையைக் கைதட்டி வரவேற்றார்கள். இந்தக் கூத்தை எல்லாம் காண சகிக்காத விவ
சாயிகள், அங்கேயே பிரச்சினை எழுப்பி னார்கள். அரசு விழாவின் ஆடம்பரத்தில்
அமுங்கிப்போனது ஏழை விவசாயிகளின் குரல்.
தண்ணீர் வராததற்கு காரணம் இது தான்: வாய்க்கால்கள் வரும் வழியில் 11
இடங்களில் சாலைகள் மற்றும் ஓடைகள் குறுக்கிடுகின்றன. அங்கெல்லாம் வாய்க்
காலைவிட குறைவான விட்டத்தில் ‘ப’ வடிவ தூம்புக் குழாய்கள் அமைக்கப்
பட்டுள்ளன. குறைவான விட்டம் கொண்டவை என்பதால் அவற்றில் ஆற்று நீர் வேகமாக
புகுந்து வரமுடியவில்லை. தூம்பு குழாய்களின் உள்ளே ஓர் ஆள் இறங்கி பழுது
பார்க்கும்படியாக அமைக்கப்படவில்லை. இதனால் உள்ளே அடைத்துக்கொண்டிருக்கும்
மண், கற்களை எளிதில் அகற்ற முடிய வில்லை. வாய்க்காலும் சரியான நில
மட்டத்தில் அமைக்கப்படவில்லை.
இதற்கிடையே இன்னொரு கொடுமை யும் நடந்தது. நாகலாற்றில் மணலை அள்ளி ஏலம் விட
அரசு முடிவு செய் தது. விவசாயிகளோ, “மணலை அள்ளினால் தெப்பம்பட்டி, ராஜதானி,
பாலக்கோம்பைப் பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றிவிடும். ஏற்கெனவே தேனி, ஆண்
டிப்பட்டி, சின்னமனூர் பகுதிகள் நிலத்தடி நீர் வற்றிய கரும்புள்ளி
பட்டியலில்தான் இருக்கின்றன” என்று எதிர்ப்பு தெரி வித்தார்கள். பதிலுக்கு
அதிகாரிகள், “நாகலாற்றின் குறுக்கே கண்மாயை அமைத்து, நிலத்தடி நீர்
வற்றாமல் பார்த்துக்கொள்கிறோம்” என்று உத்தரவாதம் கொடுத்தார்கள். ஆனால்,
அங்கேயும் ஒரு பிரச்சினை முளைத்தது.
“நாகலாற்றில் கண்மாய் அமைத்தால் எங்கள் பகுதிகளின் கண்மாய்களுக்ககுத்
தண்ணீர் வருவது தடைப்பட்டுவிடும்” என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்
ஆசாரிப்பட்டி, முத்துசங்கிலிப்பட்டி, நல்லிடைச்சேரி, சக்கிலிச்சி அம்மன்
கண்மாய் பாசனதாரர்கள். அதிகாரிகள் அதற்கும் தயாராக ஒரு பதிலை
வைத்திருந்தார்கள். “வைகை அணையில் இருந்து அந்த கண்மாய்க ளுக்குத் தண்ணீர்
போகிறது” என்று கோப்புகளைக் காட்டினார்கள். அரசும் ஒப்புதல் அளித்தது.
ஆற்றின் ஒட்டு மொத்த மணலும் அள்ளப்பட்டது. நாக லாற்றில் கண்மாய்
கட்டப்பட்டது. விவ சாயிகள் அஞ்சியதுபோலவே அடுத் தடுத்த கண்மாய்களுக்கு
தண்ணீர் வரு வது நின்றுபோனது. மணலை அள்ளிய தால் நிலத்தடி நீர் வற்றி 1,350
பாசனக் கிணறுகளில் 818 மட்டுமே மிச்சமிருந்தன.
சோதனை இதோடு முடிந்துவிட வில்லை. அடிமேல் அடிபட்டார்கள் விவசாயிகள்.
சித்தார்பட்டி மலையில் இருந்து உற்பத்தியாகும் தண்ணீர் விருமானுத்தூர்
ஓடையாக கண்டமனூர் அருகே ஓடிக்கொண்டிருந்தது. இதன் மூலமாக நல்லிடைச்சேரி
கண்மாய், சக்கிலிச்சி அம்மன் கண்மாய் ஆகி யவை கொஞ்சம் தண்ணீர் பெற்று
வந்தன. இங்கே அடிக்கடி சினிமா படப்பிடிப்புகள் நடக்கும். படப்பிடிப்புக்கு
வந்த நடிகர்கள் பலர் விருமானூத்தூர் ஓடைக்கு இரு பக்கமும் ஆயிரக்கணக்கான
ஏக்கர் நிலங்களை வாங்கிப் போட்டார்கள். இவர்களின் தோட்டங்களில் உள்ள
கிணறுகள் வற்றாமல் இருக்க விருமானூத்தூர் ஓடையில் ஒரு கண்மாயை வெட்ட
அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். அதன் படி விருமானூத்தூர் ஓடை சமவெளிக்கு
வந்துச் சேரும் இடத்திலேயே கண்மாய் அமைக்கப்பட்டது. அங்கேயே நின்று போனது
விருமானூத்தூர் ஓடை.
இன்று தண்ணீர் இல்லாததால் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் ஒரு குழி
நெல்லைக்கூட விதைக்க முடியவில்லை. நஞ்சைதான் போகட்டும்; புஞ்சை போடவும்
அங்கே வழி இல்லை. லேசாக தெளிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லாமல் மானாவாரிக்கு
மாறிவிட்டார்கள். நெல் விளைந்த பூமியில் மக்காச்சோளம் போட்டிருக்
கிறார்கள். கால்நடைகளுக்காவது தீவ னம் வேண்டுமே. எத்தனை எத்தனை
குளறுபடிகள். ஆனால், அலட்சியத்துக்கு மட்டும் குறை இல்லை. பராமரிப்பு இல்
லாமல் கிடக்கும் தூம்புகளையும் சீரமைத்துத் தரும்படி கேட்கிறார்கள்
விவசாயிகள். ஆனால், நிதியில்லை என்கிறார்கள் அதிகாரிகள். வேறு வழி
யில்லாமல் கடந்த மாதம் விவசாயிகளே ரூ.1,26,000-யை திரட்டி தூம்புகளைப்
பழுது பார்த்திருக்கிறார்கள்.
மன்னர்கள் காலத்தில் மயிலாடும்பாறை வைகை ஆற்றின் தடுப்பணையில் இருந்து
வாய்க்கால் மூலம் இந்தப் பகுதிக்கு தண்ணீர் வந்துகொண்டிருந்ததாம். உள்ளூர்
ஜமீன்கள் இதனை பராமரித்தார்கள். ஆங்கிலேயர் காலத்தில் இந்தக் கால்வாய்கள்
பராமரிக்கப்படாததால் தண்ணீர் வருவது தடைப்பட்டது. விளைச்சல்
பாதிக்கப்பட்டது. வரி செலுத்த விவசாயிகள் மறுத்துவிட்டனர். விசாரணை நடத்திய
ஆங்கிலேயர், கால்வாயை சரியாக பராமரிக்கவில்லை என்றுச் சொல்லி கண்டமனூர்
ஜமீனுக்கு ரூ.16,000 அபராதம் விதித்தார்கள். (ஆதாரம்: தமிழ்நாட்டில்
ஜமீன்தாரி முறை - மதுரை மாவட்டம், பேராசிரியர் எஸ்.வர்க்கீஸ் ஜெயராஜ்)
ஆனால், இன்றைய அலட்சியங் களுக்கு அபராதம் விதிப்பது யார்?
No comments:
Post a Comment