Aug 25, 2015

தஞ்சை ப்ரகாஷ் 3 - சாரு

தினமணி இதழில் வெளிவரும் பழுப்பு நிறப் பக்கங்கள்


            ற்றி எரிந்த தென்னை மரம், கயாமத் எனும் இறுதித் தீர்ப்பின் நாள், ஜானுப்பாட்டி அழுது கொண்டிருக்கிறாள், இருட்டின் நிறங்கள், கடைசிக் கட்டி மாம்பழம், எரித்தும் புதைத்தும், கொலைஞன், நாகம், நியூஸன்ஸ், பேய்க் கவிதை, பூகோஸ், பள்ளத்தாக்கு, பொறா ஷோக்கு, புலன் விசாரணை, இராவண சீதை, சோடியம் விளக்குகளின் கீழ், சுயம், வத்ஸலி, உம்பளாயி, வடிகால் வாரியம், ஆலமண்டபம், என்னைச் சந்திக்க வந்த என் கதாபாத்திரம், தஞ்சையின் முதல் சுதந்திரப் போராட்டம், திண்டி, உனக்கும் ஒரு பக்கம், அங்கிள், வைரமாலை, வெட்கங்கெட்டவன், மேபல், அங்குசம், அஞ்சுமாடி – ப்ரகாஷின் இந்தச் சிறுகதைகளைப் படித்து விட்டு ‘இந்தத் தொடருக்காக இதுவரை நான் படித்ததிலேயே இதுதான் உச்சபட்ச எழுத்து’ என்று என் நண்பரிடம் சொன்னபோது ‘ஒவ்வொருவரைப் பற்றியுமே அப்படித்தானே சொல்கிறீர்கள்?’ என்றார். ஒரு மலையேறி கிளிமாஞ்சரோ மலையில் ஏறி முடிக்கும்போது இதுதான் இருப்பதிலேயே உச்சம் என நினைக்கிறான். பிறகு நங்கா பர்வதத்தில் ஏறுகிறான். அது கிளிமாஞ்சரோவை விட உயரம். பிறகு லோட்ஸே, அதன் பிறகு காஞ்சன்சுங்கா, கடைசியில் எவரெஸ்டைத் தொடும் போது உலகின் ஆக உச்சம். தஞ்சை ப்ரகாஷை அப்படித்தான் பார்க்கிறேன். ஆக உச்சம். மகா கலைஞன். இவனை பாரதியோடு ஒப்பிடுவதா? சிறுகதை இலக்கியத்தில் உலக சாதனை செய்துள்ள போர்ஹேஸ், சாதத் ஹாஸன் மாண்ட்டோ, செகாவ், பல்ஸாக், மாப்பஸான், ஆகியோருடன் ஒப்பிடுவதா? இவர்கள் எல்லோரையுமே விஞ்சியவராகத் தெரிகிறார் தஞ்சை ப்ரகாஷ். ஏனென்றால், ப்ரகாஷின் ஒவ்வொரு சிறுகதையுமே ஒரு குறுங்காவியத்தை வாசித்தது போன்ற உணர்வைத் தருகிறது. ஒவ்வொரு கதையுமே நமக்குள் காவியங்களின் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ப்ரகாஷின் பதினெட்டாம் நூற்றாண்டின் கதைகளையெல்லாம் வாசிக்கும் போது இவர் அந்த நூற்றாண்டில் வாழ்ந்தவரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறார். அதனாலேயே இப்படிப்பட்ட ஒருவர் எழுதுவதைத் தவிர வேறு எந்த வேலையையும் செய்திருக்கக் கூடாதே; செல்வச் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர் ஏன் பத்துப் பதினைந்து தொழில்களைச் செய்தும் பல்வேறு பத்திரிகைகளை நடத்தியும் வாழ்நாளை வீணடித்தார் என்ற துக்கம் மேவுகிறது. இவ்வளவு விஸ்தாரமாக, இத்தனை துல்லியமாக, இப்படிப் பரந்து பட்ட அளவில் ஒரு மனிதனால் எழுதக் கூடுமா, மனித எத்தனத்தில் இதெல்லாம் சாத்தியமா என்ற திகைப்பு ஏற்படுகிறது.
தஞ்சாவூர் மண்ணில் பல்வேறுபட்ட கலாசாரங்களின் சங்கமத்தை நாம் காண முடியும். இது எப்படி நிகழ்ந்தது என்று ப்ரகாஷின் ‘பொறா ஷோக்கு’ என்ற கதையில் ஒரு குறிப்பு வருகிறது.
‘ஏராளமான ஜனங்கள் தெக்குச் சீமையிலிருந்தும் வடக்குச் சீமையிலிருந்தும் தஞ்சாவூருக்குப் பஞ்சம் பிழைக்க வந்து கொண்டிருந்த தாது வருஷப் பஞ்சம் அது. இராமநாதபுரம் பக்கம் இருந்து வந்த தேவமார்கள், தேவாங்குச் செட்டிகள், தெலுங்கு பேசும் நாயக்கர்கள், பிராமணத் தெலுங்கு ராவ்கள் ஆந்திரப் பிரதேச வடுக தேசத்திலிருந்து வந்தார்கள். கொடுமையான பஞ்சம். கோயம்புத்தூர் பக்கமிருந்து வந்த கீதாரிகள் என்று தஞ்சாவூர் கிடுகிடுத்தது. எங்கும் தொழில் இல்லை. சோற்றுக்கு விதைக்க நெல்லும் இல்லை. விதை நெல்லை வேக வைத்து சாப்பிட்ட காலம். சிங்கம்புணரி பாலயம்பட்டியிலிருந்து வந்த பஞ்சத்துக்குப் பயந்தோடி வந்த நாடார்கள் தஞ்சாவூர் கோட்டைக்கு வெளியே கூலிக்கு வயலில் புரியாமல் வேலை செய்தார்கள். அரண்மனையில் மராட்டியர்களின் மாற்றம் – தெலுங்கு பேசியவர்கள் மராட்டி பேசினார்கள். பட்டினி வியாதி கொள்ளை நோயால் தப்பித்து வந்தவர்களைக் காவிரி சேர்த்துக் கொண்ட விபரீதம். வடக்கே இருந்து வந்த ராஜு ஜாதியினர் கோட்டைக்குள் புகுந்தனர். மழை பெய்தது. ஆலங்கட்டி மழை! தண்ணீரே இல்லாத பனிப்பாறை மழை! ஜனங்கள் வெளியே வர பயந்து பட்டினியாய் வீட்டுக்குள் காலம் கழித்த நேரம்.’
‘இருநூறு வருடங்களுக்கு முன்பு தஞ்சைக்குள் நுழைந்த மாலிக்காப்பூரின் படை துரத்தித் துரத்தி அடித்துத் தஞ்சாவூர் மக்களின் உடுதுணிகளையும் சேலைகளையும் பிடுங்கி முதுகில் கொறடாவால் ஒவ்வொருவருக்கும் ஒரு முத்திரை போட்டு விட்ட ரத்த அடையாளம்… கொள்ளை அடித்துச் சென்ற கோடிக் கணக்கான கோயில் சொத்துக்கள்… இதே அகழ்நீரில் மிதந்த நூற்றுக் கணக்கான பிராமண உத்தமர்களின் சடலங்கள்… பின்னர் விரட்டி வந்த காலத்தில் மூன்றரை லட்சம் போர் வீரர்களோடு தஞ்சையைச் சூறையாடிய மாதவராவ் சிங்ளே… அவனைத் தொடர்ந்து குலநாசம், ஸ்தலநாசம், பூமிநாசம் செய்த மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆடிய ஆட்டம்…’
‘அடுத்து குறுக்கில் வந்த ஹைதர் அலி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்து திண்டுக்கல் வழியே தஞ்சையைக் கவிழ்க்கப் பாய்ந்து வந்த முஸ்லீம் படைகள்… வெடித்துச் சிதறிய பீரங்கிக் கங்குகள்… தஞ்சை இப்படிப் பலமுறை சுடுகாடாகி, வந்ததையெல்லாம் விற்று, பறித்ததையெல்லாம் தின்று, சாலையோரத்துப் புளியமரத்தில் இருந்த புளியைக் கரைத்துக் குடித்து இந்த அகழ் தண்ணீரில் இறங்கி எத்தனை பெண்கள் மானமிழந்த உடல்கள் எத்தனை நூற்றாண்டுகளாய் மிதக்கின்றன…’
தஞ்சாவூரில் பல்வேறு இனங்கள் சங்கமித்ததன் கதை இதுதான்.  
இவற்றில் பிராமணர், கள்ளர், இஸ்லாமியர் என்ற மூன்று கலாசாரப் பிரிவினர் பற்றியும் தனித்தனியாக மிக விஸ்தாரமாக எழுதியிருக்கிறார் ப்ரகாஷ். ஒவ்வொரு பிரிவிலுமே அரை நூற்றாண்டு வாழ்ந்தவரைப் போல் அவர்களின் கலாசார வாழ்வை துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். 
பொறா ஷோக்கு என்று ஒரு கதை. இவ்வளவுக்கும் எழுதி முடிக்கப்படாத கதை. உலகின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாகக் கருதப்படத்தக்கது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், நான் மேலே குறிப்பிட்ட அத்தனை சிறுகதைகளுமே ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன. ஒரு படைப்பாளி தான் எழுதிய அத்தனை சிறுகதைகளிலுமா உச்சம் தொட முடியும்? ப்ரகாஷிடம் சாத்தியமாகி இருக்கிறது. 

தஞ்சாவூர் கீழவாசல் காசீம்பாய் ராவுத்தருக்கு வயது 106. தலையைச் சுற்றிலும் லேசான வழுக்கையும் அடர்த்தியான முடியும் யாரும் அறுபத்து ஐந்து வயதுக்கு மேல் சொல்ல முடியாது. வில் போன்ற தேகம். ராவுத்தருக்கு 106 வயதில் 18 வயது மகள். 75 வயதில் 18 வயது ஜைத்தூனை மணந்ததால் உருவான வாரிசு.  இதுதான் தஞ்சை மண்ணின் விசேஷம். இதைத்தான் கு.ப.ரா.விலிருந்து கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம் வரை அத்தனை தஞ்சை எழுத்தாளர்களும் எழுதித் தீர்த்தார்கள். 
ஆண், பெண் இருபாலரின் தேக அழகை ப்ரகாஷ் அளவுக்குத் தமிழில் எழுதியது யாராகவும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. தெய்வீக அருள் பெற்ற சிற்பி ஒருவன் உலகின் மகத்தான சிலையை வடிப்பது போல் ஆண் பெண்களின் தேகத்தை வர்ணிக்கிறார் ப்ரகாஷ். பேய்க்கவிதை என்ற சிறுகதையில்:
வெள்ளைத் தோலும் சிவப்பு சருமமும் மஞ்சள் கூடிக் கிடந்த பால் போன்ற நிறமும், உடலின் மேடு பள்ளங்கள் துல்லியமாய்த் தெரியும் பட்டுப் புடவையின் சலசலப்பும் மெல்லிய மிருதுவான மணம் வீசும் பூக்களும், மிதமான சுடர் வீசும் வைர நகைகளும் கடல் போன்ற அவளது விழிகளும் யாரையும் அயர வைப்பது அவளுக்குப் பழக்கமாகி செரித்துப் போன விஷயம்.
கொலைஞன் என்ற கதையில்: ஐநூறு கிலோ இரும்பு தட்டுகளை அடுக்கி இருபுறமுமாக மாட்டி குறுக்குக் கம்பியின் மூலம் பளு தூக்கினான் அவன். எல்லோரும் அவன் உடம்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். கரளை கரளையான சதை சொன்னபடி கேட்டது. பலகை பலகையாக மாரும் முதுகும் சதையாலேயே இரும்புச் சிலை போல் அமைந்திருந்தது.
நாகம் என்ற கதையில்: சாட்டை போன்ற பளபளக்கும் உடல். என்னெல்லாம் அடங்கியிருக்குமோ அப்படி நெஞ்சு நிமிர்ந்து அவள் நடந்து வரும்போது ஆண் களையேறிய அற்புத வளமை.
கைகளா அவைகள்! வைரத் தண்டுகள்!
மல்லிகை மொக்குப் போல மாப்பிசைந்து உருட்டியது போன்ற கரங்கள்.
சுந்தரமூர்த்தியின் உடம்பு பற்றி நாகம் எண்ணுகிறாள்: என்ன உடம்பு அது? சந்தனமா இல்லை செந்தூரமும் சந்தனமும் கலந்து உருட்டிய மேனியா? பனியன் கூட இல்லாத இந்த மேனியில் ஏதாவது ஒரு புள்ளி மாசு இருக்கிறதா… சுருள்சுருளாய் அலைந்த இந்தத் தலைமுடி யாருடையது? என்னுடையது! பாலூற்றியது போல் அகன்று விரிந்த அந்த நெற்றியும் விசிறிக் கிடக்கும் புருவங்களும் கடல்விழிகளும் கபடமில்லாத குணத்தைக் காட்டும் நேரான அந்தச் செதுக்கிய மூக்கும் உதடுகளும் சங்கைக் கடைந்த வளையக் கழுத்தும் யாருடையவை? என்னுடையவை!
 பொறா ஷோக்கு கதையில் 75 வயது ராவுத்தருக்கு மனைவியான ஜைத்தூன் இப்படி அறிமுகமாகிறாள்: 
என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மலங்க மலங்க விழித்தபடி கைகளைத் தொங்கவிட்டாள் ஜைத்தூன். காதோரம் முடி சுருளைகளாக வியர்வையில் பேரழகு சிந்தின. வெறும் கழுத்தில் இருந்த கறுப்புக் கயிறு மார்பிலிருந்த ஒரு ஒற்றைப் பரு கருப்பில் முட்டியபடி பிரிந்து கொடுத்தது. அந்த 75 வயதுக் கிழவரே இல்லை என்று சொல்லி விடவில்லை. அலுமினியம் மூடியில் ரொட்டியை எடுத்துக் கறியில் தோய்த்து வாயில் திணித்து அவளையே பார்த்தபடி ‘எங்கிட்ட என்ன இருக்குன்னிட்டு இவளக் கட்டறேங்கறே’ என்று கேட்கும் முன் ஜைத்தூனின் உம்மா அவள் கையைப் பிடித்து ‘இந்தாங்க பிடிங்க’ என்று ஒப்படைத்தாள். கறியின் மணமும் சுவையும் ஜைத்துனின் சாகசமும் சாதுர்யமும் ஒரே நேரத்தில் அவரை அமுக்கி அடித்ததை விட ஜைத்தூனின் பேரழகு அவரை மீண்டும் பூமியைப் பார்க்க வைத்தது. பூமி சிவந்தது.
ஆனால் அன்றிரவே ஜைத்தூன் மஸ்தானுடன் ஓடி விடுகிறாள். மஸ்தான் அவளைக் கேரளத்தில் கொண்டு போய் விற்று விடுகிறான்.  நான்கு ஆண்கள் எமகிங்கரர்கள் போல் அவளைத் தூக்கிச் சுவற்றில் மாட்டுகின்றனர்… அங்கிருந்து தப்பி பத்து நாள் பட்டினியுடன் உடல் முழுவதும் அடியும் உதையும் வாங்கிய கன்றிப் போன புண்களுடன் ராவுத்தரிடமே வந்து சேர்கிறாள் ஜைத்தூன். அதற்குப் பிறகு சுத்தமான ஒரு குழந்தையை ராவுத்தரின் ரத்தத்தில் பெற்றெடுக்கிறாள். அவள்தான் ரம்லத்.
வானளாவிய சுவர்கள். ராமர் செங்கற்களால் கட்டப்பட்ட புராதனச் சுவர்கள். கீழே செம்பாராங்கற்கள் மீது எந்தப் பிடிப்பில் அவை நிற்கின்றனவோ? தஞ்சாவூரின் கீழவாசல் கோட்டை முழுக்க பள்ளம் முழுவதும் முஸ்லீம்களால் நிரம்பியிருக்கின்றன. கீழக்கோட்டை வாசலிலிருந்து நீண்ட சரிவான பாதை இருபுறங்களிலும் அகழிநீர் அலையடித்துக் கொண்டிருந்தது. கோட்டை இப்போது கோட்டையல்ல. இன்று கோட்டைச் சுவர் மீது பன்றிகள் மேய்கின்றன. கீழவாசல் மேட்டுச் சுவரின் நீட்சியில் ஒரு சிறிய மேடு. அதுதான் பீரங்கி மேடு. பிரம்மாண்டமான பீரங்கி. நூற்று இருபத்தைந்து அடிகளுக்கும் மேல் நீண்ட பெரிய பீரங்கி மேட்டில் பல மணி நேரம் வெய்யிலில் குளிர் காய்ந்து கொண்டு பீடியை உறிஞ்சி ஊதிக் கொண்டு அதோ காசீம் முகைதீன் ராவுத்தர்.
‘இந்த துனியாவுல அதும் மாதிரி ஆம்பளை சுத்தமான ஆம்பளை கிடையாது. ஜைத்தூன், வயசாச்சேன்னு நெனைக்காதே. சுத்தமான ஆம்பளை. இருபத்தைஞ்சு வருஷமா எனக்குத் தெரியும். ஒன்னையெ கெட்டுனது அல்லாவோட கிருபை. தூங்கிடாதே ஜைத்தூனு. அந்த ஆளெ தூங்க உட்றாதே! வேன்னா தெருவுக்குத்தான் வரணும். கெட்டிப் புடி. உட்றாதே! முட்டியடி. வணங்க மாட்டான். வணங்கு. கொடல் கறியும் வெதர் பொரியலும் பண்ணி ஊட்டி உடு. கஞ்சி கூட செவுரொட்டிக் கஞ்சி வை. மடியில இருந்து ஊட்டு. அப்பா மாதிரி அம்மா மாதிரிதான். கொஞ்சம் கொஞ்சமா எளக்கி மாட்டு. உட்றாதே’ என்று சொல்லி ஜைத்தூனை ராவுத்தரிடம் அனுப்பி வைக்கிறாள் ஜைத்தூனின் உம்மா ஷம்ஷாத்.
ஆனால் ராவுத்தரிடம் அசைவு இல்லை. நிக்கா முடிஞ்சு மூணு மாசம் கழிந்த போதும் ராவுத்தர் மடியில் தூங்கிக் கிடக்கும் ஜைத்தூன் பீவியை இருட்டில் வந்து அடித்து எழுப்பி துணியையும் உருவி திரும்பி ராவுத்தரிடம் விரட்டும் வேலையும் பயன் தரவில்லை. ராவுத்தர் முப்பது வருடத் தனிமையில் இருந்தவர். பெண்ணின் ஸ்பரிசம் மறந்து விட்டது. பிறகு எப்படி அவர் ஜைத்தூனுடன் கலந்தார் என்பதை இந்தக் கட்டுரையில் என்னால் சொல்ல இயலாது. நீங்களே வாசித்துக் கொள்ள வேண்டியதுதான்.
காசீம் ராவுத்தர் ஜைத்தூனை இணந்ததும் பிளந்த முதல் கனவு நிஜமாய் அனல் சுடர்ந்தது. உம்மா சொன்னது நிஜம். நிஜம். முரட்டு ஆம்பிளைதான். அடங்காத ஆம்பளை. ஆச்சரியமான வேகம். சுடரும் ஆம்பளை காசீம். அரற்றலுக்கு ஜைத்தூனின் உம்மா ஷம்ஷாத் இடமே தராமல் கதவுகளை இறுக அடைத்தாள்.
கதையில் ஷம்ஷாதின் கதையும் வருகிறது. ஷம்ஷாத்தை பதினோரு வயதில் அரண்மனையில் கோடாவாயாவாய் இருந்த முரட்டுக் குதிரைக்காரன் ரப்பேலுக்குக் கொடுத்துக் கன்னி கழித்தாள் அவள் உம்மா. அது அந்தக் காலம். அப்போதும் ஏழ்மை தன் கொடுங்கரத்தை விரித்து ஷம்ஷாத்தை உறிஞ்சியது. பசியின் காலம். ஷம்ஷாத்தை பத்து மாத பத்து மாத இடைவெளியில் ஓயாமல் பிரசவிக்க வைத்துப் பிழிந்தெடுத்தான் ரப்பேல். பெரும்பாலும் பட்டினியும் பசியும் புளியங்கொம்பிலிருந்து கொழுந்து பறித்துத் தின்பதும் புளியங்கொட்டையை அறைத்து இடித்துக் கஞ்சி வைப்பதுமான கொடூரமான காலம். ஆனாலும் நினைக்கவே பலம் தந்த உறவு ரப்பேலுடையது. ஊக்கமான ஆள். அவனுக்கு அரண்மனையில் சாப்பாடு கிடைத்து விடும். ஷம்ஷாத்தின் பர்தாவை உருவி எறிந்து விட்டு இரவு முழுவதும் ஹீனமான குரல் அனுங்க அனுங்க ஷம்ஷாத்தை வெறியின் வடிவமாக்கும் ரப்பேலிடம் ஒரே நல்ல குணம் விடாமல் அவளை உயிருடன் வைத்திருந்ததுதான்.
பிறகு ஆப்பக் கடை போடுகிறாள் ஷம்ஷாத். அந்தக் காலத்தில் கீழவாசலில் அவள் ஆப்பம் பிரசித்தம். பெரிய வீட்டு ஹாஜியார் பொண்டாட்டி கூட வாங்கிச் சாப்பிடுகிற அபூர்வமான ஆப்பம். திடீரென்று ரப்பேல் வருவான். ஒரு அடுக்கு வெல்ல ஆப்பத்தை இபிலீஸ் மாதிரி சுருட்டிச் சுருட்டி வாயில் திணித்து கபளீகரம் செய்து அன்றைய வியாபாரத்தை ஸ்தம்பிக்க வைத்து விட்டு அதைக் கேட்டதும் ஷம்ஷாத்தை இழுத்துப் போட்டு அதே இடத்தில் சாத்து சாத்து என்று சாத்தி தெருவையே ஸ்தம்பிக்க வைத்து விட்டு ரௌடிப் பெண்கள் தடுக்க வரும்போது அவர்களையும் இழுத்துப் போட்டு அறைந்து விட்டுப் போவான்.
காசீம் ராவுத்தரின் இளம் பிராயம் எப்படி இருந்தது? ராவுத்தருக்கு ஐந்து பீவிகள். எப்போதாவது அந்த வீட்டு மாடிக்குப் போய் வானத்தில் இருந்து புறாக்களுடன் சமிக்ஞை பழக மேலே போகும் போதுதான் அந்த வீட்டுப் பெண் மக்கள் அவரைக் கண்டதும் பர்தாவை இழுத்து வீட்டுக்குள் ஒதுங்கும் போது தெரியும் முக்கோண முகங்களைக் கொண்டுதான் இவள் இன்னாள் என்று தெரியும். அடேயப்பா எத்தனை பெண்கள் எத்தனை பெருமூச்சுகள். ஒன்றும் முடியாமல் அவரைத் தேடி வரும் பெண்களை எத்தனை முறை ஒதுக்கி புத்தி சொல்லி அனுப்பியிருக்கிறார். அந்த வீட்டில் இருள் இப்போது நிரந்தரம் ஆயிற்று. ஆலங்கட்டி மழையில் அந்த வீட்டுச் சிறுவர்களும் சிறுமிகளும் பனிக்கட்டி பொறுக்கும் வேளைகளிலும் கூட மனைவிகளின் தாபத்தைத் தணிக்க வீடு தங்க மாட்டார் காசீம் முகைத்தீன் ராவுத்தர்.
வீட்டுக்குள் வரும் போதெல்லாம் பீவிகளின் வியர்வை ஊறலில்தான் விழிப்பார் காசீம். ஐந்து பீவிகளும் கிரமமாக அவருக்கு – அவருக்கு மட்டும் - வாரி வாரி வழங்கி கொடுமையான வேகத்துடன் காதலித்தார்கள். தெய்வம் போன்ற பெண்கள் – சமைப்பதும் ஊட்டுவதும் காப்பதும் ஆன அபூர்வமான மூடுபடம் இட்ட பாயும் குதிரைகள் அவர்கள். காசீம் பாயை ஊட்டி ஊட்டி அவரது உயிரை வளர்த்தது ஆச்சரியம். வெளி ஆண்கள் யாரையும் தெரியாது. அந்த வீட்டின் இருண்ட மூலைகளும் அரவை எந்திரமும் உரலும் குந்தாணியும் திருவையும் மட்டும்தான் தெரியும். உள்வீட்டுக்குள் அங்கணத்தில் யாரும் வர முடியாத கோட்டை போன்ற வீடு. வீட்டு ஆண்களுடன் கூட அதிகம் பேச யாரும் இருப்பதில்லை. ஆலங்கட்டி மழை பொழியும்போது மட்டும் எல்லாப் பெண்களும் வேடிக்கை பார்க்க வாசல் குறட்டில் வந்து நிற்கும்போதும் யாரும் அவர்களைப் பார்க்க முடிந்ததில்லை.
‘ஜொஹரா புள்ளையாண்டிருக்கிறா. மூணு மாசம் பாருங்க அத்தா! அவ கூட புள்ளை பெறப் போறா’ என்றாள் ஜன்னத் வெட்கப் புன்னகையுடன், அவர் மார்பில் அவளது கனிகள் கசங்க இறுக அணைத்தபடி. ராவுத்தரின் ஐந்து பீவிகளின் தலைவி ஜன்னத். ‘எனக்குத் தெரியாம எப்படி நடந்தது?’ என்று முட்டி முட்டி அவரைத் திகைக்க அடித்தாள். ஆலங்கட்டி மழையின் இரைச்சலில் ஜன்னத்தின் ஆபாசமான திட்டுதல் அவருக்குப் புரியவில்லை. அவர் மேல் ஏறி இறுக்கியபடி ‘ஜொஹரா கிட்ட எப்ப போனியோ? எப்ப? எப்ப?’ என்று கசக்கி வதக்கினாள்.
காசீம் ராவுத்தர் ஜொஹ்ரா என்ற பெண்ணை நிக்கா செய்த அன்று பார்த்ததுதான். அதற்குப் பிறகு அவர் அவளைப் பார்க்கவில்லை. எப்படிப் பண்ணினீங்க நிக்கா என்று சவுக்கை எடுத்துக் கொண்டு சொடுக்குகிறாள் ஜன்னத். ஜொஹ்ராவைக் கூப்பிட்டு வெள்ளிக் கம்பியால் பழுக்க வைத்து இழுக்கிறாள். எனக்குத் தெரியாம எப்படி அவுசாரி போனே என்று அடித்துத் துவைக்கிறாள். அன்றைய இரவும் ஆலங்கட்டி மழை பெய்தது. இரண்டு அனல் பறக்கும் பிறை முகம் அக்னி உதடுகளுடன் ‘அத்தா என்னெ உட்றாதிய உட்றாதிய’ என்றபடி ராவுத்தரை புனுகு ஜவ்வாது மணத்துடன் காரை வளையல்களும் தங்க வளையல்களும் நெருங்க, இரண்டு கரங்கள் சின்ன அழுகுரல் சிணுங்கலுடன் தழுவிக் கொண்டன. காசீம்பாய் இயங்கினார். ஆவேசம் பயம் மூச்சு முட்டும் ஆசை. ஜொஹ்ராவுக்கு ஆணின் முதல் ஸ்பரிசம் உள்ளிறங்கி கொடி வீசி மின்னலுடன் ஆலங்கட்டி மழை வேறு பனியுடன் கனத்த குளிர் நெருக்கியடிக்க, ஜன்னத் நாரி வர்றதுக்குள்ள வர்றதுக்குள்ள என்று புலம்பிப் புலம்பி நடுங்கியபடி சூழந்து பொங்கிய ஜொஹ்ராவின் வடிவ அழகை மெல்ல மெல்ல பீடிக் கங்கின் வெளிச்சத்தில் பார்த்து அசந்து போனார் காசீம். அல்லா. படச்சவனே. என்ன ஆனந்தம் இது! இது கேவலம், துனியாவுல பெண்ணாசை தப்புன்னு அல்லா சொல்லவே இல்லெ. அப்பா இத்தினி நாளு ஜொஹ்ராவுக்குத் தர வேண்டிய சொகத்தைத் தராதது எத்தனை பெரிய தப்பு! எல்லாருக்கும் எத்தனை பணிஞ்சி மாடு மாதிரி இந்த வீட்டுக்கு எத்தனி வருஷமா உழைக்கிற ஜொஹ்ரா! இந்த நினைப்பு வந்ததும் தாமரை இதழ்களைக் கடித்துச் சுவைத்து மார்புகளில் குடியேறி இரண்டறப் புகுந்தார் காசிம்பாய். ஜொஹ்ரா மந்திரம் பூண்டு தங்க முலாம் பூசிய உடம்பை அவருக்குள் நடுங்கியபடி ஜன்னத்தின் பயத்திலும் அவரை வாரித் தழுவிச் சென்றாள்.
ஆனால் ஜன்னத்தைப் பொறுத்தவரை ஜொஹ்ரா ஒரு அடிமை. வேலைக்கு நிற்கின்ற கூலி. ஜன்னத் போலவே அந்த வீட்டில் ஆண் வாசனைக்குக் காத்திருக்கும் அற்புதமான கற்புக்கரசிகளான பன்னிரண்டு பெண்கள் அந்த வீட்டில் புழுங்கிக் கிடந்தது யாருக்குத் தெரியும். எல்லா ஆம்பிளைகளும் சஃபரு போயிருந்ததால் சாப்பிடாமல் தூங்காமல் ஓதாமல் கன்னி காக்கும் அந்தப் பெண்கள்…
காசீம் ராவுத்தருக்கு இன்னும் ஒரு தடவை ஜொஹ்ராவைப் பார்க்க ஆசைதான். ஆனால் அதற்கு முன்னதாகவே கர்ப்பம் ஆகி விட்டாள். எப்படி என்று தெரியவில்லையாமே. வெள்ளிக் கம்பியைப் பழுக்க வைத்து இழுத்தும் யார் என்று சொல்ல மறுத்தாள் ஜொஹ்ரா. கதறக் கதற அவளை அடித்து நொறுக்கி அள்ளினாள் ஜன்னத். ‘யாருடி பண்ணா? யாரு செஞ்சா? யாரு கிட்ட படுத்தே?’ ஜன்னத் மிருகம் குதறியது. திடீரென்று உள்ளே வந்தார் காசீம். வாழ்க்கையிலேயே முதல் முறையாக ஜன்னத்தைத் தன் நீண்ட கரங்களில் இழுத்துத் தடுத்துப் பிடித்து நாலு பீவிகளும் கதற தூக்கிப் போட்டு மிதித்தபடியே ‘நான் தாண்டி காரணம். நான் தான் செஞ்சேன். ஏம்பொண்டாட்டி தான? ஏம்பீவிதான அவளும்? அவ வயித்துப் புள்ள என்னுது. பேசாதடி. மூச்சு உடாதெ’ என்று அறைந்தார் காசீம்.
பொறா ஷோக்கு என்ற இந்தக் கதையில் வெறும் இருபத்து நான்கே பக்கங்களில் ஒரு பெரும் காவியத்தையே சிருஷ்டித்திருக்கிறார் ப்ரகாஷ். கிரேக்க எழுத்தாளரான Nikoz Kazantzakis-இடம் இயேசு, புத்தன், மார்க்ஸ் ஆகிய மூன்று பேரின் தர்ஸனங்களையும் ஒருங்கே காணலாம். ப்ரகாஷின் கதைகளிலும் அதே தர்ஸனத்தைக் காண முடிகிறது.
காசீம் ராவுத்தரின் வாழ்க்கை இரவு பகலாக புறாக்களுடனேயே கழிந்தது. சோறு வேண்டாம் தூக்கம் வேண்டாம் மனைவி வேண்டாம் குடும்பம் வேண்டாம். புறாக்கள் போதும் அவருக்கு. அது என்னவோ அவரைக் கண்டதும் புறாக்கள் கும்மளி இட்டுக் கொண்டு அவரைச் சுற்றிச் சுற்றி பறப்பதும் அவரது தோள், தலை, உடல் முழுவதும் உட்காருவதும் ஆச்சரியமான காட்சி எங்கும் கிடைக்காது. வாயில் புகையும் பீடியுடன் ஒவ்வொரு புறாவாகப் பிடித்து தட்டிக் கொடுத்து வாய் நிறைய தானியத்தைத் தன் எச்சிலோடு சேர்த்து ஊட்டும் அவரது வாயும் புறாவின் அலகும் ஒன்றாகி விடும். நீளமாக ஊதி விடும் அந்த உணவு சில நேரம் அவருக்கும் உணவாகி விடும். சுவைத்து சுவைத்து தான் உண்டதை கக்கிக் கக்கி புறாக்களுக்கு ஊதி விட்டுத் தரும் ஊட்டு முறை அந்தப் புறாக்களுக்கு இனிக்கும் போல. ஒரே நேரத்தில் பறந்து பறந்து அவர் வாயிலிருந்து மென்று நைவான தானிய உணவை அவருக்கு வலிக்காமல் அள்ளி உண்ணுகிற காட்சி பெரிய வீட்டுப் பெண்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் யாருக்கும் சலிக்காது. தேவலோகத்தில் இருந்து வந்த காப்ரியல் மலக்கு மாதிரி அவர் அந்தப் புறாக்களின் நாயகனாக அவற்றுடன் உறவாடி அவருக்கு வேறு நினைவே அற்றுப் போனது. யாருடனும் பேசவே மாட்டார். இரவு பகல் என்று தஞ்சாவூர் தெருக்களில் அலைவது எல்லாம் புறாக்களுக்காகத்தான். அரண்மனைக்குள் நாயக்க மன்னர்கள் அவருக்குத் தனி உரிமை கொடுத்திருந்தனர். திருவையாற்றின் கரையில் ஆற்றாங்கரையிலும் என்றைக்கும் விளங்கும் புறா வீடு உண்டு. குலமங்கலம் போகும் ஆற்றோரப் பாதையில் புறாக்கள் வந்தடையும் தனிக்கூண்டுகளை அரசர்கள் கட்டித் தந்தார்கள். பல தேசங்களில் இருந்து குறிப்பாக பாரசீகத்திலிருந்தும் அரேபியாவிலிருந்தும் தருவிக்கப்பட்டன. வந்ததும் அவற்றுடன் பேசிப் பழக்கி அவைகளின் பாஷையையும் தனதாக்கிக் கொள்ளும் ஆச்சரியமான அல்லாவின் மனிதன் காசீம். அந்தப் புறாக்களும் அவரை மீறி எதுவும் செய்ய முடியாத அன்பில் பிணையுண்டு நின்றன.
காசீம் பாய் ஒரு ஹராமி என்று முஸ்லீம்கள் சொன்னார்கள். காஷ்மீர் என்று மௌல்வி சொன்னார். ஆனால் புறாக்கள் அவருக்குக் கற்றுத் தந்தன. ஐம்பது ஆண்டுகளாக மனிதர்களுடன் பழகுவதை விட புறாக்களைப் புரிந்து கொள்வதில் நேரம் செலுத்திப் பழகி வந்த தெய்வீக மனிதரின் குரல். கனவு போன்ற அவரது கண்களும் சிவந்த உதடுகளும் இளமை மாறாத ஆண்மைப் புன்னகையும் நெடிய ஆறடி உயரமும் அனல் போன்று சூடு பிடிக்கும் அவரது ரத்தமும் எல்லாமே புறாக்களால் போஷிக்கப்பட்டவை. அவரது குரல் கேட்டு வானத்தில் பறக்கும் புறாக்கள் விர்ரென்று திரும்பி அவரை நோக்கிப் பாய்ந்து வரும் வித்தையும் அவரது ரகசியமும் அந்தப் புறாக்களுக்கு மட்டுமே தெரியும். அவரது ஆணை எதையும் உடனடியாக நிறைவேற்றி விட்டுத்தான் அவை அடங்கும். நினைத்தால் அவரது எதிரியின் கண்களை நிமிடத்தில் குருடாக்கும். அந்த பாஷை அத்தனை வலுவானது. ஆணை அத்தனை அன்பு வடிவானது. மனிதன் மீறி விடுவான். அவரது குரலுக்கு உயிர் கொடுக்கும் துணிவும் தியாகமும் வீரமும் அந்த ஈரறிவு உயிருக்கு இருந்தது வியப்பல்ல.
கதையின் இறுதியில் மதக் கலவரம் ஏற்படுகிறது. ‘ஊரு ரெண்டு பட்டுக் கெடக்கே பாபா. இஞ்ச பொறா புடிக்க ஏன் வந்திய? துனியா ரொம்ப கெட்டுப் போச்சி. ஜாக்ரதையா போங்க. ஆத்தங்கரையெல்லாம் பொம்பளை கொமர்களோட பொணம் கெடக்கு. யார் என்ன ஏதுன்னு யாரும் கேக்க முடியலை. நாயக்கர் காலமில்ல இது. முஸ்லீம்களுக்குக் காலமில்ல தாதா. உங்களுக்கு இன்னும் பொறா ஷோக்கு உட மாட்டேங்குது. கவனமா போங்க’ என்றார் ஆலம் பக்கீர்.
‘ஆலம் சாஹிப். படச்சவன் இருக்கும்போது என்ன பயம்? அவன் எங்கும் இருக்கான் பாய். அவனை மீறி எதுவும் இல்ல. யாரை நம்பி நம்ம அப்பன் பாட்டன்மார் இஞ்ச வந்தாங்க. அல்லா அவுகளை தஞ்சாவூர்ல பாலைவனத்துல இருந்து எந்த தைரியத்துல கொண்டாந்து சேர்த்தாராம். தஞ்சாவூருக்கு வர முந்தி என் பாட்டன் பூட்டான்மார் அரேபியாவில் இருந்து மேனாவிலேயும் பல்லக்குலேயும் வந்தாக. பாலைவனத்துல இருந்து ஆப்கானிஸ்தான் பலூஜிஸ்தான் ராஜஸ்தான் எல்லாம் நடந்து நடந்து, நடக்கும்போதே பலுகிப் பெருகி, நடக்கும்போது படிச்சி, நடக்கும் போதே வேட்டையாடி சாப்பிட்டு, நடக்கும் போதே தனியா என்னென்னமோ படிச்சிக்கிட்டு, நடக்கும்போதே மருந்து செடியெல்லாம் பறிச்சி வைத்தியம் யுனானி எல்லாம் செஞ்சுகிட்டு நடந்து கிட்டே சண்டை போட்டு சேந்தவங்களையெல்லாம் முஸ்லீம் ஆக்கிக்கிட்டு யாருகிட்டயும் வேத்து வாசனை நேராம கூட்டம் கூட்டமா புள்ளை குமர்களைப் பெத்தெடுத்து திடீர்னு இஞ்ச பாளையம் எறங்கினாங்களே, ஆரெக் கேட்டு? ஆரு சொன்னா? முன்னூறு வருஷமா இஞ்ச தொழுகையும் ஸவ்வாத்தும் து ஆவும் செய்யலியா? பொழுது விடியலியா? சாஹிபு. பைத்தியம் மாதிரி பயப்படாதிக. எந்தக் காலமும் நிலையானது இல்ல சாஹிப். எவனும் நிக்கிறதில்லெ. ரத்தம் தெளிவா இருக்கிற வரைக்குதான் எல்லாம். ரத்தம் கலங்கினால் கலந்து கொட்ட வேண்டியதுதான். துனியாவுல இதெல்லாம் பாத்து பயப்பட என்ன இருக்கு. ஆலம் சாஹிப் ஒங்க பத்து கொமருகளையும் காவு கொடுக்கலியா? படச்ச அல்லா இருக்கான். என்னைக்கும் இதெல்லாம் இப்படியேதான் இருக்கும். கொஞ்ச நாள் ஆட்டம்! அப்றம் மர்கயா! நீங்க பாக்காததா?’ என்றார் ராவுத்தர்.
ப்ரகாஷ்… நீ இருந்த திசை நோக்கித் தொழுகின்றேன்…
(தொடரும்) 

No comments:

Post a Comment