மூத்த படைப்பாளிகளின் படைப்புகள், தவறவிடக் கூடாத புத்தகங்களை இளைய வாசகர் களுக்குப் பரிந்துரைக்குமாறு எழுத்தாளர் சாரு நிவேதாவிடம் கேட்டோம்.

இன்றைய தினம் பெரும்பான்மையான இளைஞர்களிடம் தமிழ் பேச்சு மொழியாக மட்டுமே இருந்துவருவதை நீங்கள் கவனிக்கலாம். தமிழை ஒழுங்காக நான்கு பக்கம் எழுதக்கூடிய இளைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மேலை நாடுகளில் இந்த அவலம் இல்லை. ஐரோப்பாவில் ஒவ்வொரு இளைஞருக்கும் நான்கு மொழிகள் தெரிந்திருக்கின்றன.

ஒரு ஃப்ரெஞ்சு மாணவரை எடுத்துக்கொண்டால் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில்கூட அவர்கள் படித்து முடிக்கும் வரையிலும் - ஆய்வுப் படிப்பிலும்கூட - ஃப்ரெஞ்ச் மொழித் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். ஒரு ஐரோப்பிய மருத்துவ மாணவன் தன் தாய் மொழியோடுகூட லத்தீன் மொழியும் கற்கிறான். மருத்துவச் சொற்களில் பெரும்பாலானவை லத்தீன் மொழியை மூலமாகக் கொண்டவை.

இப்படி, தன் மண்ணின் மொழியை எந்தச் சமூகம் கைவிடாமல் இருக்கிறதோ அந்தச் சமூகமே உயர்வுறும். தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார, அரசியல் வீழ்ச்சிக்கு அடிப்படையான காரணம், தமிழைக் கைவிட்டுவிட்டோம். உங்களுக்குத் தெரியுமா, இங்கே உள்ள 99% தனியார் கல்லூரிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கிறார்கள். என்னால் பெயர்கூடச் சொல்ல முடியும். தமிழ்ப் பேராசிரியர்கள்கூட இங்கே திக்கித் திக்கி ஆங்கிலத்திலேயே பேச வேண்டியிருப்பதன் அவலத்தை வேறு எந்த மண்ணிலும் காண முடியாது. நல்லவேளை, தமிழை ஆங்கிலத்தில் கற்பியுங்கள் என்று உத்தரவு போடவில்லை என்று பகடி செய்தான் என் நண்பராக இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்!

இந்த நிலையில், ஒரு மொழியை எப்படி நாம் தக்க வைத்துக்கொள்வது? சிலர் தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்ற (நல்ல) நோக்கத்தில் தவறான வழியில் செல்வதையும் பார்க்கிறேன். குளம்பியகம், ஆகத்து (ஆகஸ்ட் மாதமாம்!) என்றெல்லாம் தமிழைச் சுத்தப்படுத்துகிறார்கள். இந்த மடி ஆச்சாரமெல்லாம் தமிழைக் காப்பாற்றாது. ஆங்கிலத்தில் உள்ள பெரும்பாலான சொற்கள் பிற மொழிகளிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவைதான்.

ஆக, ஒரு மொழி நிலைத்து நிற்பதற்காக நாம் செய்யக்கூடியது, அம்மொழியில் உள்ள இலக்கியத்தைக் கற்பது மட்டுமே. மேலும், அது ஒன்றும் மொழியைக் காப்பாற்றுவதற்காக நாம் செய்ய வேண்டிய கடமை அல்ல. பட்சிகளுக்கு உணவிடுவது பட்சிகளுக்காக மட்டும் அல்ல என்பதுபோல. பட்சிகளுக்கு உணவிட்டால் பூமி வாழும்; பூமி குளிரும். பூமியின் மரணத்தை இன்னும் பல கோடி ஆண்டுகள் தள்ளிப் போடுவதற்கு விருட்சம் வேண்டும்; வனம் வேண்டும்; மழை வேண்டும்; இந்தப் புவிச் சமநிலையைக் காப்பாற்றுவது பட்சிகள். அதேபோல் நாமும் நம் வாழ்வும் மேன்மையுற, அறம் தழைக்க நாம் செய்ய வேண்டிய அடிப்படையான காரியம், இலக்கியத்தை வாசித்தல். அதற்கு நான் பரிந்துரைக்கக் கூடிய பத்துப் புத்தகங்கள்:

1. சி.சு.செல்லப்பாவின் சுதந்திர தாகம்.
நம்முடைய பழைய வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதுதான் இன்றைய வாழ்வை மேலும் செழுமைப்படுத்திக்கொள்வதற்கு இருக்கும் எளிய வழி. பதிப்பாளர்: வெளி ரங்கராஜன்.

2. ந.சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம்.
என்னை காந்தியவாதியாக மாற்றிய நாவல். இதன் சில பக்கங்களை நம் குழந்தைகளுக்கு வாசித்துக் காண்பித்தால் போதும்; சமுதாயம் இப்போது இருப்பதுபோல் இருக்காது. நற்றிணை பதிப்பகம்.

3. தி.ஜானகிராமனின் செம்பருத்தி. காலச்சுவடு பதிப்பகம்.

4. லா.ச.ரா.வின் சிறுகதைகள்.
இந்த இரண்டு நூல்களும் தமிழைச் சங்கீதம்போல் மாற்றிக் காட்டியவை. டிஸ்கவரி புக் பேலஸ்.

5. எஸ்.சம்பத்தின் இடைவெளி.
உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று இது இப்போது இணையத்தில் மட்டுமே கிடைக்கிறது. விருட்சம் வெளியீடாக வந்திருப்பது திருத்தப்படாத பதிப்பு.

6. எம்.வி.வெங்கட்ராமின் காதுகள்.
இடைவெளிக்குச் சொன்னதையே இதற்கும் சொல்லலாம். காலச்சுவடு பதிப்பகம்.

7. ஆ.மாதவனின் கடைத்தெருக் கதைகள்.
நற்றிணைப் பதிப்பகம்.

8. அசோகமித்திரனின் இன்ஸ்பெக்டர் செண்பகராமன்.
குறுநாவல் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகம்.

9. தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள்.
தமிழில் தஞ்சை ப்ரகாஷுக்கு இணையாக தஞ்சை இஸ்லாமிய வாழ்க்கையை யாரும் எழுதவில்லை. டிஸ்கவரி புக் பேலஸ்.

10. ந.முத்துசாமியின் மேற்கத்திக் கொம்பு மாடுகள்.
க்ரியா பதிப்பகம். முக்கியமான சிறுகதையாளரான ந.முத்துசாமியின் பழைய கதைகளும் புதிய கதைகளும் கலந்த முக்கியமான புத்தகம்.

ஒரு ஐரோப்பிய மருத்துவ மாணவன் தன் தாய் மொழியோடுகூட லத்தீன் மொழியும் கற்கிறான். மருத்துவச் சொற்களில் பெரும்பாலானவை லத்தீன் மொழியை மூலமாகக் கொண்டவை. இப்படி, தன் மண்ணின் மொழியை எந்தச் சமூகம் கைவிடாமல் இருக்கிறதோ அந்த சமூகமே உயர்வுறும்!