முன்பெல்லாம் கை நிறைய பணம் கொண்டு சென்றோம், பை நிறைய பொருட்களை வாங்கி வந்தோம் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இது சும்மா பேச்சு வழக்குக்காக சொல்லப் பட்டதல்ல, அதுதான் உண்மை. ஆனால் இப்போதோ பை நிறைய பணம் கொண்டு சென்றாலும், கையளவு பொருட்களைத்தான் வாங்க முடிகிறது. எந்த விதமான திட்டமும் இல்லாமல் செலவிட நேரும்போது உடனே பர்சில் கை வைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. வரவுக்கு மீறி செலவு செய்வது நம்மை கடன் பொறியில் சிக்க வைக்கும் என்பதுதான் அனுபவ உண்மை.

இந்த மாதம் வீட்டுச் செலவுக்கு ஒதுக்கிய தொகையைப் போல அடுத்த மாதத்துக்கு ஒதுக்க முடியவில்லை. அடுத்த மாதத்தில் 1,000 ரூபாயாவது கூடுதலாக ஒதுக்கினால்தான் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க முடியும் என்பதாக இருக்கிறது. மார்க்கெட்டில் இப்போது வெங்காயம் விலையை கேட்டால் உரிக்காமலேயே கண்ணீர் வருகிறது.

ஆண்டுக்கு ஒருமுறைதான் வருமானம் அதிகரிக்கிறது. ஆனால், பொருள்களின் விலையோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலைமையை சமாளிக்க ஒவ்வொருவரும் ஒரு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர். சிலர் செலவுகளை கட்டுப்படுத்துகின்றனர், சிலர் சேமிப்பை குறைக்கின்றனர், சிலரோ செலவுகளைக் குறைக்காமல் கூடுதல் நேரம் உழைத்து வருமானத்தை அதிகரித்துக் கொள் கின்றனர்.

அதாவது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளை நம்மால் தவிர்க்க முடியாது. என்னதான் கட்டுப்படுத் தினாலும் விலைவாசியை இனிமேல் குறைக்கவும் முடியாது. அதனால் விலை ஏற்றத்திற்கு பழகிக்கொள்வதும், அதை சமாளிப்பதற்கான வழி தேடுவதுமே புத்திசாலித்தனமாக இருக்க முடியும். ஆனால் இதற்கு தனியாக திட்டமிட வேண்டாம். கொஞ்சம் முயற்சி இருந்தால் மட்டும்போதும். இதற்கேற்ப வாழ்க்கை தரத்தை திட்டமிட்டுக் கொள்வதும், செலவுகளை அமைத்துக்கொள்ளவும் வேண்டும்.

தவிர்க்க முடியாத அத்தியா வாசிய செலவுகளைக் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நம்மையும் அறியாமல் அல்லது திட்டமில்லாமல் செய்கின்ற செலவுகளை தவிர்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவம், கல்வி, சேமிப்பு போன்றவற்றில் சமரசமில்லாமல், பெட்ரோல் , ஹோட்டல் செலவு போன்ற விஷயங்களில் கறாராக இருந்தால் நமது செலவுகளை கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும்.

திட்டமிடுவது

கட்டுப்பாடாக செலவு செய்வது என்கிற விஷயத்தில் பலருக்கும் அலட்சியம்தான். முக்கியமாக பலருக்கு வரவு செலவு குறித்து தெளிவான திட்டமே கிடையாது. குடும்ப வருமானத்தில் அவசர செலவுகள், உடனடி தேவைக்குரிய செலவுகள், எதிர்கால திட்டத்திற்குரிய செலவுகள், கல்வி, மருத்துவ செலவுகள் போன்றவற்றை கணக்கிட்டு தெளிவாக ஒதுக்க வேண்டும். மாத சம்பளத்தை மட்டும் கணக்கிலெடுப்பார்கள். பிற சொத்துகள் மூலம் சில்லரையாக வரும் வருமானங்களை கணக்கில் சேர்க்காமல் செலவு செய்து செய்து கொண்டிருப் பார்கள். இதைத் தவிர்க்க வேண்டும்.

சேமிப்பு

எந்த நெருக்கடியிலும் சேமிப்பை விட்டுவிடக்கூடாது. அவசரத்துக்கு இதுதான் உதவும். பத்து வருடத்துக்கு முன்பு சேமிக்கத் தொடங்கியிருந்தால் இன்று அது பெரும் தொகை. இது அவசரகாலத்துக்கு மட்டுமல்ல, எதிர்கால பணவீக்கத்துக்கு ஏற்ப உங்களது செலவுகளை சமாளிப்பதற்கும் உதவும்.

கடன்

நமது வருமானத்தை தாண்டி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்வது முக்கி யம். மேலதிகமாக செலவு செய்கிறோம் என்றால் கடனுக்கு வழி செய்கிறோம் என்று அர்த்தம். கிடைத்தாலும் நமது வருமானத்தையும் தாண்டி வாங்கு வதை தவிர்க்கலாம். கடனே வாங்கக் கூடாது என்று முடிவெடுங்கள்.

கிரெடிட் கார்டு

அவசரத்துக்கு என்று கிரெடிட் கார்டு பயன்படுத்தத் தொடங்கி இப்போது எதற்கெடுத்தாலும் கிரெடிட் கார்டு நீட்டுவதை வழக்கமாக வைத்திருப்பது செலவுகளை அதிகரிக்கவே செய்யும். ஒரு வருடத்தின் கிரெடிட் கார்டு பயன் பாட்டை கணக்கிலெடுத்து அதற்கு எவ்வளவு வட்டி கட்டியிருக்கிறோம் என்பதைப் பாருங்கள். கிரெடிட் கார்டு கையிலிருப்பது அவசியம் இல்லாத பொருட்களையும் வாங்கத் தூண்டும் என்பதும் ஞாபகத்தில் இருக்கட்டும்.

வாகன பயன்பாடு

தனிநபர் செலவில் கணிசமான தொகை யை சாப்பிடுவது வாகனங்கள்தான். எரிபொருள், பராமரிப்பு என மாதம் ஒரு தொகை வைக்க வேண்டும். அக்கம் பக்கத்து தெருவுக்கு செல்ல வேண்டும் என்றாலும் வாகனத்துக்கு பழகி வருகிறோம். பொதுப் போக்குவரத்துக்கு பழகுவதும், நமது சொந்த வாகனங்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதற்கும் பழக வேண்டும்.

ஷாப்பிங்

வீட்டுக்குத் தேவையான பொருட்களை சில்லரையாக வாங்காமல் மொத்தமாக வாங்குவது நல்லது. அதுபோல எந்த பொருளை எவ்வளவு வாங்க வேண்டும் என்பதிலும் தெளிவு வேண்டும்.அடுத்த மாதம்தான் ஒரு பொருளுக்கு பயன் இருக்கிறது என்றால் அதை இப்போதே வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளக் கூடாது.

தள்ளுபடி

ஷாப்பிங் சலுகைகளை தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால் தள்ளுபடி பயனுள்ளதாக இருக்க வேண்டும். சலுகை விலையில் கிடைக்கிறது என்பதற்காக பல பொருட்களையும் வாங்கிக் குவிப்பதை தவிர்க்க வேண்டும். சில பொருட்களை 3 வாங்கினால் 1 இலவசம் கொடுப்பார்கள். நமக்கு 2 பொருள் இருந்தாலே அதிகம் என்கிற பட்சத்தில் 2 வாங்கினால் மட்டும் போதும். ஷாப்பிங் நேரத்தில் அந்த நேர முடிவுகளில் அதிக கவனமாக இருந்தால் திட்டமில்லாச் செலவுகளைத் தவிர்க்கலாம்.

பொழுதுபோக்கு

நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு வாரந்தோறும் ஏதேனும் ஒரு இடத்துக்கு குடும்பத்துடன் வெளியே செல்லும் கலாச் சாரம் தவிர்க்க முடியாத அம்சமாக மாறி வருகிறது. இதைத் தவிர்க்க முடியாது என்றாலும், அடிக்கடி செல்வதை குறைத்துக் கொள்ளலாம். கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பம் ஒரு முறை ஹோட்டல் சென்றால் குறைந்தபட்சம் 1,000 ரூபாயாவது செலவாகிறது.

மின்சாரம்

மின்சாரத்தை செலவு செய்வதிலும் நம்மிடம் அலட்சியம் உள்ளது. இதன் மூலமும் செலவுகள் அதிகரிக்கிறது. குறிப்பாகக் குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் மின் விளக்குகளை பயன்படுத்தினால் மின்சார செலவுகளை கட்டுப்படுத்தலாம். அவசியம் இருந்தால் மட்டுமே ஏசி பயன்படுத்த வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் மோட்டார் இயக்குவதற்கான மின்சாரம் சிக்கனமாகும் என்கிற கண்ணோட் டத்திலும் யோசிக்க வேண்டும்.

செல்போன்

பண்டிகை நாட்களில் சகட்டு மேனிக்கு வாழ்த்து குறுஞ்செய்திகளை அனுப்பு வார்கள். வழக்கத்தைவிட அதிகக் கட்டணம் என்றாலும் தெரிந்தே செய்யும் இந்த பழக்கம் தவிர்க்க வேண்டியதில் முக்கியம். எந்த வகையில் செலவு செய்தாலும் நமது தேவையிலிருந்தே எல்லாவற்றையும் அணுகு வேண்டும். இதனால் திட்டமில்லாத செலவுகளை தவிர்க்க முடியும்.

பத்து ரூபாய் பாக்கி வரவேண்டும் என்றால் அதற்கு வேறு பொருளை எடுத்து ரவுண்ட்ஆப் செய்யும் பழக்கம் கூட திட்டமில்லாத செலவுதான். எனவே எந்த இடத்தில் யோசிக்காமல் செலவு செய்கிறோம் என்பதைப் யோசி யுங்கள்.
ஒவ்வொரு செலவையும் நமது தேவையை ஒட்டியே இருப்பதுபோல திட்டமிடுங்கள். திட்டமில்லாத செலவு களை தவிர்ப்பதற்கு அதுவே சிறந்த வழி.