Showing posts with label Environment. Show all posts
Showing posts with label Environment. Show all posts

Jul 14, 2016

காற்றினிலே வரும் கீதம்

அடுத்த வீட்டின் பின்புறம் ஒரு மாமரம் இருந்தது. அதில் ஒரு குயில் தம்பதி குடியிருந்தது. கிழக்கு வெளுக்கத் தொடங்கியவுடன் அவை பாடத் தொடங்கும். நன்னம்பிக்கையின் குறியீடாக அது புலப்படும். இருளின் அடர்த்தி குறைவதையும் ஒளி வளர்வதையும் கண்டு உற்சாகமும் ஊக்கமும் அவற்றின் தொண்டையிலிருந்து பீறிட்டுக் கிளம்பும். ஒன்றன் பின் ஒன்றாக வேறு பல பறவைகளும் அவற்றுடன் சேர்ந்துகொள்ளும்.

பறவைகளின் வைகறை இசையைப் போல மனதுக்குச் சுறுசுறுப்பூட்டுவது வேறெதுவுமில்லை. அதில் எண்ணற்ற சொற்கட்டுகளும், சங்கதிகளும், ராகங்களும், சுரங்களும் வெள்ளமாகப் பெருக்கெடுத்தோடும். அது ஒரு மொழி. அதில் சொற்கள் இல்லாதிருந்தாலும் பொருள் செறிந் திருக்கும். அந்தப் பொருள் நமக்கு விளங்காமல் போனாலும் அந்த இசை வசந்த காலத்தின் வருகைக்குக் கட்டியம் கூறுவதால், நமது மனதிலும் மகிழ்ச்சியுண்டாகும். உயிர் தரித்திருப்பதைக் கொண்டாடும் மனமிருந்தால் அது சாத்தியம்.

ஏன் பாடுகின்றன?

பறவைகள் ஏன் பாடுகின்றன என்று கேட்டால், அதற்குக் காரணம் அவை அதற்காகவே படைக்கப்பட்டவை என்றுதான் சொல்ல முடியும். மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குரல்வளை அமைப்பிலிருந்து பறவைகளின் குரல்வளை வேறுபட்டது. அது மென்மையான தசை நார்களால் ஆனது. குருவி போன்ற சிறிய உடலுள்ள பறவைகளுக்கு அது சிறியதாக இருப்பதால், உயர் அதிர்வெண் சுருதிகளுள்ள ஒலிகளை மட்டுமே அதனால் வெளிப்படுத்த முடியும். பெரிய பறவைகளின் குரல் கர்ண கடூரமாயிருப்பதற்கு அவற்றின் குரல்வளை பெரியதாயிருப்பதே காரணம். தான் கூடு கட்டியிருக்கிற இடம், தனக்குரிய சமஸ்தானம் என்று மற்ற பறவைகளுக்கு அறிவிக்கவே ஒரு பறவை பாடுகிறது எனச் சில ஆய்வர்கள் கூறுகிறார்கள். உண்மையில், மனிதனின் குரல்வளை இசையொலிகளை எழுப்பும் உறுப்பாகப் பரிணமிக்கவில்லை என்றே சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பறவைகளைப் போல இசையொலி மூலம் தமது இணைகளைக் கவர்ந்திழுக்க வேண்டிய தேவை மனிதர்களுக்கும் (விலங்குகளுக்கும்) இல்லை என்பதே அதற்குக் காரணம்.

குளிர் மிகுந்த பகுதிகளிலிருந்து புறப்பட்டு, மிதவெப்பப் பகுதிகளுக்கு இனப் பெருக்கத்துக்காக வரும் பறவைகளில் ஆண்களே தமது கூடுகளைக் கட்டத் தொடங்குகின்றன. கூடுகளைக் கட்டி முடித்ததும் அவை உரத்த குரலில் பாடி, ‘வீடு தயார்’ என்று இணைகளுக்கு அறிவிக்கின்றன. வேறு ஆண் பறவை ஏதாவது அக்கம்பக்கத்தில் இருந்தால், அவற்றை எச்சரித்து வேறு இடத்துக்குப் போகும்படி கோபமாக மிரட்டவும் ஆண் பறவை குரலை உயர்த்திப் பாடும்.

ஓர் இணை கிடைத்து, அது கூட்டில் முட்டையிட்டு அடைகாக்கும்போதும் ஆண் பறவை பாடுகிறது. அது பெண் பறவையை மகிழ்விப்பதற்காக இருக்கலாம். அதை விடவும், அந்த நேரத்தில் அதன் உடலும் மனமும் உச்சகட்ட ஆற்றலுடன் இருப்பதே அதன் தொண்டையிலிருந்து இசை பீறிட்டெழுவதற்குக் காரணம். கூடுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படும் பறவைகள், அருகே இணை ஏதும் இல்லாத நிலையிலும் வசந்தத்தின் இனப் பெருக்கக் காலத்தில் உரத்த குரலில் பாடுகின்றன. அது ஏதோ ஓர் உள்ளுணர்வின் தூண்டலாகவே தோன்றுகிறது.

முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிப்பட்டதும் பாட்டுப் பாடுவது குறைகிறது. ஆணுக்கு, வெளியே சுற்றித் திரிந்து இரை தேடி எடுத்து வர வேண்டிய பணிச்சுமை அதிகரிக்கிறது. சில பறவை இனங்களில் ஒரு ஈடு முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிப்பட்ட சில நாட்களுக்குள்ளாகவே பெண் பறவை இன்னொரு ஈடு முட்டைகளை இட்டுவிடுவது உண்டு. அப்போது வசந்த காலமாக இல்லாவிட்டாலும் ஆண் பறவை அலகை மூடியவாறே வாய்க்குள்ளாகப் பாட்டுப் பாடும்.

காலையில்தான் பாட்டு

பாட்டுப் பாடுவதற்கு நேரம், காலம், பருவம் எல்லாம் பொருந்திவர வேண்டும். பெரும்பாலான பறவைகள் கிழக்கு வெளுக்கத் தொடங்கும்போது பாடத் தொடங்குகின்றன. அப்போதும் ஒவ்வொரு பறவையினமும் ஒவ்வொரு குறிப்பிட்ட கணத்தில்தான் பாட்டை ஆரம்பிக்கின்றன. மாலையில் அவை கூடுகளுக்குத் திரும்பும் நேரத்தில், மீண்டும் கச்சேரி உச்ச ஸ்தாயியில் தொடங்கும். ஆனால், காலை வேளையில் நடப்பதைவிடச் சற்று மென்மையான சுரங்களுடன் இருக்கும். அதில் இசையொலியைவிட, சளசளப்புக் கூச்சலே அதிகம். ஆற்றங்கரை அரச மரங்களில் மாலை நேரங்களில் பலவிதமான பறவைகள் தத்தம் கூடுகளில் அமர்ந்துகொண்டு சத்தம் போடும். அதை இசையென்று வகைப்படுத்த மிகவும் தாராளமான மனநிலை தேவை.

சில பறவைகள் விடியற்காலையில் மட்டும் பாடும். ஆந்தைகளும் கோட்டான்களும் இரவின் இருட்டில் மட்டுமே குரல் கொடுக்கும். அதை இசையாக யாரும் குறிப்பிடுவதில்லை. அலறல் என்றுதான் சொல்லுவார்கள். ஆனால், பெண் ஆந்தைகளுக்கு அது கந்தர்வ கானமாயிருக்கும்.

இருள் பிரிவதற்கு முன்பே கண் விழித்துவிடும் ஸ்விஃப்ட் (உழவாரன்) பறவைகள், வானத்தில் பெரும் உயரத்துக்கு எழும்பிச் சூரியனின் முதல் செங்கதிர்கள் பூமியின் தரையில் படுவதற்கு முன்பாகவே எதிர்கொண்டு வரவேற்றுப் பாடத் தொடங்கும். வானம்பாடிகள் காலையிலும் பாடும், மாலையிலும் பாடும். நைட்டிங்கேல் பறவையும் இரு வேளையும் பாடும் பழக்கமுள்ளது.

எல்லாப் பறவைகளுமே தமக்குரிய குரல் வளத்துடன் பாடுகின்றன. மனிதர்கள்தான் அவற்றை இசை, சளசளப்பு, கூச்சல் என்றெல்லாம் வகைப்படுத்துகின்றனர். பறவைகள் அடைகாக்கும்போது மென்மையான குரலில் முணுமுணுக்கின்றன. முட்டைக்குள் வளரும் குஞ்சுகள் அதிலிருந்து வெளிப்படுகிறபோது தம் பெற்றோரை அடையாளம் காண அது உதவுகிறது. அவை முதலில் அதே போன்ற ஒலிகளை எழுப்பினாலும், வளர வளரத் தத்தம் இனத்தாரிடமிருந்து பல்வேறு இசையொலிகளை எழுப்பக் கற்றுக்கொள்வதாகப் பறவையியலாளர்கள் கருதுகின்றனர்.

பயிற்சி மூலமே பாட்டு

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வர் குழு ஒரு ஃபிஞ்ச் குருவிக் குஞ்சை, முட்டையிலிருந்து வெளிப்பட்டவுடன் தனிமைப்படுத்திப் பராமரித்தது. அது ஓரளவுக்குச் சுமாரான சில இசையொலிகளை எழுப்பினாலும் சுயேச்சையாக வாழும் குருவிகளின் அளவுக்குப் பல்வேறு இசையொலிகளை எழுப்பவில்லை. இதன் மூலம் ஃபிஞ்ச் குருவிகள் பிற குருவிகளிடமிருந்தே முழுமையான இசைப் பயிற்சியைப் பெறுகின்றன என்பது கண்டறியப்பட்டது. மற்றெல்லா இனப் பறவைகளுக்கும் இது பொருந்தும்.

அடுத்து, அந்தக் குருவிக் குஞ்சுக்குத் துணையாக இன்னொரு குருவியைக் கூண்டில் வைத்தபோது, பெரிய குருவி எழுப்பிய இசையொலிகளைக் கேட்டுக் கேட்டுக் குருவிக் குஞ்சும் அவற்றைக் காப்பியடித்துப் பாடத் தொடங்கிவிட்டது. பறவையிசை என்பது பிறவிக் குணமல்ல என்பதும் பயிற்றுவிக்கப்படுவதே என்பதும் இதன் மூலம் அறியப்பட்டது.

இன்னொரு சோதனையில், பல ஃபிஞ்ச் குருவிக் குஞ்சுகளை ஒரே அறையில் வசிக்க வைத்தபோது எல்லாக் குஞ்சுகளும் ஒரே மாதிரியான குரலில், ஒரே சுரத்தைப் பாடின. சுயேச்சையாகத் திரியும் ஃபிஞ்ச் குருவிக் கூட்டத்தில் ஒலிக்கிற பல்வேறு சுருதிகளை இந்தப் பரிசோதனைக் கூட்டத்தில் கேட்க முடியவில்லை. அந்தக் கூட்டத்தின் இசையே சுயேச்சையான கூட்டத்தின் இசையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது.

தாய்ப் பறவை அடைகாக்கும்போதும், குஞ்சுகளுக்கு இரையூட்டுகிறபோதும், இளம் பருவத்திலும் கற்றுத்தருகிற பாட்டைத்தான் குஞ்சுகள் தம் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் பிறந்து வளர்ந்த ஃபிஞ்ச் பறவைகள் எல்லாம் ஒரே சுரத்தை ஒரே மாதிரியாகப் பாடின. ஆனால், வேறு மாகாணத்தில் வேறு ஒரு வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவை வேறு சுரத்தில் பாடின. லயம்கூட வேறுபட்டிருந்தது. கேம்பிரிட்ஜில் ஆய்வர்கள் தமது வட்டாரத்தில் வசித்த குருவிகளின் இசைக்கு ஏற்பச் சொற்களைப் போட்டுப் பாடலை இயற்றினார்கள். ஆனால், வேறு மாகாணங்களில் வசித்த ஃபிஞ்ச் குருவிகளின் இசைக்கு அந்தச் சொற்கள் பொருந்தவில்லை.

ஜே, மாக்கிங்பர்ட் போன்ற பறவைகள் தம்முடன் கூடி வாழும் வேறு இனப் பறவைகளின் பாட்டுகளைக் காப்பியடிப்பதும் காணப்பட்டிருக்கிறது. வீடுகளில் கூண்டுப் பறவைகளாக வளர்க்கப்படும் நீல ஜே பறவைகள் தமது காதில் விழும் சலவை இயந்திர ஒலி, நாய்களின் குரைப்பு போன்றவற்றைப் போலவே ஒலியெழுப்பும். ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட மாக்கிங் பர்ட் தன் எஜமானரின் இருமல் ஒலியைத் தத்ரூபமாக எழுப்பியது. அதைக் கேட்டுச் சிரித்த எஜமானியின் சிரிப்பையும் அப்படியே எதிரொலித்தது.

பறவைகளின் இசையில் ஓர் அடிப்படையான மர்மம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அவை இசை மூலம் தமக்குள் பரிமாறிக்கொள்ளும் ரகசியங்களை விண்டுணர மனிதர்களால் இயலவில்லை. ஆனாலும் கத்தும் குயிலோசை காதில் விழ வேண்டும் என்ற ஆசை மனிதர்களுக்குத் தணியாமலிருக்கிறது. குக்கூ என்று அது எழுப்பும் ஒலியே அதன் ஆங்கிலப் பெயராகிவிட்டது.

- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

ராவ்கள் மற்றும் மோடிகள் வரலாறு!

வரலாற்றை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நினைவு கூர்வது முக்கியமானது. எனினும், உலக மயமாக்கலின் 25-வது ஆண்டை வெள்ளி விழா என்று சிலாகிக்க ஏதும் இல்லை.

எனக்கு நரசிம்ம ராவ் இப்படித்தான் ஞாபகத்துக்கு வருகிறார். மைனாரிட்டி அரசாக இருந்தும் ஐந்து வருடங்கள் ‘சாமர்த்திய’மாக ஆட்சியில் நீடித்தவர் அவர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற நடத்திய குதிரை பேரத்திலிருந்து, பாபர் மசூதி இடிப்புக்குப் பச்சைக்கொடி காட்டியது வரையிலான அவரது போக்குகளின் உச்சம், அவரது நந்தியால் வெற்றி. நந்தியால் தொகுதியில் உள்ள பல வாக்கு மையங்களில் மொத்த வாக்காளர்களைவிட அதிகமான ஓட்டுகள் பெற்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதை எப்படி மறப்பது, என்னவென்று எழுதுவது?

நரசிம்ம ராவ் எழுதிய சுயசரிதையின் தலைப்பு ‘இன்சைடர்’ (உள்ளாள்). அவர் காங்கிரஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராக இருந்தபோது பல அரசியல் கட்டுரைகளை ‘இன்சைடர்’ என்கிற புனைபெயரில் ‘மெயின் ஸ்ட்ரீம்’ என்ற ஆங்கில அரசியல் இதழில் எழுதிவந்தார். அக்கட்டுரைகளின் ஆசிரியர் யார் என்பது பலருக்கும் அந்நாட்களில் புரிபடவில்லை. அவற்றை ஆராய்ந்து, நரசிம்ம ராவ்தான் புனைபெயரில் அந்தக் கட்டுரைகளை எழுதிவந்தார் என்ற உண்மையைப் போட்டு உடைத்தார் பத்திரிகையாளர் என்.ராம். ஒரு கட்சியின் உயர்நிலைக் குழுவில் இருந்துகொண்டே அக்குழுவின் முடிவுகளை புனைபெயரில் கட்டுரையாக விவாதிக்கும் ‘சாமர்த்தியம்’ நரசிம்ம ராவுக்கு மட்டுமே சாத்தியம்.

மறைக்கப்பட்ட ராவின் முகம்

நரசிம்ம ராவின் பல முகங்களை மறைத்துவிட்டு, தாராளமயமாக்கலின் தந்தை என்று இன்றைக்குப் பலர் அவரைப் பாராட்டிக் கொண்டாடுவது அறியாமை அல்லது புரட்டு என்றே சொல்ல வேண்டும். ராவ் மட்டும் அல்ல; வாஜ்பாய், மோடி இவர்கள் எல்லோரின் வரலாறுமே இப்படிப்பட்டதுதான். ‘சாமர்த்திய’ வரலாறு.

இந்தியாவை முழுமையாகத் தம் வசப்படுத்த ஏகாதிபத்தியம் நெடுநாட்களாகக் காத்திருந்தது. ராவ் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தபோது, ‘சாமர்த்திய’மாக அதைச் செய்துகொடுத்தார். மத்திய அரசு தொழில் முதலீடுகளில் தனியார் மயக்கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்த ஆரம்பித்தது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் சொற்கள் அரசின் தாரக மந்திரமாக்கப்பட்டு, முதலீட்டாளர்களுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் பட்டுக் கம்பளங்கள் விரிக்கப்பட்டன. இதே காலகட்டத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் நடந்த புரட்சியும் உடன் சேர இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் கொல்லைப்புறமாக மாறியது. இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்தியாவில் தனியார்மயமாக்கல் பெருமளவில் சட்டத் தைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டே உள் நுழைக்கப்பட்டது என்பதுதான். தனியார்மயமாக்கல் தொடர்பான கொள்கை அறிவிப்புகள் பொது மேடைகளில் பெரிய அளவில் வந்தனவே ஒழிய, நாடாளுமன்றத்தில் பெரிய அளவில் அதற்கான விவாதங்கள் ஒலிக்கவில்லை. விஷயம் அதோடு முடியவில்லை. சட்டம் இயற்றும் மன்றங்கள் சரியாகச் செயல்படாதபோது, மக்களின் கடைசி நம்பிக்கை சட்டத்தைப் பாதுகாக்கும் நீதிமன்றங்கள்தான்.

தனியார்மயம் விரோதம் இல்லையா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தலைப்பு வரிகளில், இந்தியா ஒரு ‘சோஷலிஸ குடியரசு’ என்று போடப்பட்டிருக்கிறது. இதற்கு அர்த்தம் என்ன? அரசின் நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது அரசமைப்புச் சட்டத்துக்கு நேர் விரோதமானது இல்லையா? இப்படியான கேள்விகளோடு ‘பால்கோ’ நிறுவனத் தொழிலாளர்கள் போட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் போனது. உச்ச நீதிமன்றம் என்ன செய்தது தெரியுமா? வழக்கைத் தள்ளுபடி செய்தது. “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது” என்று அறிவித்தார்கள் நீதிபதிகள்.

மேலும், அரசமைப்புச் சட்டத்திலுள்ள சோஷலிஸம் என்ற வார்த்தையைக் கேலி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டது: “சோஷலிஸம் என்பது நம்முடைய சரித்திரத்திலிருந்து கிடைத்த கவர்ச்சிகரமான வார்த்தையாக இருக்கலாம். அரசமைப்புச் சட்டத்தின் தலைப்பு வரிகளிலும் காணப்படலாம். இந்தியச் சமூகம், இன்றியமையாத கூறாக சோஷலிஸத்தை மணம் புரிந்துள்ளது என்ற கருத்தாக்கம், மத்திய அரசு 1990-களின் ஆரம்பத்தில் கடைப்பிடிக்கத் தொடங்கிய தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவால் உதிரத் தொடங்கியுள்ளது.” (உ.பி. மாநில வெண்கலப் பொருட்கள் நிறுவனம் வழக்கு, 2006).

மேலும் அதே தீர்ப்பில் குறிப்பிட்டது: “உலக மயமாக்கலினால் நாட்டின் பொருளாதார, சமூகக் காட்சிகளில் தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை விளக்கும்போது மாறிவரும் பொருளாதாரக் காட்சிகளை மனதில் கொண்டு யதார்த்தமான பார்வையுடன் நீதிமன்றம் செயல்பட வேண்டும்.”

பிறகு உச்ச நீதிமன்றம் இப்படியும் சொன்னது: “நிர்வாக அதிகாரிகள் விமான நிலையங்களில் மதுக் கடைகளைத் தொடங்க எண்ணிவருகின்றனர். இதன் மூலம் சமூகம் பொதுவில் மது அருந்தும் கலாச்சாரத்தைப் பெருநகரங்களில் ஏற்றுக்கொண்டுவிட்டது. எனவே, நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பழைய தத்துவங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காமல், மாறிவரும் காட்சிகளைக் கணக்கில்கொண்டு, யதார்த்தத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும்!”

உச்ச நீதிமன்றத்தின் பச்சைக்கொடி

உச்ச நீதிமன்றம் உலகமயமாக்க லுக்கும் தனியார்மயமாக்கலுக்கும் பச்சைக்கொடி காட்டியதோடு மட்டும் அல்லாமல், வெவ்வேறு தரு ணங்களில் அதன் போக்குக்கும் சென்றது என்று சொல்லலாம். மதுக் கடைகளில் மாலை நேரங்களில் பெண்கள் மது விற்பனையாளராக இருப்பதைத் தடை செய்த டெல்லி அரசின் உத்தரவை 2007-ல் ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதற்கு ஒருபடி மேலே போய் 2013-ல் மராட்டிய அரசு மதுக் கடை பார்களில் பெண்களின் நடனங்களைத் தடைசெய்யும் சட்டத்தையும் ரத்துசெய்தது. சட்டம் இயற்றும் மன்றங்களும் சட்டத்தைப் பாதுகாக்கும் மன்றங்களும் உலகமயமாக்கலை வாரி அணைத்துக்கொண்டபோது மக்கள் நிலை என்னவானது? முதலாளிகள் பார்வையிலிருந்து அல்ல; தொழிலாளர்கள் நிலை மூலமாகவே அதை நாம் அறிய முடியும்.

இன்றைக்குத் தொழிலாளர் வர்க்கத்தின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், அவர்கள் நேரடித் தொழிலாளர்கள் அல்ல. அதாவது, தொழிலாளர்கள் எனும் அங்கீகாரம்கூட அவர்களுக்கு இல்லை. எல்லா நிறுவனங்களிலும் நேரடித் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, மறைமுகத் தொழிலாளர்களான ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுவருகிறது. அயல் பணி ஒப்படைப்பு முறையிலான தொழிலாளர்களின் எண்ணிக்கை, நேரடித் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஏறத்தாழ பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு அரசுத் துறை நிறுவனங்களும் விதிவிலக்கல்ல. ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்துவதன் காரணம், குறைந்த கூலியில் அதிக வேலை என்பதோடு, அவர்கள் ஒன்று திரண்டு, சங்கம் அமைத்துத் தங்கள் உரிமைகளுக்காகப் போராட மாட்டார்கள் என்பதும்தான்!

தொழிலாளர்களுக்குப் பொருந்தா சட்டங்கள்

‘ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை சம்பந்தப்பட்ட அரசுகள் தடை செய்தால், அந்தத் தொழிலில் அதுவரை ஈடுபட்ட தொழிலாளர்களை பொதுத் துறை நிறுவனங்கள் நேரடித் தொழிலாளர்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று ‘ஏர் இந்தியா’ வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை (1997) உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு ‘ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா’ வழக்கில் ரத்து செய்தது (2001). இன்றைக்குப் பல கோடித் தொழிலாளர்களுக்குத் தொழிலாளர் நலச் சட்டங்கள் பொருந்துவதில்லை. அவர்களுக்குத் தொழிலாளர்கள் எனும் அடிப்படைத் தகுதிக்கான உரிமைகள்கூட இல்லை.

இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் தவிடுபொடியாக்க தொழிலாளர் சட்டங்களைச் சீர்திருத்தி அமைக்கப்போகிறோம் என்கிறது இன்றைய மோடி அரசு. பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் பல தொழிலாளர் சட்டங்கள் முதலாளிகளின் வேண்டுகோளின்படி திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

மோடி ராஜஸ்தான் அரசைத் தனது தனியார்மயமாக்கலின் சோதனைச் சாலையாகச் செயல்படுத்திவருகிறார். அங்குள்ள பாஜக தலைமையிலான தொழிற்சங்க அமைப்புகளே இச்சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்துப் போராடிவருகின்றன. அதையும் மீறி, பன்னாட்டு நிறுவனங்களின் நிர்ப்பந்தங்களால் இன்றைக்குத் தொழிலாளர் சட்டங்களிலுள்ள முக்கியமான பிரிவுகள் திருத்தங்களின் மூலம் மாற்றி அமைக்கப்படவுள்ளன. நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட வரைவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகமயமாக்கலின் வெள்ளிவிழா ஆண்டைப் பாராட்டி வசனம் எழுதுபவர்கள் எல்லாம், தொழிலாளர் துறையையும் அதற்கான சட்டங்களில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களையும் நினைத்துப் பார்த்தால், அவர்களுக்கு உலகமயமாக்கலின் குரூரம் புரியும்.

நரசிம்ம ராவ் ஏற்றிப் பிடித்த தீச்சட்டியை நரேந்திர மோடி கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தய வீரர்போல் ஓடி வருவதையும் பின்னாளில் ஒரு கும்பல் ‘சாமர்த்தியம்’ கருதிப் புகழலாம். ஆனால், ராவ்கள், வாஜ்பாய்கள், மோடிகளின் ‘சாமர்த்தியம்’ தேசம் கொண்டாடக் கூடிய வரலாறு அல்ல. மக்களின் கடைக்கோடி மனிதன் அந்த வரலாற்றைக் கண்ணீரினூடேதான் பார்ப்பான்!

- கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்

Jul 9, 2016

காற்றினிலே வரும் கீதம்

அடுத்த வீட்டின் பின்புறம் ஒரு மாமரம் இருந்தது. அதில் ஒரு குயில் தம்பதி குடியிருந்தது. கிழக்கு வெளுக்கத் தொடங்கியவுடன் அவை பாடத் தொடங்கும். நன்னம்பிக்கையின் குறியீடாக அது புலப்படும். இருளின் அடர்த்தி குறைவதையும் ஒளி வளர்வதையும் கண்டு உற்சாகமும் ஊக்கமும் அவற்றின் தொண்டையிலிருந்து பீறிட்டுக் கிளம்பும். ஒன்றன் பின் ஒன்றாக வேறு பல பறவைகளும் அவற்றுடன் சேர்ந்துகொள்ளும்.

பறவைகளின் வைகறை இசையைப் போல மனதுக்குச் சுறுசுறுப்பூட்டுவது வேறெதுவுமில்லை. அதில் எண்ணற்ற சொற்கட்டுகளும், சங்கதிகளும், ராகங்களும், சுரங்களும் வெள்ளமாகப் பெருக்கெடுத்தோடும். அது ஒரு மொழி. அதில் சொற்கள் இல்லாதிருந்தாலும் பொருள் செறிந் திருக்கும். அந்தப் பொருள் நமக்கு விளங்காமல் போனாலும் அந்த இசை வசந்த காலத்தின் வருகைக்குக் கட்டியம் கூறுவதால், நமது மனதிலும் மகிழ்ச்சியுண்டாகும். உயிர் தரித்திருப்பதைக் கொண்டாடும் மனமிருந்தால் அது சாத்தியம்.

ஏன் பாடுகின்றன?

பறவைகள் ஏன் பாடுகின்றன என்று கேட்டால், அதற்குக் காரணம் அவை அதற்காகவே படைக்கப்பட்டவை என்றுதான் சொல்ல முடியும். மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குரல்வளை அமைப்பிலிருந்து பறவைகளின் குரல்வளை வேறுபட்டது. அது மென்மையான தசை நார்களால் ஆனது. குருவி போன்ற சிறிய உடலுள்ள பறவைகளுக்கு அது சிறியதாக இருப்பதால், உயர் அதிர்வெண் சுருதிகளுள்ள ஒலிகளை மட்டுமே அதனால் வெளிப்படுத்த முடியும். பெரிய பறவைகளின் குரல் கர்ண கடூரமாயிருப்பதற்கு அவற்றின் குரல்வளை பெரியதாயிருப்பதே காரணம். தான் கூடு கட்டியிருக்கிற இடம், தனக்குரிய சமஸ்தானம் என்று மற்ற பறவைகளுக்கு அறிவிக்கவே ஒரு பறவை பாடுகிறது எனச் சில ஆய்வர்கள் கூறுகிறார்கள். உண்மையில், மனிதனின் குரல்வளை இசையொலிகளை எழுப்பும் உறுப்பாகப் பரிணமிக்கவில்லை என்றே சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பறவைகளைப் போல இசையொலி மூலம் தமது இணைகளைக் கவர்ந்திழுக்க வேண்டிய தேவை மனிதர்களுக்கும் (விலங்குகளுக்கும்) இல்லை என்பதே அதற்குக் காரணம்.

குளிர் மிகுந்த பகுதிகளிலிருந்து புறப்பட்டு, மிதவெப்பப் பகுதிகளுக்கு இனப் பெருக்கத்துக்காக வரும் பறவைகளில் ஆண்களே தமது கூடுகளைக் கட்டத் தொடங்குகின்றன. கூடுகளைக் கட்டி முடித்ததும் அவை உரத்த குரலில் பாடி, ‘வீடு தயார்’ என்று இணைகளுக்கு அறிவிக்கின்றன. வேறு ஆண் பறவை ஏதாவது அக்கம்பக்கத்தில் இருந்தால், அவற்றை எச்சரித்து வேறு இடத்துக்குப் போகும்படி கோபமாக மிரட்டவும் ஆண் பறவை குரலை உயர்த்திப் பாடும்.
ஓர் இணை கிடைத்து, அது கூட்டில் முட்டையிட்டு அடைகாக்கும்போதும் ஆண் பறவை பாடுகிறது. அது பெண் பறவையை மகிழ்விப்பதற்காக இருக்கலாம். அதை விடவும், அந்த நேரத்தில் அதன் உடலும் மனமும் உச்சகட்ட ஆற்றலுடன் இருப்பதே அதன் தொண்டையிலிருந்து இசை பீறிட்டெழுவதற்குக் காரணம். கூடுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படும் பறவைகள், அருகே இணை ஏதும் இல்லாத நிலையிலும் வசந்தத்தின் இனப் பெருக்கக் காலத்தில் உரத்த குரலில் பாடுகின்றன. அது ஏதோ ஓர் உள்ளுணர்வின் தூண்டலாகவே தோன்றுகிறது.

முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிப்பட்டதும் பாட்டுப் பாடுவது குறைகிறது. ஆணுக்கு, வெளியே சுற்றித் திரிந்து இரை தேடி எடுத்து வர வேண்டிய பணிச்சுமை அதிகரிக்கிறது. சில பறவை இனங்களில் ஒரு ஈடு முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிப்பட்ட சில நாட்களுக்குள்ளாகவே பெண் பறவை இன்னொரு ஈடு முட்டைகளை இட்டுவிடுவது உண்டு. அப்போது வசந்த காலமாக இல்லாவிட்டாலும் ஆண் பறவை அலகை மூடியவாறே வாய்க்குள்ளாகப் பாட்டுப் பாடும்.

காலையில்தான் பாட்டு

பாட்டுப் பாடுவதற்கு நேரம், காலம், பருவம் எல்லாம் பொருந்திவர வேண்டும். பெரும்பாலான பறவைகள் கிழக்கு வெளுக்கத் தொடங்கும்போது பாடத் தொடங்குகின்றன. அப்போதும் ஒவ்வொரு பறவையினமும் ஒவ்வொரு குறிப்பிட்ட கணத்தில்தான் பாட்டை ஆரம்பிக்கின்றன. மாலையில் அவை கூடுகளுக்குத் திரும்பும் நேரத்தில், மீண்டும் கச்சேரி உச்ச ஸ்தாயியில் தொடங்கும். ஆனால், காலை வேளையில் நடப்பதைவிடச் சற்று மென்மையான சுரங்களுடன் இருக்கும். அதில் இசையொலியைவிட, சளசளப்புக் கூச்சலே அதிகம். ஆற்றங்கரை அரச மரங்களில் மாலை நேரங்களில் பலவிதமான பறவைகள் தத்தம் கூடுகளில் அமர்ந்துகொண்டு சத்தம் போடும். அதை இசையென்று வகைப்படுத்த மிகவும் தாராளமான மனநிலை தேவை.

சில பறவைகள் விடியற்காலையில் மட்டும் பாடும். ஆந்தைகளும் கோட்டான்களும் இரவின் இருட்டில் மட்டுமே குரல் கொடுக்கும். அதை இசையாக யாரும் குறிப்பிடுவதில்லை. அலறல் என்றுதான் சொல்லுவார்கள். ஆனால், பெண் ஆந்தைகளுக்கு அது கந்தர்வ கானமாயிருக்கும்.

இருள் பிரிவதற்கு முன்பே கண் விழித்துவிடும் ஸ்விஃப்ட் (உழவாரன்) பறவைகள், வானத்தில் பெரும் உயரத்துக்கு எழும்பிச் சூரியனின் முதல் செங்கதிர்கள் பூமியின் தரையில் படுவதற்கு முன்பாகவே எதிர்கொண்டு வரவேற்றுப் பாடத் தொடங்கும். வானம்பாடிகள் காலையிலும் பாடும், மாலையிலும் பாடும். நைட்டிங்கேல் பறவையும் இரு வேளையும் பாடும் பழக்கமுள்ளது.

எல்லாப் பறவைகளுமே தமக்குரிய குரல் வளத்துடன் பாடுகின்றன. மனிதர்கள்தான் அவற்றை இசை, சளசளப்பு, கூச்சல் என்றெல்லாம் வகைப்படுத்துகின்றனர். பறவைகள் அடைகாக்கும்போது மென்மையான குரலில் முணுமுணுக்கின்றன. முட்டைக்குள் வளரும் குஞ்சுகள் அதிலிருந்து வெளிப்படுகிறபோது தம் பெற்றோரை அடையாளம் காண அது உதவுகிறது. அவை முதலில் அதே போன்ற ஒலிகளை எழுப்பினாலும், வளர வளரத் தத்தம் இனத்தாரிடமிருந்து பல்வேறு இசையொலிகளை எழுப்பக் கற்றுக்கொள்வதாகப் பறவையியலாளர்கள் கருதுகின்றனர்.

பயிற்சி மூலமே பாட்டு

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வர் குழு ஒரு ஃபிஞ்ச் குருவிக் குஞ்சை, முட்டையிலிருந்து வெளிப்பட்டவுடன் தனிமைப்படுத்திப் பராமரித்தது. அது ஓரளவுக்குச் சுமாரான சில இசையொலிகளை எழுப்பினாலும் சுயேச்சையாக வாழும் குருவிகளின் அளவுக்குப் பல்வேறு இசையொலிகளை எழுப்பவில்லை. இதன் மூலம் ஃபிஞ்ச் குருவிகள் பிற குருவிகளிடமிருந்தே முழுமையான இசைப் பயிற்சியைப் பெறுகின்றன என்பது கண்டறியப்பட்டது. மற்றெல்லா இனப் பறவைகளுக்கும் இது பொருந்தும்.

அடுத்து, அந்தக் குருவிக் குஞ்சுக்குத் துணையாக இன்னொரு குருவியைக் கூண்டில் வைத்தபோது, பெரிய குருவி எழுப்பிய இசையொலிகளைக் கேட்டுக் கேட்டுக் குருவிக் குஞ்சும் அவற்றைக் காப்பியடித்துப் பாடத் தொடங்கிவிட்டது. பறவையிசை என்பது பிறவிக் குணமல்ல என்பதும் பயிற்றுவிக்கப்படுவதே என்பதும் இதன் மூலம் அறியப்பட்டது.
இன்னொரு சோதனையில், பல ஃபிஞ்ச் குருவிக் குஞ்சுகளை ஒரே அறையில் வசிக்க வைத்தபோது எல்லாக் குஞ்சுகளும் ஒரே மாதிரியான குரலில், ஒரே சுரத்தைப் பாடின. சுயேச்சையாகத் திரியும் ஃபிஞ்ச் குருவிக் கூட்டத்தில் ஒலிக்கிற பல்வேறு சுருதிகளை இந்தப் பரிசோதனைக் கூட்டத்தில் கேட்க முடியவில்லை. அந்தக் கூட்டத்தின் இசையே சுயேச்சையான கூட்டத்தின் இசையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது.

தாய்ப் பறவை அடைகாக்கும்போதும், குஞ்சுகளுக்கு இரையூட்டுகிறபோதும், இளம் பருவத்திலும் கற்றுத்தருகிற பாட்டைத்தான் குஞ்சுகள் தம் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் பிறந்து வளர்ந்த ஃபிஞ்ச் பறவைகள் எல்லாம் ஒரே சுரத்தை ஒரே மாதிரியாகப் பாடின. ஆனால், வேறு மாகாணத்தில் வேறு ஒரு வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவை வேறு சுரத்தில் பாடின. லயம்கூட வேறுபட்டிருந்தது. கேம்பிரிட்ஜில் ஆய்வர்கள் தமது வட்டாரத்தில் வசித்த குருவிகளின் இசைக்கு ஏற்பச் சொற்களைப் போட்டுப் பாடலை இயற்றினார்கள். ஆனால், வேறு மாகாணங்களில் வசித்த ஃபிஞ்ச் குருவிகளின் இசைக்கு அந்தச் சொற்கள் பொருந்தவில்லை.

ஜே, மாக்கிங்பர்ட் போன்ற பறவைகள் தம்முடன் கூடி வாழும் வேறு இனப் பறவைகளின் பாட்டுகளைக் காப்பியடிப்பதும் காணப்பட்டிருக்கிறது. வீடுகளில் கூண்டுப் பறவைகளாக வளர்க்கப்படும் நீல ஜே பறவைகள் தமது காதில் விழும் சலவை இயந்திர ஒலி, நாய்களின் குரைப்பு போன்றவற்றைப் போலவே ஒலியெழுப்பும். ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட மாக்கிங் பர்ட் தன் எஜமானரின் இருமல் ஒலியைத் தத்ரூபமாக எழுப்பியது. அதைக் கேட்டுச் சிரித்த எஜமானியின் சிரிப்பையும் அப்படியே எதிரொலித்தது.

பறவைகளின் இசையில் ஓர் அடிப்படையான மர்மம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அவை இசை மூலம் தமக்குள் பரிமாறிக்கொள்ளும் ரகசியங்களை விண்டுணர மனிதர்களால் இயலவில்லை. ஆனாலும் கத்தும் குயிலோசை காதில் விழ வேண்டும் என்ற ஆசை மனிதர்களுக்குத் தணியாமலிருக்கிறது. குக்கூ என்று அது எழுப்பும் ஒலியே அதன் ஆங்கிலப் பெயராகிவிட்டது.

- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

Jul 8, 2016

‘அட்டை புலி’கள் நிஜமாகுமா?

அட்டைக்கத்தி தெரியும். ‘அட்டை புலி’கள் தெரியுமா? இந்தப் புலிகளுக்கு உயிரில்லை என்று அர்த்தமில்லை. உயிருள்ளவைதான், ஆனால் வளர்ப்புப் புலிகள். உலகில் காட்டுப் புலிகளின் எண்ணிக்கை 4,000-க்கும் குறைவு. ஆனால், வளர்ப்புப் புலிகளின் எண்ணிக்கை 12,000.

பார்ப்பதற்குக் காட்டுப் புலியைப்போலவே, இந்தப் புலிகள் இருக்கும். உருவத்திலோ வளர்ச்சியிலோ எந்த வேறுபாடும் இருக்காது. ஆனால், இயற்கையாகக் காட்டில் வசிக்கும் புலிகளின் இயல்பிலிருந்து பெரிதும் மாறுபட்டவை இவை. மூர்க்கம் இருக்காது, இயல்பூக்கமாக அமைந்த வேட்டை தெரியாது, வேகம் போதாது. அதற்காகக் கையை நீட்டினால் கடிக்காது என்றெல்லாம் உத்தரவாதம் தர முடியாது. அதேநேரம், பெரும்பாலானவை மனிதர்களுடன் நட்பாகப் பழகக் கூடியவை.

கடைசி புகலிடம்

ஒருகாலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேல் இருந்த காட்டுப் புலிகளின் எண்ணிக்கை தற்போது சொற்பமாகச் சுருங்கிவிட்டது. புலிகளின் எண்ணிக்கையை உயர்த்த இந்தியா உட்படப் பல்வேறு நாடுகள் முயற்சி எடுத்துவருகின்றன. கோடிக்கணக்கில் செலவு செய்தும்கூடக் கடந்த 20 ஆண்டுகளில் 10 சதவீதத்துக்கு மேல் புலிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடியவில்லை. 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 2,226. உலகம் முழுவதும் காட்டில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை 3,890. ஆக, இந்தியாவில் மட்டுமே 70 % புலிகள் இயற்கையாக வாழ்கின்றன.

வீட்டு நாய்களைப்போல்

இவைதவிர அமெரிக்காவில் சுமார் 5,000, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் 7,000 வளர்ப்புப் புலிகள் இருக்கின்றன என்கிறது வனக்கடத்தல் மற்றும் வனப் பொருட்கள் வணிகத்தை ஆய்வு செய்யும் டிராஃபிக் அமைப்பு. அமெரிக்காவில் அலபாமா, மிசிசிபி, மிசெளரி, ஒஹையோ, டெக்சாஸ்,பென்சில்வேனியா உட்பட 40-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் வளர்ப்புப் புலிகளை வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் நாய்களை வளர்ப்பதுபோலக் குட்டியிலிருந்தே புலிகளைப் பழக்கி, வளர்க்கிறார்கள். பல வீடுகள், பண்ணைகளில் புலிகளே காவல் காக்கின்றன. நாய்களைப் போலப் புலிகளைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சுகிறார்கள். இவற்றில் அசைவப் புலிகள் மட்டுமின்றி பால், பிஸ்கெட், பீட்ஸா, கோக், கேக் சாப்பிடும் சைவப் புலிகளும் உண்டு. இவற்றைப் பராமரிப்பதற்குப் பராமரிப்பு மையங்கள், மருத்துவமனைகளும் இருக்கின்றன. இவை தவிர, கண்காட்சிகளிலும் விலங்குகாட்சி சாலைகளிலும் பார்வை யாளர்களை மகிழ்விக்க வளர்ப்புப் புலிகளைச் சாகசங்களைச் செய்ய வைக்கிறார்கள்.

பிரச்சினைகளும் உண்டு

இந்த வளர்ப்புப் புலிகளால் அசம்பாவிதங்கள் ஏற்படாமலும் இல்லை. கடந்த 1990 முதல் 2016 வரை வளர்ப்புப் புலிகளால் 157 அசம்பாவிதச் சம்பவங்கள் நடந்துள்ளன. வீடுகளில் புகுந்து விடுவது, தெருக்களில் புகுந்து மக்கள் அலறி அடித்து ஒடியச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதில் 27 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சில புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற சிக்கல்களால் புலிகள் வளர்ப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான விதிமுறைகளை ஐக்கிய அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவை அமைப்பு மூலம் அமெரிக்க அரசு சமீபத்தில் கடுமையாக்கியுள்ளது.

புலியுடன் தங்கலாம்

அமெரிக்காவில் இப்படி என்றால் சீனாவில் 200 புலிப் பண்ணைகளில் சுமார் 6,000 வளர்ப்பு புலிகள் இருக்கின்றன. சீனாவில் புலியின் எலும்பு உள்ளிட்ட உடல் பாகங்களில் இருந்து பாரம்பரிய மருந்துப் பொருட்களைத் தயாரிக்கிறார்கள். இதற்காகப் புலிகளைக் கொல்வது தடை செய்யப்பட்டிருந்தாலும் சட்ட விரோதமாகவும் வயதான புலிகளைக் கொன்றும் மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தாய்லாந்தில் புலிகளை வைத்து ‘புலி சுற்றுலா’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்கே இருக்கும் விலங்கு காட்சி மையங்களில் புலிகளைப் பெரிய அறைகளில் அடைத்து வைத்திருக்கிறார்கள். குட்டியிலிருந்தே பழக்கப்பட்ட புலிகள் இவை. இந்திய மதிப்பில் சுமார் ரூ.700 முதல் ரூ. 1,500 வரை செலுத்தினால் குறிப்பிட்ட நிமிடங்கள் அந்தப் புலிகளுடன் கட்டிப்பிடித்துக் கொஞ்சலாம், விளையாடலாம்.

ஆனாலும், உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று கையெழுத்து வாங்கிக்கொண்ட பிறகே அனுமதிக்கிறார்கள். இப்படியாக மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 1,000 வளர்ப்புப் புலிகள் இருக்கின்றன.

புலிகளை மீட்பது சாத்தியமா?

இவை எல்லாம் இயற்கைக்கு முரணான விஷயங்கள் என்று உலகெங்கும் இயற்கை செயல்பாட்டாளர்கள் குரல் கொடுத்து வந்தாலும், வளர்ப்புப் புலிகளின் மீதான மோகம் குறையவில்லை. அதேநேரம், அழியும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் எதிர்காலத்தில் மொத்தக் காட்டுப்புலிகளும் அழிந்தாலும்கூட, வளர்ப்புப் புலிகளின் மூலம் மீண்டும் காடுகளில் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முடியும் என்கிறது அமெரிக்க மீன்கள் மற்றும் வனவிலங்கு சேவை அமைப்பு.

ஆனால், ஒன்று... ‘பழக்கப்பட்ட புலி என்று எதுவுமே கிடையாது’ என்பார் பிரபல புலிகள் ஆய்வாளர் ஜான் வார்டி. பழக்கப்படுத்திய உயிரினங்களைக் காட்டில் கொண்டுபோய்விட்டு, அந்த உயிரினங்களை மீள் உருவாக்கம் செய்வது சாத்தியம் கிடையாது. வளர்ப்பு நாயை காட்டில் விட்டால், அதற்கு வேட்டையாட தெரியாது. அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் பட்டினியால் அல்லது பிற விலங்குகளால் வேட்டையாடப்பட்டு இறந்துவிடும். அதுபோலதான் வளர்ப்புப் புலிகளும். இயற்கைக்கு முரணான எதுவுமே மனிதனுக்கு எதிராகவே திரும்பும் என்பதை மறந்துவிடக் கூடாது.

சதுப்புநில விதி மாற்றம் சரியானதா?

சதுப்பு நிலங்களைக் காப்பாற்ற முடியாத மாநில அரசுகளிடம் இறுதி அதிகாரம் தரப்படுவது ஏன்?

சதுப்பு நிலங்கள் தொடர்பான விதிகளை மாற்றப்போகிறது மத்திய அரசு. ‘சதுப்பு நில (பாதுகாப்பு, நிர்வாகம்) விதிகள் 2010’ என்பதில் மாற்றங்களைச் செய்து, ‘சதுப்பு நில (பாதுகாப்பு, நிர்வாகம்) விதிகள் 2016’ உருவாக்கப்படவிருக்கிறது. இதற்கான யோசனைகளைக் கூறுமாறு மாநில அரசுகளிடம் மத்திய அரசு கேட்டிருக்கிறது. எந்த வகை சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது, எந்தவிதமான செயல்களைச் சதுப்பு நிலங்களில் அனுமதிப்பது என்ற முடிவுகளை இனி மாநில அரசுகளே எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வளங்களின் குன்றா வளர்ச்சி, இயற்கைச் சமநிலை சேவை போன்றவற்றுக்குப் பாதிப்பு இல்லாமல், இந்த முடிவுகளை மாநில அரசுகள் மேற்கொள்ள புதிய விதிகள் அனுமதிக்கப்பட இருக்கின்றன.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, கூட்டாட்சித் தத்துவத்தை அப்படியே பின்பற்றுவதைப் போலவும் அதிகாரப் பரவலாக்கலை வலுப்படுத்துவதைப் போலவும் தோன்றும். ஆனால், சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க உள்ளூர் தேவைகளும் விருப்பங்களும் நல்ல காரணிகளாக இருக்க முடியாது என்பதே யதார்த்தம். மேலும், புதிய சதுப்பு நில விதிகள் தொடர்பான வரைவு வாசகங்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்காவிட்டாலும், சற்றே கவனமாகப் பார்த்தாக வேண்டும்.

மத்திய சதுப்பு நில ஒழுங்காற்று ஆணையத்தைத் தேவையற்றதாக்குகின்றன இந்த விதிகள். இதுவரை சதுப்பு நிலங்களை அடையாளம் காண்பதும் பாதுகாப்பதும் இந்த ஆணையத்தின் முக்கியக் கடமைகளாக இருந்தன. இரண்டாவதாக, சதுப்பு நிலங்கள், பல்லுயிர்ப் பெருக்கம், பவளப்பாறைகள், அலையாத்திக் காடுகள் மற்றும் சதுப்புநில வளாகங்கள் என்பவற்றை வரையறுக்கும் வாசகங்கள் இடம்பெறவில்லை. இறுதியாக, சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், சதுப்பு நிலங்களுக்குக் கேடு விளைவிக்கும் நடவடிக்கைகள் பற்றி ஏதும் இல்லை.

நீர்நிலைகளுடனான சோதனை

ஆறுகளிலிருந்தும் சதுப்பு நிலங்களிலிருந்தும்தான் தண்ணீர் பெறப்படுகிறது. ஆனால். அதற்கும் அவற்றுக்கும் தொடர்பு இல்லை என்பதைப் போலப் பார்க்கப்படுகிறது. தண்ணீரை ஒரு மூலாதாரமாகவோ பண்டமாகவோதான் பார்க்கிறார்களே தவிர, இயற்கையின் சுற்றுச்சூழலில் அதுவும் ஒரு இன்றியமையாத கண்ணி என்பதைப் பார்க்கத் தவறுகிறார்கள்.

கர்நாடக அரசு எல்லா ஆறுகளிலும் வண்டலைச் சுரண்டி எடுத்து ஆழப்படுத்தியிருக்கிறது. மத்தியப் பிரதேச அரசு கென், பேட்வா என்ற இரு ஆறுகளை இணைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. இதுபோன்ற திட்டங்களை வகுப்பதற்கு முன்னால், இதனால் சுற்றுச்சூழலில் என்னென்ன பாதிப்புகள் வரும் என்று ஆராய வேண்டும். அதை விடுத்து, தண்ணீரை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற சிந்தனை மட்டுமே மேலோங்கி நிற்பதால், இப்படித் திட்டமிடுகிறார்கள். நதியை ஆழப்படுத்துவதால் அதிகத் தண்ணீர் வேகமாக வழிந்தோடக் கூடும். ஆனால், ஆற்றுப் பாதைக்குக் கீழேயுள்ள நிலத்தடி ஏரிகளுக்குத் தண்ணீர் இறங்குவது குறைந்துவிடும். அதிகமாகச் சுரண்டிவிட்டால் ஆற்றின் நீர்ப்பெருக்குக் காலம் தவிர, ஏனைய காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் வற்றக்கூடும். இரு ஆறுகளை இணைப்பதால் நீரியல் அமைப்பே மாறும்.

ஆணையத்தின் அவசியம்
சதுப்பு நிலங்கள் யாருக்குச் சொந்தம் என்பது பொதுவான கேள்வி. இதற்கான பதில்தான் சதுப்பு நிலங்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. பிஹார் மாநிலத்தின் கன்வர் ஏரி ஆக்கிரமிப்புகள் காரணமாக அதன் மொத்த அளவில் மூன்றில் ஒரு பங்காக இப்போது சுருங்கிவிட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தால் ஏரியும் அப்படித்தான் சுருங்கியிருக்கிறது. நகர்மயமாதலில் ஏரிகளுக்குத் தண்ணீரைக் கொண்டுசெல்லும் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீர் வரத்து குன்றிவிடுகிறது. பெங்களூரு நகரில் குடியிருப்புகள் பெருக்கத்தால் பல ஏரிகள் நீர்வரத்து இல்லாமல் வற்றியும், குப்பைகளால் நிரம்பி அழிந்தும்வருகின்றன. டெல்லியிலும் இதேதான் நிலை.

எங்கிருந்தாலும் தண்ணீரை உறிஞ்சி எடுக்கவும் சதுப்பு நிலங்களை ஆக்கிரமிக்கவும் அரசியல்வாதிகள் நெருக்குதல்களை ஏற்படுத்துகின்றனர். இதன் காரணமாகவே மாநில அரசுகளால் சதுப்பு நிலங்களைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கையகப்படுத்தவும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கவும் முடியாமல் அழிகின்றன. சதுப்பு நிலங்களைக் காப்பாற்ற முடியாத நிலையில் மாநில அரசுகள் இருக்கும்போது, அவை தொடர்பாக முடிவெடுக்கும் இறுதி அதிகாரத்தை மாநிலங்களிடம் ஒப்படைக்க முயல்வதேன்?

விடுபட்ட முக்கியமான அம்சம்
சதுப்பு நிலம் என்பது எவையெல்லாம் அடங்கியது என்பதைப் புதிய வரைவு விதிகள் விவரிக்கவே இல்லை. சதுப்பு நிலங்கள் மூலம் அரசுக்கு நேரடியாக வருமானம் ஏதும் இல்லை என்பதால், நிலப் பதிவேடுகளில் அந்த இடங்களைத் தரிசு நிலங்கள் என்று குறிப்பதே வழக்கமாக இருக்கிறது. நாடு முழுக்க 1,88,470 சதுப்பு நிலங்கள் உள்ளன என்று தேசிய சதுப்பு நில வரைபட ஆவணம் தெரிவிக்கிறது. ஆனால், இந்த எண்ணிக்கையே மிகமிகக் குறைவானது. உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சதுப்பு நிலப் பகுதிகள் உள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவற்றை மாநில அரசு அடையாளம் காணவே இல்லை.

ஈரானின் ராம்சர் நகரில் நடந்த சர்வதேச மாநாட்டில் சதுப்பு நிலங்கள் எவை என்பதை அடையாளம் காணும் விதிகள் வகுக்கப்பட்டன. அவை எக்காலத்துக்கும் பொருந்தும் வகையிலானவை. அந்த வகையில் அடையாளம் காணப்படும் சதுப்பு நிலங்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும் குறிப்பிட வேண்டும். ஏராளமான பறவைகள், மீன்கள், இதர பிராணிகள் வாழும் இடங்கள் சதுப்பு நிலங்களாகும். ஏரி அல்லது குளம் என்பது வெறும் நீர்த்தேக்கம் மட்டுமே. சதுப்பு நிலம் என்பது ஏராளமான உயிரினங்கள் வாழும் இடம். அதே வேளையில், மனிதர்களால் உருவாக்கப்படும் ஏரிகள், குளங்கள் போன்றவைகூடப் பல்வேறு உயிரினங்களுக்கு வாழிடமாக அமைவதும் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஏரிப் பகுதிகள் அப்படிப்பட்டவை. அது பறவைகள் சரணாலயமாகவும் மீன் கூட்டங்கள் உள்ளிட்ட நீர்வாழ்வன வாழுமிடமாகவும் திகழ்கின்றன. எனவே, சுற்றுச்சூழல் ரீதியிலான அடையாளப்படுத்தலை, அரசின் புதிய விதிகள் கைவிட்டு அவை அழிவதற்கே வழிவகுக்கின்றன.

சதுப்பு நிலங்களை அடையாளம் காண்பது, பாதுகாப்பது என்ற செயல்களை உள்ளாட்சி அமைப்புகளிடமும் மாநில அரசுகளிடமும் விடுவது சரியல்ல. அவை சேதமுறாமலும் அழியாமலும் காப்பாற்றப்படுவதற்கான முன்னேற்பாடுகள் சட்ட ரீதியாகவோ அமைப்புரீதியாகவோ இல்லை. அத்துடன் அறிவியல்பூர்வமாக வகுக்கப்பட்ட சட்டத்தின்படியோ வழிகாட்டல்படியோ சதுப்பு நிலம் எதுவென்று வரையறுக்கப்படாத நிலையும் காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டத்தைக் காப்பதற்கான சட்டத்துக்கும் இந்த விதிகளுக்கும் தொடர்பில்லை என்றும், இந்த இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் என்பதைப் போலவும் பார்க்கப்படுகிறது.

நாட்டின் சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக் குறையும், இன்னும் சில பகுதிகளில் தண்ணீர் மிகுதியும் காணப்படுகிறது. சதுப்பு நிலங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அரசியல் தலைமை மட்டும் தீர்மானித்தால் போதாது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்காமல் குன்றா வளர்ச்சியைப் பாதுகாக்க முடியாது. எனவே, நம்முடைய சதுப்பு நில விதிகளானது சதுப்பு நிலங்களை வெறும் திறந்தவெளி நீர்த்தேக்கங்களாக மட்டும் பார்ப்பது போதாது. சதுப்பு நிலங்களை எப்படி அடையாளம் காண்பது, பாதுகாப்பது என்பதும் விதிகளில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

- நேஹா சின்ஹா, மும்பை இயற்கை வரலாற்றுச் சங்க உறுப்பினர்.

தமிழில்: சாரி

Nov 24, 2015

குளிரால் கொதிக்கிறது பூமி!

ஜான் ஹென்லே
குளிர்சாதனப்பெட்டிகள்தான் மும்பையின் 40 சதவிகித மின்சாரத்தைக் குடிக்கின்றன

புவி வெப்பமடைவதைத் தடுக்கும் இலக்கை நாம் என்றுமே அடைய முடியாதபடி குறுக்கே நிற்கப்போவது குளிர்சாதனப் பெட்டிகளும் (ஏ.சி.), குளிர்பதனப்பெட்டிகளும் தான் (ஃபிரிட்ஜ்) என்றால் நம்ப முடிகிறதா? நகரமயமாதலினாலும் உலக அளவில் வருமானம் பெருகுவதாலும் 2100-ல் இப்போதைக் காட்டிலும் 33 மடங்கு கூடுதல் மின்சாரம் குளிர்சாதனப்பெட்டிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்!

ஒட்டுமொத்த ஆப்பிரிக்கக் கண்டம் செலவழிக்கும் மின்சாரத்துக்கு இணையான மின்சாரத்தைத் தங்களுடைய கட்டிடங்களைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள மட்டுமே அமெரிக்கா தற்போது செலவழித்துவருகிறது. சீனாவும் இந்தியாவும் இந்தப் போட்டியில் உற்சாகத்தோடு ஓடுகின்றன. அநேகமாக இந்த நூற்றாண்டின் மத்தியில் வெப்பமேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஆற்றலைவிடவும் பல மடங்கு கூடுதலான ஆற்றல் குளிர் பதத்தை உருவாக்கச் செலவிடப்படும். அதிலும் குளிர்த் தன்மையைச் செயற்கையாக உற்பத்தி செய்ய நிலக்கரி, பெட்ரோல் போன்ற புதைமை எரிபொருட்கள்தான் அதிகம் எரிக்கப்படுகின்றன.

குளிர் உற்பத்தியில் பிரச்சினை

தற்சமயம் பல்வேறு அரசாங்கங்களும் விஞ்ஞானிகளும் பருவநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்வது எனச் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்கள். இதில் நகைமுரண் என்னவென்றால், குளிர் பதத்தை உற்பத்தி செய்யும்போதுதான் பூமி அதிகப்படியாக உஷ்ணமாகிறது.

“ஆற்றல் என்றாலே வெப்பம், வெளிச்சம், போக்குவரத்து என்றுதான் பலர் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், இனி வரும் காலங்களில் சூழலியல் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணமாக இருக்கப்போவது குளிர்தான். குளிருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேபோகிறது. கடந்த 100 ஆண்டுகளாகவே குளிரை உற்பத்தி செய்யும் வேலைகளில் ஈடுபட்டுவருகிறோம். நெடுங்காலமாக பழைய முறைதான் இதில் பின்பற்றப்படுகிறது. ஆனால், இனி வரும் காலங்களில் குளிர் உற்பத்தி முறையை மாற்றாவிட்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும்” என எச்சரிக்கிறார் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் சக்தி மற்றும் குளிர் பொருளாதாரத் துறையின் வருகைதரு பேராசிரியரான டோபி பீட்டர்ஸ்.

முதல் குளிர்ப் பெட்டி

செயற்கையான குளிர் என்பது சமீபகால நிகழ்வுதான். குளிர்சாதனப்பெட்டியானது முதன்முதலில் வீட்டில் பொருத்தப்பட்டது 1914-ல்தான். குளிர்பதனப்பெட்டிகள் 1930-ல் வீடுகளுக்குள் நுழைந்தன. 1965 வாக்கில் பிரிட்டனில் மூன்றில் ஒரு வீட்டில் இவை இரண்டும் பயன்படுத்தப்படும் சூழல் உருவானது. ஆனால் 21-ம் நூற்றாண்டில் செயற்கைக் குளிர் உற்பத்தி என்பது பணம் படைத்தவர்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. வீடுகளில், அலுவலகங்களில், கார்களில் குளிர்சாதன வசதி பொருத்துவது என்பது அத்தியாவசியமாகிவிட்டது.
குளிருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. வளர்ந்துவரும் நாடுகளில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதாலும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வெப்பநிலை கூடிக்கொண்டே போவதாலும் குளிர்சாதனப்பெட்டிகளுக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

பழங்காலத் தொழில்நுட்பம்

அமெரிக்காவில் குளிர்சாதனப்பெட்டிகளின் எண்ணிக்கை 6 கோடியே 40 லட்சத்திலிருந்து 10 கோடியாக அதிகரிக்க 15 ஆண்டுகள் ஆனது. ஆனால், 2010-ல் மட்டும் 50 கோடி குளிர்சாதனப்பெட்டிகள் சீன வீடுகளில் வாங்கப்பட்டன என ‘லூசிங் அவர் கூல்’ புத்தகத்தில் எழுத்தாளர் ஸ்டான் காக்ஸ் குறிப்பிட்டுள்ளார். அதேபோல 1995-ல் 7% சீன வீடுகளில் மட்டும்தான் குளிர்பதனப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் 2007-ல் அது 95%ஆக மளமளவென அதிகரித்துவிட்டது.

இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொழில்நுட்பத்தில்தான் இன்றும் குளிர்பதனப்பெட்டிகள் இயங்குகின்றன. நீராவியை அமிழ்த்தும் முறையில் இயங்கும் இத்தகைய குளிர்பதனப்பெட்டிகளில் ஹைட்ரோஃப்ளூரோ கார்பன் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதிகப்படியான வெப்பம் கிரகிக்கப்பட்டு மீண்டும் வெப்பம் வெளியேற்றப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அதிகப்படியான மின்சாரமும் செலவாகிறது.

இந்தியாவின் நிலை என்ன?

இந்தியா இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் இதோ. தற்போது, குளிர்சாதனப்பெட்டிகள்தான் மும்பையின் 40% மின்சாரத்தைக் குடிக்கின்றன என்கிறது ஓர் ஆய்வு முடிவு. சவூதி அரேபியாவில் வெயில் தகிக்கும் மாதங்களில் குளிர்சாதனப்பெட்டிகளுக்காக மட்டும் ஓராண்டுக்கு 100 கோடி பீப்பாய் எண்ணெய் செலவாகிறது. பிரிட்டனில்கூடக் குளிர்சாதனப்பெட்டிகளுக்காகவும் குளிர்பதனப்பெட்டிகளுக்காகவும் 20% மின்சாரம் செலவழிக்கப்படுகிறது. அமெரிக்கக் கட்டிடங்களில் 87% குளிரூட்டப்பட்டவை. அதேபோல அனைத்து வளரும் நாடுகளிலும் குளிர்சாதனப்பெட்டிகளின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. பருவநிலை மாற்றம் குறித்து நாடுகளுக்கு இடையிலான கூட்டமைப்பில் ஆண்டுதோறும் குளிர்சாதனப்பெட்டிகளை இயக்கும் மணி நேரங்கள் கணக்கிடப்படும். அதன்படி 2000-ல் 300 டெராவாட்ஸ் மணி நேரம் உலகம் முழுவதிலும் குளிர்சாதனப்பெட்டிகள் இயக்கப்பட்டன. இந்த ஆய்வின் அடிப்படையில் 2050-ல் 4,000 டெரா வாட்டாகவும் 2100-ல் 10 ஆயிரம் டெராவாட்டகவும் அது விஸ்வரூபம் எடுக்கும்.

ஆபத்தான குளிர்பதனப்பெட்டிகள்

“வெப்பத்தை எப்படித் திறம்படப் பயன்படுத்தல் என்பதை ஆராய்வதிலேயே பல வருடங்களை செலவழித்துவிட்டோம். குளிரை உற்பத்தி செய்யும் முறைகளை மறுபரிசீலனை செய்வதுகுறித்த போதுமான விழிப்புநிலை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்” என ஹெரியட் வாட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் வில்லியம்ஸ் சொல்கிறார். அதிலும், குளிர்சாதனப்பெட்டிகளும் குளிர்பதனப்பெட்டிகளும்தான் சுற்றுச்சூழலை இரண்டு மடங்கு அதிகமாக மாசுபடுத்துபவை. அவற்றில் பொருத்தப்பட்டுள்ள குளிர்நிலை ஊட்டிகள் கார்பன்டை ஆக்சைடைக் காட்டிலும் 4,000 மடங்கு அதிபயங்கரமான பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடுகின்றன.

அதிலும் சில குளிர்பதனப்பெட்டிகள் மிகவும் ஆபத்தானவை. ‘இ4 டெக்’ என்னும் ஆற்றல் ஆலோசனை நிறுவனத்தின் ஆய்வின்படி சில உணவகங்களில் டீசலால் இயங்கும் குளிர்பதனப்பெட்டிகள் பயன் படுத்தப்படுகின்றன. அவை சரக்கு லாரிகள் கக்கும் புகையைவிடவும் 30 மடங்கு கூடுதல் விஷம் வாய்ந்த நுண்பொருட்களையும் 6 மடங்கு கூடுதலான நைட்ரஜன் ஆக்ஸைடையும் வெளியேற்றுகின்றன.

மாற்று என்ன?

குளிர்பதத்தைச் சிறப்பான முறையில் தயாரிப்பது எப்படி எனக் கேட்டால், அதற்கு முதலில் அனல் மின்சாரத்தை நம்பியிருப்பதை நிறுத்த வேண்டும். காற்றாலைகள் மூலம் குறைந்த செலவில் மின்சாரமும் தயாரிக்கலாம். அதிலிருந்து குளிர்பதத்தையும் உண்டுபண்ணலாம். துளியும் மாசுபடுத்தாமல் குளிரை உற்பத்தி செய்யும் இன்ஜின் ஒன்றை பீட்டர்ஸ் பணிபுரியும் பிரிட்டன் பொறியியல் நிறுவனமான ‘டியர்மேன்’தற்போது வடிவமைத்துள்ளது. டீசல் குளிர்பதனப்பெட்டிகளுக்குப் பதிலாகத் திரவநிலை நைட்ரஜன் மூலமாக இயங்கும் பெட்டிகள் இவை. ஆனால், தற்போது இது ஒரு சோதனை முயற்சி மட்டுமே. இப்படியாகக் குளிர்பதத்தைத் தயாரிக்க மேலும் பல நூதன முறைகளை நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உடனடி தேவை புதிய குளிர் தயாரிப்பு முறைகளே!

தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா, © ‘கார்டியன்’

Nov 18, 2015

எங்கே இருக்கிறாய் கலுவிக் கோடியே?

உலகின் அரிய பறவையொன்றுடன் எட்டு ஆண்டுகள்! - பறவையியலாளர் ஜெகநாதன் பேட்டி

ஆசை

  • கலுவிக் கோடி
    கலுவிக்கோடிகலுவிக் கோடி பறவை கண்டறியப்பட்ட இடத்தில் நடைப்பெற்ற தெலுங்கு கங்கை நதி நீர் இணைப்புத் திட்டப் பணிகள்.

  • கலுவிக் கோடி பறவை கண்டறியப்பட்ட இடத்தில் நடைப்பெற்ற தெலுங்கு கங்கை நதி நீர் இணைப்புத் திட்டப் பணிகள்.
உலகிலேயே மிகவும் அரிதான பறவைகளுள் ஜெர்டான்ஸ் கோர்ஸரும் ஒன்று. அழிந்துபோய்விட்டதாகக் கருதப்பட்டு 1986-ல் ஆந்திரத்தின் கடப்பா பகுதியில் ஜெர்டான்ஸ் கோர்ஸர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அந்தப் பறவையின் இருப்பிடத்துக்குச் சென்று, அந்தப் பறவையைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டே, அதன் இருப்பிடத்தைக் காப்பாற்றும் முயற்சிகளில் எட்டு ஆண்டுகள் ஈடுபட்டவர் பறவையியலாளர் ஜெகநாதன். அந்த ஆண்டுகளில் அவராலேயே ஏழெட்டு முறைதான் அந்தப் பறவையைப் பார்க்க முடிந்திருக்கிறது என்றால் அந்தப் பறவை எந்த அளவுக்கு அரிதானது என்பது நமக்குப் புரியும். அவரை சந்தித்து உரையாடியதிலிருந்து…

ஜெர்டான்ஸ் கோர்ஸரின் உலகத்துக்குள் நீங்கள் எப்படி வந்தீர்கள்?

ஆந்திரத்தில் கடப்பாவில் மட்டுமே இருந்த அல்லது இருக்கும் பறவை அது. அதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக பி.என்.எச்.எஸ்-ஸில் ஒரு திட்டத்தை 2000-ல் அறிவித்திருந்தார்கள். அந்தத் திட்டத்தின் கீழ் அந்தப் பறவையைப் பற்றி எட்டு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றேன்.

ஜெர்டான்ஸ் கோர்ஸர் (Jerdon’s Courser) என்பது கோர்ஸர் என்றழைக்கப்படும் ஒரு பறவை இனத்தைச் சேர்ந்தது. தெலுங்கில் இதற்கு ‘கலுவிக் கோடி’ என்று பெயர். ‘ஆள்காட்டிப் பறவைகள்’ பிரிவைச் சேர்ந்தது. இந்த கோர்ஸர் பறவைகள் நன்றாகப் பறக்கக் கூடியவை என்றாலும் அதிகம் நடந்தும் செல்லக்கூடியவை. கலுவிக் கோடி இரவில் நடமாடும் பறவை. இந்தப் பறவையைக் குறித்து முதலில் விவரித்தது டி.சி. ஜெர்டான் என்ற ஆங்கிலேய பறவையியலாளர்தான். அவருடைய பெயரையே அந்தப் பறவைக்கும் வைத்திருக்கிறார்கள். அந்தப் பறவை அழிந்துபோய்விட்டதாகவே அப்போது நினைத்தார்கள்.

ஹோவர்டு காம்பெல் என்பவர் 1900-ம் ஆண்டு வாக்கில் பார்த்திருக்கிறார். அந்தப் பறவை கடைசியாகப் பார்க்கப்பட்டது அப்போதுதான். அதற்குப் பிறகு 86 ஆண்டுகள் கழித்துதான் அந்தப் பறவையை மறுகண்டுபிடிப்பு செய்தார்கள். பி.என்.எச்.எஸ்-ஸைச் சேர்ந்த பரத் பூஷண் என்ற ஆராய்ச்சியாளர்தான் அதை மறுபடியும் கண்டுபிடித்தார். பறவை வேட்டையாடுபவர்கள், உள்ளூர் மக்கள் என்று எல்லோரிடமும் கலுவிக் கோடி பறவையின் படத்தைக் கொடுத்துத் தேடல் நிகழ்த்தியபோது அய்த்தண்ணா என்பவரிடம் அந்தப் பறவை அகப்பட்டுக்கொண்டது.

களத்துக்குச் சென்று நீங்கள் எப்போது ஆய்வு ஆரம்பிக்கிறீர்கள்?

1986-ல் அந்தப் பறவை இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னும் 2000 வரை அது குறித்து ஆராய்ச்சி எதுவும் பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை. புதர்கள், அவற்றையொட்டி திறந்தவெளி இப்படி இருக்கும் பகுதிகளில் மட்டும்தான் அந்தப் பறவைகள் இருக்கும். பகல் முழுவதும் புதர்களில் இருந்துவிட்டு இரவு நேரங்களில் திறந்தவெளிக்கு வந்து எறும்புகள், கரையான்கள், பூச்சிகள் போன்றவற்றைப் பிடித்து உண்ணும். நான் முதன்முதலில் அந்தப் பறவையைப் பார்த்தது 2000-வது ஆண்டின் இறுதியில். ஆள்காட்டியை விடக் கொஞ்சம் சிறியதாக இருக்கும். டார்ச் அடித்தால் அந்தப் பறவை அப்படியே தரையோடு தரையாக உட்கார்ந்துகொள்ளும். பார்ப்பதற்குக் கல் கிடப்பதைப் போல இருக்கும். அருகே போனால் மேலே பறந்துசென்று வேறு எங்காவது போய் உட்கார்ந்துகொள்ளும்.

கலுவிக் கோடி பற்றிய கணக்கெடுப்புக்குப் புதுமையான ஒரு வழிமுறையை மேற்கொண்டோம். சாலையோர மண்ணை எடுத்துச் சலித்து, அந்த மண்ணைக் கொண்டு 5 மீட்டர் நீளம் மட்டும் கொண்ட பாதைகள் பலவற்றை அந்தப் பறவைகள் அடிக்கடி நடக்கும் பகுதிகளில் அமைத்தோம். அந்த மணல் பாதைகளின் மீது அந்தப் பறவைகள் நடந்தால் அவற்றின் காலடித் தடம் நன்றாகப் பதிந்துவிடும் வகையில் பாதைகளை அமைத்தோம். அந்தப் பறவையின் காலடித் தடம், குரல்கள் போன்றவை எப்படி இருக்கும் என்பதெல்லாம் நமக்குத் தெரியாதல்லவா?

இந்த வழிமுறையின் மூலம் உங்களுக்கு எவ்வளவு நாட்களில் கலுவிக் கோடியின் காலடித் தடம் கிடைத்தது?

ஒரு வாரத்தில் கிடைத்துவிட்டது. எனினும் அது அந்தப் பறவைதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது எப்படி? அதற்காக அந்தப் பாதைகளின் இரு புறமும் ‘கேமரா டிராப்’ வைத்தோம். அந்தப் பறவை அதன் வழியே நடந்துபோனால் அதன் காலடித் தடமும் கிடைக்கும், அதன் புகைப்படமும் கிடைக்கும். தினமும் காலையில் போய் கேமராக்களை நான் பார்ப்பேன். படச்சுருளைக் கழுவிப் பார்த்த பிறகு அதில் அந்த ‘கலுவிக் கோடி’ பறவை எங்களுக்குக் கிடைத்தது. அதன் புகைப்படத்தைப் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட பரவசத்துக்கு அளவே இல்லை.

தேடலின் அடுத்த கட்டம் என்ன?

அடுத்ததாகக் குரலைக் கண்டுபிடிக்கும் வேட்டை. ஒரு நாள் இந்தப் பறவையின் குரலும் கேட்டது. வித்தியாசமாக இருக்கிறதே என்று பதிவுசெய்துகொண்டோம். எல்லா பறவைகளின் குரல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து எதனுடனும் அந்தக் குரல் பொருந்திப்போகாததால் கலுவிக் கோடியின் குரல்தான் அது என்பது எங்களுக்கு உறுதியானது. புலப்படாத பறவையின் குரலையே பதிவுசெய்ததில் எனக்கு உற்சாகம் பிடிபடவில்லை. ‘கலுவிக் கோடியின் குரலைப் பதிவுசெய்திருக்கிறோம்’ என்று இந்தத் திட்டத்தின் முக்கிய உறுப்பினர்களும் டாக்டர் ரிஸ் கிரீனிடம் (Dr. Rhys Green) சொன்னேன். ‘இது குறித்து 99% உறுதிதான் இருக்கிறது உங்களுக்கு. அந்தப் பறவை குரல் கொடுப்பதை நேரில் பார்த்தால் மட்டுமே 100% உறுதியாகும்’ என்று அவர் சொல்லிவிட்டார். நாம் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்; இவர் இப்படிச் சொல்லிவிட்டாரே என்று எனக்கு ஒரு வாரம் தூக்கமே வரவில்லை.
தினமும் சாயங்காலம் ஆனதும் களத்துக்குச் சென்றுவிடுவேன். எப்படியாவது அந்தப் பறவை கத்துவதை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இரண்டு மாதங்கள் முயன்று பார்த்துவிட்டேன். முடியவில்லை. அப்புறம் ‘பிளே பேக்’ வழிமுறையை மேற்கொண்டோம். நாங்கள் பதிவுசெய்திருக்கும் குரலை ஒலிக்கச் செய்து ஏதாவது பறவையிடமிருந்து பதில் குரல் வருகிறதா என்பதை எதிர்பார்ப்போம். மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே குரலை ஒலிக்க விடும் உத்தியைப் பின்பற்றலாம்.

சரி, அந்தப் பறவை கத்தியதை நேரில் பார்த்தீர்களா?

பார்த்தோம்! ஒரு முறை எனது உதவியாளருடன் மாலை வேளையில் கள ஆய்வுக்காகச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பறவை கத்திக்கொண்டிப்பது கேட்டது. இரவு நேரத்தில் கேட்க வேண்டிய சத்தம் இப்போது கேட்டுக்கொண்டிருக்கிறதே என்று கலுவிக் கோடி நானும் என் உதவியாளரும் அப்படியே மறைவாகப் படுத்துக்கொண்டோம். எங்களுக்கு எதிரே, ஆனால் ஒரு புதருக்குப் பின்னாலிருந்து கத்திக்கொண்டிருந்தது. அதுதான் கத்துகிறது என்று தெரிந்தாலும் நேரில் பார்க்காவிட்டால் 100% உறுதியாகாது அல்லவா? எனவே, எங்கள் டேப் ரெக்கார்டரில் இருந்த குரலை ஒலிக்கச் செய்தோம். ‘க்விக்கூ... க்விக்கூ...’ என்ற சத்தம் கேட்டதும் புதருக்கு வெளியிலிருந்து ஓடி வந்து பார்த்து அதுவும் ஒலி எழுப்பியது. என் வாழ்க்கையில் மகத்தான மிகச் சில தருணங்களுள் அதுவும் ஒன்று.

உடனே, கிரீனுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ‘நீங்கள் அப்படிச் சொல்லியிருக்காவிட்டால் நான் அசட்டையாக இருந்திருப்பேன். நீங்கள் மறுத்ததால்தான் எனக்கு ஊக்கம் கிடைத்து, அந்தப் பறவையின் குரலை உறுதிப்படுத்தினேன்’ என்று அவருக்கு நன்றி தெரிவித்தேன். இப்போது 100% உறுதியாகிவிட்டது. ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் மட்டுமே அந்தப் பறவை இருக்கிறது. ஒரு பெரிய காப்புக்காட்டின் பகுதி அது. இந்தப் பறவை அங்கே காணப்படுவது தெரிந்தவுடன் அதை  லங்கமல்லேஸ்வர காட்டுயிர் சரணாலயமாக அறிவித்துவிட்டார்கள்.

அப்படியென்றால் அந்தப் பறவையினத்தைக் காப்பாற்றுவதற்கான முறையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன என்றுதானே சொல்ல வேண்டும்?

அப்படி இல்லை. நாங்கள் செய்ததில் மிகவும் முக்கியமான விஷயம் அந்தப் பறவை எப்படிப்பட்ட இடத்திலெல்லாம் இருக்கும் என்பதை நிர்ணயித்ததுதான். திறந்தவெளிப் புல் பரப்புகளில் அது இருக்காது. அடர்த்தியான புதர்களிலும் இருக்காது. குறிப்பிட்ட உயரமுள்ள பெரிய புதர்கள், சிறிய புதர்கள், இடையில் திடல்கள் என்று வித்தியாசமான வாழிடம் அந்தப் பறவைக்கு அவசியம் என்பதைக் கண்டுபிடித்தோம். மலைக்கு மேலல்ல, ஊரை அடுத்து மலையடிவாரத்தில்தான் இது போன்ற வாழிடங்கள் காணப்படும்.

இது போன்ற வாழிடங்களைச் செயற்கைக்கோளின் உதவியுடன் கண்டுபிடித்து அங்கெல்லாம் அந்தப் பறவையைக் கண்டறிவதற்காக மண் சுமந்துகொண்டுபோவோம். இதன் மூலமாக அந்தப் பறவையின் கால்தடங்கள் அந்த சரணாலயத்துக்குள்ளாகவே மூன்று இடங்களில் எனக்குக் கிடைத்தன.

இப்படியாக 2005-ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக மும்பை போய்விட்டுத் திரும்பிவந்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தக் காட்டின் உள்ளே ஒரு பொக்லைன் நின்றுகொண்டிருந்தது. தெலுங்கு-கங்கை கால்வாய்க்காக தோண்டப்பட்டுக்கொண்டிருந்தது. அது எந்த இடம் தெரியுமா? முதன்முதலில் கலுவிக் கோடியின் காலடித் தடத்தை நான் கண்டுபிடித்த இடம்; அதன் குரலை நேரடியாகக் கேட்டறிந்த இடம் அது. எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள்! எனக்கு உண்மையிலேயே அழுகை வந்துவிட்டது. உடனே பி.என்.எச்.எஸ் இயக்குநருக்கும், சுந்தர் என்ற டி.எஃப்.ஓ-வுக்கும் தகவல் தெரிவித்தேன். அந்த டி.எஃப்.ஓ துணிச்சல் மிக்கவர்.

பாசனத் துறையின் பொறியாளர்களிடம் இருந்தது பழைய வரைபடம். அரிய வகைப் பறவை ஒன்று அங்கே கண்டறியப்பட்டது, அதனால் அந்தப் பகுதி சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது போன்றவை தொடர்பாகப் பழைய வரைபடத்தில் ஏதும் இல்லை என்பதால், அவர்களுக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அதற்குப் பிறகு இன்றுவரை அந்த இடத்தில் கலுவிக் கோடியை நான் பார்க்கவில்லை.

தண்ணீர் வேண்டும்தான், கால்வாய் வேண்டும்தான். ஆனால், மக்களா, காடா, பறவையா என்று என்னிடம் கேட்டால் முன்னுரிமை காட்டுக்கும் பறவைக்கும்தான். அதற்குப் பிறகுதான் மக்கள். மக்கள் உயிர்வாழ அவைதானே அடிப்படை! துரதிர்ஷ்டவசமாக, அதுபோன்ற புரிதல் இன்றுவரை பெரும்பாலானோரிடம் இல்லை. அதற்குப் பிறகு 2005-லிருந்து 2008வரை பதற்றமான ஒரு சூழலில்தான் அங்கே வேலைபார்த்தேன்.

கால்வாய் அந்த வழியில் செல்வதைத் தடுத்து நிறுத்த முடிந்ததா?

இது சம்பந்தமாக நிறைய பேரைப் பார்த்து முறையிட்டோம். கடப்பா பகுதி காலஞ்சென்ற ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியுடையது. தெலுங்கு-கங்கா திட்டத்தை அந்த வழியே கொண்டுசெல்வதில் முனைப்பாக இருந்தார் அவர். அவரிடமும் முறையிட்டோம்.

இதையெல்லாம் பற்றி அறிந்த, சாங்சுவரி ஏசியா (Sanctuary Asia) காட்டுயிர் இதழின் ஆசிரியர் பிட்டு சாகல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கலுவிக் கோடியின் வாழிடம் வழியே இந்தக் கால்வாய் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டது. கால்வாய் வேறு திசையில் சென்றது. சாதாரணமாக இரண்டு, மூன்று வாக்கியங்களில் சொல்லிவிட்டேன். ஆனால், இதற்கென்று நாங்கள் சந்தித்த இன்னல்களுக்கு அளவே கிடையாது.

தற்போதைய நிலைமை எப்படி இருக்கிறது?

முன்பைவிட மோசமாகத்தான் இருக்கிறது. வனத்துறையினருக்கே சரியான புரிதல் இல்லை. பெரிய திட்டங்களெல்லாம் கொண்டுவரத் திட்டமிட்டால் இதுபோன்ற இடங்கள்தான் முதல் இலக்கு. இதுபோன்ற சமவெளியில் உள்ள தரைக்காடுகள், புதர்க்காடுகள் முதலிய வாழிடங்களை, சரியாக வளராத புதர்கள்தானே என்று நினைத்து இங்கெல்லாம் கைவைத்துவிடுவார்கள்.

இயற்கையைப் பொறுத்தவரை அடர்த்தியான காடுகள் மட்டுமல்ல, புதர்க் காடுகளும், ஒன்றுமே இல்லையே என்று நினைக்கத் தோன்றும் இயற்கையான புல்வெளிகளும்கூட முக்கியம்தான். தமிழ்நாட்டில் இயற்கையான புல்வெளிகளே இப்போது கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. அங்கிருந்த வெளிமான்கள், கானல் மயில்கள், சிவிங்கிப் புலிகள் போன்றவையும் மறைந்துவிட்டன.

அது போன்ற இடங்களெல்லாம் அரசாங்கப் பதிவேடுகளில் ‘பாழ்நிலம்’ (waste land) என்று குறிக்கப்பட்டிருக்கும். இயற்கையான நிலப்பரப்புகளில் எது ‘பாழ்நிலம்’? எது நல்ல நிலம்? அது போன்றுதான் கலுவிக் கோடி இருந்த இடங்களையும் ‘பாழ்நிலங்கள்’ என்று குறித்துவைத்திருந்தார்கள். கலுவிக் கோடியின் வாழிடங்களை வனத்துறைக்குக் கீழ் கொண்டுவந்த பிறகு, அந்தப் பறவையை என்னால் பார்க்க முடிந்ததே இல்லை.

கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?

2008 ஏப்ரலில்தான் அதன் குரலைக் கடைசியாகக் கேட்டேன். இத்தனைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கேமரா டிராப்களைக் காடு முழுவதும் வைத்தும்கூட இன்றுவரை ஒரு பறவைகூட தென்படவில்லை.

அப்படியென்றால் அந்தப் பறவை முற்றிலும் அழிந்துபோய்விட்டது என்கிறீர்களா?

இப்போதைக்கு அந்த இடத்தில் இல்லாமல் போயிருக்கலாம். அந்த மாதிரி காடுகள் ஆந்திரத்தில் நிறைய இடங்களில் இருக்கின்றன. அந்தக் காடுகளுக்கு இடம்பெயர்ந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, அந்தக் காடுகளையெல்லாம் பாதுகாக்க வேண்டும். என்னுடைய அடுத்த முயற்சி அதுதான்.

இவ்வளவும் செய்வது எதற்காக?

அந்தப் பறவையைக் காப்பாற்ற நினைப்பது என்பது காடுகளையும் காப்பாற்றுவதுதான். அந்தக் காடுகளில் மேலும் பல உயிரினங்கள் இருக்குமல்லவா? அது மட்டுமல்லாமல் ஊர் மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கும், விறகு பொறுக்குவதற்கும் அங்கேதான் வருவார்கள். அதுவும் இல்லையென்றால் அடர் காடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன.

நமக்கு இருப்பது ஒரே ஒரு தாஜ்மஹால்தான். தாஜ்மஹால் நமக்குக் கலாச்சாரச் சொத்து. அதுபோல, கலுவிக் கோடி நமக்கு இயற்கைச் சொத்து. இவையெல்லாம் இருப்பது நமக்குப் பெருமை. ஆகவே, இவற்றைக் காப்பாற்றுவது நமது கடமை. இப்படி ஒரு பறவை இருந்தது. அதை எங்கள் காலத்தில் அழித்துவிட்டோம் என்று நமது வருங்காலச் சந்ததியினரிடம் சொன்னால், அதைவிட நமக்கு வெட்கக் கேடு வேறு எதுவும் இல்லை.ஒவ்வொரு உயிரினத்துக்கும் இந்த உலகில் வாழ்வதற்கு உரிமை உண்டு. அதுவும் இந்தப் பறவை உலகிலேயே அரிய பறவைகளுள் ஒன்று. அதைப் பாதுகாத்தே ஆக வேண்டும். அது நமது கடமை.

இது போன்ற உயிரினங்களுக்காகக் காடுகளைப் பாதுகாப்பதால் நேரடியாக மனிதர்களுக்குப் பயன் ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் நிறைய ஆக்ஸிஜன் கிடைக்கிறது. ஆறுகள், ஓடைகளில் தண்ணீர் வருகிறது. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை வைத்தும் சொல்லலாம். ஆனால், அதைச் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டுமா? உண்மையில், இயற்கையின் எந்த அம்சத்துக்கும் விலை நிர்ணயிக்கவே முடியாது!

- இந்த நேர்காணலின் விரிவான வடிவம் ‘தி இந்து’ தீபாவளி மலரில் (2015) வெளியாகியிருக்கிறது.

 
ஜெகநாதன்